Wednesday, January 19, 2005

தமிழ்ச் சங்கத்திலே!

போன சனிக்கிழமை எங்கள் தமிழ்ச் சங்கத்திலே ஒரு ஒன்று கூடல் நிகழ்ச்சி!
இந்த நாள் ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்காக தெரிவு செய்யப்பட்டு, அதற்கான இடம் எல்லாம்
ஏற்பாடு செய்தாகிவிட்டது. கலை நிகழ்ச்சிகளுக்காக ஆடலும், பாடலும்கூட படு ஜோராக ஒத்திகை
பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த முறை சில நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்வதால்
எல்லாம் அமர்க்களமாக இருக்க ஏகப்பட்ட ஏற்பாடுகள்!


இதெல்லாம் இப்படி இருக்க, வந்தது சுநாமி! நினைச்சுப் பார்க்கவே முடியாத அளவிலே ஒரு பேரழிவு!
நமக்கு என்ன கொண்டாட்டம் கேக்குதுன்னு அந்த கலை நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செஞ்சோம்.
கடவுள் வணக்கத்தோடு ஆரம்பிச்சு, இந்த பேரழிவிலே உயிர்நீத்த மக்களுக்காக ஒரு நினைவு
அஞ்சலியாக இந்தக் கூட்டத்தை நடத்தினோம்.

வழக்கமாக இருக்கும் இரவு விருந்தையும் வேண்டாம்ன்னு ஒதுக்கிட்டோம். ஆண்டு விடுமுறைக்காக
இலங்கைக்குப் போன நண்பரும் அவர் குடும்பமும் அதிர்ஷ்டவசமாக இந்த அழிவிலிருந்து தப்பிச்சுட்டாங்க!
திருகோணமலை துறைமுகத்துக்குப் பக்கத்துலே வீடாம்! சுநாமி அலை அடிக்கவில்லையாம், ஆனால்
தண்ணீர் மட்டம் உயர்ந்து வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டதாம்! மார்பளவு தண்ணீரில் ரெண்டு பிள்ளைகளையும்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, மெதுமெதுவாக நடந்து, கொஞ்சம் மேடான இடத்துக்குப் போய்விட்டார்களாம்.
அந்த இடம் ஒரு சின்னக் குன்றுபோல இருந்ததால் சரிவில் இருந்த வீடுகளில் மட்டும் தண்ணீர் வந்துவிட்டதாம்!

எல்லாம் ஒரு பத்து நிமிடம்தானாம்! அதன்பின் வெள்ளம் வடிந்தபோது அப்படியே தண்ணீர் உள்வாங்கிவிட்டதாம்!
துறைமுகத்தில் அந்த சமயம் நின்றிருந்த கப்பல்கள் எல்லாம், அடிப்பாகம் தெரிய தரையில் நின்றிருந்தனவாம்!
எப்படியோ பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்கள்.முகமறியாத எத்தனையோபேர் மறைந்துவிட்டது மிகவும் மனவருத்தம்
தந்தாலும், நமக்குத்தெரிந்த ஒருவர் தப்பி வந்தது மனசுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது!

இந்த இரங்கல் கூட்டத்திலே ஒரு கவிதை வாசிக்கப்பட்டது. பொதுவா நான் கவிதையைக் கொண்டாடுகிற ஆள் இல்லை.
ஆனா இந்தக் கவிதையைக் கேட்டப்ப கண்ணீர் வந்துவிட்டது. கவிதைக்குரிய இலக்கண வரம்புக்குள் இது இருக்கிறதா
என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா பிடிச்சிருந்தது! அதனாலெ இதை உங்ககூட பகிர்ந்துக்கலாம்ன்னு இதை இங்கே
போட்டிருக்கிறேன். இதை எழுதியது இங்கெ இருக்கும் ஒரு நண்பர். பெயர் மேகலா.


வஞ்சனை செய்த கடல் கண்டால்
விளையாடப் போகமாட்டேன் பாப்பா
நெஞ்சு வலிக்கிறது பாப்பா
எங்கள் நேச உறவுகளை நினைத்தால்

உண்ண உணவுமில்லை அவர்க்கு
உறைய இடமும் இல்லை பாப்பா
கண்கள் பனிக்கிறது பாப்பா
அந்த சின்னஞ்சிறுவர்களை நினைத்தால்

என்ன தரமுடியும் எம்மால்
அவர் துயரம் துடைப்பதற்குப் பாப்பா
எந்தன் உடைகளிலே பாதி
இருக்கும் உணவுகளில் பாதி
சின்ன உண்டியல் காசு
இவை அனைத்தும் அனுப்புகிறோம் பாப்பா!


0 comments: