Thursday, August 17, 2006

மனக்குறை

சரி. முதல் காரியம் முதல்லெ. எதுக்கும் ஒரு டிஸ்கி போட்டுக்கறென்.


கொஞ்சநாளா மனசுக்குள்ளெ ஒரே முணுமுணுப்பு. எனக்கு மட்டும்தான் இப்படித் தோணுதா இல்லே,மத்தவங்களும் இப்படித்தானா?ன்னு தெரிஞ்சுக்கறதுக்காகப் போடுற பதிவு இது. உங்களுடைய கருத்துக்களையும், இது சம்பந்தமான மற்ற அனுபவங்களையும் தெரிஞ்சுக்க விருப்பம்.


பொதுப்படையா நாமெல்லாம் இந்தியர்கள்ன்னு சொன்னாலும், வட இந்தியர்கள் அதிகமா இருக்கற ஒரு கூட்டத்துலே தென்னிந்தியருக்கு சகஜமாக இருக்கறதுலே கொஞ்சம் கஷ்டம் இருக்கோ? இதுவும் ஒருவித தாழ்வு மனப்பான்மையா? என்னமோ அங்கே ஒரு ஒட்டுதல் இல்லாமப் போகறதுக்குக் காரணம் என்ன?


நம்முடைய தென்னிந்தியக் கூட்டத்துலே கலந்துக்கற வட இந்தியர்களுக்காக, நாம் பெரும் முயற்சி எடுத்து,அவுங்களை நல்லபடியா வரவேற்று அவுங்க இயல்பா இருக்க நம்மால் ஆனதைச் செய்யறப்ப( அதான் தமிழ் சினிமா உலகத்துலே பார்க்கறீங்களே) அவுங்களுக்கு ஏன் இதை நமக்குத் திருப்பிச் செய்யத் தோணறதில்லை?


நேத்து, இங்கே நம்மூரில் இருக்கும் 'ஹரே கிருஷ்ணா' கோவிலுக்குப் போயிருந்தோம். இந்தமாதிரி விசேஷ நாட்களிலே மட்டும் கொஞ்ச நேரமாவது போய், அந்தக் கொண்டாட்டத்துலேக் கலந்து மகிழறது நல்லாத்தான் இருக்கு. இங்கே ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையிலும் சாயங்காலம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிரசங்கிப்பார். அது முடிஞ்சதும்,ஆரத்தி எடுப்பார்கள். அப்புறம் சாப்பாடு. சுமாரான கூட்டம் இருக்கும். நேத்து, ரொம்ப விசேஷமாச்சே, பிரசங்கிச்சவர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களையெல்லாம் சொல்லி, அதில் இந்த கிருஷ்ணாவதாரம் ஏன் ரொம்பவும் சிறப்பானதுன்னு விளக்கிக்கிட்டு இருந்தார். ரொம்ப சீரியஸ்ஸா இல்லாம அப்பப்ப சில நகைச்சுவைகளைச் சொல்லிக் கூட்டத்துக்குக் கொஞ்சம் உற்சாகம் தரணுமுன்னு நினைச்சார் போல, ஒரு சம்பவத்தைச் சொன்னார்.


ஒரு முறை 'பிரபுபாதா' தென்னிந்தியாவுலே யாத்திரை செய்த சமயம், பிறப்பினால் பிராமணர் ஆன ஒருவர், கீதைப் புத்தகத்தைத் தலைகீழாய் வச்சுப் படிச்சுக்கிட்டு இருந்தாராம். தலைகீழாப் படிச்சதாலே அதுக்குண்டான அர்த்தத்தையும் தலைகீழாவே புரிஞ்சுக்கிட்டாராம். பிரபுபாதாதான், அவர்கிட்டே போய்,'இந்த மாதிரி புத்தகத்தைத் தலைகீழாய் வச்சுப் படிச்சால் இப்படித்தான் அர்த்தமெல்லாம் அனர்த்தம் ஆகிரும்'னு சொன்னாராம்.


இந்த சம்பவம் மெய்யா, இல்லே பொய்யான்னு தெரியாது. என்னுடைய கேள்வியெல்லாம், from where these peopleget this kind of stories? அதுக்கப்புறம் அவர் செஞ்ச பிரசங்கத்துலே என் மனசு பதியலை. அதுபாட்டுக்குத் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சிருச்சு. இந்தத் தொந்திரவெல்லாம் வேணாமுன்னுதான் நான் சனிக்கிழமை கோயிலுக்குப் போற பழக்கத்தை வச்சிருக்கேன். அன்னிக்கு அங்கே கடவுளுக்கும், எனக்கும் இடையிலே யாரும் வரமாட்டாங்க. பிரசங்கம்ன்னு சொல்லி எதையும் என் காதாலெ கேட்டுக்க வேண்டிய அவசியமும் இல்லை.



ஏன், இதே மாதிரி ஒரு கதையை நம்மாலெ உண்டாக்க முடியாதா? ஒரு வடக்கிந்தியர் தப்பாப் படிச்சுக்கிட்டு இருந்தார்ன்னு.முடியும். ஏன் முடியாது? ஆனா நாம இதைச் செய்ய மாட்டோம். இயற்கையாவே விருந்தோம்பல், பிறர்மனம் நோகாம நடக்கறது,அடுத்தவர்களுக்கு ஒரு மரியாதை இதெல்லாம் மனசுலே ஆழமாப் பதிஞ்சு போயிருக்கு. இதையெல்லாம் மீறி வெளியே வந்து,ஒருத்தரை அவமானிக்க என்னாலே/நம்மாலே முடியாது.
வர்ற வழியிலே இதைப் பத்தி யோசிச்சுக்கிட்டே வந்தேன். பிரசங்கிச்ச வெள்ளைக்காரருக்கு இந்த வடக்கு,தெற்கு பேதம் வரச்சான்ஸே இல்லை. ஆனா சம்பவத்தைச் சொன்னவர் கல்கத்தாக்காரராச்சே! ஸோ......அப்பவே இருந்து தெற்கைக் கீழாப் பார்க்கிற பழக்கம்இருந்திருக்கு. இது ஒண்ணும் புதுசு இல்லை(-:


மனசுக் குடையக் குடைய ரெண்டு வருசத்துக்கு முன்னே நடந்த இன்னொரு சம்பவம் எனக்கு நினைவு வந்துச்சு.அதை அப்பவே ஒரு டயரிக்குறிப்பா எழுதிவச்சிருந்தேன். ( ப்ளொக் எழுத ஆரம்பிக்காத காலம்) இங்கே அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எழுத்து நடை மாறுபட்டு இருக்கும், பார்த்துக்குங்க.



தமிழுக்கு வந்த கதி!
-------------------


இந்த மாதம் ஆரம்பத்தில் ( ஜூலை 3, 2004) இங்குள்ள இந்தியன் சோசியல் & கல்ச்சுரல் க்ளப்'-ன் குளிர்கால மத்தியில் கூடும் ஒன்றுகூடல் விழா நடந்தது. இங்கே ஒவ்வொரு சங்கமும் ஒவ்வொரு விதமாகநடக்கும். இதில், உணவும் இங்குள்ள ஒரு 'ரெஸ்டாரண்டில்' இருந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.நாம் ஏதும் கொண்டு போகத் தேவையில்லை.இதற்குள்ள 'டிக்கெட்'டுகளை மட்டும் விழா நடக்கும் நாளுக்குச் சிலதினங்களுக்கு முன்பே வாங்கிவிடவேண்டும். அப்போதுதானே, உணவு தயாரிப்பவர்களுக்குத் தெரியும் எவ்வளவு உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று.


இதில் அங்கத்தினருக்கு ஒரு 'ரேட்'டும், மற்றவர்களுக்கு இன்னும் கூடுதலாகவும் இருக்கும். அது அநேகமாக இரட்டிப்பு விலை என்பதால், நம் ஆட்கள் அங்கத்தினராக அன்றே பதிவு செய்து கொள்கிறேன் என்றுசொல்லி, அங்கத்தினர் டிக்கெட்டுகளைப் பெற முயல்வார்கள்.


இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். இங்கே நாம் வந்த புதிதில் நம் ஆட்களும் அதீகமில்லை. தமிழ்பேசும் குடும்பங்களும் மொத்தமே மூன்றுதான், எங்களையும் சேர்த்து. மற்ற இரண்டு குடும்பத்தினரும் இலங்கைத்தமிழர். இது 1988-ல். இப்ப 31 தமிழ்க் குடும்பங்கள் இருக்கின்றன. அதில்,ஐந்து குடும்பங்கள்தான்இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தமிழர்கள்!
1997-ல் நம் மக்கள் தொகை ஓரளவு கூடிவிட்டது.மேலும் ·பிஜித்தீவு இந்தியர்களும் இங்கே இருந்தனர்.அவர்கள் 'ஹிந்தி'மொழி பேசுபவர்கள்.
கோபால் எல்லா இந்தியர்களையும் ஒன்று சேர்க்கும் ஆர்வத்துடன் இந்த 'இந்தியன் சோசியல் & கல்ச்சுரல் க்ளப்'பை ஆரம்பித்தார். முதல் விழாவாக நம் இந்திய நாட்டின்சுதந்திரதினம் பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது முதல் இந்த 'க்ளப்' ஓரளவு நன்றாகவே நடந்து வருகின்றது.


கோபால்தான் 'ஸ்தாபகர்' என்பதால் நாங்கள் எப்போதும் எல்லா விழாக்களுக்கும்,மீட்டிங்குகளுக்கும் தவறாமல் போகும் வழக்கம். இந்த ஒன்று கூடல் வைபவங்கள் எல்லாமே ஒரு வார இறுதியில் சனியன்றுதான் இருக்கும். நாங்கள் கொஞ்சகாலமாக, சனிக்கிழமையன்று மாலை கோவிலுக்குப் போகும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றோம். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டுமென்றால், சனியன்று காலை கோவிலுக்குப்போய் வருவோம்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன். இந்த வருட குளிர்கால ஒன்று கூடலுக்குப் போக எனக்கு என்னவோ விருப்பம் இல்லாமல் இருந்தது.மாலையில் கோவிலுக்கே போகலாம் என்று தீர்மானித்து, நாங்கள் விழாவுக்கான' டிக்கெட்'டை முன்கூட்டியே வாங்கவில்லை. கமிட்டி மெம்பர்களும் ,போனில் ஏன் இன்னும் டிக்கெட் வாங்கவில்லை?வீட்டுக்குக்கொண்டுவரட்டுமா ? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தனர். நானும் விடாப்பிடியாக, இந்த முறை வருவதற்கு வசதிப் படாது, அடுத்த முறை பார்க்கலாம் என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களும், விடாப்பிடியாக' மனசு மாறினால் கட்டாயம் ஹாலுக்கு வந்துவிடுங்கள். முன் கூட்டியே டிக்கெட் வாங்குவது உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு' என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.


அன்று பிற்பகல், கடைகளுக்குச் சென்றபோதும், ஒரு கமிட்டி மெம்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும், கட்டாயம் விழாவுக்கு வரவேண்டும் என்று ஆரம்பித்தார். நானும், பார்க்கலாம். ஆனால் மற்றொரு முக்கியமான வேலை வந்துவிட்டது என்று சொல்லிவிட்டேன்.


இதை எதற்கு இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால் விஷயம் இருக்கு!


கடைகளில் இருந்து வீட்டுக்கு வந்தால், நுழையும்போதே தொலைபேசி மணி விடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது.ஒரு நண்பர் ,போனில் கூப்பிட்டு, அவர் ஏற்கனவே 'டிக்கெட்'வாங்கிவிட்டார் என்றும், விழாவுக்குப் போக இயலாமல் தலைவலியும், காய்ச்சலுமாக இருக்கிறதென்றும் சொல்லி, நீங்கள் இந்த டிக்கெட்டை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். நானும் இந்தமுறை போகவேண்டாம் என்றிருப்பதைச் சொல்லிவிட்டு, எதற்கும் கோபாலைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்றும் கூறினேன்.


கோபாலும், "இது என்ன போக வேண்டாம் என்று நினைத்தால் இப்படியாகிறதே! பாவம். அவர்களுக்கு 20$ வீண்செலவுதானே?சரி, நாமே அதை வாங்கிகொள்ளலாம்" என்றார்.


நானும், கோவிலுக்குப் போக வேண்டாமா? என்றதற்கு, இப்போதே போய்விட்டு வரலாம் என்றார். மணியோ மாலை ஐந்தரைஆகிவிட்டது. நான், நண்பரைத் தொலைபேசியில் விளித்து, கோவிலுக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது, அவர்கள் வீட்டில் டிக்கெட்டை எடுப்பேன் என்றேன். அவரும், அப்பாடா! ரொம்ப நன்றி.இரண்டரை டிக்கெட் எடுத்திருந்தேன். அரை டிக்கெட் போனால் போகட்டும் என்றார். அப்போது தான் ஞாபகம் வந்தது அவர்கள் குழந்தை ஏமாந்துவிடுமே என்று. உடனே, நான் குழந்தையை விழாவுக்கு அழைத்துப் போவேன். கொஞ்சம் தாமதமாகத்தான் போக முடியும். நீங்கள் பையனை தயாராக வைத்திருங்கள் என்று முடிவாகச் சொல்லி அதே போல் ஆறேமுக்காலுக்குப் பையனைப் போய்க் கூட்டிக்கொண்டு விழாவுக்குப் போனோம்.


விழாக் குழுவினருக்கு எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.( அப்படின்னு நினைக்கிறேன்) Indian standard time படி,(நமக்கே உரிய தாமதம்)கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. நான் கொண்டுபோன பையனுக்கு ஐந்தே வயது. அவனுக்கு மேடையில் நடப்பது மறைக்காமல் தெரியவேண்டுமே என்று,நான் பையனுடன் முதல் வரிசையில் போய் அமர்ந்துகொண்டேன்.


கலை நிகழ்ச்சிகள் சுமாராக நடந்துகொண்டிருந்தன.ஒரு பஞ்சாபி இளைஞர், க்ளப்பின் 'யூத் கோ ஆர்டினேட்டர்' மேடையில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி வழங்கிக் கொண்டிருந்தார். எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடையும் தருணம் அந்த இளைஞர் ஒரு அறிவிப்பு செய்தார்.


" அனைவரும், நம் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு எப்போதும் ஹிந்தி, இங்கிலீஷ் பாட்டுகள்தானா என்று, புகார் செய்வதால்,இன்று ஒரு தமிழ்ப்பாட்டு பாடப் போகின்றேன். இதுதான் கடைசி அயிட்டம். சாப்பாடு பரிமாற ரெடியாக உள்ளது.இது முடிந்தவுடன் உணவு"


எனக்கு சந்தோஷமாக இருந்தது. பரவாயில்லையே! நிமிர்ந்து உட்கார்ந்தேன். பஞ்சாபி மேளம் மாதிரி ஒன்றை எடுத்துக் கொண்டு மற்றொரு பஞ்சாபி இளைஞரும் மேடை ஏறினார். வந்தது பாட்டு!


பாட்டா அது? ஒரு தமிழ் வார்த்தையும் இல்லை. காட்டு மிராண்டிகள் போலக் கத்திக்கொண்டும், மேளத்தை அடித்துக்கொண்டும்அலறிக் கொண்டிருந்தனர்! பெரிய தமாஷ் நடப்பதைப் போல எல்லோரும் சிரித்துக் கொண்டு அதை அனுபவிக்கிறார்கள்!


எனக்கோ 'ரத்தம்" கொதித்துக் கொண்டிருக்கிறது! முன் வரிசையில் இருந்தபடியால் கையைத்தூக்கிக் காண்பித்து 'நிறுத்து'என்று சைகை செய்தேன். ஆனாலும், மது அருந்திய மந்திகள் போல அங்கே மேடையில் பாட்டும் அதற்கேற்ப ஆட்டமும், மேளமும் தொடர்ந்து கொண்டிருந்தது. தாங்கமுடியாமல் எழுந்துபோய், " என்ன நடக்குது இங்கே? இதுதான் தமிழ்ப் பாட்டா?" என்று சத்தம் போட ஆரம்பித்தேன். அதற்குள் அந்த இளைஞர், சும்மா 'தமாஷ்'க்குப் பாடினேன் என்றார்.


எது தமாஷ்?


ஒரு மொழியைக் கிண்டல் செய்வது தான் தமாஷா?

அதற்கு, தமிழ் என்று ஏன் சொல்ல வேண்டும்?

உன்னுடைய சொந்த மொழியான 'பஞ்சாபி' என்று சொல்லியிருக்கலாமல்லவா?


ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது பெற்ற தாய்க்கு சமானமே அல்லவா?

தன் தாயை யாராவது கேலி செய்து, அவமதித்தால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா?

தமிழ் மொழி இந்திய மொழிகளில் ஒன்றில்லையா? எவ்விதம் அதை கேலி செய்யப்போயிற்று?

இந்தியாவின் எல்லா மொழிகளுகளுமே சமமான மதிப்பை உடையதல்லவா?


இந்தியாவின் சிறப்பே இத்தனை மொழிகள் இருந்தும் ஒரே நாடாக இருப்பது தானே?


தமிழும், தமிழனும் கேலிக்குரியவர்களா?


இன்று நீங்கள் கலந்து மகிழும் இந்தக் க்ளப் கூட ஒரு தமிழனால் தொடங்கப்பட்டதல்லவா ?


நீ உண்மையான தமிழ்ப்பாட்டை, தப்பும் தவறுமாகப் பாடியிருந்தால் கூட, நான் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பேன்.குறைந்த பட்சம், 'உதித் நாராயணன்' போலத் தமிழில் பாட முயற்சி செய்தாய் என்று! அதை விட்டு, ஒரு தமிழ் வார்த்தையும் இல்லாமல் கத்துவதுதான் தமிழ்பாட்டா ?


என்று ஒரே கேள்விக்கணைகளாகத் தொடுத்துக் கொண்டிருந்தேன். இதற்குள், க்ளப்பின் தலைவரும்,மற்ற கமிட்டி ஆட்களும் வந்துவிட்டனர். எல்லோருடனும் நான் 'சாமி' வந்தமாதிரி கத்தி, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்!இதற்குள் கோபாலும் பின்னாலிருந்து அங்கே வந்துவிட்டார். அந்த இளைஞன் பேயறைந்தது போல நின்றுகொண்டிருந்தான்!தலைவரும் அதே நிலையில்! மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பல முறை சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.


நான் சொன்னேன்," இனி நான் உங்களுடைய எந்த விழாவுக்குமே வரமாட்டேன். எங்கள் 'மெம்பெர்ஷிப்'பை கேன்சல் செய்கிறோம். நாங்கள் இப்போதே வெளியேறுகிறோம். உங்க சாப்பாடும் வேணாம், நீங்களும் வேணாம்!"


கோபால் சொன்னார்,"நீங்க செஞ்சது நிஜமாவே பெரிய தப்பு.தலைவர் என்ற முறையிலே நிகழ்ச்சிகள் மேடை ஏறு முன்பே என்னென்னெ இருக்கு. அதுலே குற்றம் குறை இருக்கான்னு 'ரிகர்சல்லே' பாத்திருக்க வேண்டாமா?"


தலைவர் சொல்றார், "தெரியாத்தனமாக தப்பு நடந்து போச்சு. நிகழ்ச்சி நிரலில் பாருங்க. இந்த அயிட்டமே கிடையாது.இந்தப் பசங்க ஏதோ ஆர்வக்கோளாறாலே இப்படி செய்துட்டாங்க! நீங்க இப்படி க்ளப்பை விட்டு போகக் கூடாது.சாப்பிடாமலும் போகக்கூடாது. இது உங்க க்ளப். நீங்க ஆரம்பிச்சது! நான் என்ன செய்யணும் சொல்லுங்க.என்னசெய்யட்டும்?"


அந்த இளைஞன் சொல்றார், "தவறுதலா என் வாயிலே 'தமிழ்'னு வந்துருச்சு. மன்னிச்சுடுங்கோ!"


"தவறுதலா தமிழ்னுதான் வருமா? பெங்காலி, குஜராத்தி, மராட்டி ன்னு வராதா?" இது நான்!


அப்புறம் கோபாலே ஒரு தீர்வும் சொன்னார்." மேடையிலே போய் அந்த இளைஞரும், தலைவரும் நடந்ததற்கு மன்னிப்பு கேட்கணும்"


இது எனக்குத் தோணலே பாருங்க! நாந்தான் சாமியாடிகிட்டு இருக்கேனே!


இதுக்குள்ளே எல்லோரும் சாப்பாட்டுக்கு வரிசையிலே நிக்கப் போயிட்டாங்க!சிலர் சாப்பாட்டை வாங்கி வந்து, சாப்பிடவும் செய்றாங்க!
அந்த இளைஞர் சொல்றாரு, எல்லோரும் சாப்பிட்டு முடிச்ச பிறகு மன்னிப்பு கேக்கறேன்! இப்ப ம்யூஸிக் சிஸ்டத்துலே பாட்டு போய்கிட்டு இருக்கு.


'பாட்டையெல்லாம் நிறுத்தலாம். நானே நிறுத்துவேன். ஏறு மேடையிலே!' இது நான்.



அப்புறம் அவுங்க ரெண்டுபேரும், மேடையிலே ஏறி 'மைக்'கைப் பிடிச்சு, முக்கியமான அறிவிப்புன்னு சொல்லி, நடந்ததுக்கு எங்களிடமும், எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டாங்க! கமிட்டி ஆட்களும் மன்னிப்புக் கேட்டாங்க!


அதுக்கப்புறம், வந்திருந்த மத்த ஜனங்கள் எல்லோரும், அது நிஜமாகவே பெரிய தப்புதான், அப்படி, இப்படின்னு வந்து எங்ககிட்டவந்து சொன்னாங்க!
இவ்வளவும் நடந்துகிட்டு இருக்கறப்ப, எனக்கு இன்னும் ரொம்ப மன வருத்தம் ஏற்பட்டது எதுக்குன்னா, அங்கே இன்னும் ரெண்டு தமிழ்க் குடும்பங்கள் விழாவுக்கு வந்திருந்தாங்க. அவுங்க மட்டும் எதுவும் நடக்காத மாதிரி, வரிசையிலே போய் சாப்பாட்டை வாங்கிவந்து அமைதியா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்ததுதான்! ஒரு 'சப்போர்ட்டு'க்காகக்கூட எங்ககூட வந்து நிக்கலே!



மற்ற இரண்டு தமிழ்க் குடும்பத்துக்கும் தாய்மொழியும் தமிழ்தான். எனக்கும் கோபாலுக்கும் தாய்மொழின்னு பார்த்தால் தமிழ் கிடையாது. அப்படி இருக்கறப்பவே, தமிழ் மொழியை யாராவது கேலி பேசினால் என்னாலே பொறுத்துக்கொள்ள முடியலே!


போகவே வேணாம்னு முடிவு செய்திருந்த,அந்த விழாவுக்கு எங்களைப் போக வைத்தது எது?


ஒருவேளை, நாந்தான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்து
கொண்டேனோ?

நான் செய்தது சரியா?


எனக்குப் பொறுமையா இருக்கத் தெரியலையா?


இப்படி பல கேள்விகள் என் மனசிலே!



வீட்டுக்கு வந்தபிறகு, நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது, நான் செய்தது மிகச் சரிதான் என்ற எண்ணம் வந்தது. இதுபோன்ற தவறுகளை, வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியத்தான் வேணும்! இனி மற்றவர்களையும், அவர்கள் மொழியையும், அவர்கள் பழக்க வழக்கத்தையும் மதிக்காவிட்டாலும், கேவலம் செய்வதையாவது நிறுத்திக்கொள்வார்கள் அல்லவா?


கடவுள்தான் என்னை அங்கே கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தாரா?
---------
இன்னிக்கு கோயிலில் ஏன் சாமியாடலைன்னு கேக்காதீங்க. 'இந்த அக்கிரமத்தை சாமி நீயே பார்த்துக்கோ'ன்னு விட்டுட்டேன்.

49 comments:

said...

துளசி,
நூறு சதவீதம் சரி தான்,ஆனால் நான் அங்கிருந்தால் போங்கடா...... என்று மனதுக்குள் திட்டிவிட்டு வந்துவிடுவேன்.
அது என்னுடைய குணம்.
நீங்கள் செய்த விதம் மறுபடியும்,இதே மாதிரி நிகழ்ச்சி நடக்கும் போது கொஞ்சம் யோசித்து நிகழ்சிகளை படைப்பார்கள்.

said...

குமார்,

// போங்கடா...... என்று மனதுக்குள் திட்டிவிட்டு வந்துவிடுவேன்..//
இதைத்தானே நேத்து கோவிலில் செஞ்சேன்.

said...

வெகு சிலருக்கே இவர்களை திருத்தும் பொருமை இருக்கும்.... அதில் நீங்கள் ஒருவர். வணங்குகிறேன்.

said...

நன்மனம்,

ஏங்க பெரிய வார்த்தையெல்லாம்?

ரெண்டு வருசத்துக்கு முன்னாலே ஆடுன ஆட்டம் நேத்து இல்லை பார்த்தீங்களா?
பண்பட்டுருச்சுச்சா இல்லே எப்படியோ ஒழிங்க என்ற ஆத்தாமையா? புரியலையே.

said...

நல்ல முன்னேற்றம் தெரிகிறது இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நடுவே ... உங்கள் மனப்போக்கில்!

அவ்வளவுதான்!.... இன்னும் கொஞ்சம் 'தம்' பிடியுங்கள்!

'பாத்துக்கோ' என்று சொல்வதை விடுத்து,... 'பிதாவே! இவர்களை மன்னியும்! இன்னது செய்கிறோம் என அறிந்தாரில்லை!' என்று சொல்ல ஆரம்பிப்பீர்கள்!

கேலி செய்யவில்லை! உண்மையாகத்தான் சொல்லுகிறேன்! தவறாக எண்ண வேண்டாம்!

உலகம் அழகாய்த்தான் இருக்கிறது!
அவை மாறுபடுவது நம் மனவிகாரங்களினால் மட்டுமே!

said...

நிறைய எழுதணும் அக்கா, நிதானமாக மாலையில் வருகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

//ஆனா சாப்பிட்ட பிறகு அந்த பஞ்சாபிக்காரப் பயல அடி
பின்னிருப்பாங்களே. அதயேம்மா சொல்லாம விட்டுட்ட ? //

இல்லையே பாட்டி.

'என்ன இவ.... எதுக்காக இப்படி அழிச்சாட்டியம் காமிக்கறா?'ங்கறமாதிரி பார்த்தாங்க (-:

said...

வாங்க SK.

விருப்பு & வெறுப்பு எதுவும் இல்லாத நிலைக்குப் போய்க்கிட்டு இருக்கேனா?

said...

//
விருப்பு & வெறுப்பு எதுவும் இல்லாத நிலைக்குப் போய்க்கிட்டு இருக்கேனா? //

அதே! அதே!

:))

said...

"சிந்து நதியின்மிசை நிலவினிலே..."னு பாடிப் பாடித்தானே
நம்மை வளர்த்தாங்க....தேசிய உணர்வை ஊட்டுனாங்க...அத்தகைய
தேசிய உணர்வுப்பாடல்களை எழுதியவர்கள் வடக்கே.........

திரு டி. டி. கிருஷ்ணமாச்சாரி-இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர்-
நாடளுமன்றத்தில்(அல்லது அரசியல்
நிர்ணய சபையில்)ஒரு முறை
வேதனையுடன் குறிப்பிட்டார்:"India,
that is Bharat that is U.P.." என்று

காமராஜரே ஒருமுறை கோபத்துடன்
சொன்னாராம்:'அண்ணாதுரை என்னா
நாட்டைப்பிரிக்கிறது? வடக்கத்திக்காரனே பிரிச்சுடுவான்'னு.

அவர்களின்(வடவரின்) போக்கும் திராவிட இயக்கம் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு காரணம்

காலையிலே ஹாட் டாபிக் வேணாம்
விடுங்க

"கை கொடுத்த தெய்வம்"(?)படத்தில்
டி.எம்.எஸ் பாடுவாரே;பாரதியின்
"சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர ந்ன்னாட்டிளம் பெண்களுடனே.."
பாடலை சிலதடவை கேட்டுப்பாருங்க;
மனம் அமைதியாகும்.
பாட்டின் நடுவில் "மனசுக்கு இகலோகம்"னு ஒரு வரி வரும்.
முடிந்தால், அவ்வரிகளையும் அர்த்ததையும் தட்டச்சுங்க.
"முடிந்தால்"னது 'அப்பாடல் கிடைத்தால்'எனும் அர்த்ததில் கூறியது
உங்க திறமையைக் குறிப்பிடுவதில்லை

said...

வாங்க சிஜி.

//உங்க திறமையைக் குறிப்பிடுவதில்லை..//

பொல்லாத திறமை..... ஹூம் ......நீங்கதான் மெச்சிக்கணும்.

பாரதியார் கவிதைகள் புத்தகம் இருக்கே என்னிடம். அதைப் பார்த்தாப் போச்சு.
என்னதான் எங்கிட்டே புத்தகங்கள் இல்லைன்னு புலம்புனாலும் மணிமணியா ஒண்ணுரெண்டு
இருக்காதா? :-))))

said...

டீச்சர் நீங்கள் செய்தது மிகச்சரி. யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்திருக்க வேண்டும். உங்களுக்கு எனது பாராட்டுகள். மிஸ்டர் டீச்சருக்கும்தான். :-)

பொதுவாகவே ஒவ்வொரு மொழியினரும் அடுத்த மொழியினரை ஒரு மாதிரி பார்ப்பது உண்டுதான். கிண்டலும் உண்டுதான். பழைய இந்திப் படங்களைப் பார்த்தால் காமெடி காரெக்டர் கிண்டல் செய்ய வேண்டும் என்றால் அது தமிழனாக இருக்கும். இல்லையென்றால் வங்காளியாக இருக்கும். நம்மூரிலும் உசிலைமணி வந்து நம்பள் நிம்பள் என்று பேசுவாரே.

என்னுடைய பழைய அலுவலகத்தின் ஒரு கிளை டெல்லிக்கு அருகிலுள்ள குருகாவில் இருக்கிறது. அங்கு ஒரு மீட்டிங். technical discussion. உள்ள போய் உக்காந்தா எல்லாம் இந்தியில பேசுறாங்க. பெங்களூர்ல discussion-a englishல பேசிப் பழகுன எனக்கு பக்கு பக்குங்குது. அப்புறம் சொல்லீட்டேன். இந்தா பாருங்கய்யா...ஒழுங்கா இங்லீசுல பேசுங்க...இல்லைன்னா நான் பொறப்படுறேன்னு. அப்புறமா இங்கிலீசுல பேசுனாங்க.

இப்ப மூனு மாசம் நான் சென்னைக்கு வந்திருக்கிறது எல்லாருக்கும் தெரியும். இங்க வந்தா எல்லாப் பயகளும் தமிழ்ல டிஸ்கசன் போடுறானுக. மத்த பசங்கள்ளாம் பக்கு பக்குன்னு முழிக்கிறாங்க.

said...

மொழிபற்றிய 'சென்சிடிவிடி'இந்தியர்களுக்கேக் குறைவு. இராகவன் சொல்வது சரியே. நாமும் நம்மை அறியாமல் மற்றவர் மொழிகளை கிண்டல் செய்தவாறு தான் இருக்கிறோம். ஆனாலும் வடவரின் ஆதிக்க மனப்பாங்கு அதிகம் தான்.
தவறு கண்டு பொங்கும் இயல்பு சிலருக்கே அமையும். உங்களிடம் அக்குணம் இருப்பது தமிழ் செய்த பாக்கியம்.

said...

"மனசுக்கு இகலோகம்"ன்றது இசைக்காக சேர்க்கப்பட்டது என்று கருதுகிறேன். ஒலிநாடா அல்லது இசைத்தட்டு கிடைத்தால்தான் அதை
அறிந்துகொள்ள முடியும்.."முடிந்தால்"
என்றது இதைத்தான்.
பாரதி பாடல் தொகுப்பில் இவ்வரிகள்
இருப்பதற்கு வாய்ப்பில்லை..

பரலி.சு.நெல்லையப்பருக்கு எழுதிய
கடிதம் ஒன்றில் பாரதியார் கீழ்வருமாறு
எழுதுகின்றார்:
"தமிழச்சியை விட ஒருத்தி அழகாக இருக்கிறாள் என்று சொன்னால் நெஞ்சு
பதறுகிறதடா தம்பி."

இது எப்படி இருக்கு?

said...

துளசியக்கா,
உங்க மேலே இருந்த மரியாதையும் அன்பும் இப்போ பல மடங்கு கூடியிருக்கு!

said...

வாங்க ராகவன்.

ரொம்ப நெருங்கிய நண்பர்களைக் கிண்டல் அடிச்சு, அவுங்களும் நம்மளைக் கேலி செஞ்சு
எல்லாம் ஒரு மேம்போக்கா இருக்கறது வேற. மேடை போட்டுப் பொது இடத்துலே கேலி
செய்யறது வேற இல்லையா?

நீங்களும் 'கொல்ட்டி'ன்ற வார்த்தையை ஒரு பதிவுலே போட்டீங்க. நாங்க அதை சீரியஸ்ஸா
எடுத்துக்கிட்டோமா? :-))))

said...

மணியன்,

நீங்க சரியா பாயிண்டைப் பிடிச்சிட்டீங்க. //வடவரின் ஆதிக்கப்போக்கு.//
ரொம்பச் சரியான வார்த்தை.

தமிழ்ன்னு இல்லாம எந்த மொழியைக் கேலி செஞ்சிருந்தாலும் இப்படித்தான் நடந்துக்கிட்டு இருப்பேன்.

இந்தியான்றது எல்லா மொழிகளும் சேர்ந்ததுதானே.... இல்லையா?

said...

துளசி ,
சம்பவத்தை விரிவாக நீங்கள் சொல்லிய விதத்தில் இருந்து பார்க்கையில் நீங்கள் செய்தது சரியே.உங்கள் மனக்குறை எனக்கும் உண்டு.

//பொதுப்படையா நாமெல்லாம் இந்தியர்கள்ன்னு சொன்னாலும், வட இந்தியர்கள் அதிகமா இருக்கற ஒரு கூட்டத்துலே தென்னிந்தியருக்கு சகஜமாக இருக்கறதுலே கொஞ்சம் கஷ்டம் இருக்கோ? இதுவும் ஒருவித தாழ்வு மனப்பான்மையா? //

ஆமாம் மொழி ,பழக்க வழக்கம், தாண்டிய ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது.தோலின் நிறம் தொடர்பான ஒரு பொதுவான தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்கிறது என்று நினைக்கிறேன்.

பொதுவில் வட இந்தியருக்கு தென் இந்தியர் சார்ந்த அறியாமை அதிகம்,
அந்த அறியாமை ஒரு ஆரோகியமற்ற அபிப்பிராயத்துக்கு வழி வகுக்கிறது .
====================
இந்தியச் சமூகம் பல விதமான வேறுபாடுகளை உள்ளடக்கியது ,
ஒவ்வொரு மாநில மொழியும் கலாச்சாரமும் ஒரு தனி நாடாகவே அமைந்திருக்கக்கூடிய தனித்தன்மை பெற்றது.

இந்தியாவில் இருக்கையில் அடுத்த மாநிலத்தவரோடு கொள்ளும் தொடர்பு கூட மிகக் குறைவே [ except metros maybe ] ஆனால் அதே வெளிநாடுகளில் வசிக்கையில் இந்திய சமூகம் ஒரு microcosm போலதான் இருக்கிறது.சக இந்தியரைப் பார்க்கையில் நீ யாரோ நான் யாரோ போன்ற ஒரு மனநிலை வந்து விடுகிறது.

இந்திய நண்பர்கள், அறிமுகமானோர் என்று பார்க்கையில், மொழி ,உணவு உட்பட பல வகையான வேறுபாடுகள் இயல்பாகவே அமைந்து விடுகிறது. கிரிக்கெட்,சினிமா,கோயில் போன்ற விஷயங்களிலேயே ஒரு வகை மேலோட்டமான ஒருமைப்பாட்டைப் பார்க்க முடிகிறது .

தமிழரிலேயே பல பாகுபாடுகள் ஈழத்தமிழர், இந்தியத் தமிழர்,தமிழ்ச் சங்கம், தமிழ் மன்றம்,தமிழ் கலை மன்றம் இப்படி.இதிலும் பல உட்பிரிவுகள்
உண்டு , சென்னைக்கு வெளியே இருப்பது எல்லாம் பாரதிராஜா படத்தில் வரும் கிராமம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.பொது இடங்களில் சக இந்தியரைக் கண்டு தலை தாழ்த்தாமல் ஒரு புன்முறுவலோ வணக்கமோ சொல்லும் தன்மை கூட நம்மிடம் பரவலாக இல்லாதிருப்பது வருத்தமே.

எல்லோரும் கொஞ்சம் முயற்சி செய்தால் இந்தத் தடைகளைத் தாண்டி விடலாம் என்றே தோன்றுகிறது.

அமெரிக்காவில் என்ன நிலமை என்று அன்பர்கள் யாரானும் விளக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

said...

சிஜி,

இந்தப் பாட்டு 'ம்யூஸிக் இண்டியா'வுலே இல்லை. நம்ம கிட்டே முழு ஆடியோவும் இருக்கு.
கேட்டுட்டு உங்களுக்குப் பதில் சொல்லட்டுமா?
அந்த 'நெஞ்சில் உரமுமின்றி' பாட்டுமட்டும் எப்பக் கேட்டாலும் மனசுக்கு என்னமோ செஞ்சு அழுகை
வந்துருதுங்க.


//பரலி.சு.நெல்லையப்பருக்கு எழுதிய
கடிதம் ஒன்றில் பாரதியார் கீழ்வருமாறு
எழுதுகின்றார்:
"தமிழச்சியை விட ஒருத்தி அழகாக இருக்கிறாள் என்று சொன்னால் நெஞ்சு
பதறுகிறதடா தம்பி."

இது எப்படி இருக்கு? //

அதானே... இவர்தானே சொன்னார் சேரநன்னாட்டிளம் பெண்களுடனே....... ஆஹா...........
இவரை என்ன செய்யலாம்? :-))))

said...

வாங்க ஜோ.
குழந்தை நலமா?

ஆஹா.... மரியாதை & அன்பு சம்பாரிக்க இப்படி ஒரு வழி இருக்கா? :-))))

said...

வாங்க கார்திக்வேலு.

நல்லா விரிவா எழுதியிருக்கீங்க. இங்கே நியூஸியிலேயும் நம்ம ஊர்லே மட்டும்தான் அவ்வளவா இன்னும்
இந்த' நாகரிகம்' பரவலை. நாங்கள் பலபேரைச் சந்தித்து நண்பர்களானது இப்படி ஒரு அறிமுகப் புன்னகையாலெதான்.

இதுலே ஃபிஜி இந்தியர்கள் உண்மைக்குமே பாராட்டப்படவேண்டியவர்கள். சக இந்தியனைக் கண்டால் 'கைஸே'ன்னு
முதலில் கேக்கறது அவுங்கதான்.

ஆக்லாந்து, வெலிங்டனிலே எல்லாம் சக இந்தியனைப் பார்த்தால் தலையை அப்படித் திருப்பிக்கிட்டுப் போறதை
நானே நிறைய தடவை பார்த்திருக்கேன். அப்பத்தோணும், 'எதுக்காக அசட்டுத்தனமா நாம் சிரிச்சு வச்சோமு'ன்னு(-:

ஒருவேளை அங்கெல்லாம் இந்திய மக்கள் நிறைய இருக்கறதும் ஒரு காரணமா இருக்குமோ?

said...

துளசிம்மா இந்த மொழி பத்தின பதிப்புக்கும் உள்குத்துக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா?

ஓடு ஓடு டீச்சர் வற்றதுக்குள்ள ஓடு................

said...

மகேந்திரன், வாங்க.

நீங்கவேற .... உள் மனசே நம்மளைக் குத்திக்கிட்டு இருக்கு.

ஓஓஓ இதுதான் நீங்க சொல்ல வந்த உள்குத்தா? :-))))

said...

ஓ ஓ ஓ புரிஞ்சிடுச்சாம்மா ? இல்ல எதுவும் ஜிரா போட்ட குலோப்ஜாமுன் வேனுமா? நீங்க கண்ணனும் ராமனும் ஒன்னுன்னு வெற்றிகரமா ந்ம்புறீங்கன்னு நினைக்கிறேன் :)

யப்பா எப்படியோ துளசிம்மாவையும் அரஸியல்ல இழுத்துவிட்டாச்சு ..........அவசரமா வாலையிருக்கு அப்புறமா வர்றேம்மா :))).............................................

said...

நம்முடைய தென்னிந்தியக் கூட்டத்துலே கலந்துக்கற வட இந்தியர்களுக்காக, நாம் பெரும் முயற்சி எடுத்து,அவுங்களை நல்லபடியா வரவேற்று அவுங்க இயல்பா இருக்க நம்மால் ஆனதைச் செய்யறப்ப( அதான் தமிழ் சினிமா உலகத்துலே பார்க்கறீங்களே) அவுங்களுக்கு ஏன் இதை நமக்குத் திருப்பிச் செய்யத் தோணறதில்லை?//


ஏன் வடக்கத்தி ஆட்களைப் பற்றி பேசுகிறீர்கள்? தென்னிந்தியர்களிலேயே தமிழர்கள்தான் வந்தாரை வாழவைப்பவர்களாய் இருக்கிறோம். ஒருமுறை தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலைவிழாவிலே கேரள நடிகர் மோகன்லால் பேசும்போது ஏதோ அவர்களுடைய மொழியில்தான் தரமான படங்கள் வருவதுபோல் பேசினார். அதை எதிர்த்து குரல் கொடுப்பதை விடுத்து நம் பார்த்திபன் அவர் நடிப்பில் இப்படி, அப்படி என்று புகழ்ந்து தள்ளினார். அடுத்து வந்த ஜெய்ராம் மோகன்லால் கூறியதை ஆமோதித்ததுடன் தமிழ் படத்தில் ஓவர் ஆக்டிங்தான் எடுபடுகிறது.. சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் கவ்வுவதெல்லாம் இங்க ஆக்டிங்னு நினைச்சிக்கிட்டிருக்காங்க என்றார். அதையும் எதிர்த்துப் பேச இங்கு எவருக்கும் துணிவில்லை. அவருடைய பேச்சு ஒரு எல்லையைக் கடந்தபோது ரசிகர்கள் கூச்சலிட துவங்கினர்.

இதுதாங்க நம்ம பழக்கம். இதை பெருந்தன்மைன்னு சொல்றதா இல்ல கோழைத்தனம்னு சொல்றதா?

said...

துளசியக்கா!
மனதாரப் பாராட்டுகிறேன். "பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளக் கூடாது" என்பதைச் சொல்லித் தந்துள்ளீர்கள்.மேலை நாட்டாரைவிட நம் நாட்டவரே! கேலி செய்வதே! மிகக் கோவத்தை ஏற்ப்படுத்தும்.
யோகன் பாரிஸ்

said...

வெளிநாட்டில் இருக்கும் போது இந்த அநியாயங்கள் இன்னும் அதிகமாக உறைக்கும். இந்தி மொழி பேசுபவர்கள் சில குடும்பங்கள் இருந்தாலும் ஒரிசாக்காரர்கள், வங்காளிகள், தெலுங்கர்கள் கூட இந்தியை ஏற்றுக் கொண்டு பேசவும் கலந்து கொள்ளவும் செய்கிறார்கள். தமிழர்களான நாம் மட்டும் அதை ஏற்றுக் கொள்வதில்லை என்று வட இந்தியர்களுக்குக் கடுப்பு.

அதுதான், "இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாமல் எப்படி?" என்ற சொல்லடி எல்லாம் பறக்கும். என்னைப் பொறுத்த வரை பள்ளிப் பருவத்திலேயே இந்தி எல்லாம் படித்து தென்னிந்திய இந்தி சபையின் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டிருந்தேன். இந்தி நண்பர்களுடனும், பிற உறவினர்களுடனும் இந்தியிலேயே உரையாடி வந்தேன் வருகிறேன்.

ஆனால், யாராவது ஒருவர் இப்படி நமது மொழியை மதிப்பதில்லை என்று தெரிந்தால் அவரிடம் அப்புறம் ஆங்கிலம் மட்டும்தான். 'நான் இந்தி படித்தது இந்தியாவின் இரண்டாம் தரக் குடிமகனாக இருப்பதால் அல்ல. இன்னொரு மொழி தெரிந்து கொள்ளத்தான். என் தாய் மொழியை நீ மதிக்கவில்லை என்றால் உன் மொழியை நீயே வைத்து கொள்' என்று.

மற்றபடி மற்ற தேசிய இனத்தவரை கிண்டல் செய்வது எல்லோரும் செய்வது. சென்னையில் ஆந்திரரையும், திருவனந்தபுரத்தில் தமிழர்களையும், தமிழ்ப் படங்களில் இந்திக்காரர்களையும் கிண்டல் செய்வது நடக்கத்தான் செய்கிறது. அது எல்லாமே சின்ன மனம் படைத்தவர்களின் செய்கை என்று ஒதுக்கி விட வேண்டியதுதான்.

இவ்வளவு சொன்ன பிறகு் உங்களுக்குள் ஓடிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் எதிர்ப்பைக் காட்டுகிறோம். எஸ்கே ஐயா சொல்வது போல உங்கள் வழி கனிந்து விட்டது இப்போது.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

துளசி மேடம், நல்லது செய்திருக்கிறீர்கள்.

எனக்கு ஹிந்தி தெரியாது என்று தெரிந்திருந்தும் என்னிடம் இந்தியில் பேசுபவர்களிடம் நான் தமிழில் பதில் சொல்வேன்

இங்கேயும் இந்தியர்கள் சக இந்தியர்களை கண்டால் விலகுகிறார்கள். நானும் விடாமல் புன்னகை புரிகிறேன். பார்க்கலாம் என்ன ஆகிறதென்று.

புன்னகை புரியாத என் நண்பர்களிடம் நான் ஏன் புன்னகை புரிவதில்லை எனக் கேட்டதற்கு இந்தியர்கள் ஏதாவது உதவி கேட்பார்கள் இல்லையேல் ஏதாவது மல்டிலெவல் மார்க்கெட்டிங் புராடெக்டை தலையில் கட்டுவார்கள் என்பார்கள்

என்னுடைய எண்ணம் என்னவென்றால் உதவிகேட்டால் முடிந்தால் செய்யவும் இல்லையென்றால் முடியாது என சொல்லவும் இதில் என்ன தயக்கம் என தெரியவில்லை

said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!!
இத்தனைக்கும் அவர்களைப் பற்றித்தான் உலக மஹா ஜோக்ஸ் எல்லாம்.
துளசி, "மோதி மிதித்து விடு பாப்பாவை''
அப்படியே நிறைவேற்றி விட்டீர்கள்!
சாமியாடுவதை நிறுத்த வேண்டாம்.
ரௌத்திரம் பழகினால் தான் நாம் இருப்பதே அவர்களுக்கு நினைவுக்கு வரும்.
வாழ்க வாழ்க வாழ்க.
மீண்டும் வரேன்.
ஏன்னால் கோபம் கொதிக்கிறது.

said...

மகேந்திரன்,

சிண்டு முடிஞ்சாச்சா? ஜீராவுக்கும், டீச்சருக்கும் நல்ல விதமான புரிதல் இருக்கு. கோள் மூட்டி ஒண்ணும்
ஆகப் போறதில்லையாக்கும்:-))))

ஆமாம், அரசி(ஸி)யலில் நான் வரணுமுன்னா என்னை எம்.பி. ஆக்கணும், கூடவே என்னமோ 'ஆதாயம் உள்ள பதவி' ன்னு படிச்சேனே
அதுலெ ரெண்டோ, மூணோ வேணும்.:-))))

said...

வாங்க டிபிஆர்ஜோ.
//இதுதாங்க நம்ம பழக்கம். இதை பெருந்தன்மைன்னு சொல்றதா இல்ல
கோழைத்தனம்னு சொல்றதா//

இளிச்சவாய்த்தனம்னு சொல்லிக்கலாம். இவ்வளவு சொல்ற மலையாள தாரங்கள்
வசிக்கிறது நம் சிங்காரச் சென்னைதான்.

அந்தந்த கூட்டத்துக்குத் தகுந்தமாதிரி பேசறதுக்கு நடிகர்களுக்குச் சொல்லியா தரணும்?


கேரளாவிலே தமிழரை 'பாண்டி'ன்னு சொல்றது ஆரம்பத்துலே நல்ல வார்த்தையாகத்தான்
இருந்திருக்கணும். 'பாண்டிய நாட்டிலே இருந்து வந்தவர்கள்'ன்னு. இப்ப அது ஒரு kind of
இழிச்சொல்லா ஆயிருச்சு போல.

said...

//மேலை நாட்டாரைவிட நம் நாட்டவரே! கேலி செய்வதே!
மிகக் கோவத்தை ஏற்ப்படுத்தும். //

ஆமாங்க யோகன். நீங்க சொல்றது ரொம்பச் சரி.

said...

வாங்க சிவகுமார்.

//"இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாமல் எப்படி?"
என்ற சொல்லடி எல்லாம் பறக்கும்..//

இந்தியான்னா இந்திதான்னு ஆக்கிவச்சுட்டாங்க இல்லையா?
ஒரு மொழியைத் தேவைக்காகப் படிக்கிறது வேற, கட்டாயமாப் படிக்கிறது வேற இல்லையா?
இப்போ இந்தியாவிலே பொது மொழின்னா ஆங்கிலமுன்னு ஆகிப்போச்சே.

நம்ம மொழி தெரியாதவங்க கிட்டே ஆங்கிலம் பேசறதுன்றதுபோய், ஸ்டைலுக்காக தமிழரே இன்னொரு
தமிழர்கிட்டே ஆங்கிலம் பேசறதைப் பத்தி ஒரு நாளைக்குப் புலம்பணும்.

said...

கால்கேரி சிவா,
வாங்க. நலமா?
நீங்க சொல்றதுதான் சரி.

//என்னுடைய எண்ணம் என்னவென்றால் உதவிகேட்டால்
முடிந்தால் செய்யவும் இல்லையென்றால் முடியாது என சொல்லவும்
இதில் என்ன தயக்கம் என தெரியவில்லை//

ஆனா அங்கேதான் இருக்கு வீணான ஒரு எண்ணம். தைரியமா இது முடியாதுன்னு சொல்ல
வெக்கப்பட்டுக்கிட்டு மூஞ்சியைத் திருப்பிக்கிட்டுப்
போயிரலாம். முன்னதைவிட இது ரொம்ப சுலபம் ஆச்சே. முகமே நம்மதுதானே? :-)))))

said...

துளசி,
எல்லோரும் எழுதி இருப்பதைப் போல் நாம் நம்மை விட்டுக் கொடுப்பதால் தான் இது மாதிரி நடக்குது.

நம்ம அண்டைக் கேரளத்தைப் போல் ஒண்ணு சேருவதைப் பார்த்து இரிக்கீங்களா?

இது போல் நடப்பது 200 ஆண்டுகளாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நமக்கு வடக்கில் இருப்பவர்களுக்கு
நாம் அருகில் இருந்தாலும் ஹிண்தியில் தான் பேசத் தோணும்.
அதைவிட அவமரியாதை, நம் ஆட்களே டில்லி, பம்பாயிருந்து வெகஷனுக்கு வரும்போது, பேசும் அச்சாவையும், டீக் ஹையும் பார்த்தால், ஏதோ மனசு விட்டுப் போகிறது.
இப்போ கோப வேண்டாம் துளசி. உடல் நலம் தான் கெடுவது
ரிசல்ட்.வரும் தலைமுறைக்கு தமிழ் தெரிந்தால் நாம் நோகவே வேண்டாம்.

said...

அம்மா,

//பொதுப்படையா நாமெல்லாம் இந்தியர்கள்ன்னு சொன்னாலும், வட இந்தியர்கள் அதிகமா இருக்கற ஒரு கூட்டத்துலே தென்னிந்தியருக்கு சகஜமாக இருக்கறதுலே கொஞ்சம் கஷ்டம் இருக்கோ? இதுவும் ஒருவித தாழ்வு மனப்பான்மையா? என்னமோ அங்கே ஒரு ஒட்டுதல் இல்லாமப் போகறதுக்குக் காரணம் என்ன?//

எல்லாம் ஒரு தாழ்வு மனப்பான்மை தான் கரணம்ன்னு நினைக்கிறேன். என்ன காரணமோ தெரியவில்லை. ஒருவேளை செல்வன் சொன்ன மாதிரி ஆங்கிலம் பேச தெரியாத ஒரு குறையகவும் இருக்கலாம், நாம் பேசும் ஆங்கிலத்தை கண்டு அவர்களது பொறாமையாகவும் இருக்கலாம்.

//ஒரு முறை 'பிரபுபாதா' தென்னிந்தியாவுலே யாத்திரை செய்த சமயம், பிறப்பினால் பிராமணர் ஆன ஒருவர், கீதைப் புத்தகத்தைத் தலைகீழாய் வச்சுப் படிச்சுக்கிட்டு இருந்தாராம். தலைகீழாப் படிச்சதாலே அதுக்குண்டான அர்த்தத்தையும் தலைகீழாவே புரிஞ்சுக்கிட்டாராம். பிரபுபாதாதான், அவர்கிட்டே போய்,'இந்த மாதிரி புத்தகத்தைத் தலைகீழாய் வச்சுப் படிச்சால் இப்படித்தான் அர்த்தமெல்லாம் அனர்த்தம் ஆகிரும்'னு சொன்னாராம்.
//

இவையெல்லாம் பிரசங்கர் செய்யும் அக்கிரமங்கள். பிரபுபாதர் வாழ்க்கையை படித்தவர்கள் இதெல்லாம் சொல்ல மாட்டர்கள். குறை குடம் கூத்தாடும்.

//ஏன், இதே மாதிரி ஒரு கதையை நம்மாலெ உண்டாக்க முடியாதா? //

நாம செய்ய மாட்டோம் நாம நல்லவங்க. செய்ரவனையே மண்ணிப்பவர்கள் -nAங்கள். செய்வோமா?

//ஒருவேளை, நாந்தான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்து கொண்டேனோ?//
நானிருந்தாலும் அப்படி தான் செய்திருப்பேன்.

//நான் செய்தது சரியா?//
ரொம்ப சரி

//எனக்குப் பொறுமையா இருக்கத் தெரியலையா?//
பொறுமை பொறுமை என்று யாரை காக்க (தமிழ்) முற்பட்டோமோ அவரையே தாக்கும் போது பொருமைக்கு ஏது பெருமை.

said...

வாங்க வல்லி.

சம்பவம் நடந்து ரெண்டு வருஷம் ஆயாச்சு. ஆனால் இன்னும் அதைப்பத்தி நினைக்கும்போது
ரொம்ப வருத்தமா இருக்கு. மனசின் மூலைக்குத் தள்ளிவிட்டது முந்தாநாள் வெளியெ வந்துருச்சு.

ஊர்லேயும் வளரும் தலைமுறை நிறைய மார்க் எடுக்கணுமுன்னு ஃப்ரெஞ்சு படிக்குதுங்க.
என்னமோ போங்க வல்லி. மனசுக்குத்தான் குழப்பம் கூடி வருது.

said...

சிவமுருகன்,

நீங்க சொன்னது சரிதான். இங்கே ஹரேக்ருஷ்ணா கோவிலில் பல சம்பிரதாயங்களைப் பார்த்தால்
'பூனையைக் கட்டிப்போடு. பூஜைக்கு நேரமாச்சு' கதைதான் ஞாபகம் வரும்.

வேற ஒரு கோயிலும் இங்கே கிடையாதே, அதனால் 'க்ருஷ்ணார்ப்பணம்'னு அங்கே போகும்படியா ஆறது.
ஊரில் என்னன்னா..... பட்டர்கள்/குருக்கள் செய்யற அட்டூழியம்...............
இங்கே அந்தமட்டில் இதெல்லாம் இல்லைன்னு ஆசுவாசப் படுத்திக்க வேண்டியதுதான்.

said...

'//ஆதாயம் உள்ள பதவி' ன்னு படிச்சேனே
அதுலெ ரெண்டோ, மூணோ வேணும்.:-))))//

அட ரெண்டு மூனு எதுக்கும்மா இப்பல்லாம் (எப்பவுமே ?) முதல்வர் பதவிதான் அது வேனும்னா நீங்க எடுத்துக்கோங்க :))
பொ.பணி மட்டும் எனக்கு

said...

துளசி

வடநாட்டுல இப்ப புதுசா குடியேறி இருக்குற நான் நினச்சத இங்க பல பேர் சொல்லிட்டாங்க.. இங்க இருக்குற வட நாட்டு காரங்கதான் அப்பிடின்னா,நம்ம தமிழ் மக்கள் பன்ற அக்கிரமம்,,பந்தா..என்னத்த சொல்ல.. BP தான் துளசி ஜாஸ்தி ஆகுது.. பக்கதுல இருக்கவங்க நீ கண்டுக்காதேன்னு சொன்னாலும்..நம்ம அப்பிடி இருக்க முடியலை.. கோவம் கோவமா தான் வருது..
எனக்கு தான் அப்பிடி தோனுதுன்னு நினச்சுட்டு இருந்தேன்...
மங்கை

said...

துளசியக்கா,
இந்த விட்டேற்றியான வெளிநாட்டவருடன் (அட, நம்ம வடநாட்டுக்காரங்கதான்!) கணிசமான 15 வருஷம் குப்பை கொட்டுன அநுபவம். இவர்கள பொறுத்தவரைக்கும் மத்திய பிரதேசத்துக்கு கீழே உள்ளதெல்லாம் மதராஸ். அது இந்தியாவ சேர்ந்தது கிடையாது( ஒருவேளை பூகோளம் அவங்க பாடத்திட்டத்துல இல்லையோ???) சிலவங்க இன்னும் ஒரு படி மேல போய் “ நீங்க எல்லாம் திராவிடர்கள், நாங்க எல்லாம் ஆரியர்கள்” அப்படின்னு வியாக்கியானம் செய்வாங்க.

தோல் வெள்ளையா இருக்கறதுனால ஒரு ஓங்கிய மனப்பான்மை. ஹிந்தி தெரியலைன்னா, தேசிய மொழி தெரியலேன்னு எக்காளம் வேற (சர்வ தேச மொழி ஆங்கிலம் உங்களுக்கு தெரியலேன்னு அவங்க கூட வாதம் செஞ்சதெல்லாம் தனிக்கதை!!!!)

இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம், ஆனா இதையெல்லாம் மாற்றனும்னா நம்ம கிட்ட மாற்றங்கள் வேணும். “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”, அப்படின்னு பாடி விட்டு விடாம நிமிர்ந்து நின்னு உங்கள மாதிரி வீறு கொள்றதுதான் சரின்னு தோணறது(அது ஏன் சாமியாடுனேன்னு சொல்றீங்க???)

said...

மகேந்திரன் நன்றி.

கவனத்தில் வச்சுக்கிட்டேன்.:-)))))

said...

மங்கை,

வாங்க. நலமா?

நம்ம மக்கள்ஸ்கிட்டே எல்லாருக்கும் இந்த மனக்குறை இருக்கு, நான் தனியா இல்லைன்னு சந்தோஷப்படறதா?
இல்லே இப்படி ஒரு நிலமை இருக்கேன்னு துக்கப்படறதா?

said...

கஸ்தூரிப் பெண்,

//சிலவங்க இன்னும் ஒரு படி மேல போய் “ நீங்க எல்லாம் திராவிடர்கள், நாங்க
எல்லாம் ஆரியர்கள்” அப்படின்னு வியாக்கியானம் செய்வாங்க//

என்னங்க இது.... இப்படியெல்லாம்கூடப் பேசுவாங்களா?

//அது ஏன் சாமியாடுனேன்னு சொல்றீங்க???)//

ஆவேசம் வந்து ஆடுனதைத்தான் அப்படிச் சொல்லிக்கிறது:-))))))

said...

make war when you have to - இது நம்ம 9 கட்டளைகளில் ஒண்ணுங்க. நான் வடநாட்ல போட்ட ஒரு சின்ன சண்டை இங்கே.
"தவறு கண்டு பொங்கும் இயல்பு சிலருக்கே அமையும். உங்களிடம் அக்குணம் இருப்பது" கண்டு மிக்க சந்தோஷம். இப்பகூட அப்படி இருக்கவே முயலுங்களேன்.
"நல்ல முன்னேற்றம் தெரிகிறது இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நடுவே ... உங்கள் மனப்போக்கில்!" sk இப்படிச் சொன்னதை நான் முன்னேற்றம் என்று நிச்சயமாகச் சொல்லமாட்டேன். mellowing down என்று வேண்டுமானால் சொல்லலாம்.

said...

வாங்க தருமி,
நலமா?
நீங்க சொன்ன பதிவை முந்தியே படிச்சு அங்கே பின்னூட்டி இருக்கேன் பாருங்க.
நாம் வாயைத் திறந்தாந்தான் வழி கிடைக்கும்.

said...

துளசி அக்கா,
இந்தப் பதிவை முன்னமேயே படிச்சும் ஏனோ இப்போ தான் பின்னூட்டம் போடத் தோன்றியது.

இந்தப் பிரச்சனை அடிக்கடி பார்த்திருக்கேன். எங்க டீம் மீட்டிங்களில் இந்தியில் பேசுவது, தமிழ், தெலுகுன்னு தென்னிந்திய மொழி பேசுபவர் எல்லாரையும் மதராஸின்னு சொல்லிக் குழப்புவது, தெலுகு பாடல்களைக் காட்டி, "உங்க ஊர் பாட்டு கேட்கிறேன்னு சொல்வது" இப்படி! பொதுவா என் பதில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

அப்போதைக்கு மூடுக்குத் தகுந்தபடி, திருப்பி அவர்களுக்கு மிகத் தேவையான விஷயத்தைத் தமிழில் சொல்லியோ, அல்லது இந்தியைத் தவிர வேற மொழி எல்லாம் மொழியே இல்லையான்னு சண்டை பிடிச்சோ.. அவங்க மொழியையே தப்பு தப்பா பேசிக் குழப்பியோ, ஏதாவது செஞ்சிட்டு வந்திடுவேன்.. அன்றைய மூடை பொறுத்தது..

மற்றபடி, அடுத்தவங்க மொழியை மதிக்கும் வழக்கம் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இல்லை என்பது உண்மைதான்.

said...

பொன்ஸ்,

இப்படி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தேன்னு
தேங்காய் ஒடைச்சதுபோல உண்மையைப் பட்டுன்னு ஒடைச்சுட்டீங்களே.

ஏகப்பட்ட மொழி நமக்கெ இருக்குறதுனாலேதான் இப்படியா?

said...

I agree mam, neenga pannadhu correct dhaan. Even I have seen this happening sometimes, but havent done anything about it. Defn have changed the way i see things.