Thursday, January 24, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11

என்ன ஆச்சுன்னு இப்படி மூக்கைச் சிந்திக்கிட்டு இருக்காளுக? தொத்தாவுக்குத் தலைவலி தபால்மூலம் வந்தது.



"அதெல்லாம் தானே கத்துக்கிடுவா..... நீங்கமட்டும் எல்லாந்தெரிஞ்சுக்கிட்டா இங்கெ வந்தீங்க? அந்தக்காலத்துலே நீங்க வச்ச கொழம்பை இப்ப நினைச்சாலும்...யம்மா................. நம்மூட்டு ருசிக்கு உங்களை ஆக்கவைக்கறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா?"


'அய்யோ...ஆரம்பிச்சுருச்சு. இன்னிக்கு ஓயாது' என்று சாந்தி தன் ஓரகத்தியின் காதில் மெள்ளச்சொன்னார்.



"பாம்புக்காது.......சத்தமா ஒண்ணும் பேசிறமுடியாது"

எதற்காக பெரியவர்கள் எல்லாம் புலம்புகிறார்கள் என்று தெரியாமல் வழக்கம்போலக் கத்திக்கூச்சல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் எல்லா அரை டிக்கெட்டுகளும். ஒளிஞ்சுவிளையாடும் ஆட்டமாம். 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ' என்று புடவைத்தலைப்பில் ஒளிய வந்த சின்ன மகனை, 'அடப்போடா...நேரங்காலந்தெரியாம...... வெளியெ போய்
வெள்ளாடுங்கடா' என்று துரத்தினாள் தாய்.


ஆம்பளைகள் வீட்டுக்கு வந்ததும் மறு ஒலிபரப்பு ஆனது. 'கடுதாசி வந்துட்டாப்போதும்..இப்படியே கச்சேரி பண்ணிக்கிட்டு இருங்க' என்று சடைத்துக்கொண்ட முனுசாமி, 'அவ அங்கே நல்லாத்தானே இருக்கேன்னு எழுதி இருக்கா. அதான் தேவாண்ணே பொண்ணுங்க அங்கே இருக்குதுங்களே. வூட்டுவேலை எல்லாம் தன்னாலே வந்துட்டுப்போகுது. இது ஒரு பெரமாதமா?' என்றார்.


"அதுல்லேண்ணே...கழுதைக்கு வாரம் தவறாம சினிமாக்குப்போணும். இங்கெ ஆத்தாகாரிக் கண்டுக்கறதில்லைன்னு ஆட்டம் போட்டுக்கிட்டுக் கிடந்தா. அதெல்லாம் அங்கெயும் நடக்குமா?



சமயம் பார்த்து மனைவியைக் குற்றம் சொன்னார் கனகாவின் அப்பா.

"க்கும்...மகளுக்குக் காசு கொடுக்கறது இவரு. இப்ப என்னைச் சொல்லவந்துட்டாரு"



'சரி. வந்தவங்களைக் கவனிங்க. சோத்தை எடுத்து வை' என்று ஒரு சின்ன அதட்டல் போட்டார் தொத்தா.

* * * *

கொல்லிமலைன்னு ஒண்ணு இருக்காமே.......ஒரு விஷயமாகப் போயிருந்தார் தேவா தன்னுடைய நண்பரோடு. எல்லாம் எதோ மூலிகை எடுக்க வேண்டுமாம். தெரியாது என்று எதுவுமே தேவாவின் அகராதியில் இல்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். ஆயுர்வேதம் அத்துப்படியாம். ரசவாதம்? கேட்கவே வேண்டாம். தங்கம் போல் உள்ள மகனை விட்டுவிட்டுத் தங்கம் தேடிப்போயிருக்கிறார்.




திருவேங்கடத்தைக் கனகாவின் வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியில், பழைய நண்பர் ஒருவரின் எதேச்சையாகச் சந்திப்பு. பேச்சின் திசை திரும்பியதுபோலவே ஆளின் திசையும் ஆகிவிட்டிருக்கிறது. ரெண்டு நாளாக மலைப்பகுதியில் அலையும்போதுதான் ஞாபகம் வந்து தொலைத்தது. 'அடடா இன்று வியாழனா? பையன் கிளம்பி இருப்பானே.......'

* * *

ஏனோதானோ என்று வேலைகளைச் செய்தாலும் மனம் மட்டும் எதிலும் லயிக்கவே இல்லை கனகாவுக்கு. ஹரியும் முடிந்தவரையில் மனைவிக்கு உதவிகள் செய்துகொண்டுதான் இருந்தான். ரொட்டி செய்து அடுக்குவது அதிலொன்று.




பிதா ஜிக்கு வரவர உடல்நிலை மோசமாகியது. எதாவது சாக்கு வேண்டுமாமே எமன் வருவதற்கு! இவருக்கு இனிப்பாக வந்து காத்திருந்தான். சக்கரை வியாதியாம். மருந்து மாத்திரைகள் என்று கூடிக்கொண்டே போனது. காலில் அடிபட்ட இடத்தில் கொப்புளம் போல எதோ வந்து அது புண்ணாகி இருந்தது. அவரைக் கவனிப்பதே முழு நேர வேலையாகியது மா ஜிக்கு. இதில் வீட்டுக் கவலைகள் வேறு மனதை அழுத்தியது. 'பிஜ்யாவின் நிலமை இப்படியாச்சே' என்று உள்ளூரப் புழுங்கினார்.




கஸ்தூரிக்கும் இன்னும் ஏதும் விசேஷம் ஆகவில்லை. லலிதா இப்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பம். இந்தமுறை அவளுக்கு என்றுமில்லாத விதமாக ரெண்டு கால்களும் வீங்கிக்கிடக்கிறதாமே. நவ்தேஜ் வந்து புலம்பிவிட்டுச் சென்றார்.




இங்கேயும், கனகா அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லையோ? இளசுகள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா? பல நாட்கள் இரவு நேரங்களில் அழுகைச் சத்தம் அவர்கள் அறையிலிருந்து கேட்கிறதே....... எதற்கோ சண்டை போல. மத்ராசியில் என்னவோ சொல்லி அழுகின்றாள்..........



ஹரியிடம் பேச்சுவாக்கில் கேட்டதற்கு, 'அவளுக்கு வீட்டு நினைவு அதிகமா இருக்காம். ஊருக்குப் போகணும் என்று சொல்கிறாள். திடும் என்று உடனே போகணும் என்றால் என்ன அர்த்தம். இங்கே எவ்வளவு வேலைகள் இருக்கின்றன' என்றான். அவன் குரலில் ஒரு அயர்ச்சி.



எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில், கனகாவைக்கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு பொதுப்படையாகப் பேசுவதுபோல் அவள்மனதை அறிந்து கொள்ள முயற்சித்தார் மா ஜி. கனகாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கு முன் கண்களில் குளம் கட்டி விடுகிறது. 'பாவம். சின்னப்பெண். என்ன மனக்கஷ்டமோ?' என்று உள்ளம் உருகியது.

திக்கித்திணறி 'ஊருக்குப் போகவேண்டும்' என்றாள் கனகா. 'போனால் ஆச்சு. நான் ஹரியிடம் சொல்கிறேன். இதற்காகவா மனதைக் குழப்பிக்கொள்கிறாய்?' மா ஜியின் அன்பான பேச்சு இன்னும் கண்ணீரைத்தான் வரவழைத்தது. வேறு மண்ணில் இருந்து பறித்து நட்ட செடி. இங்கே வேர்பிடித்து வளர இன்னும் நாளாகுமோ.......




ஹரி சொன்ன சமாதானங்கள் எல்லாம் வேப்பங்காயாகக் கசந்தது கனகாவுக்கு. நாளாக ஆக மெலிந்துகொண்டே போனாள். ஊருக்குப்போகணும் என்ற வெறியும் கூடிக்கொண்டே போனது. ஹரி வாயைத் திறந்தாலே எரிச்சலாக இருந்தது.



"போயிறலாம். ஊரோடு போயிறலாம். அங்கேயே இருந்துறலாம்.."



'வீட்டிற்கு வந்தாலே இந்த அழுகையைக் கேட்கணும். பேசாம வேலை செய்யும் சாக்கில் வெளியிலேயே இருந்துவிடலாம்' என்று தோண ஆரம்பித்தது அவனுக்கு. வயல் வெளி மரத்தடியில் சிந்தனையுடன் அவன் கிடந்தகோலம் கண்டு ஆகாஷுக்குப் பயமாக இருந்தது. கஸ்தூரியிடம், 'என்னதான் நடக்கிறது அங்கே?' என்றான்.


பாவம் அவளும்தான் என்னத்தைக் கண்டாள்.


"உனக்கும் ஊருக்குப்போகணும் என்று தோன்றவில்லையா?"

"இல்லை. "



"ஏன்? "



அது அப்படித்தான். போகணுமுன்னு நினைச்சாலும் அங்கே எனக்கு யார் இருக்காங்க? அம்மா போய் வருசங்களாச்சு. அம்மா முகமே நினைவில் சரியாக வர்றதில்லை. அப்பா............ அவர் இருந்தும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான். நினைத்துப் பார்க்கவே முடியாது அது ஒரு நரகம். எங்களைப் பாட்டிவீட்டில் விட்டதில் இருந்து பசி இல்லாமல் இருந்தோம். அதற்கு முன்பு, இவர் எதாவது கொண்டு வந்தால்தான் எங்களுக்குச் சாப்பாடு. அக்காதான் அக்கம்பக்கம் எதாவது கடன் வாங்கி எங்களுக்கு சமையல் செஞ்சு போடுவாள். பலநாட்களில் அவளுக்கு ஒண்ணும் கிடைக்காது. அக்காதான் எனக்கு அம்மா. நல்லவேளையாக அக்காவும் இதே ஊரில் இருக்கிறாள் என்று நினைப்பதே மனசுக்குத் திருப்தியாக இருக்கிறது."





'ஓஹோ..... அதுதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டாயோ?' சீண்டினான்



'இல்லியா பின்னே? ' சிரித்தாள்.



"எங்கள் குடும்பம் என்றால் நாங்கள் மூவர்தான் என்றிருந்தோம். வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற பயம். நல்லவேளையாக அண்ணன் வந்து சேர்ந்தான்."


"அது எப்படி இவ்வளவு தைரியமாக ஹரியுடன் இங்கே வந்தீர்கள்? பயமாக இல்லையா?"




"என்ன பயம்? அதான் மூவரும் ஒன்றாகத்தானே வந்தோம். திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் கதி என்று பாட்டி சொல்லுவார்கள். மகாபாரதக் கதைகளைப் பாட்டி சொல்லும்போது, ஆகாயத்திலிருந்து கடவுள் வந்து எங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தது."



"அட! சரியாகத்தான் நம்பி இருக்கிறாய். பார், ஆகாஷாக நானே வந்துவிட்டேன் உன்னை அணைத்துக்கொள்ள"



" அண்ணி வீட்டில் ரொம்பச் செல்லமாம். அப்பா அம்மா, பெரியப்பா பெரியம்மா என்று எல்லோரும் தாங்குவார்களாயிருக்கும். அப்படி எனக்கும் இருந்திருந்தால் ஒருவேளை நான்கூடத்தான் அழுது அரற்றி இருப்பேன்"



'எனக்கும்தான் மாமியார் கையால் சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை' என்று முகத்தில் சோகத்தைக் கொண்டுவரப்பார்த்தான்.



"சின்னக்காவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது. கல்யாணம் முடிந்து போனவள் வரவேயில்லை. அவளுக்கு என்னமோ ஆச்சு என்று லலிதாக்கா சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கும் மனதே சரியில்லை"



"அதற்கென்ன? போய்ப் பார்த்துவரலாம் ஹரியிடம் சொன்னால் போச்சு. எனக்கும் இதுவரை தோணவே இல்லை பார்."

* * * *

"இப்போது மிகவும் மனக்கஷ்டத்தில் இருப்பாள். எப்போதோ சொன்னதை எல்லாம் பாராட்டக்கூடாது. நீ போய் அவளை இங்கே அழைத்துவா. பத்துப்பதினைஞ்சு நாட்கள் இருந்துவிட்டுப்போகலாம். அவளுக்கும் மனமாறுதலாக இருக்கும். மாப்பிள்ளையையும் கூடக் கூட்டிக்கொண்டு வரணும்."


மா ஜி வற்புறுத்தி ஹரியை அனுப்பி வைத்தார்கள். கனகாவையும் கூடவே அழைத்துச்செல்லும்படிச் சொன்னார்கள். நகரில் ரெண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரட்டும். அவளுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே.




ஆனால், ஹரி 'மாட்டவே மாட்டேன் என்று சொல்லி விட்டான். பிஜ்யாவின் வீட்டில் என்ன வரவேற்பு இருக்குமோ என்ற பயம்.



அதே போல் ஆனது. குழந்தையைக்கூடத் தூக்கிக்கொள்ள அனுமதி இல்லை. நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டினாள். பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய் என்று குற்றம் சாட்டினாள். சம்பந்தியம்மா வெளியில் வந்து பார்க்கக்கூட இல்லை. ஜீத்தின் அண்ணி வேண்டா வெறுப்பாகக் கொண்டுவைத்த சாய் அப்படியே ஆறி அவலாகியது.



ஹரியை வாயைத் திறக்கவே விடவில்லை. புருசனுக்குப் புதிதாகக் குடிப்பழக்கம் வேறு வந்துவிட்டதாம். பலநாட்கள் வீட்டுக்கு வருவதே இல்லையாம். மற்ற ஓர்ப்படிகள் இவளைப்பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசிச் சிரிக்கிறார்களாம். மாமனார் மாமியார் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கடுகடுவென்றிருக்கிறார்களாம்.


'கொஞ்சநாளைக்கு என்னோடு கிளம்பிவா. என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்' என்றான்.



"போதும். உன்னை நம்பி நாங்கள் மத்ராசைவிட்டுக் கிளம்பி வந்தது. உன்கூட அங்கே வந்து மற்றவர்களுக்கும் நான் இளக்காரமாக வேணுமா?"



"அதெல்லாம். கவலைப்படாதே. எல்லாம் சரியாகும். கிளம்பு."



"அவர் எங்கே இருக்கிறாரோ? அதெப்படி சொல்லாமல் கொள்ளாமல் வருவது?"



"உன் மாமனார் மாமியாரிடம் நான் கேட்டுக் கொண்டால் சரிதானே?"



'நீ ஒன்றும் கேட்க வேண்டாம். நானே போய்க் கேட்டுக்கொண்டுவருகிறேன்' என்று உள்ளே போனாள்.



"உன் புருஷன் வேற இல்லை. அவனைக் கேட்காமல் நான் என்ன சொல்வது? புகுந்தவீட்டை மதிக்காமல் இருப்பது நம் பரம்பரையில் கிடையவே கிடையாது. நீதான் இந்த மரியாதைக்குறைவை ஆரம்பித்து வைக்கிறாய்"

மாமியாரிடம் காண்பிக்கமுடியாத கோபத்தை அண்ணனிடம் காட்டினாள்.

"மாப்பிள்ளை எங்கே இருப்பார்? நான் போய்ப் பார்க்கிறேன். "

"உன்னை அவருக்கு அடையாளம் தெரியுமோ என்னவோ. "

"கஸ்தூரிக்கும் லலிதாவுக்கும் ரொம்பக் கவலையா இருக்கு உன்னைப்பற்றி."


அவ்வளவுதான். கஸ்தூரி என்றதைக் கேட்டதும் வேதாளம் முருக்கைமரம் ஏறியது. 'ஐயோ.... என் தலைவிதியே...........அந்த வேலைக்காரன் முன்னாலே தலைகுனிஞ்சு நிக்கணுமா?'


வந்த நோக்கம் நிறைவேறாமல் வீடு திரும்பினான் ஹரி




பயணம் தொடரும்.................

27 comments:

said...

என்னங்க, ரொம்ப சோகமாயிருச்சு!! நல்ல ஜோக்கரா ஒரு ஆளை கூட்டியாங்க.

வடுவூராரே, அதான் மொத பின்னூட்டமா நீர் வந்துடறீரேன்னு கிண்டல் எல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்!

said...

ஒரு தகவல் சொல்லுங்க. இத்தன பாத்தரத்த வெச்சுக்கிட்டு இத்தன சுருக்கமா எப்படி கதை சொல்றீங்க? நான் நாலு பாத்திரம் வெச்சுக்கிட்டே நாப்பது அத்தியாயம் எழுதியும்..சொல்ல வந்தத முழுசாச் சொல்ல முடியலை.நீங்க வெளுத்து வாங்குறீங்க. அதான் டீச்சரோ!!!!

said...

// 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ'//
ரசித்தேன்...

உறவுகளும்,பொறுப்புகளும் பெருகப்பெருக பிரச்னைகளும் பெருகும்போல..

Anonymous said...

ஹரிக்கு ஒரு தங்கச்சியால பெரிய பிரச்சனை வரும்போல இருக்கே. அதுக்கு மேல கனகா வேற.

said...

ராகவன், தங்ஸ் மறு மொழிகளை அப்படியே மறு மொழிகிறேன்.

பாவம் கனகா - நடுவில் தேவாவின் தங்கமலை ரகசியம் - பொறுத்திருந்து பார்ப்போம்.

said...

டீச்சர்,

சூப்பரா எழுதிட்டு இருக்கீங்க. எல்லா பகுதியையும் ரசிச்சு படிச்சேன். நல்ல பாந்தமான அழுத்தமான கதா பாத்திரங்கள். பாருங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் கதையை பத்தி மட்டுமே பேசறாங்க.

நல்ல ஒரு வெற்றிகரமான மெகா சீரியலா எடுக்கலாம். :-)

said...

வாங்க கொத்ஸ்.

ஜோக்கரா? தேடிக்கிட்டு இருக்கேன்:-)

said...

வாங்க ராகவன்.

கோபாலும் இதைத்தான் சொல்றார்.

ஒரு க(றி)தைக்கு இத்தனை பாத்திரம் எடுத்துக்கிட்டு, இப்பப் பாரு ஸிங்க் பூரா நிரம்பி வழியுதுன்னு:-))))

said...

வாங்க தங்ஸ்.

கூட்டமுன்னாவே பிரச்சனைதான்:-))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

உங்களுக்கான பதில் நம்ம 'தங்ஸ்' ஸின் பின்னூட்டம்:-)

said...

வாங்க சீனா.

தங்கமலை ரகசியம்:-))))))

ரசித்தேன்.

said...

வாங்க ஸ்ரீதர்.

இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்.

முதல்லே யார் யாருக்கு என்ன 'பாத்திரமுன்னு' முடிவு செய்யணும்.

எனக்கு ரயில் கூஜா. இப்பவே சொல்லிட்டேன்.ஆமா:-))))

said...

//இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்//
நான் ஆகாஷ்..இப்பவே சொல்லிட்டேன். கடினமா உழைச்சாலும், கஸ்தூரி மாதிரி பொண்ணு கெடைக்கும்:-))))

said...

பஞ்சாப் போண கனகா
ஊருக்குத்திரும்பனும்னு
அடம்பிடிப்பது........
ஏதேனும் உள்குத்தோ?

said...

பிஜ்யா விசயத்தில் மனம் போல வாழ்வு ..அவஎன்னைக்கு நல்லத நினைச்சா...
ம்.
ஆனாஹரி பாவம் தான்.. அப்பா பேச்சைகேட்டதுக்கு இப்படியா படனும்...

said...

என்ன டீச்சர் ஒரே பீலிங்க போகுது. ;(

பாவம் ஹரி எத்தனை பிரச்சனைகளை சமாளிப்பான்.

\\லலிதா இப்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பம். \\

என்னாது...மூணாவதா!!!

said...

\\தங்ஸ் said...
//இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்//
நான் ஆகாஷ்..இப்பவே சொல்லிட்டேன். கடினமா உழைச்சாலும், கஸ்தூரி மாதிரி பொண்ணு கெடைக்கும்:-))))\\\

இதுக்கு தான் சீக்கிரம் வரணுமுன்னு சொல்லறது...போச்சு...போச்சு..;)

தங்ஸ் நல்லாயிருங்க..;))))

said...

தங்ஸ்,

'கஸ்தூரி'யா யாருன்னு தெரியாம இப்படிக் கமிட் செஞ்சுக்கலாமா? :-)))

said...

வாங்க சிஜி.

அப்ப தமிழ்மணம் இல்லீங்களே....உ.கு. அப்படின்னு ஒண்ணு இருக்கறது தெர்ஞ்சிருக்க வாய்ப்பு உண்டோ? :-))))))

said...

வாங்க முத்துலெட்சுமி.

'நீர்வழிப்படும் புணைபோல....' தான் வாழ்வு இருக்குமாமே...
ஹரி.....ஒரு அப்பாவி

said...

வாங்க கோபி.

எப்படி ஒரு பில்லியனுக்கு மேலே ஏறிக்கிட்டுப்போகுதுன்னு இப்ப விளங்கியிருக்குமே....

தங்ஸ் பாருங்க. ஃபர்ஸ்ட் கம் & ஃபர்ஸ்ட் செர்வ்ட் :-))))

said...

கனகா இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.

ஹரி பாவமோ பாவம்.
அடுத்த பதிவுக்குள் பாத்திரங்களும் நடிகர் தேர்வும் நடந்து முடிஞ்சுடுமா.:))

said...

பாவம் கனகா...இந்த ஹரி ஒரு முறை கூட்டிக் கொண்டு போய் வந்தால்தான் என்ன?

(என்ன வல்லி மேடம்..எனக்கு நேர் எதிராகச் சொல்லியிருக்கிறீர்கள்?)

said...

வாங்க வல்லி.

உங்களுக்கு ஒரு 'பாத்திரம்' வச்சுருக்கு.



கண்ணில் அன்பு தெரியணுங்கறதுக்காக

மா ஜி.

said...

வாங்க பாசமலர்.

ஹரிக்கே பூஞ்சை மனசு. சரியான நேரம் வரணுமே எதுக்கும்.....

said...

//வல்லிசிம்ஹன் said...

கனகா இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.

ஹரி பாவமோ பாவம்.
அடுத்த பதிவுக்குள் பாத்திரங்களும் நடிகர் தேர்வும் நடந்து முடிஞ்சுடுமா.:))//

ரிப்பீட்டேய்...

said...

வாங்க ரசிகன்.

கதை முடிஞ்சுருச்சு. கடைசிப்பகுதியை இப்பத்தான் வெளியிட்டேன்.

இனி யார் யாருக்கு என்ன பாத்திரம் வேணுமுன்னு ஒரு பதிவு போட்டுக்கேக்கணும்:-))))))

ஆடிஷன், மேக்கப் டெஸ்ட் எல்லாம் இருக்கு,ஆமாம்.....