Friday, September 26, 2008

அண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்' (மரத்தடி நினைவுகள்)

முன் குறிப்பு:

இது உண்மையில் ஒரு உப்புமாப் பதிவு. எனக்குமட்டும் உப்புமா கிண்டித்தரும் ஆசை இருக்காதா? ஹூம்.....


அண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்'

எங்களுக்கு இடமாற்றம் வழக்கம்போல வந்தது. இந்தமுறை மேலூர். அதாங்க நம்ம 'பசுநேசன்' ஊரு. மாற்றம் எப்பவும் கல்வி ஆண்டு முடிவிலதான் வரும் . நாங்களும் அப்படியே அந்த ஊர் பள்ளிக்கூடங்களுக்குப் போய் சேர்ந்துடுவோம்.'அட்மிஷன்' கஷ்டமெல்லாம் இல்லை. எல்லாம் 'போர்டு ஸ்கூல்'தானே.

அங்கே, ஆஸ்பத்திரி இருந்த இடம் 'அக்ரஹாரம்'னு சொன்னா நம்பமுடியுதா? ஆனால் அதுதான் உண்மை. வழக்கம்போல ஆஸ்பத்திரிக்கு நேரெதிரே ஆரம்பப்பள்ளி. மத்த ஊருகளிலே ஒரு 5 நிமிஷம் நடையிலே
இருக்கறது, இங்கே அநியாயத்துக்குப் பக்கம். ரொம்ப அகலம் இல்லாத தெரு. ஒரு பத்து எட்டு( சின்னக் காலு ஆச்சுங்களே)லே ஸ்கூல் கேட். கேட் ன்னு சொன்னாலும் அது ஒரு சாதாரண வீட்டுக் கதவு மாதிரிதான்
இருக்கும். அதை மூடவே மாட்டாங்க. கட்டடமும் ஒரு வீடு மாதிரிதான் இருக்கும். ஸ்கூல் நடத்துவதற்காக சில வீடுகளையே ஸ்கூலா மாத்திட்டாங்க. மாடி ஏறிப் போனா, தெருவைப் பாத்துருக்கும் சாய்வான கூரைஇருக்கற இடம்தான் என் வகுப்பு. அங்கேயிருந்து பார்த்தா, நேரா, நம்ம வீடும், ஆஸ்பத்திரியும், பின்னாலே இருக்கற புழக்கடையும்கூடத் தெரியும். மாடியாச்சுங்களே.

வீடுங்க எப்படி ஸ்கூல் ஆச்சோ, அதேபோல ஒரேமாதிரி ரெண்டு வீடுங்க சேர்ந்ததுதான் ஆஸ்பத்திரி. பாருங்க! அந்தக்காலத்துலேயே 'ட்யூப்ளெக்ஸ்' கட்டடம்!. அதுலே ஒண்ணு நமக்கு வீடு, இன்னொண்ணு
ஆஸ்பத்திரி.ரெண்டு கட்டடத்துக்கும் சேர்ந்து முன்னாலே கம்பி அழி போட்ட ஒரு நீஈஈஈஈஈஈஈஈள வெராந்தா.
ஏன்னா அங்கே குரங்குங்க தொந்திரவு ஜாஸ்தி. புழக்கடைக் கதவை எப்பவும் சாத்திவைக்கணும்.சிலசமயம் குரங்கு வீட்டுக்குள்ளே வந்திரும். நாங்கெல்லாம் கூச்சல்போட்டு விரட்டுவோம். ஒருதடவை, குரங்கு சுடு சோத்துக்குள்ளே கையை விட்டுடுச்சு. ரொம்ப கத்துச்சு. தோட்டக்காரன், தூரமா நின்னுகிட்டு, ஒரு கம்பாலே கையை வெளியே தள்ளி எடுத்துவிட்டான்.பாவம், கத்திகிட்டே ஓடுச்சு.

தெருவிலே, நம்ம பக்கம் மட்டும், பூவரச மரங்கள். அதுவே காம்பெளண்ட் சுவர்மாதிரி வரிசையா நிறைய இருந்துச்சு. அந்த பூவரச மொட்டுங்களை, பம்பரமாட்டம் தரையிலே சுத்தி விளையாடுவோம்.
அந்த மரங்கள் பூக்கற சமயம், என்னோட வகுப்பிலே இருந்து பாத்தா ரொம்ப நல்லா இருக்கும். நல்ல இள மஞ்சள் நிறம்! அக்ரஹாரத்துலேயே இருந்ததாலே 'அவாளை'ப் போல பேசவும் தன்னாலே வந்துடுத்து! க்ளாஸ் நடக்கறச்சே
தூத்தம்( தீர்த்தம்) குடிக்கறதுக்குக்கூட நம்மாத்துக்குதான் போவேன். 'எதிராம்' இல்லையோ!

இப்படியே நாள் போயிண்டிருந்தால் வாழ்க்கையிலே ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா?

திடீரென்று, அம்மாவுக்கு மாற்றல் வந்தது.அப்போ 'பிப்ரவரி'மாசம். ஏப்ரல் மாதம்வரை அங்கேயே இருப்பதற்கு, தலைமை அலுவலகத்தில் எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும் அனுமதி கிடைக்கவில்லை. அவர்களுக்கு என்ன நிர்பந்தமோ? ஒரே ஆறுதல் என்னன்னா, நாங்கள் மீண்டும் 'வத்தலகுண்டு'க்கே போறோம்.

எங்கள் வீட்டில் எப்போதும் யாராவது தூரத்து உறவினர்கள், வீட்டு நிர்வாகத்துக்கு உதவியாக இருப்பாங்க. ஆனால்அந்த சமயம் யாருமே இல்லை.அப்போது பெரியக்காவுக்குக் கல்யாணம் ஆகி, முதல் குழந்தையும் பிறந்திருந்தது. ஒரு மாசத்துக்கு முன்புதான், மாமா வந்து பிரசவத்துக்கு என்று வந்திருந்த அக்காவையும்,மூன்று மாதமேயான குழந்தையையும்
கூட்டிட்டுப் போனார். நாங்க இப்ப நாலேபேருதான் வீட்டுலே. நானு, அம்மா, சின்னக்கா அப்புறம் அண்ணன்.

சின்ன அக்காவுக்கும், அண்ணனுக்கும் ஒண்ணரை வயசுதான் வித்தியாசம். அக்காதான் பெரியவுங்க. ஆனா படிப்புலே அக்கா, அண்ணனை விடவும் ஒரு 'ஸ்டேண்டர்ட்' கம்மி. அது ஏன்னா, அக்கா, எங்க சித்தப்பா வீட்டுலேயே வளர்க்கப்
பட்டாங்களாம். அப்ப ஆரம்பப் பள்ளியிலே அவுங்க படிச்சது தெலுங்கு மொழியிலே. அப்பல்லாம் 'சிங்காரச் சென்னைக்கு மெட்ராஸ், பட்டணம் என்ற பேருங்க இருந்ததாம். ஆந்திரா, தமிழ்நாடு என்ற வேற்றுமையெல்லாம் இல்லாமலிருந்ததாம்.


நாங்களும் வீட்டுலே தெலுங்குதான் பேசிகிட்டிருந்தோம். அம்மாவுக்கு, மதுரை ஜில்லாவிலே வேலை கிடைத்ததும், புது இடமா இருந்ததாலே, பிள்ளைங்களைக் கொஞ்சநாள் சொந்தக்காரங்ககூட விட்டுட்டுப் போனாங்களாம். நல்ல வேளை!
நான் அப்ப பிறக்கலே!

அப்புறமா, அம்மா வேலையிலே நல்லபடியா 'செட்டில்' ஆனபிறகு, பிள்ளைங்களைக் கூட்டிகிட்டாங்களாம். தெலுங்கு
படிச்ச பொண்ணை, திடீருன்னு தமிழ் படிக்க சேர்த்ததாலே கொஞ்சம் கஷ்டமாய் போச்சு. அதனாலே சின்ன வகுப்புலே சேரும்படியாச்சு.

ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேன் பாருங்க. அக்காவும் அண்ணனும் பேசிக்க மாட்டாங்க! அண்ணனுக்கு விவரம் தெரியாத வயசுலே அக்கா, சித்தப்பா வீட்டுலே இருந்தாங்களா, அப்புறம் அம்மா கிட்ட திரும்பி வந்தப்ப,
அண்ணன் நினைச்சாராம், அது யாரோ, எங்கிருந்தோ வந்ததுன்னு. அதுவுமில்லாம, சித்தப்பா வீட்டுலே அக்காவை,ரொம்பச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருந்தாங்களாம். பிடிவாதம் கூடுதலாம். (நாங்க மட்டும்
குறைச்சலா என்ன?)அண்ணனும் அக்காவும் எப்பப்பாத்தாலும், எல்லாத்துக்கும் சண்டை போட்டுட்டே இருப்பாங்களாம். ஒரு நாள் அம்மாவுக்குத்தாங்க முடியாமப் போய், கோவத்துலே இப்படி சொல்லிட்டாங்களாம்," மானம் ரோஷம் இருந்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசக் கூடாது".

பேச்சு வார்த்தையில்லாததாலே சண்டை நின்னுபோச்சு. வீட்டுலே சத்தம் இல்லை! ஆனா, ஒரே வீட்டுலே இருந்துகிட்டே விரோதிங்கமாதிரி இருந்தாங்க! மழை வந்துச்சுன்னு வையுங்க, வெளியிலே காயற துணிங்களை எடுக்கணும்னா,
மறந்துங்கூட ஒருத்தர் மத்தவுங்க துணிங்களை எடுக்க மாட்டாங்க! கவனமா அங்கேயே விட்டுட்டு வந்துடுவாங்க! வருஷம் போய்கிட்டிருந்திச்சு. இதுக்குள்ளே, நானும் பிறந்து, வளர்ந்து, ஸ்கூல் போய்கிட்டிருந்தேன்.

அம்மா, கட்டாயமா வத்தலகுண்டு போயே தீரணும். எங்க படிப்பு அந்த வருஷம் பாக்கி இருக்கு. "ரெண்டே ரெண்டு மாசம்தானே. நாங்க பாத்துக்குறோம்" னு அங்கேயிருந்த, கம்பெளண்டரும், நர்சம்மாவும் சொன்னதாலே, அம்மா எங்க
மூணு பேருக்கும் ஒரு வீடு பாத்து, குடித்தனத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டு, வத்தலகுண்டு போயிட்டாங்க. எல்லாம் என் நேரம்!!!

அந்த வீடு, ரெண்டுதெரு தள்ளி இருந்துச்சு. அக்ரஹாரம் தெரு கிழக்கு மேற்கா இருந்துச்சு. மேற்காலே போனா, கொஞ்ச தூரத்துலெ கடைவீதி வந்துரும். கிழக்காலே போனா, அது போய் ஒரு குறுக்காபோற தெருவுலே சேரும்.அந்தத் தெருவுக்கு அந்தப்பக்கம் ஆறு ஓடும்.இந்த ஆத்துலேதான், காலையிலே எல்லா மாமி, மாமாங்களும் குளிச்சிட்டு, அங்கே ஒரு அரச மரத்தடி மேடையிலே இருக்கற புள்ளையாருக்கும் ஒரு குடம் தண்ணி ஊத்திக் கும்பிட்டுட்டு போவாங்க. நாங்க தினமும் அந்த மேடையில ஏறி விளையாடுவோம். அங்கிருந்து சோத்துக்கைப் பக்கம் நடந்தா குறுக்கே இன்னொரு பெரிய ரோடு.
இந்தப்பக்கம் ஆத்துக்குமேலே ஒரு பாலம். அடுத்தபக்கம் வரிசையா கடைங்க. அதுலே ஒரு ஹோட்டல் கூட இருக்கு.

நாம எந்தப்பக்கமும் திரும்பாம நேரா அந்த ரோடுக்கு குறுக்காலே நடக்கணும். இது ஆத்தை ஒட்டியே போற தெருவாச்சே. அங்க மூணு வீடு தள்ளி, ஒரு 'கேட்'டு வரும். அதுக்குள்ளே ஒரு அஞ்சாறு வீடுங்க இருந்துச்சு. அங்கதான், நர்சம்மா வீடு. அவுங்க வீட்டுக்கு எதிர்லே, ஒரு வீடு தள்ளி இருந்துச்சு எங்களுக்குப் பார்த்த வீடு. எங்கவீட்டுக்கும், நான் சொன்ன ஹோட்டலுக்கும் இடையிலே ஒரே சுவர்தான்.எப்பவும் ஒரே சத்தமா இருந்துச்சு. இந்தபக்கம் நாங்க. அடுத்த பக்கம்
ஹோட்டலோட அடுக்களை.அங்கே யாராவது, தோசை சாப்புட வந்தாங்கன்னா, ' ஒரு ஸ்பெஷல்'னு உரக்க ஒரு குரல் வரும். அதுக்கு ஐஞ்சு வினாடிக்குள்ளே 'சொய்ங்'னு ஒரு சத்தம். தோசை ஊத்தறதுதான். எங்களுக்கு இது ரொம்ப தமாசா இருந்துச்சு. அங்க ஒரு தோசைன்னா, நாங்க இங்க 'சொய்ங்னு கத்துவோம். அம்மாவுக்கு அந்த இடம், சத்தம் எல்லாம் பிடிக்கலே, ஆனா எங்க பாதுகாப்புக்கு பிரச்சனையில்லைன்னு இருந்தாங்க.

எங்களுக்கு நிறைய காசும் குடுத்துட்டு போனாங்க.எங்களுக்கெல்லாம் ராத்திரி சாப்பாட்டுக்கு நர்சம்மா வீட்டுலே ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்கேயே போய் சாப்பிட்டுக்குவோம். காலையிலேயும், அந்த ஹோட்டல்லே, இட்லி, தோசைன்னு வாங்கிடுவோம். மத்தியான சாப்பாடுதான் தகறாரா இருந்திச்சு. நர்சம்மா வீட்டுலே, மத்தியானதுக்கு ஆக்க மாட்டாங்க. பழய சோறுதான் சாப்புடுவாங்க. எனக்குப் பரவாயில்லே, ஸ்கூல்லுக்கு கிட்டே என்கிறதாலே, பகலுக்கு ஹோட்டலிலேயே ஏதாவது வாங்கலாம்.கையிலேயும் காசு நடமாட்டம் இருந்துச்சு. தனியா விட்டுட்டுப் போறோமேன்னு அம்மா, என்கிட்டே
நிறைய காசு தந்திருந்தாங்க! அக்கா, அண்ணன் ரெண்டுபேரு படிக்கிறது மேல்நிலைப்பள்ளியாச்சா, அது கொஞ்ச தூரத்துலே இருந்தது. அங்கே அக்கம் பக்கத்துலே கடைகள், ஹோட்டல் ஏதும் கிடையாது. அதனாலே அக்கா ஒரு வழி கண்டு பிடிச்சாங்க. அவுங்களே ஏதாவது வீட்டுலேயிருந்து எடுத்துட்டு போனா நல்லதுன்னு. அக்கம் பக்கத்துலே கேட்டு, 'உப்புமா' செய்யறதுக்கு கத்துகிட்டாங்க. தினம் காலையில் உப்புமா செய்வாங்க. எங்க ரெண்டுபேருக்கு மட்டும்.

அண்ணன் இது நல்ல ' ஐடியா' ஆச்சேன்னு 'காப்பி'அடிச்சுட்டார். அவரும் தினமும் காலையில் உப்புமா செய்வாரு. எங்க ரெண்டுபேருக்கு மட்டும். அதுக்கு வேண்டிய சாமான்களை நர்சம்மா வாங்கிட்டு வந்தாங்க.பாத்திரம்னு ஒரு இரும்பு
வாணலியும் கரண்டியும் அவுங்க வீட்டிலிருந்தே குடுத்தாங்க. ஆரம்பிச்சிடுச்சு போட்டி!

யார் மொதல்லே எழுந்திருக்காங்களோ அவுங்க அடுப்பைப் பிடிச்சிக்குவாங்க! அவுங்க வேலை முடியறவரைக்கும் அடுத்த ஆள் காத்திருக்கணும்! இதுனாலே காலையில் சீக்கிரம் எழுந்துப்பாங்க. ரெண்டுபேரும் தூங்க மாட்டாங்க போல!
அக்கா பொதுவாவே சீக்கிரம் எழற ஆளு. அவுங்க உப்புமா செஞ்சிட்ட வாணலியைக் கழுவி வச்சிருவாங்க. அப்புறம் அண்ணன். அண்ணன் மொதல்ல அடுப்பைப் பிடிச்சிட்டார்னா,அவ்வளதான். உப்புமா செஞ்சிட்டு,'டிபன் பாக்ஸ்'லே எடுத்து வச்சிட்டு, வாணலியைக் கழுவாமலேயே போட்டுடுவாரு. அப்புறம் அடுப்பையும் நல்லாத் தண்ணி தெளிச்சு, ஒரு நெருப்புக் கங்கில்லாமல் அணைச்சிருவாரு. நாந்தான், பக்கத்து வீட்டுலேபோய் காஞ்ச சாம்பலும், நெருப்பும் வாங்கிட்டு வரணும், வற வற''ன்னு இருக்கற வாணலியையும் தேய்க்கணும் அக்காவுக்காக. எனக்காக ரெண்டுபேரு வச்சிருக்
கறதையும் தின்னணும். அக்காது நல்லா இருக்கும். அண்ணன் செஞ்சது ரொம்ப சுமார். ஆனா சொல்ல முடியாது.

சமையல் முடிஞ்சதும் இன்னொரு கொடுமை ஆரம்பிக்கும். முதல்ல சமையலை முடிச்சவுங்க '·ப்ரீ'யா இருப்பாங்கல்ல! அவுங்க எனக்கு தலைவாரி பின்னிவிடுவாங்க! அண்ணனுக்கு பின்னவே வராது. அக்கா நல்லா பின்னுவாங்க.அக்கா நல்லாப் பின்னுனதை அண்ணன் அவுத்துட்டு, அவரு பின்னிவிடுவாரு.கண்ணாடிலே பாக்கறப்ப அசிங்கமா இருக்கும். அண்ணன்
அசிங்கமா பின்னுனதை அக்கா அவுத்துட்டு அழகாப் பின்னுவாங்க. ஸ்கூல் போற நேரம் வர்ற வரைக்கும், இவுங்ககிட்டே மாட்டிகிட்டு அழுதுகிட்டிருப்பேன். அப்புறம் ஸ்கூலுக்குப் போறப்ப அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய், அங்க இருக்கற ஆயா கிட்டே தலை பின்னிகிட்டுப் போவேன்


அந்த வாரக்கடைசிலே ஒரு நாள் அம்மா வந்தாங்க. நான், ஆரம்பிச்ச அழுகையை நிறுத்தவேயில்லை. அவுங்க ரெண்டுபேருக்கும் நல்லா திட்டு கிடைச்சது. அப்புறம் கூட அவுங்க இந்தக் கொடுமையை விடலே. ஆச்சு ஒரு
அஞ்சு வாரம். அண்ணனுக்கு எல்லா பரிட்சையும் முடிஞ்சது. அம்மாவோட உத்தரவுப்படி, மறுநாளே அவரு 'வத்தலகுண்டு'க்கு கிளம்பிட்டார். அப்பாடான்னு இருந்தது எனக்கு. அடுத்த ஒரு வாரத்திலே அக்காவுக்கும் பரிட்சை முடிஞ்சது. சின்ன ஸ்கூல்தான் எப்பவுமே கடைசியா மூடுவாங்க. எனக்காக அக்கா இங்கேயே இருந்தாங்க. என்னோட பரிட்சையும் முடிஞ்சு, லீவு விட்டுட்டாங்க.மறுநாள் அம்மா வந்தாங்க எங்களைக் கூட்டிட்டுப் போகறதுக்கு. வீட்டைக் காலி செய்யறப்ப என் ·ப்ரெண்டு லலிதா வந்து, அவளோட விலாசம்
எழுதுன காகிதத்தைக் குடுத்தா. அதைக் கையிலேயே வச்சிருந்தேன். அப்புறம் கிளம்பற அவசரத்துலே மூட்டையிலிருந்த ஒரு டப்பாவிலே போட்டுட்டேன்.

வத்தலகுண்டு வந்து சேர்ந்த பிறகு, அஞ்சாருநாளைக்குப் பிறகு, 'அட்ரஸை'தேடிக்கிட்டிருந்தேன். எந்த 'டின்'னுன்னு தெரியலே. அப்புறம், வெல்லம் போட்டுவச்சிருந்த டப்பாவிலிருந்து,(திருடித்தின்னக் கையை விட்டப்ப)ஒரு காகிதம் கிடைச்சது. அதுதான்......ஆனா, எழுத்தெல்லாம் ஈரவெல்லத்துலே காணாமப் போயிருந்துச்சு.


அம்மா, ஏதோ கோவத்துலே ரெண்டுபேரையும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாலும், அவுங்களுக்கு இதே ஒரு கவலையாவும் ஆகிப்போச்சு. ரெண்டு பேருக்கும் என்ன இப்படி ஒரு பிடிவாதம் ? இந்தப் பிடிவாதம் மறையவே
யில்லை. சின்ன அக்காவுக்கு, பிரசவத்துலே ஏற்பட்ட சிக்கல்லே
அவுங்க உயிரை இழக்கும்படி நேரிட்டது.கடைசிவரை அவுங்க பேசிக்கவேயில்லை!


நன்றி: மரத்தடி 28 ஆகஸ்ட் 2004
===================================

37 comments:

said...

//சின்ன அக்காவுக்கு, பிரசவத்துலே ஏற்பட்ட சிக்கல்லே
அவுங்க உயிரை இழக்கும்படி நேரிட்டது.கடைசிவரை அவுங்க பேசிக்கவேயில்லை!//

எப்படியோ படிச்சுட்டு வந்தேன், கடைசில இப்படி ஒரு முடிச்சிட்டீங்களே.
ரொம்ப வருத்தம இருக்கு டீச்சர்.

said...

me the second

said...

என்ன மேடம் இதைப் போய் உப்புமா பதிவுன்னுட்டீங்க? கடைசியில் எல்லோர் மனசையும் கனமாக்கிட்டீங்க.

உங்கம்மா கடைசி வரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் பேச வைக்க முயற்சியே எடுத்துக்கலியா? மத்த உடன் பிறப்புகள்?

அற்ப விஷயங்களுக்காக உரிமைப்பட்டவர்களிடம் கோபித்துக் கொண்டு விலகும் எல்லோரும் படித்துத் தெளிய வேண்டிய ஒரு பதிவு.

பல குடும்பங்களிலும் இத்தகைய உதாரணங்கள் இருந்தாலும் உணர்பவர்களின் எண்ணிக்கை மட்டும் உயர்வதே இல்லை. (மகாபாரத நச்சுப் பொய்கையின் கடைசிக் கேள்வி பதில் தான் ஞாபகம் வருகிறது) ம்!

said...

மீண்டும் அக்கா பற்றிப் படிக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கு.


ஆனா ஒண்ணும் இப்பத் துள்சி கிண்டின உப்புமா நல்லாவே இருக்கும்.
எல்லாவித சுவையும் இருப்பதனால் .

said...

காலங்காதால மனச இப்பிடி கணமாகீடீங்கலே துளசி மேடம்

said...

ஆகா டீச்சர் மேலூர் போய்ட்டாங்க..இனி வத்தலகுண்டு கதை இல்லைன்னு நினைச்சேன்.. திரும்பி வந்திட்டீங்க.. :)
குதுகலத்தோடு படிச்சிட்டு வ்ந்தேன்.. கடைசியில் வருத்தமாயிடுச்சு

said...

துணிகளை எடுக்காம வந்திடறது, தமக்கு மட்டும் உப்புமா இதெல்லாம் அறியாத வயசுல புரியாத பண்றதுன்னு படிச்சுட்டே வந்தா காலம் அதை சரி பண்றதுக்குள்ளே காலன் வேற விதமா வழக்கை மூடியது கொடுமை. ம்ம்ம், உங்க அம்மாவும் வேலைப் பளுவிலே இதை அத்தனை சீரியஸா எடுத்திருக்கலை என்றே தோன்றுகிறது.

said...

தலை வாரும் படலத்தில் உங்கள் விவரிப்பு நீங்கள் பட்ட அவஸ்தையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

said...

ரீச்சர், உங்களுக்கு உப்புமா கிண்டவே தெரியலை. கடைசியில் உப்புமா சாப்பிட்ட சந்தோஷமே இல்லையே! :(

said...

அப்ப தினம் உங்களுக்கு ரெண்டு ப்ரேக் ஃபாஸ்டா?

கடைசியில் சோகமாகிடுச்சு... :(

said...

வாங்க குடுகுடுப்பை.

சோகமுடிவாத்தான் ஆகிப்போச்சு. 'நான்ஃபிக்ஷனாச்சே'.....(-:

said...

வாங்க ராப்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

அண்ணன் ஒரு வேளை வயசானபிறகு, இதை நினைச்சு வருத்தப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.


வயதாகும்போது 'திரும்பிப்பார்க்கும்' பழக்கம்தானே வருதே!!!

அதான் உப்புசப்பு பெறாத விஷயங்களுக்கெல்லாம் கோபம், ரோஷம் இப்படிப் பகை வளர்ந்துபோகுது.

சின்ன அக்காவைப் பற்றி ஒரு பதிவு எழுதணும்தான். அவுங்க கருமங்கள் நடந்தப்ப அண்ணன் கொஞ்சம் சோகமா இருந்ததாக நினைவு.

said...

வாங்க வல்லி.

அதென்னமோ ஒரு மாசமா அக்காக்கள் நினைவு வந்து படுத்திக்கிட்டு இருக்கு.

பெரியக்காவைப் பற்றி ஒரு சின்னத் தொடர் எழுதிக்கிட்டு இருக்கேன்ப்பா.
முடிச்சதும் வெளியிடணும்.

said...

வாங்க PVS.

வாழ்க்கையில் சோகங்களுக்கும் பங்கு இருக்கே(-:

வருகைக்கு நன்றி.

முதல் வருகைபோல இருக்கே?

நலமா?

said...

வாங்க தமிழ் பிரியன்.

வத்தலகுண்டு அப்படி சீக்கிரமா என்னை விட்டுருமா? இன்னும் ஏகப்பட்டது இருக்கே சொல்றதுக்கு:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எதோ அசட்டுத்தனமான ரோசம்.வீம்பு.

அம்மா ரொம்ப சீரியஸா ஏன் எடுத்துக்கலைன்னு இப்ப நினைச்சுப் பார்க்கிறேன். ஒருவேளை இது காலப்போக்கில் மாறுமுன்னு இருந்தாங்களோ என்னவோ?

ஆனால் அக்கா இறக்குமுன்பே அம்மா போயிட்டாங்க(-:

said...

வாங்க கொத்ஸ்.

உப்புப்போட மறந்துட்டேன். சுவை மிஸ்ஸிங்(-:

said...

வாங்க கயலு.

ஆமாங்க அது ஒரு அவஸ்த்தை.ஒரே சமயத்தில் நல்லதும் கெட்டதும் திங்கணும். அதுவும் தினம்தினம் அதே அதே.(-:

இவுங்க யாரும் பார்க்காதப்ப மெதுவா வெளியேவந்து நாய்க்குப் போடறதுதான்.
அது பெரிய ஆளு. சிலப்ப மாட்டிவச்சுரும்.

said...

என்ன டீச்சர் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டிங்க...;(


செம ஜாலியாக இருந்துச்சி முன்னாடி படிக்கும் போது...நிறைய இடத்துல டீச்சரை கிண்டல் பண்ணலாமுன்னு நினைச்சேன் ஆனா கடைசி வரி....போங்க டீச்சர் ;(

எங்க குடும்பத்தில்லும் எங்க அக்காவும் அண்ணனும் (பெரியம்மா பசங்க) இப்படி தான் சின்ன வயசுல இருந்தே பேசல....ஊருக்கு போன ஒரே காமெடியாக இருக்கும். ஆனா கடைசியில அக்கா கல்யாணத்து அன்னிக்கு அண்ணன் பேசிட்டாரு.

said...

எதோ வெளையாட்டா உங்க ஊர சுத்தி காட்டுறீங்கன்னு நெனைச்சா ,கடைசில தொண்டைல வலி வர வைச்சுட்டிங்களே ?

said...

உப்புமா ரொம்ப சுவையா இருந்துது
பிளாக் லோகத்தில் நீண்டநாள் கழித்து பிரவேசிக்கும் நான்
நம்ம ஏரியா பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்

www.jega-pethal.blogspot.com

said...

டீச்சர் உங்க உப்புமா சரியில்லை. கடைசில சோகமா இருக்கு, ருசிக்கவே முடியல.

said...

உப்புமா கிண்டுறப்போ அடிச்சுரண்டிக்கு... அதாவது சட்டீல ஒட்டிக்கிட்டிருக்குற முறுகலுக்குப் போட்டி நடக்கும்னு சொல்வாங்க. எனக்கு உப்புமாவே பிடிக்காதுங்குறதால..நான் கண்டுக்கலை. அந்த மாதிரி இந்தப் பதிவுலயும் அடிப்பிடிச்சிருச்சு. :( ஆனா அதுக்கு யாரும் போட்டி போடலைன்னு நெனைக்கிறேன்.

said...

அப்படியொரு பிடிவாதமா? ரொம்ப கஷ்டமாப் போச்சு கடைசில..

said...

துளசி உங்களுக்கு நினைவு இருக்கா? முன்பு இதைப் படிச்சதும், இதை கதையாய் எழுதுகிறேன்னு சொன்னேன் ( ஆனா எழுதலை) என்னால் மறக்க முடியாத காரக்ட்ரஸ். ஈகோ தான் வேறு என்ன சொல்ல :-(

said...

சுவையா இருக்கேன்னு நிறைய தின்னுட்டு - கடைசியில் திகட்டிடிச்சு.
சோகங்கள் அற்ற வாழ்க்கை சுவையாய் இருப்பதில்லை
சோகங்களே வாழ்க்கையானால் ...

http://adiraijamal.blogspot.com

said...

வாங்க கோபி.

நல்லவேளை பேசிட்டாங்க. பேசாம இருந்து உதாசீனம் செய்யறது பெரிய கொடுமை இல்லையா?

மௌனம் எப்போதும் வலிமையான ஒரு கத்தி.

said...

வாங்க ஜீவன்.

எனக்கும் இப்பெல்லாம் பழசை நினைக்கும்போது தொண்டை அடைச்சுப்போகுது. ஒருவேளை அதே அக்காதான் அண்ணனுக்கு மகளாவந்து பிறந்தாங்களோன்னு இருக்கும். அவர் பொண்ணு வாய் ஓயாத பேச்சுதான்!!!

said...

வாங்க அனந்த கிருஷ்ணன்.

ரொம்ப நாளா ஆளைக் காணோமே.....
அம்பது புள்ளையாரில் பார்த்ததுதான்!

அதெல்லாம் வந்துருவோமுங்க ஏரியாவுக்கு.

said...

வாங்க ஜே.கே.

வெறும் இனிமைகள் கொண்டதாக மட்டுமே வாழ்க்கை இருக்குமா?

ஒவ்வொருத்தருக்கும் எதாவது ஒரு சோகம் இருக்கத்தானே செய்யுது!

said...

வாங்க ராகவன்.

அந்த அடிக்கும் 'கருப்பே அழகு காந்தலே ருசி'ன்னு சொல்லிவச்சுருக்கு:-))))

அதுவும் இரும்பு வாணலியில் செஞ்சதுக்குக் கூடுதல் சுவை இருக்காக்கும்!

said...

வாங்க தங்ஸ்.

நினைச்சுப் பார்த்து அழுகறதுக்குன்னு ஒரு சோகம் வச்சுட்டுப் போயிருச்சு அக்கா.

அவுங்களைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். ரொம்ப சுவாரசியமான மனுசி.

said...

வாங்க உஷா.

ஏன் நினைவில்லாமல்..... மரத்தடி நினைவுகளை மறக்க முடியுமா?

என்ன சலசலப்பு...என்ன கொண்டாட்டம்....

said...

வாங்க அதிரை ஜமால்.

இந்த அதிரை என்பது அதிராமப்பட்டினத்தோட சுருக்கமா?

நீங்க சொன்னது ரொம்பச் சரி.

சோகம் கலந்திருக்கும் அளவுதான் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடுது.

said...

டீச்சர், ரொம்ப சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க..ஆசையாப் படிச்சிட்டு வந்து கடைசி வரிகளைப் பார்த்தப்ப மனசு கனத்துப் போச்சு :(

said...

வாங்க ரிஷான்.

வாழ்க்கையின் சோகத்தில் இதுவும் ஒன்னு, நெருங்கிய உறவின் இழப்பு.