Friday, November 21, 2008

அக்கா ( பாகம் 2 )

என்னவோ ஏதோன்னு பதறிப்போனப் போனப் பாட்டி, 'வீட்டுக்குள்ளே' போனபிறகுதான் மெதுவா அக்காவைக் கேட்டதுக்கு வீட்டுக்கூரையைக் கண்ணாலே காமிச்சது. மாமாவை ராஜகுமாரனா நினைச்சுக்கிட்டு, அவர் வீட்டையும் அரண்மனையாக் கற்பனை செஞ்சு வச்சுருந்துருக்கும் போல. பாவம். கூரை வீடு. தரையும் சாணி மொழுகுன மண்தரை. இருபதடி அகலத்துலே அறுபதடி நீளத்துக்குப் பள்ளிக்கூடம் மாதிரி ஒரு வீடு. ஜன்னல் என்ற பெயரே இல்லை. வாசக் கதவுதான் இருக்குற ஒரே தொறப்பு. உள்ளெ நுழைஞ்சாக் கடைசியிலே ஒரு ரெட்டை அடுப்பு. இதுகூட இந்தப் பக்கம் இருந்த பாஷாபாய் சம்சாரமும், அவுங்க அத்தாச்சியுமாச் சேர்ந்து போட்டுக் கொடுத்ததாம்.

கலியாணத்துக்குன்னு வந்துருந்த எங்க பாட்டிக்கிட்டேயும் அம்மாகிட்டேயும் சொல்லி அக்கா அழுதுச்சாம். பாட்டிதான் சொன்னாங்க, கூரைவீடா இருந்தாலும் சொந்த வீடாச்சே''ன்னு. அதுவுஞ்சரித்தான். எங்களுக்குன்னு சொந்தமா வீடு இல்லைன்னாலும், அங்கங்கே வேலை மாத்தத்துலே போற இடங்களில் குவாட்டர்ஸ் இருக்கும். பாட்டிவீடு, அந்தக் காலத்துலே பெரிய தாத்தா(பாட்டியின் அப்பா) இருந்தப்பக் கட்டுனது. முத்தமெல்லாம் வச்ச பழையகால வீடு. இதெல்லாம் எனக்குச் சரியா நினைவில்லை. அப்ப எனக்கு அஞ்சோ ஆறோ வயசுதான்.

அக்காவைப் புருசன் வீட்டுலே வுட்டுட்டு நாங்க கிளம்பி வத்தலகுண்டு வந்தோம். அக்கா இல்லாம நாந்தான் ரொம்ப ஏங்கிப்போயிட்டேன்.. காய்ச்சல்வந்து பினாத்திக்கிட்டுக் கிடந்தேனாம். மூணாமாசம், அக்காவும் மாமாவும் வந்தாங்க. தாலிபிரிச்சுக் கட்டணுமுன்னு எதோ சடங்கு. அன்னிக்கும் இப்படித்தான் பள்ளிக்கூடத்துலே இருந்து ஓடிவரேன்.... வாசலில் அக்கா நிக்குது. நம்பமுடியாமக் கத்துனேன்.

அக்கா இருந்த பத்து நாளும் எனக்கு மஜாதான். மாமா எப்பவும் பத்துகாசு, இருபது காசு கொடுத்துக்கிட்டே இருந்தார். மாமாவும் அக்காவும் உள் அறையிலே இருப்பாங்க. நானு பொழுதண்ணிக்கும் ஓயாம அக்காகிட்டேயே ஓடுவேன். மாமா காசு கொடுத்து முட்டாய் வாங்கிக்கச் சொல்வார். பக்கத்துலே இருக்கும் பொட்டிக்கடைக்கு ஓடிப்போய் ஓடியார ரெண்டு நிமிசமே சாஸ்தி. என்னைக் கழட்டிவிடத்தான் மாமா காசு கொடுத்தாருன்னு இப்ப நினைச்சா..... சிரிப்பா வருது.

அப்புறம் அக்காவுக்கு பிரசவமுன்னு கூட்டியாந்து விட்டாங்க. நானும் அம்மாவும் போய்க் கூட்டியாறதாத்தான் ப்ளான். நான் என்ன பெரிய மனுசியான்னா.... என்னை விட்டுட்டு வண்டியேற வுட்டுருவேனா என்ன?
இந்த மாமா ரொம்ப மோசம். பள்ளிக்கூடத்துக்குத்தான் லீவு விட்டாச்சே. நானே கூட்டியாரேன்னு சொல்லிட்டாராம். சம்பிரதாயம் தெரியாத ஒரு ஜென்மம்.

மாமா நாடகம் போடறதுலே பெரிய ஆளு. அவரே நாடகம் எழுதி, சில நண்பர்களைச் சேர்த்துக்கிட்டு நடிப்பார். அதுலே 'ஆக்ட் கொடுக்க'ன்னு பொம்பளை நடிகைகளைப் பக்கத்து டவுனில் ஏற்பாடு செய்வாங்க. அவுங்களும் நாடகத்தன்னிக்குக் காலையில் வந்து சேருவாங்க. ஒரே அலப்பரைதான். மாமாவோட சிநேகிதர் கூட்டமும் உதவிக்கு வந்தாமாதிரி,
இங்கே ஆக்கறதும் அரிக்கறதும், கூத்தும் பாட்டுமா இருக்கும்.

'துரோகி'ன்னு ஒரு நாடகத்துலே இவர் ஒரு கையும் ஒரு காலுமா இல்லாதவரா நடிச்சார். அதுக்காக தினம் கையையும் காலையும் மடக்கிக் கட்டிக்கிட்டு தவ்விதவ்வி நடந்து பழகுவாராம். 'கண்ணே... பீங்கான் தட்டிலே உருளும் திராட்சை போன உன் கண்கள்' என்ற ஒரு டயலாக் ரொம்பப் பிடிச்சுப்போய், இவரோட நண்பர் எப்பவும் சொல்லிக்கிட்டுத் திரிவாராம். நாடகம் பயங்கர வெற்றியாம். அதுக்குப்பிறகு, இவர் தெருவுலே நடந்து போகும்போது, 'இதோ துரோகி போறான்'னு பொம்பளைங்க இவர் காதுபடச் சொல்லுவாங்களாம்.

இதையெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிரிச்சு ஒரே கலாட்டாவா இருக்கும் நம்ம வீட்டுலே. அதுவும் அம்மா இல்லாத நேரம் பார்க்கணுமே...... இதையெல்லாம் நடிச்சுக் காட்டுவார்.


அண்ணனும் மாமாவும் நல்ல ப்ரெண்ட்ஸ் போல வெளியே போறதும், ஊர் சுத்தறதுமா இருந்தாங்க. அம்மாகூட மருமகனை இன்னொரு மகன்னு சொல்ல ஆரம்பிச்சிருந்தாங்க. பழைய கோபமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் காணாமப் போயிருந்துச்சு. அவரோட ஒரு அத்தை பண்ண காரியத்துக்கு இவர் என்ன செய்வாராம்?

ஆனா.... அந்த அத்தையாலேக் கெட்ட குடும்பத்துக்கு , எப்படியாவது தன்னாலே ஒரு நல்லது நடக்கணுமுன்னுதான் விடாப்பிடியா இருந்து அக்காவைக் கட்டுனாராம்.


அக்காவுக்கு ஒரு பொம்பளைப்புள்ளை பொறந்துச்சு. அவர்தான் தமிழ்ப்பெயர் வைக்கணும்னு 'சிலம்புச் செல்வி'ன்னு வச்சார். ஆனா நாங்க வீட்டுலே கூப்புடறது ராணின்னு. அதுக்கு அடுத்த வருசம் இன்னொரு பொண்ணு. அக்கா பிரசவத்துக்குன்னு வந்துட்டுப்போச்சு. குழந்தைக்கு அவ்வைன்னு பெயர் வச்சார். என்னடா இது கிழவிபெயரைப் பாப்பாவுக்கு வச்சுட்டாங்களே அம்மா நினைச்சாங்க. நாந்தான் 'அவ்வைக்கிழவி நம் கிழவி அருமை மிகுந்த பொன் கிழவி'ன்னு பாடிக்கிட்டுத் திரிஞ்சேனே! (அம்மாவுக்குத் தமிழ் அவ்வளவாத் தெரியாது என்பது இங்கே கொசுறுத் தகவல்) மூணாவதும் ஒரு பொண்ணு. மாமாவோட தமிழ்ப்பற்று கொறைஞ்சு போயிருச்சோ என்னவோ தரணி, ரேணுகான்னு பெயர்கள் வர ஆரம்பிச்சது.

இதுக்கிடையில் சின்னக்காவையும் சொந்தத்துலேயே கட்டிக்குடுத்தாங்க. எங்கம்மாவும் இறந்துட்டாங்க. அண்ணனும் வேலைக்குப்போனார். ( ரெண்டே வரியில் முடிச்சுட்டேன் இல்லை? என்னென்னமோ நடந்து போச்சு. இதெல்லாம் தனியாச் சொல்லணும். ராமாயணம் கெட்டது போங்க. அப்புறம் பார்க்கலாம்) நான் தான் இப்ப வீட்டுலே ஒரு பிரச்சனையா இருந்தேன்? படிப்புக் கெடவேணாமுன்னு அக்கா வீட்டுலே இருக்கும்படியா ஆச்சு. அக்காவின் செல்லமா இருந்த நான், 'இதுவும் நல்லதாப் போச்சு'ன்னு நினைச்சேன்.

அக்கா வீட்டுக்கு இதுக்குமுன்னாலே நாலைஞ்சுதடவை வந்து போனதுதான். இப்ப இங்கேயே இருக்கணுமுன்னு வந்தபிறகுதான் நல்லாக் கவனிச்சேன் அக்கா எப்படி மாறிப்போயிருக்குன்னு. மூணு குழந்தைங்க. இப்ப நாலாவது வயித்துலே. எல்லாம் 'ஞைஞை'ன்னு பிடுங்குதுங்க. பார்த்துப்பார்த்துச் சீலை கட்டும் பழக்கம் அறவே காணாம். மேட்சிங்கா ஜாக்கெட் இல்லை. ஒரு முடி இப்படி அப்படி பிசிறாம அழகாப் பின்னிப்போட்டுக்கும் சடை எங்கே போச்சு? ஏனோதானோன்னு அப்படிச்சீவி முடிஞ்சுக்குது.

வீட்டுக்கு முன்னாலே புதுசா ரெண்டு திண்ணை முளைச்சுருக்கு. வாசக்கதவு நடுசெண்டர்லே இல்லாம ஒரு ஓரமா வச்சதாலே ஒரு பக்கத் திண்ணை ரொம்பச் சின்னதாவும், மறுபக்கத் திண்ணை பெரூசாவும் இருந்துச்சு. நல்ல அகலமான திண்ணை. மாமாவோட ' டபுள் பெட்' திண்ணையில் சுருட்டி வச்சுருக்கு. மண்ணைக்குழைச்சுச் சுத்துச் சுவரு வச்சு, மேலே கூரையும் போட்டு இதுவே ஒரு கதவில்லாத அறைமாதிரி இருக்கு. சமையலுக்கான அடுப்பு இங்கே வந்துருக்கு. நல்ல வெளிச்சமா, புகை மண்டாம இருக்கு. இதுலே என்ன விசேஷமுன்னா மேலே கூரை வேய்ஞ்சது மட்டுமே வெளியே இருந்து கொண்டுவந்த ஆளாம். மத்தபடித் திண்ணை, சுவர் எல்லாம் 'கட்டுனது' அக்காவேதானாம். நெசமாவா இருக்கும்? கேட்டாச் சிரிக்குது. அவுங்க இடத்துலே கடைசியா வேலிக்குப் பக்கம் இருக்கும் பெரிய பள்ளம்தான் சாட்சி.
நம்ம பாஷாபாய் சம்சாரம் மதீனா அக்காதான் விறகு கொண்டுவந்த பையன்கிட்டே சொல்லிப் பள்ளம் தோண்டி மண்ணை அள்ளிப்போடச் சொல்லுச்சாம்.

வீடுமுழுசும் தரையெல்லாம் நல்லா மெழுகிக் கோலம் போட்டு வச்சு அழகா இருக்கு. திண்ணைகளிலும் கோலங்கள். பெரிய திண்ணை இல்லாம இத்தனை வருசம் எப்படி வாழ்க்கை நடந்துச்சுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும். சாப்பாட்டு மேசை, வீட்டுப்பாடம் எழுதும் இடம், மத்தியானத்துலே கொஞ்ச நேரம் அக்கடான்னு கண்ணயரும் கட்டிலு, யாராவது வந்தாங்கன்னா அவுங்க உக்காரும் பெஞ்சு, தரையெல்லாம் பெருக்கி மொழுகும்போது, யார்கால்லேயும் தட்டாமச் சாமான்சட்டெல்லாம் எடுத்துவைச்சுக்கற இடம், குட்டிப்பசங்களுக்குப் பால்புட்டி, காச்சுன பால் எல்லாம் எடுத்துப் பத்திரமா வைச்சுக்க, சாயந்திரம் உதிரிப்பூ கட்டுற இடம், புள்ளைங்களுக்குத் தலைசீவிப் பின்னிவிடறதுக்கு அதுகளை ஆடாம உக்காரவச்சு வகுடு எடுக்கன்னு ஆயிரம் வேலை அங்கேதான் நடக்குது. என்னைக் கொஞ்சுன காலமெல்லாம் போயே போச்சு. பிள்ளைங்க அந்த இடத்தைப் புடிச்சுக்கிச்சுங்க. இதுலே அந்த மூணாவது குழந்தை எப்பவும் என்கூடவே இருக்கும். நானும் தூக்கி வச்சுக்கிட்டே அங்கே இங்கேன்னு போயிட்டு வருவேன். நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது ரெடியா எனக்காகத் தெருப்பக்கம் வந்து காத்துக்கிட்டு நிக்கும்.

தொடரும்..............:-)

57 comments:

said...

மீ த பர்ஸ்ட்ட்டூ டீச்சர்!

said...

//ரெடியா எனக்காகத் தெருப்பக்கம் வந்து காத்துக்கிட்டு நிக்கும்.//

உங்க கதைக்காக பதிவுப்பக்கம் காத்துக்கிட்டு இருக்கும் எங்களை மாதிரி! :)

said...

மண்தரை வீடு என்றவுடன் எனக்கு எங்கள் கிராமம் ஞாபகம் வருகிறது

said...

super. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கேன். நீங்க போன பாகத்துல எனக்கு சொன்னது சரிதான், ஆனா என்னால இப்டி தெரிஞ்சவங்களுக்கு கஷ்டம் வந்தா தாங்க முடியாது, அதான் அப்டி சொல்லிட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க.

Anonymous said...

//பார்த்துப்பார்த்துச் சீலை கட்டும் பழக்கம் அறவே காணாம். மேட்சிங்கா ஜாக்கெட் இல்லை.//

பாவம் அக்கா, நிறைய கனவோட கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பாங்க போல இருக்கு.

said...

எனக்கு என்னோட பழைய கிராம வாழ்க்கை ஞாபகம் வந்து விட்டது.
அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்

said...

//ஆனா.... அந்த அத்தையாலேக் கெட்ட குடும்பத்துக்கு , எப்படியாவது தன்னாலே ஒரு நல்லது நடக்கணுமுன்னுதான் விடாப்பிடியா இருந்து அக்காவைக் கட்டுனாராம்.
//
டீச்சர், இந்த முடிச்சவிழத் தான் காத்துட்டிருந்தேன்... போன பதிவுல வேற "ஒறவுமுறை" பத்தி அவர் விளக்க்ப் போய்த்தான் உங்கம்மாவுக்குக் கோபம் வந்தது.

கதை கண்ணு முன்னால நடக்குறாப் போல இருக்கு. இந்த மாதிரி எனக்கும் சில பெண்ணுங்க தெரியும்:-((( "ராப்" கட்சியில தான் நானும்; ரொம்ப கஷ்டமா இருந்தா, தாங்க முடியாது.

said...

//
இவர் தெருவுலே நடந்து போகும்போது, 'இதோ துரோகி போறான்'னு பொம்பளைங்க இவர் காதுபடச் சொல்லுவாங்களாம்.
//

இது ரொம்ப நல்லாருக்கு.. துரோகி போறான்..துரோகி வந்துட்டான் :0)

துரோகின்னு சொல்றது ஒரு மாதிரி இருக்குன்னு கமலோட ஒரு படத்தோட பேர மாத்தினாங்கன்னு கேள்வி பட்ருக்கேன்.. மொதல்ல துரோகின்னு ஆரம்பிச்சி அப்புறம் குருதிப்புனல்னு வந்துச்சாம்..

ஆனா உங்க‌ மாமா அஞ்சா நெஞ்ச‌னா இருக்கார்..:0)

said...

//நானும் தூக்கி வச்சுக்கிட்டே அங்கே இங்கேன்னு போயிட்டு வருவேன்.//

பேரு தரணியா ரேணுகாவா சொல்லவேயில்லையே.

//வாசக்கதவு நடுசெண்டர்லே இல்லாம//

நடுசெண்டர் போல [gate]‘கேட்டுக்கதவு’ வழக்கில உண்டா?

//பெரிய திண்ணை இல்லாம இத்தனை வருசம் எப்படி வாழ்க்கை நடந்துச்சுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும்.//

சொல்ல ஆரம்பித்து...

//சாப்பாட்டு மேசை, வீட்டுப்பாடம் எழுதும் இடம், மத்தியானத்துலே கொஞ்ச நேரம் அக்கடான்னு கண்ணயரும் கட்டிலு, யாராவது வந்தாங்கன்னா அவுங்க உக்காரும் பெஞ்சு, தரையெல்லாம் பெருக்கி மொழுகும்போது, யார்கால்லேயும் தட்டாமச் சாமான்சட்டெல்லாம் எடுத்துவைச்சுக்கற இடம், குட்டிப்பசங்களுக்குப் பால்புட்டி, காச்சுன பால் எல்லாம் எடுத்துப் பத்திரமா வைச்சுக்க, சாயந்திரம் உதிரிப்பூ கட்டுற இடம், புள்ளைங்களுக்குத் தலைசீவிப் பின்னிவிடறதுக்கு அதுகளை ஆடாம உக்காரவச்சு வகுடு எடுக்கன்னு ஆயிரம் வேலை அங்கேதான் நடக்குது.//

அருமையா விவரிச்சிருக்கீங்க.

பாகம் மூன்றுக்கு வெயிட்டிங்.

said...

//சாப்பாட்டு மேசை, வீட்டுப்பாடம் எழுதும் இடம், மத்தியானத்துலே கொஞ்ச நேரம் அக்கடான்னு கண்ணயரும் கட்டிலு, யாராவது வந்தாங்கன்னா அவுங்க உக்காரும் பெஞ்சு, தரையெல்லாம் பெருக்கி மொழுகும்போது, யார்கால்லேயும் தட்டாமச் சாமான்சட்டெல்லாம் எடுத்துவைச்சுக்கற இடம், குட்டிப்பசங்களுக்குப் பால்புட்டி, காச்சுன பால் எல்லாம் எடுத்துப் பத்திரமா வைச்சுக்க, சாயந்திரம் உதிரிப்பூ கட்டுற இடம், புள்ளைங்களுக்குத் தலைசீவிப் பின்னிவிடறதுக்கு..//

டீச்சர், கதை எழுதும் போது ஒங்களுக்கு மூச்சு வாங்காதா டீச்சர்?
:)

பதிவுலக பாலகுமாரி? :)

said...

உடனே அடுத்த பதிவு போட்டு அசத்தீட்டீங்க..
அடடடா பாரதிராஜா படம் பார்த்த effect வருது....கிராமத்த கண் முன்னால கொண்டு வந்து நிருத்தீடீங்க..

தினமும் ஆணிபுடிங்கி(இந்த term-ஐ யாருங்க கண்டுபிடிச்சது), ரனமாயிருக்கிற எங்க மண்டைக்கும், மனசுக்கும் உங்களை போன்றோரின் வலைத்தளம் தான் ஆறுதல், அருமருந்து :))
Keep Writing!!!

said...

தூங்கி எழுந்து படித்தேன்.. அந்த வீட்டைக் கண்களுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள்.. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்ஸ்..:)

said...

"நான் தான் இப்ப வீட்டுலே ஒரு பிரச்சனையா இருந்தேன்? படிப்புக் கெடவேணாமுன்னு அக்கா வீட்டுலே இருக்கும்படியா ஆச்சு. "

-- நல்ல வேலை, உங்கள படிக்க வச்சாங்க...

இல்லனா நாங்க இந்த துளசி தளத்தை இழ்க்க வேண்டியதா போயிருக்கும்....

said...

வாங்க தமிழ் பிரியன்.

வீட்டைச் சரியா விளக்கலையோன்னு மனசுலே ஒரு சின்ன ஐயம்.

இப்பத் தீர்ந்துச்சுன்னு வையுங்க:-))))

said...

வாங்க கொத்ஸ்.

நெசமாவா சொல்றீங்க!!!!!

said...

வாங்க குடுகுடுப்பை.

மண்தரையைப் பத்தி இன்னும் கூட சில சமாச்சாரங்கள் வந்துக்கிட்டு இருக்கு.
நீங்களும் அடிக்கடி வந்து போகணும்.

said...

வாங்க ராப்.

இதுலே என்னப்பா இருக்கு...தப்பா எடுத்துக்க.

பலவித துன்பியல் சம்வங்களைப் படிக்கும்போது நம்ம ஊரு, நமக்குத் தெரிஞ்சவங்க, நம்ம நாடுன்னா ஒரு பதற்றம் வருவது இயல்புதானே?

said...

வாங்க சின்ன அம்மிணி.

எல்லாருக்கும் அவுங்க மணவாழ்க்கையைப் பத்துன ஒரு கனவு இருக்கும்தானே?
அக்கா மட்டும் விதிவிலக்கா என்ன?

said...

வாங்க நசரேயன்.

பலருக்கும் கொசுவத்தி ஏத்தி வைக்கிறாங்க நம்ம அக்கா!

said...

வாங்க கெக்கேபிக்குணி.

பாயிண்டைச் சரியாப் பிடிச்சீங்க.

சிலதைப் பூடகமாக் கோடிமட்டும் காமிக்க வேண்டி இருக்கேப்பா.

said...

வாங்க அதுசரி.

அது அவரோட நடிப்புக்குக் கிடைச்ச வெற்றின்னு சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவார்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சிறப்பா வைக்கும் தமிழ்ப்பெயர்கள் ரெண்டோடு போச்சு.

மூனாவதுதான் தரணி.

திண்ணைப்பதிவுகள் தொடர் வந்தப்ப இந்தத் திண்ணை நினைவுதான் ரொம்ப வந்துச்சு. மண்திண்ணை.

said...

வாங்க கே ஆர் எஸ்.

வேற பட்டம், குறிப்பா 'டாக்குட்டர்' கொடுத்தாத் தேவலை.

அம்மா ஞாபகத்துக்குன்னு ஒரு ஸ்டெத் வாங்கிவச்சுருக்கேன்:-)

said...

வாங்க ஹேமா.

ஊர் சின்ன ஊர்தான். அதிலும் அக்கா வீடு இருக்கும் இந்த பேட்டை ஊரை விட்டு ரொம்பத் தள்ளி இருந்துச்சு. இப்ப என்னன்னா...... இன்னொரு புது பைபாஸ்ரோடு வந்து இடம் அடையாளமே தெரியாமப்போயிருக்கு.

said...

வாங்க ரமேஷ்.

பெரியபடிப்பு படிச்சுட்டேன்னு நீங்க கற்பனையெல்லாம் செஞ்சுக்காதீங்க.

நானே ஒரு கணினி கை நாட்டு.

(இ)கலப்பை வச்சு உழும் விவசாயி:-)

said...

ஆகா அப்படியே அந்த காலத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க.. அள்ளி முடிச்ச அக்காவும் அவங்களை கவனிக்கிற நீங்களும் கூட ஒரு படமா தெரியுது கண்ணில்..
(நீங்க எப்படி ஒவ்வொருத்தரையும் நிகழ்வையும் கவனிப்பீங்கன்னு தான் நேரில் பார்த்திருக்கேனே)

said...

முடிவு கஷ்டமா இருக்கும்ன்னா இப்பவே சொல்லிடுங்க....அப்புறம் படிச்சுட்டு கஷ்டப்படமுடியாது..
ஆமா சொல்லிப்புட்டேன்

said...

//( ரெண்டே வரியில் முடிச்சுட்டேன் இல்லை? என்னென்னமோ நடந்து போச்சு. இதெல்லாம் தனியாச் சொல்லணும். ராமாயணம் கெட்டது போங்க. அப்புறம் பார்க்கலாம்) //

நாங்க வெயிட் பண்றோம்......

said...

இப்படி கோர்வையா நேர்த்தியா எழுத துளசி'அக்காவை' விட்டா யாரு?

said...

super. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கேன்//

nanum kathukinu iruken.

appuram solla maranthutene. 2 m baagam super.

said...

மண்தரையில் பசுஞ்சாணமிட்டு மெழுகி...அந்தக்கால டெட்டால், குளிர குளிர அமர்ந்து வெளாடிருக்கிறீர்களா? சுகமாயிருக்கும்.
அக்கா வீட்டு மண்திண்ணையில் காற்றோட்டமாக வொக்கார வேண்டும் போலிருக்கிறது...கதையின் ஓட்டம் அவ்வளவு இயல்பு.

said...

அப்படியே அந்த நிகழ்ச்சியை கண்ணுக்குள்ள கொண்டுவரீங்க... அப்புறம் ஒரு விஷயம்... ஒரு கல்யாணத்துக்காக திசம்பர் 7-10 உங்க வத்லகுண்டுலதான் இருப்பேன்... பாக்கறதுக்கு ஏதாவது ஸ்பெஷல் இருக்கான்னு உங்க பதிவைத்தான் தேடிப்பார்க்கனும்னு நினைச்சிருந்தேன்/இருக்கேன்...

said...

எத்தனை முறை நானும் இன்னும் பலரும் கூறிய போதும்..மீண்டும் மீண்டும் சொல்வதுதான்..

உங்கள் நடையழகே தனிதான்..கதையின் சிறப்பையும் மிஞ்சி நிற்கிறது என் மனதில் இந்த நடையழகுதான்..எப்போதும்..

வாழ்த்துகள்..மீண்டும்..

said...

கொத்ஸ் அண்ணாச்சி முந்திக்கிட்டாரு...சரி நான் ரீப்பிட்டிகிறேன்

\\நடுசெண்டர்லே\\\\

இதுக்கு எதுவும் அடைப்புகுறியில சொல்லவில்லையா! ;)))

\\என்ன விசேஷமுன்னா மேலே கூரை வேய்ஞ்சது மட்டுமே வெளியே இருந்து கொண்டுவந்த ஆளாம். மத்தபடித் திண்ணை, சுவர் எல்லாம் 'கட்டுனது' அக்காவேதானாம். நெசமாவா இருக்கும்? \\

எல்லாம் செய்துயிருப்பாங்க டீச்சர்..நம்புவோம் ;)

said...

அப்புறம் சொல்றேன் க்கு வரிசையா
1,2,3...னு நம்பர் கொடுங்க
கடைசியில் அதைத் தனிப் பதிவா போட்டுடலாம்

said...

அக்கா மாதிரி அப்ப ஆளுங்க இருந்து குடும்பமும் நடந்தது. இருந்தோம். இப்ப அந்தக் குழந்தைகளேல்லாம் பெரிசாயிருக்கும். தூக்கி வச்சிருந்த சித்தியை நினைவிருக்குமா.

said...

பாகம் 2 கொஞ்சம் மனசை கனக்கச் செய்கிறது.

வெய்ட்டிங் ஃபார் எபிசோட் 3

said...

டீச்சர், இந்த வார குமுதம் அரசு பதில்கள்ல உங்கள பத்தி எழுதியிருக்காங்க படிச்சீங்களா?

****
கேள்வி: எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான திறமையாக நீங்கள் நினைப்பது?

பதில்: நினைவாற்றல். நாம் எல்லோருமே ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள்தான். ஆனால் ஒரு சிலரால்தானே அந்த ஞாபகங்களைத் திரட்டி எழுத முடிகிறது.
****

பாராட்டுக்கள் எழுத்தாளரே... :))

said...

//பார்த்துப்பார்த்துச் சீலை கட்டும் பழக்கம் அறவே காணாம். மேட்சிங்கா ஜாக்கெட் இல்லை. ஒரு முடி இப்படி அப்படி பிசிறாம அழகாப் பின்னிப்போட்டுக்கும் சடை எங்கே போச்சு? ஏனோதானோன்னு அப்படிச்சீவி முடிஞ்சுக்குது. //


ஏனோ தெரியலை டீச்சர்.. நம்ம ஊரு அக்காக்களும் கூட இப்படித்தான், இரண்டு பிள்ளைகள் வந்துட்டாப் போதும்..ஏதோ விரக்தியடைஞ்சிட்ட மாதிரிதான் அவங்க நடவடிக்கை எல்லாம் இருக்கும். :(

said...

//டீச்சர், இந்த வார குமுதம் அரசு பதில்கள்ல உங்கள பத்தி எழுதியிருக்காங்க படிச்சீங்களா? //

நானும் பார்த்தேன் வெண்பூ :)
சட்டுன்னு நம்ம டீச்சர் தான் நினைவுக்கு வந்தாங்க ..ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.. வாழ்த்துக்கள் டீச்சர் :)

said...

வாங்க கயலு.

பதிவராகும் லட்சணம் அப்பவே தெரிஞ்சுருக்கு இல்லே?

கவனம் கவனம் எதிலும் கவனம்;-)))))

said...

வாங்க நான் ஆதவன்.

ஹேப்பிலி லிவ்டு எவர் ஆஃப்டர் னு முடிச்சுடவா? :-))))

said...

வாங்க கண்மனி.

அக்கா அக்காவென்று என்னை ஏன்....?
:-)))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

மூனாவது என்ன அடிபடப்போகுதோ!!!!

said...

வாங்க நானானி.

சுத்துச்சுவர் இருப்பதால் காத்தோட்டம் அவ்வளவா இல்லை. ஆனாலும் ஜாலியா உக்காந்து கதை பேசலாம் வாங்க:-)

said...

வாங்க கிருத்திகா.

வத்தலகுண்டா(க) போறீங்க!!!

என்னோட குண்டு 44 வருசப் பழசுப்பா.
இப்ப ஊரே அடையாளம் தெரியாமப் போயிருக்கு.

நம்ம தமிழ்ப்பிரியன்கிட்டே கேக்கலாம். அவர் அந்த ஊர்க்காரர்தான்.

said...

வாங்க பாசமலர்.

நடையை ரசிச்சதுக்கு நன்றிப்பா.

அதுவா வர்றதுதான்:-))))

said...

வாங்க கோபி.

நம்பாம நம்பிட்டேன். மண்ணைக் குழைச்சு உருண்டை உருண்டையா வச்சுக்கிட்டே வந்து எடுத்த சுவர்.

ஆணி அடிக்க ஒரு கஷ்டமும் இல்லை. சுத்தியல்கூட வேணாம். ஊதாங்குழலாலே லேசாத் தட்டுனா ஆணி இறங்கிடும்.

சுவர் கொஞ்சம் சுமாராத்தான் இருந்துச்சு.

said...

வாங்க சிஜி.

அப்ப....'அப்புறம் கதைகள்' வரத்தான் வேணும்போல:-)))

said...

வாங்க வல்லி.

//தூக்கி வச்சிருந்த சித்தியை நினைவிருக்குமா.//

இன்னும் ஆறு வருசம் கழிச்சு நினைவு அவளுக்கும் வரலாம்:-)))

said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.

நாளைக்குக் காலையில் மூனாவது பாகம் ரிலீஸ்:-)

said...

வாங்க வெண்பூ.

நீங்க சொன்னபிறகுதான் குமுதம் பார்த்தேன்.

நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது:-))))

said...

வாங்க ரிஷான்.

//நம்ம ஊரு அக்காக்களும் கூட இப்படித்தான், இரண்டு பிள்ளைகள் வந்துட்டாப் போதும்..ஏதோ விரக்தியடைஞ்சிட்ட மாதிரிதான் அவங்க நடவடிக்கை எல்லாம் இருக்கும். :(//

உண்மைதான். குடும்பம், மாமியார், நாத்தனார், பிள்ளைகள்ன்னு பிக்கல் பிடுங்கல்கள்.

கொஞ்சம் நல்லா அலங்காரம் பண்ணிக்கிட்டா, சமூகம்வேற 'ரெண்டு பிள்ளைப் பெத்தாச்சு. இன்னும் சின்னப் பொண்ணாட்டம் ஆட்டம் போடறாள்'னு சொல்லும்.

ஆனா....இப்பக் கொஞ்சம் மாறிக்கிட்டு இருக்கு என்பது ஆறுதல்.

நகரங்களில், வேலைக்குப் போவதின் காரணம் பெண்கள் பளிச் ன்னு இருக்காங்க.

குமுதம்?

நாம்தான் அவலை நினைச்சு உரலை இடிக்கறோம்:-))))

said...

என்னாமா வசிய மருந்து கலந்து வைக்கிறீங்க அடுத்தது என்னனு வாசிக்க:)

ஆறு வயசுல நடந்தது எல்லாமே நினைவில் இருக்கா துள்சிம்மா. எனக்கு அங்கே இங்கேன்னு பிச்சுப்பிச்சுதான் நினைவுக்கு வருது.

//அந்த அத்தையாலேக் கெட்ட குடும்பத்துக்கு , எப்படியாவது தன்னாலே ஒரு நல்லது நடக்கணுமுன்னுதான் விடாப்பிடியா இருந்து அக்காவைக் கட்டுனாராம்.//

நல்ல நாட்.
அம்மாவோட மனசு இப்போ நல்லா புரியுது.

//பார்த்துப்பார்த்துச் சீலை கட்டும் பழக்கம் அறவே காணாம். மேட்சிங்கா ஜாக்கெட் இல்லை.//

குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு, தானே திண்ணையும் கட்டணுமென்றால் பின்னே.....

said...

வாங்க மது.

முடிச்சு இருக்குன்னு சொல்றீங்களா?

நான் என்னவோ ஸீதாஸாதாவா எழுதறேன்னு இருக்கேனே:-))))

said...

அக்கா..முந்து ஷமிச்சாலி... லேட்டுகா வச்சேசானு....

வேலை அப்படி..பிடிங்கிறாங்க.. மாப்பு மாப்பு

\\\யாராவது வந்தாங்கன்னா அவுங்க உக்காரும் பெஞ்சு, தரையெல்லாம் பெருக்கி மொழுகும்போது, யார்கால்லேயும் தட்டாமச் சாமான்சட்டெல்லாம் எடுத்துவைச்சுக்கற இடம், குட்டிப்பசங்களுக்குப் பால்புட்டி, காச்சுன பால் எல்லாம் எடுத்துப் பத்திரமா வைச்சுக்க, சாயந்திரம் உதிரிப்பூ கட்டுற இடம், புள்ளைங்களுக்குத் தலைசீவிப் பின்னிவிடறதுக்கு அதுகளை ஆடாம உக்காரவச்சு வகுடு எடுக்கன்னு ஆயிரம் வேலை அங்கேதான் நடக்குது. என்னைக் கொஞ்சுன காலமெல்லாம் போயே போச்சு. பிள்ளைங்க அந்த இடத்தைப் புடிச்சுக்கிச்சுங்க.\\\\

ம்ம்ம்ம் ஏதோ நினைவுகள்...கண்ணீருடன்...

said...

வாங்க மங்கை.

லேட்டுகா வஸ்த்தே ஏமி? ரா க்கூடாதா?
ஆலாகே லேட்டஸ்ட்டுகா க்கூட ராவால:-)))