Tuesday, May 05, 2009

ஏரிகளும் மலையும் ............. (2009 பயணம் : பகுதி 20)

ஹைய்யோ.......... இது என்ன? வடை! அதுவும் மசால் வடை!! ஜானகிராமா....உமக்கு எப்படிப்பா நம்ம விஷயம் தெரிஞ்சது? இது.....பதிவர் உலகத்துக்கே தெரியும்போது...... சரிதான். நீங்களும் ஒரு பதிவர்ன்னு சேதி வந்துச்சே!
நிறைய நாள் காய்ஞ்சுபோய்க் கிடந்ததுக்கு இங்கே உணவு அருமையா இருந்துச்சு. பருப்பு, ரஸம், கேஸரி சாப்பிட முடிஞ்சது. கோபாலின் பரிந்துரையில் சுடச்சுட இன்னொரு வடை என் தட்டுக்கு வந்துச்சு. ஒரு மணி நேர ஓய்வுக்குப் பிறகு ஆர்யாவில் கணக்கை முடிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டோம்.
ஆர்யாவில் இருந்த (திரு)வாசகம். நியாயம்தானே?

இங்கிருந்து ஒரு அஞ்சாறு கிலோமீட்டர் தூரத்தில் புதுசா ஒரு ஹவுஸிங் கம்பெனி வீடுகள் கட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஒருசில வருசங்களுக்கு முன்னே, ஒருவேளை இந்தியா திரும்பிவந்தால் எங்காவது தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத நல்ல இடத்தில் இருந்துக்கலாமுன்னு வலையில் தேடிப் பிடிச்சுவச்சுருந்த இடம் இது. நம்ம பதிவர்களில் 'அந்தூர்க்காரவுக'கிட்டே விசாரிச்சதில் நல்ல கம்பெனின்னு தெரிஞ்சது. ஆனாலும் நேரில் பார்க்காம வீடு வாங்கிப்போட முடியுமா? வந்து பார்த்துட்டுச் சொல்றேன்னு மயில் அனுப்பினேன். 'நீ வர்ற காலத்துலே விலை ஏறிப்போயிரும். அப்போ என்ன விலையோ அதுக்குச் சம்மதிக்கணும்'. சரி. டீல் சரியாத்தான் இருக்கு.
மாடல்வீடுகளில் ஒன்னு

இந்த இடத்தைப் பற்றி நம்ம உலகநாதன்கிட்டே கேட்டதுக்கு, 'கவலையே படாதீங்க. அவுங்க(ளும்) நமக்குத் தெரிஞ்சவங்கதான். போய்ப் பார்த்துட்டே போகலாமுன்னுட்டார். அங்கே போனால் இடம் சூப்பரா இருக்கு. முதல் ஸ்டேஜ் முடிஞ்சு ரெண்டாவது பகுதியில் வீடுகள் முளைச்சுக்கிட்டு இருக்கு.
ரெண்டு, மூணு படுக்கை அறைகளும் நாலு டிசைன்களும். எல்லாத்தையும் போய்ப் பார்த்தோம். ஆசையாத்தான் இருக்கு.
கட்டிமுடிச்ச வீடுகள்

ஆனாலும் 'சட்'ன்னு முடிவு எடுக்கமுடியுதா? வீடுகட்டித்தரும் கம்பெனியைப் பொறுத்தவரை நல்ல பெயர் உள்ளதுதான். பெரிய நிறுவனம். இவுங்க அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவமனைகூட நடத்தறாங்க. (வயசான காலத்துலே 'சட்'னு போக (சிகிச்சைக்குத்தான்)மருத்துவ வசதிகள் இருக்கும் இடமான்னு முதலில் கவனிச்சுக்கணுமே). அதான் இப்பப் பார்த்தாச்சே...வாங்கிப்போட்டேனா? ஊஹூம்...... இன்னும் கொஞ்சம் யோசிக்கணும்(-:
இந்தச் செடி/மரத்தைக் கண்ணாட்டம் கன்ஸர்வேட்டரியில் வச்சுருக்கேன் நியூஸியில். எண்ணி அஞ்சு இலை வந்துருக்கு. இங்கே பாருங்களேன் அதுபாட்டுக்குச் செழிப்பா ...... மரத்தின் பெயர் CYCA Palm
போறவழியில் இன்னொரு கோவில் இருக்கு. அதையும் பார்க்கலாமுன்னு உலகநாதன் சொன்னார். நாங்குநேரி வானமாமலைன்னதும் எனக்கு ஜீயர் நினைவு வந்துச்சு. ரொம்ப தூரத்துலே இருந்தே கோயில் கோபுரம் லேசாத் தெரிஞ்சது. சாலையைவிட்டு ஊருக்குள் வண்டி போகும்போதும் மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் கோபுரம் கொஞ்சமாத் தரிசனம். கோயில் பின்புறத்தாலே போய்க்கிட்டு இருக்கோம். ஒரே வட இந்தியக் கூட்டம். ஒரு பக்கம் பெரிய பாத்திரங்களில் சமையல் ஜரூரா நடக்குது. பஸ் நிறையப் பயணிகள். கோயிலுக்கு முன்புறம் பெரிய மண்டபம். வண்டியிலிருந்து இறங்கி மண்டபத்துலே கால் வச்சதும் அங்கிருந்த காவல்காரர் ஓடிவந்து, கோபாலிடம், 'கமீஸ் நிகாலோ'ன்னு கத்தறார். கேரளாக் கோயிலா என்ன? சட்டை போட்டுக்கப்படாதாமே(-:
ஜீயர் இருக்காரான்னு கேட்டதுக்கு, டூர் போயிருக்கார்னு பதில் வந்துச்சு. ரொம்ப அழகான தூண் சிற்பங்கள். மூலவர் வானமாமலை என்ற தோத்தாத்ரி. தாயார் ஸ்ரீவரமங்கை. இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தி 'இருந்த கோலம். வெண்சாமரம் வீச அசல் தேவலோக மங்கையர் ஊர்வசியும் திலோத்தமையும். பொதுவா நாம் ரம்பா, ஊர்வசி மேனகாவோட நிறுத்திக்கறோமே. திலோத்தமையைச் சட்னு நினைச்சுக்கறதில்லையேன்னு......காரணம் புரிஞ்சுபோச்சு. இந்தப் பெயரில் ஒரு நடிகை(யும்) இல்லை:-))) (வத்தலகுண்டுக் காலத்தில் என் பள்ளித்தோழன் ஒருத்தன் பெயர் தத்தாத்ரி. தத்தாத்ரியும் தோத்தாத்ரியும் ஒன்னுதானோ? ஆன்மீகச் செம்மல்கள் பதில் சொல்லுங்கப்பா)

சுப்ரபாதம் சொல்லும்போது , 'மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே' ன்னு வருது பாருங்க, இந்த மது & கைடபனை 'அழிச்சதும்' இங்கத்துத் தலபுராணக் கதையில் வருது. அவுங்க என்ன பண்ணாங்க? பிரம்மா உக்கார்ந்துருக்கும் தாமரைப்பூவின் தண்டைப் பிடிச்சு ஆட்டி விளையாடி அவரைக் கீழே விழவைக்கப் பார்த்தாங்களாம். பயந்துபோன பிரம்மாவுக்கு அபயமுன்னு அரக்கர்களான மது, கைடபனைப் போட்டுத் தள்ளிட்டார் விஷ்ணு. அரக்கர்களின் ரத்தம் சிதறி பூமி முழுசும் ஒரே நாத்தமா நாறிப்போச்சு. பூமாதேவிக்கு மூச்சுவிட முடியலை. சக்ராயுதத்தை ஏவி பூமி முழுசும் அமிர்தம் மழையாகப் பொழியச்செய்து க்ளீனிங் வேலை நடந்துருக்கு.

சுயம்புவாக ஸ்வாமி தோன்றிய எட்டு இடங்களில் இது எட்டாவது. மற்றது என்னென்ன? எப்படியும் உங்களுக்குச் சந்தேகம் வரத்தான் போகுது. அதையும் தீர்த்தால் ஆச்சு. அவை பத்ரிகாஸ்ரமம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், திருமலை, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் என்பவை. இந்தக் கோயிலும் அந்த நூற்றியெட்டில் ஒன்னுதான்.கோவில் திருக்குளம் இருக்குமிடத்தில் நான்கு ஏரிகள் முந்தி இங்கே இருந்ததால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் போல.
இங்கத்துத் தாயார்பெயரான ஸ்ரீவரமங்கை என்றும் இந்த ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஏரிகளும் காடுமா வனம் இருந்ததால் இங்கே தோன்றியவர் வனமாமலையா இருந்து இப்ப வானமாமலை ஆகிட்டார்ன்னு நினைக்கிறேன். வானமுன்னு சொன்னாலும் பொருத்தம்தான். இவர் வானத்தையே தன் காலால் அளந்தவரல்லவா? ( பெயர்க் காரணத்தைத் துருவித்துருவிப் பார்க்கற புத்தியை விட்டுத் தொலைக்கணும் இனிமேல்)

இந்தக் கோயிலில் எண்ணெய்க்கிணறு இருக்கு பார்க்கறீங்களான்னு கோயில் ஊழியர் ஒருத்தர் கேட்டார். ஆஹா....பார்த்தால் ஆச்சு. அதுக்குத் தனியா ஆளுக்கு அஞ்சுரூபாய்க் கட்டணம். காசைக் கொடுத்துச் சீட்டு வாங்கிக்கிட்டு வலதுமூலை நந்தவனத்துப்பக்கம் இருந்த படிகளில் ஏறிப்போனோம். இடுக்கமாத்தான் இருந்துச்சு. அங்கே பெரிய கிணறு மாதிரி
இருக்கும் ஒன்னும் அதில் பாதிவரும் அளவுக்கு இன்னொண்ணும் இருக்கு. கறுப்பான திரவம்போல் குமிழ்களோடு எண்ணெய். தோல் சம்பந்தமான வியாதிகள் தீர்க்கும் அருமருந்தாம். பாட்டிலில் எடுத்துத் தருவாங்களாம். (அதுக்கும் எதாவது கட்டணம் இருக்கும்) வேணுமான்னார். கண்ணால் பார்த்ததே போதுமுன்னு சொன்னேன். தினம் மூலவருக்கு இங்கே நல்லெண்ணெய் திருமஞ்சனம் உண்டாம்.(சுயம்பு என்பதால் நீரபிஷேகம் இல்லை) அந்த எண்ணெய்தான் இந்தக் கிணத்துலே சேகரம் ஆகுதாம். விசேஷ நாட்களில் கூடுதல் எண்ணெய் அபிஷேகம் ஆகுமாம். தினமும் எண்ணெயா? பேஷ் பேஷ் அதுதான் பெருமாள் நிகுநிகுன்னு இருக்கார். ( சீயக்காப்பொடி தேய்ச்சுக்கிட்ட காலமெல்லாம் போய் இப்ப ஷாம்பூ மட்டுமே ஆனதில் இருந்து எண்ணெய்த் தேச்சுக் குளிக்கும் வழக்கம்தான் நமக்கு போயே போச்சே)


வானமாமலை ஜீயர் மடத்தின் நிர்வாகத்தில் இந்தக் கோயில் இருக்குன்னு சொன்னாங்க. தரிசனம் முடிஞ்சு வெளிவரும்போது ஒரு சின்னப் பையன் (ஆறேழு வயசு இருக்கும்) முழங்கால்வரை தொங்கும் தொளதொளச் சட்டையோடுக் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சுத்திக்கிட்டு இருந்தான். "ஏண்டா அம்பி உன்னைச் சட்டையைக் கழட்டச் சொல்லலியா?" அவன் திருதிருன்னு முழிக்க.... 'கழட்டிட்டா அவ்ளோதான்'னு கோபால் சொல்றார். (பின்னம்பக்கம் ஓப்பன் சிஸமே)
பள்ளிக்கூடத்துப் பசங்க

கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் அக்கிரஹாரம் வழியாப் பள்ளிக்கூடம்விட்டுப் பசங்க வந்துக்கிட்டு இருந்தாங்க. பள்ளிக்கூடச் சீருடை சல்வார் கமீஸ். ஆனாக் குட்டிப்பசங்களும் துப்பட்டாவை மடிச்சுப் பின் குத்திக்கிட்டு....... அதென்ன நியமமோ........ ஒரு கைப்பம்புக் குழாய் இருந்துச்சு. எவ்வளோ நாளாச்சு இதையெல்லாம் பார்த்து! ஒரு பையன் சைக்கிளில் கொண்டுவந்த ரெண்டு ப்ளாஸ்டிக் குடத்துக்குத் தண்ணி அடிச்சு ரொப்பிக்கிட்டு இருந்தான். இவர் போய் அவனுக்குத் தண்ணீர் அடிச்சுக் கொடுத்தார். பழசை மறந்துறக்கூடாது பாருங்க:-)))) (நான் வீடியோ புடிச்சுவச்சுக்கிட்டேன்)



கிடைச்சக் குழாயடியை விடாம ஒரு அம்மா, புடவையைத் தொவைச்சுக் காயவச்சுருந்தாங்க. கோவிலில் இருந்து கிளம்பி வரும்வழியில் சமையல் முடிஞ்சு எல்லாரும் தெருவோரத்திலேயே பந்தி போட்டுச் சாப்பிட உக்காந்தாச்சுத் தட்டை வச்சுக்கிட்டு. உண்மையான 'தலயாத்திரை' என்றது இதுதான். நம்பளை மாதிரி நோகாம நோம்பு கும்பிடுறது.......இல்லை.


தொடரும்.....:-)

21 comments:

said...

அந்த கட்டின வீடுகள் பார்பதற்கு நன்றாக இருக்கு.எவ்வளவு விலை போட்டிருக்காங்க?

said...

வாங்க குமார்.

from 15 lakhs இப்படி. ஜஸ்ட் பேஸிக். அப்புறம் நம்ம வசதிக்கு ஏற்ப எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் சேர்த்தாலும் 25க்குக் கிடைச்சுரும்.

கட்டிடங்கள் வெளிப்புறப் பார்வையில் ஒன்னும் மாத்தமுடியாது. உட்புறம் மாற்றங்கள் செஞ்சுக்கலாமாம். கூடுதல் விவரங்களுக்குச் சுட்டி கீழே.

http://shifahousing.com/index.php?option=com_frontpage&Itemid=1

said...

ம்.. நல்லா இருக்கு அந்த வீடுகள்.. ஆனா இஷ்டத்துக்கு ஒன்னும் செய்யக்கூடாதாமா .. சரி வாங்கலை.. (அதனால் தான் வாங்கலையாமா நான் சொல்லிக்கிறேன் )

:)

said...

வாங்க கயலு.

வீட்டுக்குள்ளே நீங்க என்னவேணுமுன்னாலும் செய்யலாம். அதுக்காக வாங்காம இருந்தா நல்லவா இருக்கும்?;-)

said...

ஏன் துளசி,
நாம எல்லாரும் இங்க ஆளுக்கொண்ணு வாங்கிடலாமே:)

எண்ணேய்க்கிணறு இன்னும் வட்டமாப் பெரிதாகப் பார்த்த நினைவு.

எல்லோரும் வேண்டிக்கொள்வார்கள். தைல அபிஷேகம் செய்யறேன்னுட்டு.
ஏதோ கோட்டை கண்ணைக்கில சொல்லுவாங்க. எங்களுக்கு அங்க பிரார்த்தனை பாக்கி இருக்கு.மாமியார் வேண்டிக்கொண்டது.(1931 இல்)
அந்தக் கணக்கு ஒரு லட்சத்துக்குப் போகும்னு நாத்தனார் சொல்றாங்க.:)

said...

வானமாமலை கோவில்ல, வருஷ உற்சவத்தின் போது (என்ன உற்சவமுன்னு நினைவுக்கு வரல்ல) க்ஷிரான்னம் ப்ரஸாதம் கொடுப்பார்கள். ரொம்ப அருமையா இருக்கும். 20-25 வருடங்கள் முன்பு சாப்பிட்டது, ஆனாலும் வானமாமலைன்ன உடனே அது நினைவு வருது... :)

said...

வாங்க வல்லி.

எல்லாரும் கட்டாயம் வாங்குவீங்கன்னா நானும் ரெடி. பேசாம அங்கே தினம் பகல் சாப்பாடு ஆனதும் பதிவர் சந்திப்பு வச்சுக்கலாம்:-)))

இந்த எண்ணெய் கிணறு இப்படி ரெண்டு பார்ட்டாக் கிடக்கு. வட்டமெல்லாம் போயே போச்.

எனக்கு ஒரு யோசனை இருக்கு. அதான் திருமஞ்சனம் ஆன எண்ணெய் குளத்துக்கு வர ஒரு வழி செஞ்சுவச்சுருக்காமே கோயில் கட்டுனப்ப. அதை அப்படியே நேரா கண்ணாடி மூடி போட்ட ஒரு குட்டிட் டேங்குக்கு இணைப்பைக் கொடுத்துடணும். நல்ல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேங்க். (பெட்ரோல் சேமிக்கும் டேங்க் போல)
அதுலே சின்னதா ஒரு குழாய் வச்சு எண்ணெய் வேணுமுன்னு கேக்கறவங்களுக்குப் பாட்டிலில் நிரப்பி விக்கலாம் இல்லையா?

அழுக்கு, மழைத்தண்ணீர் குப்பை எல்லாம் விழாமச் சுத்தமா இருக்கும்.
எதுக்குக் கண்ணாடி மூடி?

கிணறு பார்க்க வசூலிக்கும் காசு தொடர்ந்து வரணுமேன்னு:-))))

said...

வாங்க மதுரையம்பதி.

நமக்கு க்ஷீரான்னம் கிடைக்கலை(-:

ஆனா க்ஷீரஸாகரனைக் கண்டேன்.

Anonymous said...

//அங்கிருந்த காவல்காரர் ஓடிவந்து, கோபாலிடம், 'கமீஸ் நிகாலோ'ன்னு கத்தறார். கேரளாக் கோயிலா என்ன? சட்டை போட்டுக்கப்படாதாமே(-:
//
இந்தில இல்ல சொல்லிருக்கார். அப்ப எப்படி கேரளாக்கோயில் ஆகும். (ஹிஹி இதுக்குத்தான் ரொம்ப வார்த்தைக்கு வார்த்தை படிக்கக்கூடாது)

said...

//எல்லாரும் கட்டாயம் வாங்குவீங்கன்னா நானும் ரெடி. பேசாம அங்கே தினம் பகல் சாப்பாடு ஆனதும் பதிவர் சந்திப்பு வச்சுக்கலாம்:-)))//

சென்னையில் பத்திரிகையாளர் காலனிபோல நெல்லையில் பதிவர் காலனியா .. நல்ல எண்ணம் தான் :)

நவதிருப்பதிகள் போதாதென்று வானமாமலைக்கும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள், நன்றிகள் !!

said...

வடை,

வீடு,

பிரம்மாவின் கதை,

சுயம்புவாக தோன்றிய இடங்கள் (இது பரீட்சைக்கு வருமா!!)

எண்ணெய்க்கிணறு பத்தி எல்லாம் பத்திரிக்கையில் படிச்சதோட சரி...இப்பதான் பார்க்கிறேன் - ஆனா ஏன் அப்படி குப்பை மாதிரி இருக்கு!!?

டீச்சரும் பசங்களும் படம் சூப்பரு ;)

\\ (நான் வீடியோ புடிச்சுவச்சுக்கிட்டேன்\\

எங்க அந்த வீடியோ!!! ஏதவாது சிறப்பு கட்டணம் தரவேண்டுமா!!?

;-)

said...

near naanguneri , sadavudayar sastha, valliyur murugan temple are famous. also visit, mupandhal isakki amman .

said...

துளசி மேடம் எப்படியிருக்கீங்க

கொஞ்ச நாளா என் சிஸ்டம் ரொம்பவே படுத்தல், அதுல நீங்க ஒரே போட்டோவா போட்டு பதிவு போடுறதால அப்படியே நின்னு நிதானமா உங்க பதிவு வர வேளைக்கு எனக்கு அடுத்த வேலை வந்துடுது.

வாழ்த்துக்கள்

நேத்தும் இன்னைக்குமா வேற ஒரு சிஸ்டத்துல உக்காந்து உங்களோட எல்லா சமீபத்திய பதிவுகளையும் சேர்த்து வெச்சு படிச்சிட்டேன்.

//துளசி கோபால் said...
வாங்க வல்லி.

எல்லாரும் கட்டாயம் வாங்குவீங்கன்னா நானும் ரெடி. பேசாம அங்கே தினம் பகல் சாப்பாடு ஆனதும் பதிவர் சந்திப்பு வச்சுக்கலாம்:-)))//

அட்ரா சக்கை, இது செம ஐடியாவா இருக்கே.

துளசிம்மா எஞ்சாய் செய்யுங்க, சாரையும் கேட்டதா சொல்லுங்க.

said...

ஒரு பையன் சைக்கிளில் கொண்டுவந்த ரெண்டு ப்ளாஸ்டிக் குடத்துக்குத் தண்ணி அடிச்சு ரொப்பிக்கிட்டு இருந்தான். இவர் போய் அவனுக்குத் தண்ணீர் அடிச்சுக் கொடுத்தார். பழசை மறந்துறக்கூடாது பாருங்க:-)))) (நான் வீடியோ புடிச்சுவச்சுக்கிட்டேன்)


சார், அநியாயத்துக்கு இப்படி ரொம்ப நல்லவரா இருக்காரே.......

said...

வாங்க சின்ன அம்மிணி.

ரெண்டு குறிப்புகள் இதுலே!

1.வட இந்தியக்கூட்டம் வந்து இறங்குனதால் நாமும் அதன் பகுதி.

2. காவல்காரருக்கு ஹிந்தி தெரியும்

said...

வாங்க மணியன்.

அட! சென்னையில் பத்திரிக்கையாளர் காலனி எங்கே இருக்கு?

பதிவர் காலனிக்கு ஆள் சேர்க்கலாமா?

உள்ளே கம்யூனிட்டி ஹால் கட்டி அதிவேக கனெக்ஷன் எடுத்துக்கிட்டு அதுலே எல்லாருமா இருந்து பதியலாம்:-)

said...

வாங்க கோபி.

பரிட்சைக்கு வரும் பகுதியேதான்!!!

தண்ணியை ஃபுல்லா அடிக்கலைப்பா(-:

said...

வாங்க குப்பன் யாஹூ.

இப்ப ஒரு வெள்ளோட்டம் மாதிரிதான் இந்தப் பயணம்.

நம்மூர்க் கோயில்களைப் பார்க்கணுமுன்னா இந்த ஒரு ஆயுட்காலம் போதுமான்னு தெரியலை.

இதுவரை ஒரு சதமானம் பார்த்திருந்தால் அதிகம்.

பணி ஓய்வுக்குப் பிறகு நிதானமா இன்னொரு பயணம் போகணும்.

said...

வாங்க அமித்து அம்மா.

நன்றியோ நன்றி இப்படிப் போராடிப் படிச்சதுக்கு.

க்ரேஸ் மார்க் ஒரு பத்து:-)

நம்ம வகுப்பு மாணவர்களின் ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்குதுன்னு சொன்னால் அது பொய் இல்லை!!!!

சார் அப்பப்ப நல்ல குணம் காட்டுவார்:-)))))

ச்சும்மா.....

அநியாயத்துக்கு நல்லவர்தான். இல்லேன்னா என்னோடு 35 வருசம் குப்பை கொட்டி இருப்பாரா? பொறுமைத்திலகம்.

said...

உங்களுக்கான ஸ்பெஷல் மசால் வடைன்னு சரியா சொல்லிட்டேனே. என்னை இந்த வருஷம் பரீட்ச்சை எழுதாமலே பாஸ் பண்ணிடுங்க.அந்த வீடுகளை நானும் பாத்திருக்கேன்.

said...

வாங்க ஐம்கூல்.

க்ரேஸ் மார்க் பத்து:-)