Friday, October 30, 2009

சேனை ரோஸ்ட்

ரொம்பப் பெருசா இருக்கும் சேனைகள் மூணு,நாலு இருந்தாலும் சாப்பிடும் சமயம் தொட்டுக்க இழுபறியாகிருமாம். அதனால் மெனுவில் சேனைன்னு இருக்கும் நாளில் கூடுதலா இன்னொரு காய் செஞ்சே தீரவேண்டிய நிர்ப்பந்தம். கூட்டுக் குடும்பம். கல்லைத் தின்னாலும் ஜீரணிச்சுப்போகும்விதம் ஓடியாடி விளையாடும் பிள்ளைகள் எக்கச்சக்கம்.

அரைவீசைச் சேனைக்கிழங்கைச் சித்தி அருவாமணையில் தோல்சீவி நறுக்கும்போதெல்லாம், பாட்டி ஒரு கொசுவத்தியை ஏத்திருவாங்க.


கல்யாண வீட்டுச் சமையல் மாதிரிதான் தினப்படிச் சமையலே. குடும்பம் தவிர்த்துக் கடையில், கம்பெனியில் வேலை செய்யறவங்களும் பகல் சாப்பாடுக்கு வருவாங்களாம். வீட்டுப் பெண்களுக்கெல்லாம் அடுப்படியில் ஆக்கிப்போட்டே ஆயுசு தீர்ந்துரும் காலம். பிரமாண்டமான வாணலியில் சேனை ரோஸ்ட் வறுபட வறுபடப் பிள்ளைகள் கூட்டம் பலாப் பழத்தில் ஈ மொய்ச்ச்சதுபோல் அங்கயே வட்டம் போடும். ஒரு ஈடு எடுத்துத் தாம்பாளத்தில் வச்ச நிமிஷமே காலி.

பாட்டிச் சொல்லச் சொல்ல, எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத கதைகள். அதே சமயம் சித்தி செய்யும் சமையலை ஓரக் கண்ணால் பார்த்துக்குவேன். இதுக்கு மட்டும் உதவிக்கு என்னைக் கூப்பிடமாட்டாங்க. 'கையெல்லாம் சொறியும். நல்லா எண்ணை தடவிக்கிட்டு அரியணும். கை வழுக்கி அருவாமணையில் வெட்டிக்கப்போறே'ன்னு சொல்லிருவாங்க. நானும் நம்ம உதவிக்குப் போகும் 'பாவ்லா' பலிச்சிருச்சுன்னு இருப்பேன்.

முதலில் சேனைக்கிழங்கை நல்லா தோலெல்லாம் சீவி எடுத்துக் கழுவிட்டு அரை இஞ்சு கனத்தில் ஸ்லைஸ் போட்டுக்குவாங்க. இப்ப வேணுமுன்னா நீங்க ஒரு செ.மீ. கனத்தில் வெட்டிக்குங்க, யார் வேணாமுன்னா?


இனி இது மூணு ஸ்டேஜ் குக்கிங்.

ஒரு அகலமானப் பாத்திரத்தில் அஞ்சாறு டம்ப்ளர் தண்ணீர் ஊத்திக் கொதிக்க விட்டு அதில் இந்தச் சேனை ஸ்லைஸ்களைப் போட்டு வேகவிடணும். ஒரு கத்தி, இல்லை பேம்பூ ஸ்டிக்கால் அழுத்தமாக் குத்துனாச் சட்னு இறங்கணும். அப்போ அந்தத் தண்ணீரை வடிச்சுடணும்.

இதுக்குள்ளே கொஞ்சம் புளித்தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்துக் கெட்டியானக் குழம்புப் பதத்த்தில் கரைச்சு வச்சுக்கணும். இந்தக் கரைசலை மறுபடி அந்தச் சேனைத் துண்டுகளில் சேர்த்து அடுப்பில் வச்சு வேகவிடணும். தீ இளந்தீ. இல்லேன்னா அடிப்பிடிச்சிரும். எல்லாத் துண்டுகளிலும் மசாலா நல்லாப் பரவி இருக்கணும். துண்டுகள் உடைஞ்சு போகாம லேசாத் திருப்பிவிடணும். தண்ணியெல்லாம் சுண்டிப்போகணும். கரைசலை ரொம்பத் தண்ணியாக் கரைச்சுடாதீங்க. கொஞ்சம் திக்கா இருந்தால் இதெல்லாம் அஞ்சே நிமிசத்தில் ஆகிரும்.

இப்பக் கடைசிக் கட்டத்துக்கு வந்துட்டோம். வாணலியில் கொஞ்சம் எண்ணை ஊத்தி அதுலே நாலைஞ்சு துண்டுகளாப் போட்டுச் சிவக்க வறுத்து எடுத்தால் ஆச்சு. ரொம்ப எண்ணெய் வேணாமுன்னா அடிபாகம் தட்டையா இருக்கும் ஃப்ரைபேன் வச்சு அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு இடம் கொள்ளும் அளவுக்கு இந்த ஸ்லைஸ்களைப் பரப்பிக் கொஞ்சம் கொஞ்சமா ஸ்பூனால் எண்ணெய் எடுத்துச் சுத்திவர ஊத்தித் திருப்பிப்போட்டு வறுத்து எடுக்கலாம். கவனிக்க வேண்டியது அடுப்புலே தீ மிதமா இருக்கணும். ஒரேடியா 'ஸிம்'லே வச்சால் நாள் பூராவும் அடுப்படியிலேயே நிக்கணும்!

சென்னை வாசத்தில் சேனைக்கிழங்கைத் தரிசித்ததும் பாட்டி நினைவு. சின்னதா ஒரு துண்டம் வாங்கி வந்தேன். 450 கிராமாம். தோலெல்லாம் சீவுனதும் 350 கிராம் வரலாம்.

இதுக்குச் சேர்த்துக்கிட்ட மசாலாப் பொருட்களின் அளவுகள்:

ஒரு தேக்கரண்டி மிளகாய்ப்பொடி (ஆச்சி மிளகாய்த்தூள்)

ரெண்டு தேக்கரண்டி மல்லித்தூள் (எவரெஸ்ட் மல்லித்தூள்)

கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி (ஆச்சி ப்ராண்டு)

கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் ( வன்தேவி ஹிங்கு)

ஒரு தேக்கரண்டி உப்பு (டாடா)

புளிக் கரைசல் மூணு மேசைக் கரண்டி (இது என்ன பிராண்டுன்னு கேக்காதீங்க:-) தாய்லாந்துப் புளி)

சாம்பாருக்குக் கரைச்ச புளியில் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். சாம்பார் ரசம் வைக்காத நாளுன்னா...நீங்க ஒரு கமர்கட் அளவு புளி எடுத்துக் கரைச்சுங்க.

எண்ணெய் எந்தமாதிரி வாணலியோ அதுக்குத் தேவையான அளவு.
பாட்டி சொன்னதென்னவோ நிசம். வறுத்து வச்சவுடன் உப்புப் பார்க்கட்டுமான்னு கேட்டு நீண்ட கை ஒன்னு, தின்னு பார்த்துட்டு பகல் உணவு நேரம் வருமுன்பே போகவர ரெண்டு மூணு துண்டுகளை உள்ளே தள்ளினதுக்கு நான் மட்டுமே சாட்சி:-)

முதலில் ரெண்டு பேருக்கு இவ்வளவான்னு ஒரு தோணல். இருக்கட்டும் பிரச்சனை இல்லை. அதிகமுன்னா 'டாஸ்மாக்' கொண்டுபோனா நிமிஷமா வித்துறாதா என்ன?


பின் குறிப்பு: ரொம்ப நாளாச் சமைக்கவே இல்லையான்னு நீங்கெல்லாம் நினைச்சுடக்கூடாது பாருங்க. அதுக்குத்தான் இந்தச் சமையல் குறிப்பு;-)))))))

26 comments:

said...

அப்படியே Fridge யில் வைத்திடுங்க,வந்து எடுத்துக்கிறேன்.

said...

//ரொம்ப நாளாச் சமைக்கவே இல்லையான்னு நீங்கெல்லாம் நினைச்சுடக்கூடாது பாருங்க. //

சந்தேகம் தீர்ந்தது:)))!

செய்து பார்க்கிறோம், நாங்கள் உபயோகிக்கும் மசாலாக்கள் வேறு பிராண்டாக இருந்தாலும்:)!

said...

அக்கா!
சேனைக்கிழங்கென்பது; சட்டிக்கரணைக் கிழங்கா?(சட்டி போல் இருப்பதால் இந்தக் காரணப்பெயர்)
ஒரு முழுக் கிழங்கின் படம் போட்டு என் சந்தேகம் தீர்க்கக் கூடாதா?

said...

வாங்க குமார்.
வச்சுடலாம். பிரச்சனை இல்லை:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எல்லாம் உள்ளூர் மசாலாக்கள். முதல்முறையாப் பாவிக்கிறேன் இதையெல்லாம்.

பிராண்டெல்லாம் பார்க்காதீங்க. பிறாண்டாது:-))))

said...

வாங்க யோகன் தம்பி.

வாங்குனதே ஒரு துண்டு, 450 கிராம்.

கடைக்குப்போனால் (!)கெமெராவுடன் தான் இனி.

அதேதான்னு நினைக்கிறேன்.
சட்டிக் கருணை.

இந்தச் செடி, பூக்கும் நாளில் வீட்டுவளாகத்தில் நாம் இருக்க முடியாது. அப்படி ஒரு குடலைப் பிரட்டும் நாற்றம்(-:

said...

ஆகா நாக்கு ஊறுதே டீச்சர் :) சாம்பாருக்கு சூப்பர் சைட் டிஷ்

said...

ஆகா..எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம் இது ;)

Anonymous said...

ம்ம். பாக்கவே ருசியா இருக்கு.

said...

தேங்க்ஸ் மேடம்..., செய்து அம்மணிய அசத்திட வேண்டியதுதான்...

பிரபாகர்.

said...

ரொம்ப நல்லா இருக்கு. நீங்க சொல்லற மாதிரி நல்ல சைட் டிஷ்தான். எனக்கு சேனைக் கிழங்கை
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, புளித்தண்ணீரில் வேகவைத்து தாளிக்கும் பொறியல் பிடிக்கும். நன்றி.

said...

ஓஹோ இதுதான் இருத்தலின் அடையாளமோ!!
சாப்பிடுவது, அதையே பதிவிடுவது. ம்ம்ம். நடக்கட்டும்.:))))

ஏன்பா இந்த ஊரில சேனைன்னு சொல்லி மண்ணுதானே நிறையக் கொடுப்பாங்க:)))
ஆனாலும் அழகா வந்திருக்கு. உழைப்புக்குப் பாராட்டுச் சொல்லியே ஆகணும்!!!!
தானைத் தலைவி மாதிரி நீங்க சேனைத்தலைவி:)))))

said...

வாங்க நான் ஆதவன்.

அமித்து அம்மாவின் 'மிளகாய் கிள்ளிப்போட்ட சாம்பாருக்கு' இது ரொம்பப் பொருத்தமா இருக்கும்.

said...

வாங்க கோபி.

எனக்கும் ரொம்பப் பிடிச்ச ஐட்டம்தான்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

நமக்குத்தான் இப்படிப் பச்சைக் கிழங்கு கிடைக்கறதிலையேப்பா(-:

ஃப்ரோஸன் வெஜ் லே வரும் 'சுரன்' என்ற கிழங்கு இதேதான். ஆனா சின்னத்துண்டுகளால்லெ வருது.

said...

வாங்க பிரபாகர்.

அம்மணியை அசத்தியாச்சா?

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ரொம்பச் சின்னத் துண்டுகளா இருந்தா அது மசியலாகிருதேப்பா:-)

said...

வாங்க வல்லி.

வெட்டிவச்ச(அப்பத்தான் வெட்டுனாங்களாம்!!!!) துண்டு ஒன்னு. மண் 100 கிராம் போக பாக்கி 350 கிராம். ரெண்டுபேருக்கு யதேஷ்டம்!

//தானைத் தலைவி மாதிரி நீங்க சேனைத்தலைவி:)))))//

இ(த்)து.....பிடிச்சிருக்கு:-)))))

said...

அக்கா,வாணலியப்பாத்தா அஜந்தா ஆப்பச்சட்டி மாதிரி தெரியுது, எண்ணை எந்த பிராண்டுன்னு சொல்லலியே. அது தெரியாம எப்படி சமைக்கிறதாம்:)))

said...

புளித்தண்ணி நிறைய விடாமல் வாணலியில் அளவாக அரை டம்ளர் குத்தி தட்டைப் போட்டு மூடிவைக்கவும். தண்ணிர் ஆவியாகும் சமயம் மொதுவாக களறிவிட்டால் மசியாது.

said...

அடுப்பை கொஞ்சம் ஆஃப் செய்து வைத்துவிட்டு கொஞ்சம் பதிவு பக்கம் வாங்க.. தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். தவறாமல் எழுதுங்க மேடம்.!

said...

வாங்க ஐம்கூல்.

காணாததைக் கண்டது போல் நல்லெண்ணெய் மட்டும் இப்போதைக்கு.

நம்மூர்லே இதை சொட்டுமருந்தாட்டம்தான் பயன்படுத்த முடியும்.

ஒரு பாட்டில்,( எண்ணெய் பாட்டிலைச் சொல்றேன்) வாங்கும் காசில் ஆஸ்தராலியா போயிட்டு வந்துட ஏர்லைன்ஸ் டிக்கெட் வாங்கிடலாம்!!!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

சமையல் நிபுணரா இருக்கீங்க போல.

சாப்பிடவாங்கன்னு ஒரு கூட்டுப் பதிவு வச்சுருக்கோம். நீங்களும் வந்து தாளிக்கலாம்.

said...

வாங்க ஆதிமூல கிருஷ்ணன்.

அடுப்பு எப்பவுமே ஹாஃப்/ஆஃப் தான்:-)

வந்து பார்த்தா..... வம்புலே மாட்டிக்குவேனோ!!!!

said...

நல்லாத்தான் இருக்கு, சேனைத் தலைவி!!!

அப்புரம் விரலெல்லாம் வீணை வாசித்ததா? இல்லை வயலின்ன் வாசித்ததா?

said...

வாங்க நானானி.

வயலினை விடுங்க. வீணைதான் ரொம்பப் பிடிக்கும். ஆனால் வாசிக்கச் சான்ஸ் கொடுக்கலை, இந்த நல்ல சேனை:-))))