Thursday, April 08, 2010

போற போக்கில் பெருமாள் தரிசனம்

விர்ன்னு போற போக்கில் ஒரு கீக்கிடமான வளைவில் திரும்பும்போது 'யே ஏக் மந்திர் ஹை'ன்னதும் சுத்தும்முத்தும் பார்த்தால் வீடுகளும் கடைகளுமா இருக்கு. "கோன்ஸா மந்திர்?" 'வெங்கட்ரமணா.' ருக்கோ பாபா ...ருக்கோ.... பக்கவாட்டில் ஒரு பெரிய வீட்டைக் காமிச்சதும் இறங்கிப்போனோம். ஓட்டுக்கு மேலே தெரிஞ்ச கொடிமரத்தைத்தவிர கோவில் என்பதுக்கு வேற எந்த அடையாளமும் இல்லை. வாசல் கூரைமுகப்பில் ஒரு பெயர்ப்பலகை. ஜாங்கிரிஜாங்கிரியாதான் எல்லா இடத்திலும் எழுதிவச்சுருக்காங்க. ஸ்ரீ வெங்கடரமணா க்ஷேத்ரம் டாங்கர்கேரி.

படியேறி உள்ளே போனதும் வெளிப்பிரகாரத்தில் கொடிமரம். அதுக்கு முன்னால் பளீர்ன்னு ஒரு ஏழடுக்குக் குத்து விளக்கு.உள்ளே போகும் வாசலுக்கு ரெண்டு புறமும் பெரிய & சிறிய திருவடிகள். நுழைஞ்சவுடன் திண்ணை, நேரெதிரே மூலவர். பூக்களால் அலங்காரம். விளக்கின் ஜொலிப்பில் காட்சி அருமை. சிறிய மூர்த்திதான். ரெண்டரை அடி. வெங்கடரமணன். அவனுக்கு முன்னால் ரொம்பச் சின்ன சைஸில் பஞ்சலோக லக்ஷ்மி. உள்ப்ரகாரத்தில் துளசி மாடம். பின்னால் ரெண்டு சந்நிதிகள, கருடனுக்கும் ஹனுமனுக்கும்.
கோவிலுக்கு கதை ஒன்னு இருக்கணுமில்லையா? தலபுராணம் புத்தகம் கிடைக்குமான்னு (இப்பெல்லாம் கோபால் ரொம்ப ஆர்வமாப் போய் கேக்க ஆரம்பிச்சுருக்கார்) கோவில்கணக்குகளைப் பார்த்துக்கிட்டு இருந்த பெரியவரிடம் பேச்சுக் கொடுத்து ,'அவரோட சொந்தக் கதை'யைத் தெரிஞ்சுவந்து சொன்னார். மனைவி இறந்து போய்ச் சிலவருசங்களாகுதாம். பிள்ளைகள் வெளி ஊரில். கோவிலுக்கு இப்படிக் காலையும் மாலையும் வந்து சேவை செஞ்சு பொழுது போக்கறார். பெருமாள் கைங்கர்யம்.
க்ருஷ்ணப்ரஸாத் & குருகிரண்

ரெண்டு இளவயசு பண்டிட்கள் ஆளுக்கொரு திண்ணையைப்பிடிச்சு உக்கார்ந்திருந்தாங்க. ஒரு தட்டில் தீர்த்தம், பூ, சந்தனம். பக்தர்களுக்கு பிரசாதமாக் கிடைக்குது. இருவரில் ஒருத்தர் குருகிரண். ப்ளஸ் 2 படிக்கிறாராம். .அடுத்தபடியா எஞ்சிநீயரிங் படிக்கப்போறாராம். பரிட்சை முடிஞ்சு லீவு விட்டாச்சேன்னு தகப்பனாருக்குப் பதிலாக் கோவிலுக்கு வந்துருக்கார். இன்னொருத்தர் கிருஷ்ணப்ரஸாத். சிரிச்ச முகம். ஒரு எம்பது வருசம் ஆகி இருக்கும் கோவில் கட்டின்னார்.

கோவில் பண்டிட்கள் கொஞ்சம் கோவிலைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லதுன்னு 'உபதேசம்' பண்ணிட்டு வந்தேன்.
ஒரு நாலு கிலோமீட்டருக்குள்ளேயே குத்ரோலி என்ற பேட்டைக்கு வந்தோம். அட்டகாசமா ரெண்டு யானைகள் பக்கத்துக்கொன்னா நின்னு வரவேற்றது. சகுனம் ப்ரமாதம்:-) நேத்துக் கட்டுன ( டூ மச் இல்லை? முந்தாநேத்துன்னு வச்சுக்கலாம்) கோவிலோன்னு ஒரு மயக்கம். மாசுமருவில்லாத பளிங்குத்தரைகள். அங்கங்கே பீச்சுக்குக் காத்து வாங்க வந்தவங்களைப்போல் சிலர் உக்காந்துருந்தாங்க.

பீச்சுன்னதும் நினைவுக்கு வருது பாருங்க. அழகுபடுத்தி ஒரு மூணு மாசம் முன்பு திறந்து வச்ச மெரீனாவை, போனமாசம் பதிவர் சந்திப்புக்குப் போனபோது பார்த்தால்.....................ப்ச்....தரையெல்லாம் கறைகளாக் கிடக்கு.


ஸ்ரீ கோகர்ணநாத் க்ஷேத்ரம். ஏதோ தீம் பார்க்குக்கு வந்தமாதிரி இருக்கு. தங்கநிற வர்ணமடிச்ச சிலைகள் மெரூன் சுவர்களில் பளிச்.

வலதுபக்கம் பகவான் ஹனுமன் மந்திர். விஸ்வரூபம் எடுத்து நிக்கிறார். இடது பக்கம் காடு செட்டிங்லே சிவனும் பார்வதியும் குடும்பத்தோடு ஹாயா உக்கார்ந்துருக்காங்க.

ஜாலி ஃபேமிலி
நேரெதிரே தமிழ்நாட்டுக் கோவிலைப்போல அஞ்சு நிலையுள்ள அம்சமான கோபுரம். வெளியே கோவிலைப் பார்த்தமாதிரி கொஞ்சம் ஓரமா பெரிய ப்ரமாண்டமான நந்தி. அலங்காரமா நகைநட்டெல்லாம் போட்டுக்கிட்டு ஒய்யாரமா ஒரு காலை மடிச்சு உக்கார்ந்துருக்கு.
ஸ்ரீ நாராயண குரு கட்டிய கோவில் இது. வருசம் 1912. கீழ்ச்சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாதுன்னு மேல்சாதிகளால் தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டம் அது. 'சாதின்னு ஒன்னு தனியா இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோருக்கும் ஒரே கடவுள். மதங்கள் எதா இருந்தாலும் ப்ரச்சனை இல்லை. மனிதன் நல்லவனா இருக்கணும். மனிதம் மரிக்கக்கூடாது'ன்னு சொன்னவர். கேரளக்காரர். இவருக்கும் ஒரு சந்நிதி கோவிலுக்குள் இருக்கு.

மூலவர், 'முகத்தோடு' இருக்கார். தமிழ்நாட்டு சிவாலயங்களில் லிங்கரூபம் அப்படியே இருக்குல்லையா? இங்கே இந்தப் பகுதிகளில் எல்லாம் லிங்கத்துக்குக் கவசம் போட்டு ஒரு முகமும் வச்சுருக்காங்க. நல்ல பெரிய மீசையுடன் இருக்கும் சிவன்.

இங்கே சிவராத்ரியும் நவராத்ரியும் ரொம்ப விசேஷமாம்.

1991 வது வருசம் புதுப்பிச்சுக் கட்டி இருக்காங்க. நம்ம பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வச்சுருக்கார். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஒரு கல்யாண மண்டபம். நமக்கு நேரா ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி. அங்கே சுவரில் க்ருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம். வாசலுக்கு வெளியே கீதோபதேசம் நடக்குது. இதை அடுத்து ஒரு திறந்தவெளி அரங்கம். இந்தப் பக்கம் நாகாஸ். வலம்வந்தால் அங்கே ஒரு பெரிய ஹால். கௌரி மண்டபம். கல்யாண மஹால். இந்தப்பக்கம் கோவிலின் சுவர்களில் எல்லாம் கடவுளர்களின் அழகழகான திருவுருவங்கள். எதைச்சொல்ல எதை விட! பிள்ளையார், சுப்ரமண்யர், நவகிரகங்கள், அன்னபூரணி, ஆனந்தபைரவர்ன்னு தனித்தனி சந்நிதிகள் கூட இருக்கு!

அடுத்த பாகத்தில் புண்ணிய வனம் என்ற பெயரில் ஒரு காடு. பயங்கர மிருகங்கள் எல்லாம் தாயாபுள்ளையா இருக்குதுங்க. இசை நீரூற்று ஒன்னு பாடிக்கிட்டு இருக்கு. ஒட்டைச்சிவிங்கிகள் நின்னு ரசிக்குதுங்க. இந்தப்பகுதிகளை எல்லாம் இப்போ நாலைஞ்சு வருசங்களுக்கு முன்புதான் சேர்த்துருக்காங்க.
கோவில் குளம் புதுமாதிரியான ஸ்டைலில். கங்காவதாரக் குளமாம். சுற்றும் பனிபடர்ந்த மலையில் நாலு மூலைகளிலும் சிவன் நிற்கிறார்.. நடுவில் சிம்மவாஹினி. சனி ஞாயிறுகளில் ஒரு ஷோ நடக்குமாம்.

இன்னிக்குத் திங்களாப் போயிருச்சேன்னு லேசா ஒரு வருத்தம்:(

கோவில் படங்கள் விற்கும் ஸ்டாலில் இருந்த பெண்மணி, 'திங்கக்கிழமை சிவனுக்கு விசேஷமான நாள். நேரா கத்ரி கோவிலுக்குப் போயிருங்க. கோபால கிருஷ்ணனை நாளைக்கு அதிகாலையில் போய்ப் பாருங்களேன்'னு சொன்னாங்க.

கோகர்ணநாத் கோவில் படங்களை இங்கே ஆல்பத்தில் போட்டுருக்கேன்.
விருப்பம் இருந்தால் பாருங்க.

19 comments:

said...

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

said...

வாங்க தமிழ்.

முதல்முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க போல!

நலமா?

ஆதரவுக்கு நன்றி.

said...

அற்புதமா இருக்கு. அனுமன் அழகோ, சிவன் சம்சாரம் அழகோன்னு வியக்கிறபடி என்னமா கட்டி இருக்காங்க. இத்தனை வருஷங்கள் ஆச்சுன்னு தெரியலையே! நந்தி அதி ஜோர். ரொம்ப கலைநயம் படைச்சவங்களா இருந்திருக்காங்கப்பா.கருடாழ்வார் ,அனுமன் எல்ல்லாம் வெகு நேர்த்தி.
எங்க அந்த எட்டடுக்கு விளக்கைக் காணோM? ஓ.ஆல்பத்தில இருக்கோ.

said...

ஆஹா என்ன அழகு..

said...

//உள்ப்ரகாரத்தில் துளசி மாடம்//

நான் இங்கேயே இருந்து தியான் செய்யறேன். நீ போய் எல்லாம் பாத்துட்டு வா அப்படின்னு கோபால் சொல்லி இருப்பாரோ!.


//வலதுபக்கம் பகவான் ஹனுமன் மந்திர். விஸ்வரூபம் எடுத்து நிக்கிறார். இடது பக்கம் காடு செட்டிங்லே சிவனும் பார்வதியும் குடும்பத்தோடு ஹாயா உக்கார்ந்துருக்காங்க.jolly family//

தயவு செஞ்சு யாரும் போன பதிவு அந்தகாசுரன் கதையை பார்வதி தேவிகிட்டே சொல்லிடாதீங்க...
பாவம்....ஹாயா உட்கார்ந்து இருக்காங்க...

நீங்க சொல்லப்போய் அப்செட் ஆகி இவங்களும் ஆதி பராசக்தி ஆகி......!!!!

(முதல் மரியாதை படத்துலே அது மாதிரி தான் ஜனகராஜ் வடிவுக்கரசி கிட்டே போட்டோ விசயம்
சொல்லப்போய்....அம்மாடியோவ்...! அந்த அம்மா ஆடின ஆட்டம் ...ஞாபகம் இருக்குல்லே..ஆதி பராசக்தி தோத்தா போங்க...)


மீனாட்சி பாட்டி.

Anonymous said...

பளிச்னு அழகா இருக்கு கோவில்

said...

சிறப்பு . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

said...

மங்களாபுரம் ஒரு காலத்தில் கேரளாவை சேர்ந்ததா இருந்ததா எங்கோ படித்த நினைவு. இந்த ஒட்டு கோவில்களைப் பார்க்கும் போது சரி தான்னு தோணுது. அம்மை அப்பன் family photo இந்த ஸ்டைலில் எங்க வீட்டிலே ஒன்னு இருக்கு.

என்னோட இந்த பதிவில்http://www.virutcham.com/?p=1004 சில கோவில்கள் பற்றி refer பண்ணி இருக்கேன். உங்களுக்கு உபயோகமா இருக்குமா பாருங்க. ஒரு கோவிலாவது நீங்க பார்க்காதது இருந்தால் துளசி Mam பார்க்காத ஒரு கோவிலை நான் பார்த்துட்டேன்னு பீத்திப்பேன்

http://www.virutcham.com

said...

"சேவை செஞ்சு பொழுது போக்கறார்."
அத்தகையவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்.
படங்களுடன் அசத்தியிருக்கிறீர்கள்.

said...

"ஓட்டுக்கு மேலே தெரிஞ்ச கொடிமரத்தைத்தவிர கோவில் என்பதுக்கு வேற எந்த அடையாளமும் இல்லை."
ஆமாம் முகப்பு அப்படியேதான் இருக்கிறது.

ஆஞ்சநேயர் கோயில் எல்லாம் மனத்தைக் கவர்கிறது.

said...

வாங்க வல்லி.

ஆல்பத்துலே ரமணனைச் சேர்க்கலை!

அழகு கூடவே சுத்தம். அதான் மனசை அள்ளுதுப்பா.

said...

வாங்க கயலு.

குழந்தைகளுக்கு இந்த இடம் ரொம்பவே பிடிக்கும். கோவிலுக்குப் போகலாமுன்னா சுணங்காம வந்துருவாங்க. இதுவே ஒரு ப்ளஸ் பாய்ண்டுதான்.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

பார்வதிகிட்டே போட்டுக் கொடுத்துத்தான் 'கால்கா'வில் அந்த ஆட்டம் ஆடி இருக்காள்:-)

சிவனைக் கீழே தள்ளி நெஞ்சுமேல் ஒரு காலை வச்சுக்கிட்டு ஈட்டியைப் பாய்ச்சும் சிலை இருக்கு அங்கே!

said...

வாங்க தலைவன் குழுமத்துத் தலைவரே.

வருகைக்கு நன்றி.

'அங்கே' வந்து பார்த்தால் ஆச்சு.

said...

வாங்க சின்ன அம்மிணி.

பளிச்ன்னு இருக்கறது மனசுலே பளிச்ன்னு பதிஞ்சுருச்சு:-))))

said...

வாங்க கவிஞ்சர் சங்கர்.

மீண்டும் மீண்டும் வரணும்.

said...

வாங்க விருட்சம்.

நான் இதுவரை பார்த்த கோவில்கள் இங்கே இந்தியாவில் இருப்பதில் ஒரு சதவீதம் கூட இருக்காது.

ஏராளமா பாக்கி இருக்கு.


உங்க கோவில் பதிவுகளைப் பார்க்க வந்துக்கிட்டு இருக்கேன்

said...

வாங்க டொக்டர் ஐயா.

சிலர் இந்த மாதிரி ஆனதும் மனமுடைஞ்சு, வாழ்க்கையில் சுவாரசியம் இழந்து நடைப்பிணமாவோ, இல்லை வேற எதாவது தவறான பாதையிலோ கூடப் போயிடுறாங்க. அதுக்கு இந்த சேவை எவ்வளவோ மேல் இல்லையா?

said...

வாங்க மாதேவி.

ஆமாங்க. ஆஞ்சநேயர் அப்படியே அள்ளிக்கிட்டுப் போறார்!