Monday, August 02, 2010

ராசாவூட்டுத் தண்ணீர் பந்தல்........................(தாய்லாந்து பயணம் பகுதி 11)

அந்த மரகதபுத்தர் இருக்கும் வளாகத்துலே ஒரு பக்கம் பூராவும் தங்கமாகவும், கல் வச்சதும், கண்ணாடி பதிச்சதும், போர்ஸலீன் பூக்களை வச்சுப்பிடிப்பிச்சதுமா ஏராளமான ச்செடிகள் இருக்கு.. இதெல்லாம் நட்டு வச்ச செடிகளா? இல்லையில்லை. 'கட்டி வச்ச ச்செடிகள்'. நட்டு வச்ச செடிகள் எதையுமே தன்னிச்சையா தழைச்சு வளர விடலை இங்கே. போன்ஸாயா குறுக்கியும் அலங்காரமா வெட்டியும் வச்சதுகள்தான் எல்லாமே. மரக்கிளையில் கூட இலைகள் உருண்டையா பந்துபந்தா இருக்குன்னா பாருங்களேன்!

ச்செடின்னதும் நினைவுக்கு வரும் ஒரு விஷயம்..... அரண்மனையை விடக் கூடுதலா ச்செடி (chedi) இருப்பது நம்ம 'கிடந்தார் புத்தர்' கோவிலில்தான் .சின்னதும் பெருசுமா 99 செடிகள் அங்கே இருக்கு இங்கே ஒரு எழுபதுவரை இருக்கலாம். வெவ்வேற காலக்கட்டத்தில் வெவ்வேற அரசர்களால் கட்டப்பட்டதால் இந்த வளாகம் என்னவோ திட்டமிடாமல் கட்டுனதைப்போல ச்செடிகள் எல்லாம் கூட்டங்கூட்டமா நெருக்கியடிச்சு நிக்குதோன்னு ஒரு தோணல்.

தங்கச்செடியைத் தாங்கி நிற்கும் அரக்கர்கள்
மரகத புத்தர் வளாகத்தைச்சுற்றிலும் ப்ரமாண்டமான அகலத்தோடு வெராந்தா ஓடுது. சுவர் முழுக்க ராமக்கீயம் வரைஞ்சு வச்சுருக்காங்க. நம்ம ராமாயணம்தான் இது. ஆடை அலங்காரம் எல்லாம் அவுங்க வழக்கபடி இருக்கு. சில சித்திரங்கள் அட! போடவைக்குது.


போரில் 'நாகபாச'த்தால் அடிபட்டு மயங்கி வீழ்ந்த லக்ஷ்மணனை ராமன் மடிமேல் வச்சுக்கிட்டுப் புலம்புவது, மேலாடை இல்லாத சீதை அசோகவனத்து 'பங்களா'வில் ராவணன் கெஞ்சிகிட்டே பின்னால் வர போ போன்னு முன்னால் வேகமா நடப்பது, காட்டில் அருவியில் ராமன் குளிப்பது, ஹனுமன் கடலரக்கியோடு சண்டை போடுவது, வாலில் அரக்கனைக்கட்டி ஆத்துலே அமுக்கறது இப்படி ஏராளம் ஏராளம்!!!!

நின்னு நிதானமா இந்தச் சித்திரங்களைப் பார்வையிடவே ஒரு மூணு நாலு மணி நேரம் எடுக்கும். அந்த அளவுக்கு விஸ்தாரமாவும் நுணுக்கமான விவரிப்புகளுடன் வரைஞ்சுருக்காங்க. இதைப் பராமரிப்பது மாபெரும் வேலைதான். காலத்தால் வெளிறிப்போன வண்ணங்களுக்கு மறு உயிர் கொடுத்து புதுப்பிக்கும் வேலை மட்டும் உண்மையான ஆர்வம் உள்ள ஒரு கலைஞனுக்குக் கிடைச்சதுன்னா........அவன் வாழ்நாள் போதாது!!!!

இந்தப்பகுதியைப் பார்வையிடும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்களின் வழிகாட்டி விளக்கிச் சொல்றதைக் கேட்டு 'ஹைய்யோ'ன்னு ஆகிப்போச்சு. பயங்கரமா ரீல்ஸ் விட்டுக்கிட்டு இருந்தார். ஒருவேளை நாம் கம்பனை(மட்டும்) படிச்சவங்களா இருப்பதாலும், ராமாயணக்கதைகளைச் சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்தவர்களா இருப்பதாலும் இப்படித் தோணுதோ என்னவோ! அந்தச் சுற்றுலாக் குழுவினரும் கதையைக் கவனமாக் கேட்பதுபோல எனக்குத் தோணலை.
தோட்டம் அழகு. அருமையான பராமரிப்பு. அங்கங்கே சிலைகள். மரகத புத்தர் கோவிலுக்கு முன்னே முற்றத்தில் ரெண்டு பக்கமும் எருமைகள் நிற்கும் ஒரு தனிச்சந்நிதி. சுத்திவர ஊதுவத்தி ஸ்டேண்டா தொட்டிகள். அங்கிருக்கும் புத்தருக்கு வழிபாடாத் தங்கரேக் ஒட்டிவைச்சுக்கிட்டு இருக்காங்க உள்ளூர் பக்தர்கள். நான் மடத்தனமாக் கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு போகலை. நாக்கோ வரளுது. வெய்யில் வேறு இந்தப்போடு போடுதேன்னு ஓய்வுக்காக ஒரு அஞ்சு நிமிசம் இதுக்குப் பக்கத்தில் இருக்கும் மேற்கூரை போட்டு, நாலுபக்கமும் திறந்த மண்டபம் ஒன்னில் உக்கார்ந்துருந்தேன்.
அப்போ என்னைக்கடந்து போன ஒரு பிஞ்சு, (கூடிப்போனால் ஒரு மூணுவயசு இருக்கும்) என்னைத் திரும்பிப் பார்த்துட்டு, 'சட்'னு ரெண்டு கைகளையும் குவிச்சு ஒரு வணக்கம் போட்டுச்சு. குழந்தையிலிருந்தே இந்தப் பழக்கம் வளர்ந்துருது. நம்ம ஹொட்டேலிலும் அந்தஸ்து, பதவி வேறுபாடுகள் இல்லாம 'கேட் மேனு'க்குக்கூட மேனேஜர் கைகூப்பி வணக்கம் சொல்வதைப் பார்த்துருக்கேன்.
மரகத புத்தர் கோவிலைச்சுத்தி இப்படித் திறந்தவெளி மண்டபங்கள் பனிரெண்டு இருக்கு. உசரம் குறைஞ்ச திண்ணையில் உக்காருவதுபோல இங்கே உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கலாம்.
அங்கோர்வாட் மாடல்

கூட்டமாக் கோவில்களுக்கு மத்தியில் ஒரு மேடையில் நம்ம கம்போடியா 'அங்கோர் வாட்' மாடலைச் செஞ்சு வச்சுருக்காங்க. இது அரசர் நாலாம் ராமா காலத்துலே உண்டாக்குனதாம்.

பாதி மிருகம் பாதி மனிதன், பாதிப்பறவை மீதி மனிதன்னு ஏராளமான சிலைகள் அங்கங்கே. கின்னரர்களாம். கையில் ஏன் இசைக்கருவிகளை வைக்கலை?
போதி மரம் ஒன்னு சுற்றிலும் மேடையோடு ஒரு முற்றத்தில். இது 'கன்றாக' இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டதாம். மேடையைச்சுத்தி இருக்கைகள் போட்டுருக்காங்க. ஞானம் வேணுமுன்னு நாமும் தவம் இருக்கலாம். பாங்காக் நகரத்திலும் எங்கே பார்த்தாலும் அரசமரங்கள்தான். நாங்க இப்போ வசிக்கும் சண்டிகர் நகரில் இப்படி இருப்பதால் வரும் ஞானம் வராமலா இருக்கப் போகுதுன்ற 'ஞானம்' பெற்று தெளிவடைந்தேன்.

மரகதபுத்தர் வளாகத்தைவிட்டு வெளியில் வந்தால் மகாராஜா வச்சுருக்கும் தண்ணீர்ப்பந்தல் இருக்கு. ராயல் சாரிடபிள் ப்ராஜெக்ட் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தருவது புண்ணியமில்லையோ? 25 பத்துக்கு லைச்சி ஜூஸ் கிடைக்குது. நல்லா இருக்கட்டும் புண்ணியவான். குடிச்சுட்டு அடுத்த வளாகத்துக்குப் போனேன்.
PHRA VIHARN YOD

வெவ்வேற வளாகத்துக்குப் போகும் வாசல்களில் எல்லாம் காவல்கார பூதங்கள் நிக்குது. அவுங்களுக்கு தனித்தனி பெயரெல்லாம் உண்டு.
எமரால்ட் புத்தரின் காவலன் ஸஹஸ்ஸ டேஜா ( GIANT SAHASSADEJA)


ஆயுதசாலை ஒரு பெரிய ஹாலில் அமைஞ்சுருக்கு. இதுக்குள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அந்தக்காலப்போர் ஆயுதங்களைப் பார்வையிடலாம். இதையொட்டி இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தின் (Chakri Mahaprasat Hall) ரெண்டு புறமும் யானைகள் நிற்கும் மாடிப்படிகளின் நுழைவு. ரெண்டு படிகளுக்கும் முன்னால் ஒவ்வொரு போர்வீரர் மணைபோல ஒரு மரப்பெட்டி மேல் ஏறி நின்னு காவல் காக்கறாங்க.
அப்போ அங்கே இன்னொரு போர்வீரர் வந்தார். இடுப்பில் இருந்து என்னவோ ஒன்னை (சாவி?) பரிமாறிக்கிட்டதும் புதியவர் இடம் மாறி மணைமேல் ஏறி நின்னுட்டார். பழையவர் டக் டக்''ன்னு லெஃப்ட் ரைட்டு போட்டுக்கிட்டு மிடுக்கா நடந்து போனார். காவல் பணி நேரம் முன்னவருக்கு முடிஞ்சுருச்சு போல. சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ்''ன்னு பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் பார்த்தது நினைவுக்கு வந்துச்சு ( எப்படி அங்கே(யும்) போனதை நைஸா உங்களுக்கு சொல்றேன் பாருங்க! )

நாம் நுழைவுக்கட்டணமா செலுத்தும் 350 பத், கொஞ்சம் கூடுதலோன்னு நினைக்கவிடாம இன்னும் ரெண்டு சமாச்சாரங்களுக்கும் சேர்த்தேதான் இதுன்னு சொல்லும்விதமா Vimanmek Mansion என்னும் தேக்குமரத்தால் கட்டப்பட்ட ஒரு அரசமாளிகைக்கு (ஆசியாவிலேயே பெருசாம்) இலவசமாப் போய்ப் பார்க்க அனுமதியும் (தனியா இங்கே போகணுமுன்னா 100 பத் கொடுக்கணும்) அரசரோட அரச உடைகள், மரகதபுத்தரின் மற்ற ரெண்டு காலத்துக்கான தங்கத்தாலான மாற்று உடைகள், பழங்கால நாணயங்கள் காட்சிப்பொருளா வச்சுருக்கும் ஒரு இடத்தையும்(Pavilion of Regalia) இலவசமாப் பார்த்துக்கலாம். முதல் அனுமதிச்சீட்டு வாங்குன ஏழுநாள் வரை இது செல்லுபடியாகும். அதானே ஒரே நாளில் அங்கிட்டும் இங்கிட்டுமா எப்படிப் பார்க்கறது? ஆனா அந்த ரெண்டு இடங்களுக்கும் போக நேரமில்லாமப் போச்சு:(

கிராண்ட் பேலஸ் வளாகம் பெருசுன்னாலும் பொதுமக்கள் பார்வைக்கு மூணில் ஒரு பாகம் மட்டுமே அனுமதி. கம்பிகேட்டுகளுக்குள்ளில் ராஜகுடும்பத்துக்காரர்கள் மாளிகை தெரியுது. இப்போ இருக்கும் அரசர் வேற ஒரு இடத்தில் அரசமாளிகையில் (சித்ரலதா மாளிகை) குடி இருக்கார். அரசகுடும்பத்துப் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடமா இது முந்தி இருந்துச்சாம்.

இவருக்கு முன்னால் இருந்த எட்டாவது ராமர் அரண்மனையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதும்கூட இந்த இடமாற்றத்துக்கு ஒரு காரணமா இருக்கலாம். இந்த சேதி தெரியவந்தவுடன், ராத்திரி நேரங்களில் ச்செடிகளைச்சுற்றி 'காவியமா நெஞ்சில் ஓவியமா'ன்னு தாய்மொழியில் பாடிக்கிட்டு உலாத்துவாங்களோ முன்னோர்கள் என்ற எண்ணம் என் மனசில். கோட்டை மதில்கள் நல்ல உசரமா இருப்பதால் நம்ம கண்ணுக்குப் புலப்படமாட்டாங்க இல்லே? உசரம் மட்டுமில்லை, சுத்தளவும் கூடுதல்தன். மதில் சுவர்களின் மொத்த நீளம் 1900 மீட்டர்கள்!!!!!


ஏராளமான படங்களை எடுத்துத் தள்ளிட்டேன் . அரண்மனைன்னு ஒரு ஆல்பத்துலே போட்டுவச்சுருக்கேன். விருப்பம் இருப்பவர்கள் பார்த்துக்கலாம்.




தொடரும்.............................:-)

30 comments:

said...

இவ்வளவு விபரங்களா?
அப்பாடியோவ் என்று இருக்கு. Great Info.

said...

//"இந்தப்பகுதியைப் பார்வையிfடும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்களின் வழிகாட்டி விளக்கிச் சொல்றதைக் கேட்டு 'ஹைய்யோ'ன்னு ஆகிப்போச்சு. பயங்கரமா ரீல்ஸ் விட்டுக்கிட்டு இருந்தார்."//

ம்ம்ம்...துளசி அக்கா ஒரு குட்டி training(for the guides) எடுத்துட்டு வந்திருக்கலாம் :-)))

//அப்போ என்னைக்கடந்து போன ஒரு பிஞ்சு, (கூடிப்போனால் ஒரு மூணுவயசு இருக்கும்) என்னைத் திரும்பிப் பார்த்துட்டு, 'சட்'னு ரெண்டு கைகளையும் குவிச்சு ஒரு வணக்கம் போட்டுச்சு. குழந்தையிலிருந்தே இந்தப் பழக்கம் வளர்ந்துருது. நம்ம ஹொட்டேலிலும் அந்தஸ்து, பதவி வேறுபாடுகள் இல்லாம 'கேட் மேனு'க்குக்கூட மேனேஜர் கைகூப்பி வணக்கம் சொல்வதைப் பார்த்துருக்கேன்//

ந்ம்ம ஊர்ல வணக்கம் சொன்னா 'காசு கேட்பானோ' அப்படின்னு சந்தேகம் வரும் (ந்ன்றி - "டுபுக்கு")

said...

இந்த ராசா வீட்டுப் பெண்ணை மலேசியத் தமிழர் அனந்த கிருஷ்ணன் திருமணம் செய்துகொண்டுளார்...

said...

அரண்மனையின் அமைப்பை, கூடவே தகவல்களையும் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு.. அருமை. புதுக்கேமரா வாங்கிட்டீங்களா :-))

said...

வாங்க குமார்.

சொன்னது கொஞ்சமே கொஞ்சம்தான்.

பாக்கியை நேரில் போய் அனுபவிச்சுக்கணும்.

நமக்குப் பழக்கப்பட்ட சமஸ்கிரதம் பெயர்கள்தான் எல்லாமே என்றாலும் உச்சரிப்பு வேறயா இருக்கு.

said...

கைடுக்கே கைடாக்கும் நான்:-)))))

வணக்கம் டாடி அப்பா.

said...

வாங்க செந்தில்.

அட! அப்ப ராசா வூட்டுப்பெண் தமிழ்நாட்டு மருமகள்!!!!

பேஷ் பேஷ்.

புதுத் தகவலுக்கு நன்றி

said...

வாங்க அமைதிச்சாரல்..

புதுக்கெமெரா இன்னும் வாங்கிக்கலை. இப்ப இருப்பது இன்னும் பழசாகலையாம். 13 மாசம்தான் வயசுன்னு ஒத்தைக்கால் கோபாலுக்கு.

அப்ப..........உண்மையில் பழசானது ஒன்னை நினைவுக்கு வச்சுக்கிட்டேன்:-))))

said...

சமண புத்த இந்து மதங்களுக்கு பொதுவா ராமாயணம் களை கட்டுது போல.

said...

ரொம்ப சுவாரஸ்யமா, விரிவா எழுதியிருக்கீங்க துளசி கோபால், வாழ்த்துக்கள்.

நேர்ல போய் பார்க்கனும்னு ஆவலைத் தூண்டுது உங்க இடுகை.

said...

ரொம்ப அருமையாக சுற்றி காட்டியுள்ளிர்கள். பார்க்க பிரமிப்பாக உள்ளது. நேரில் பார்க்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

said...

படங்கள் அருமை

கைடுக்கே கைடு // ;))

Anonymous said...

படங்கள் எல்லாம் கண்ணுக்கு விருந்தா இருக்கு

said...

பயணங்களுக்கும் அதைப் பற்றின பதிவுகளுக்கும்,படங்களுக்கும் விருதுகள் கொடுத்தா என்னன்னு யோசிச்சேன்.
உங்களைவிட வேற யாருக்கும் அந்தப் பரிசு கொடுக்க முடியாது.
இவ்வளவு விவரமா யார் சொல்லப் போறாங்க.
அந்தக் குட்டிப் பிஞ்சைப் பார்க்க ஆசை:)மிக மிகப் பிரமிப்பா இருக்குப்பா. அந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தாற்போல உங்க பதிவு பளபளக்கிறது. வாழ்த்துகள் துளசி.

said...

அருமையான பதிவு. அற்புதமான புகைப்படங்கள்.

said...

துளசி அந்த அரண்மனை பெயர் பார்க்கும்போது,
புஷ்பக விமானம் நினைவுக்கு வரது.

said...

ராமாயண ஒவியங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன டீச்சர். குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கு ஏற்றவாறு உள்ளது டீச்சர்.

said...

வாங்க விருட்சம்.

அதாங்க புரியலை. ராமாயணம் இவ்வளவு தூரம் பரவி இருக்கு!!!!

said...

வாங்க ஜோ.

எனக்கு அவ்வளவாச் சொல்லத் தெரியலை. வாய்ப்பு கிடைத்தால் நேரில் பார்க்க வேண்டிய பல சமாச்சாரங்கள் இங்கே இருக்கு.

said...

வாங்க இளம்தூயவன்.


அப்படியே ஒரு சின்னக் கப்பலை ஓட்டிக்கிட்டு வந்துருங்க:-))))

said...

வாங்க கயலு.

தகப்பனுக்கே சாமி இருக்கும்போது கைடுக்குக் கைடா இருக்கப்படாதா;-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

நல்ல வெய்யில். அதனால் படங்களும் நல்லா அமைஞ்சுபோச்சு.

said...

வாங்க வல்லி.

போறபோக்கைப்பார்த்தால் சொந்தமா யுனிவர்சிடி ஆரம்பிக்கப்போறிங்கன்னு தெரியுது.

ஒரு 'டாக்குட்டர்' பட்டம் கொடுங்க. ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன்:-)

எந்த அரண்மனைப்பெயர் புஷ்பகவிமானத்தை நினைவூட்டுச்சு?

said...

வாங்க டொக்டர் ஐயா.

நூறு ஆயுசு உங்களுக்கு.

அச்சச்சோ.... இப்பத்தான் டாக்குட்டர் பட்டத்துக்கு அப்ளை பண்ணி இருக்கேன்.

கண்டுக்கிடாதீங்க:-)

said...

வாங்க சுமதி.

குழந்தைகளுக்குத் தாய்லாந்து 'ராமாயணமா' சொல்லப்போறீங்க?

said...

அந்த ஊர் குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் சொல்வதற்கு சொன்னேன் டீச்சர்.நம் குழந்தைகளுக்கு ஏற்றவாறு படத்துடன் கூடிய முழு கதையும் நெட்டில் கிடைத்தால் சொல்லுங்கள் டீச்சர் என் பெண்னும் படிக்க ஆசைபடுகிறாள் :))))

said...

Vimanmek Mansion என்னும் தேக்குமரத்தால் கட்டப்பட்ட ஒரு //
Ithuthaan:0

I do not have to give you a doctor pattam. As you already are a doctor's daughter:)
I will think of something else.!!

said...

சுமதி,

நம்ம வல்லியம்மாவே சித்திர ராமாயணம் அவுங்க நாச்சியார் பதிவுகளில் போட்டுருக்காங்களே! பார்க்கலையா?

said...

வாங்க வல்லி.

நூறு ஆயுசு உங்களுக்கு!

அமாம் அதெப்படி? குடும்பத்துலே ஒருத்தர் படிச்சுப் பட்டம் வாங்குனா எல்லாருக்கும் அதை வச்சுக்கமுடியுமா?

மக்கள் விரும்பிக் கொடுப்பதும்(?) சிலசமயம் திறமையைப் பாராட்டியும் கிடைக்கும் பட்டங்கள் எல்லாம் குடும்பம் பயன்படுத்துவது எனக்கு ஒப்புதல் இல்லைப்பா.

இது என்ன ஸர் நேமா?

said...

வல்லிம்மா பதிவுகளை படித்துக்கொண்டிருக்கின்றேன் டீச்சர். ஆனால் இன்னும் ராமாயணம் பதிவு பார்க்கவில்லை, இல்லை நான்தான் கவனிக்கவில்லையோ தேடுகிறேன் டீச்சர் நன்றி:)))