Monday, August 16, 2010

கோட்டையில் நங்கையின் தலை அபேஸ்...............( கம்போடியாப் பயணம் 8 )

கயிலை என்ற ஊரில் வசிக்கும் பரமு என்றவரின் மனைவி உமா. சம்பவம் நடந்த நாளில் தன் கணவருடன் வாகனத்தில் எங்கோ சென்று கொண்டிருந்த சமயத்தில் பெயர் தெரியாத சில மர்ம நபர்கள் உமாவின் தலையைக் கொய்து போனதாக சேதி!

ரொம்ப அநியாயமா இருக்கே! அதுவும் தன் கணவனுடன் ஃபோர் வீலர்(?) பயணம் செய்யும்போது பொம்மனாட்டி தலையை மட்டும் வெட்டிக்கிட்டுப் போயிட்டாங்கப்பா?

அதுவும் இது பெண்களின் கோட்டை! நாம் தங்கி இருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு மணி நேர 'டுக்டுக்' பயணம். ஒரு 32 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஸ்மெய் நேரந்தவறாதவர். எட்டுன்னா எட்டு! வரும் வழியில் சின்னச்சின்னதா கிராமங்கள். மரத்தூண்களின் மேல் நிற்கும் மரவீடுகள், வீட்டைச்சுற்றி வாழையும் தெங்குமாய் குளுகுளு. இடையிடையே கடைத்தொகுதிகள், பெரிய பெரிய ட்ரம்களின்மேல் வரிசையா உக்காந்துருக்கும் பாட்டில்களில் என்னவோ லெமன் ஜூஸ் போல இருக்கேன்னால்.... அது பெட்ரோலாம்!!!! நடுவழியில் டுக்டுக் நின்னுருமே என்ற பயமில்லாமல் பயணிக்கலாம். கடைகளுக்கு முன்னால் பெரிய மண் அடுப்பில் ஏறி நிற்கும் இரும்புச்சட்டிகள். என்னடான்னு பார்த்தால்......பதனீரைக் காய்ச்சி வெல்லம் எடுக்கறாங்களாம்.

ஒரு இடத்தில் சிங்கம் யானை, புலி, குதிரை, ஒருவிதமான யாளின்னு வரிசையில் நின்னு 'ஹலோ' சொல்லுதுங்க. அங்கங்கே நெல் வயல்கள். குறுவை சாகுபடின்னு ஒரு வகை. நாத்து கீத்து நடாம நெல்விதைகளைத் தூவினால் போதுமாம். எண்ணி 110 நாள் அறுவடை. ஆரம்பத்துலே தண்ணீர் கொஞ்சம் இருந்தாலும் போதுமாம். ஆனால் கதிரில் பால்பிடிச்சு வரும்போது நிறைய தண்ணீர் வேணுமாம். அதுக்கேத்தமாதிரி மழை சீஸன் அனுசரிச்சுப் பயிர் செய்யறாங்க.

செம்மண் பாதையில் இறங்கி நடக்கறோம். நம்மகிட்டே நுழைவுச்சீட்டு இருக்கான்னு ஒருமுறை பார்த்துட்டு உள்ளே விடறாங்க. பாதையின் இடதுபுறம் திரும்புனதும் உயரம் குறைவான கோட்டை மதில் கோவில் கண்ணுலே விழுது. பாழடைஞ்ச பழைய இடம்தான். ஆனாலும் என்னமோ காலையில் தண்ணி தெளிச்சுப் பெருக்கி வச்ச வாசலைப்போல் ஒரு பளிச்.

செம்மண் பூமி. முழுக்கோவிலும் செம்மண் நிறத்தில் உள்ள மணல்கற்களால் கட்டப்பட்டுருக்கு. இந்தக்கற்களில் இவ்வளவு நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ய வருமா என்பதே எனக்கு ஒரு அதிசயம்தான். இதே மாதிரிக் கற்களை தென் இந்தியாவின் மேற்குக்கரையோரம் ஏராளமாப் பார்த்துஇருக்கேன். பெரிய பெரிய ப்ளாக்கா வெட்டி வீட்டைக் கட்டி இருப்பாங்க.

த்ரிபுவனமஹேஸ்வரர் கோவில்! இந்த ஊரே ஒரு காலத்துலே ஈஸ்வரபுரம் என்ற பெயரோடு இருந்துருக்கு. ஊருக்கு நடுநாயகமா இந்தக் கோவில். இப்போ இதுக்கு Banteay Srei . இந்த பண்டீய் என்ற சொல் க்மெர் கால மொழியாம். கோட்டைன்னு இதுக்கு பொருள், அந்த ஸ் ரீய்........ ஸ்த்ரீ என்பது. பெண்களின் கோட்டை. இதைத்தான் இப்போ ரொம்பச்சுலபமா Citadel of women ன்னு 'முழி' பெயர்த்துட்டாங்க.
சின்ன முகப்பு வாசலைக் கடந்து நடக்கும்போது சின்னச்சின்ன அறைகளா அமைஞ்சு காலியாக மேற்கூரை ஒன்னுமில்லாத பகுதி. நாலுபடிகள் இறங்குனா, நீண்டுபோகும் பாதை. வளாகத்தின் ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி டிசைனில் சந்நிதிகள் போல ரெண்டு. இதுதான் லைப்ரரின்னு சொல்லுவார் கைடு இருந்தால். இடதுபக்கம் முகப்பில்தான் காளை வாகனத்தில் பரமுவும் உமாவும். உமாவின் கழுத்தை யாரோ திருகிப் போட்டுட்டாங்க. அடடா......
நரசிம்மவதாரம்

வலப்பக்கம் நேரெதிர்ப்புற சந்நிதி கொஞ்சம் சிதிலம்தான். ஆனாலும் முகப்பில் ஹிரண்யகசிபுவை தன் தொடையில் 'நெடுக்காலே' வச்சு வயித்தைக் கீறும் நரசிம்மம்.


மெயின் கோவில் நடுவாந்திரமா நிக்குது த்ரிபுவன மஹேஸ்வரர் கோவில் கொண்ட ஸ்தலம். லிங்கத்தைக் கிளப்பிட்டாங்க. பெரிய மேடையா வெறும் ஆவுடையார் மட்டும். ஒரு பக்கம் நந்தியின் குறுக்குவெட்டு பாகம். அடப்பாவமே..... இப்படியா வகுந்து போடுவது? த்சு.. த்சு... த்சு...

கோவில் மூன்றாம் பிரகார நுழைவு வாசல்


முற்றத்தைக் கடந்து அடுத்த பகுதிக்குப் போறோம். அடுத்தடுத்து தனித்தனிச்சந்நிதிகளா எதிரும் புதிரும், பின்னாலும் முன்னாலுமா, அழகான குட்டிக்குட்டிக் கோபுரங்களுடன் வரிசைகட்டி நிற்கும் அமைப்பு. படிகளுக்கு மேல் காவல் காக்கும் சிங்கங்களும், குரங்குகளும், மனிதர்களும். த்வார பாலகர்களோ?

இங்கே ஏன் ஹனுமான் வச்சுருக்காங்கன்னு என்னைத் துளைச்சு எடுத்தார் இவர், ஏதோ நாந்தான் இதுக்கு அத்தாரிட்டி என்பதைப்போல!
ஹனுமன் ஏன் இருக்கு?

தெரியாம வச்சுட்டேன். என்னை மன்னிச்சுருங்க..............

ஒவ்வொரு சந்நிதி முகப்பையும் அப்படி ஒரு அலங்காரமா அமைச்சுருக்காங்க. கவனமாப் பார்க்கணும். எல்லாமே இதிகாச விஷயங்கள்.

கோவிலைக் கட்டி முடிச்சது 967 ஆம் ஆண்டு. அங்கோர்வாட்டுக்கு மூத்தது இது! ஆனா 'இது இருக்கு' ன்னு தேடிவந்து 'கண்டு பிடிச்சது' 1914 ஆம் ஆண்டு. ஏற்கெனவே இந்தப் பக்கம் எல்லாம் ப்ரெஞ்சுக்காரர்கள் இந்த சமாச்சாரங்களையெல்லாம் தேடோ தேடுன்னு தேடிக்கிட்டுத்தான் இருந்தாங்க. எல்லாக் கோவில்களிலும் பொன்னும் பொருளுமா சாமி பீடங்களுக்கு அடியிலும் ஸ்வாமி அலங்காரமுமா ஆபரணங்களும் ராஜாக்கள் செஞ்சு குவிச்சுருந்தாங்களே!! சாம்பிளா சிங்க வாலில் கண்டுக்கிட்டவங்க சும்மா இருப்பாங்களா?

இவுங்க தங்கத்தையும் விலை உயர்ந்த ரத்தினங்களையும் கொண்டு போனபிறகு 1923 வது வருசம்,தெரியாத்தனமாக் கலைப்பொருள் சேகரிச்சு விற்கலாமுன்னு ஒருத்தர்(André Malraux) நாலு தேவதைகளைத் தூக்கிட்டுப் போயிட்டார். அப்புறம் அவரைப் பிடிச்சுட்டாங்க. போலீஸுக்கே சிலைகளை விற்கப் பாத்தாரோ என்னவோ! சிலைகள் மறுபடி இங்கே வந்துருச்சு. இந்த ஆளுக்கு நேரம் சரியில்லை . மாட்டிக்கிட்டார்.

ஆனால் கோவிலைக் கண்டுபிடிச்சு பொக்கிஷம் எடுத்துப் போனவங்க இங்கிருந்து கொண்டுபோன கலைப்பொருட்களை இப்பவும் ப்ரான்ஸ் நாட்டில் ம்யூஸியங்களில் வச்சுருக்காங்க(ளாம்)

இந்த திருட்டு சேதி பரவுனவுடன் கோவிலுக்கு மவுசு கூடிப்போச்சு. கோவிலைப் பரபரன்னு சுத்தப்படுத்தி அக்கம்பக்கம் இருந்த மரங்களையெல்லாம் வெட்டி இடம் உண்டாக்கி வச்சாங்க. மரக்கிளைகள் உராய்ஞ்சு சிற்பங்கள் தேய்ஞ்சுபோகும் அபாயம் விலகியது.
புனரமைப்பு
1930 வது வருசம் கோவிலைப் பழுதுபார்த்துச் சீரமைக்கும் வேலை தொடங்குச்சு. ஸ்விட்ஸர்லாந்து நாடு புனரமைப்பு வேலைக்கு உதவி இருக்கு.

இந்தக்கோவிலில் சிவன் முக்கிய தெய்வமா இருந்துருந்தாலும் விஷ்ணுவும் சரிபாதி இடம் பிடிச்சுத்தான் இருக்கார். இடப்பகுதி சந்நிதிகளின் முகப்பெல்லாம் சிவன் சம்பந்தமுள்ளதும் வலப்புறம் முகப்புகளில் விஷ்ணு சம்பந்தமுள்ளதுமா இருக்கு. சுருக்கமாச் சொன்னால் சிவாவிஷ்ணு கோவில்தான்! ஹிந்துக்கோவில் பிரிவுகளில் இதை வரிசைபடுத்தி இருக்காங்க.

பத்துத்தலைகளை க்ரீடம்போல் அடுக்கி வச்சுருக்கும் ராவணன் தன் இருவது கைகளால் கைலாய மலையை அசைக்கிறான். ஆட்டத்தில் பேலன்ஸ் போயி கலவரத்துடன் சிவனை சப்போர்ட்டுக்காகத் தாங்கிப்பிடிக்கும் பார்வதி. கடவுளர்களின் இருக்கைக்குக் கீழே இருந்து இறைவனைத் துதித்தும், தவம் செய்தும் பிஸியா இருக்கும் முனிவர்கள், நந்திகேஸ்வரர், மற்ற உயிரினங்கள் எல்லாம் எங்கே நிலநடுக்கம் வந்துருச்சோன்னு பயந்துபோய் நாலாபக்கமும் ஓடப்பார்க்கறாங்க.
ஆக்ஷன் ஷாட் போல இருபது கைகளும் அசையும் வேகம் எல்லாம் படு துல்லியமா இந்தக் கல்லில் கொண்டுவர முடிஞ்சுருக்குன்னா..... இவுங்க கலைஞர்களின் சிறப்பு அபாரம்தான்!

இன்னொரு முகப்பில் வாலி சுக்ரீவன் சண்டை, ராமன் வாலி மேல் அம்பெய்ய, லக்ஷ்மணன் வாலியை அடையாளம் காமிக்கக் கைநீட்டறதுன்னு .... அடடா.........

பல முகப்புகளைக் கீழே தரையில் எடுத்தும் வச்சுருக்காங்க. கொஞ்சநாளில் அதைத் திருப்பி வைப்பாங்க போல!

மூணாம் பிரகாரத்தில் உள்ளே கிட்டக்கப்போய் சந்நிதிகளைப் பார்க்க விடாமல் 'நோ எண்ட்ரி' போட்டு வச்சுருக்காங்க. அங்கே இன்னும் என்னென்ன இருக்கோ, மிஸ் பண்ணிட்டோமோன்னு ஒரு ஏக்கம்.

இதுக்குப்போய் அலட்டிக்கலாமா''ன்னு பேருதவியா பக்கத்துலே ஒரு நூறு மீட்டர் தூரத்துலேப் படக் கண்காட்சி ஒன்னு வச்சுருக்காங்க. அங்கே போனால் போதும்..... எதையும் நீங்க தவறவிட வேணாம்.

முழுக்கோவில்



கோவிலின் முழு அமைப்புப் படம் இது. அரசர் ராஜேந்திரவர்மன் அரசில் மந்திரியாக இருந்த யஜ்ஞவஹாரர்தான் இதைக் கட்டினாராம். பின்வந்த காலக்கட்டங்களில் 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் வெவ்வேறு மன்னர்கள் ஆட்சியில் இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தப்பட்டதுன்னு கோவில் ரெக்கார்ட்ஸ் சொல்லுது ( ஆஹா..... இதெல்லாம்தான் அந்த லைப்ரரியில் வச்சுருந்தாங்களா?)
ராவணன் சீதையை அபகரித்துப் போகிறான்.

ஹயக்ரீவர் மதுகைடபர்களை வதம் செய்தல்

அபூர்வமான பல காட்சிகள் முகப்புகளில் இருக்குதுங்க. எதைச்சொல்ல எதைவிட? கொஞ்சம் புராணக்கதைகள் தெரிஞ்சவங்களுக்கு இதெல்லாம் கட்டிவெல்லம்!!! ஆனால் முக்கால்வாசி வெட்டுக்குத்து, வதம், சண்டை.

ஒன்னரை மணி நேரத்தில் நமக்குக் காணக்கிடைச்சது ஏராளம்தான்.
ஹயக்ரீவர் அரக்கன்களை (மது & கைடபன்) வதம் செய்வது, கம்ச வதம்
வாலி சுக்ரீவன் சண்டை, சீதையை அபகரித்துப்போகும் ராவணன். வருணன் அன்னவாகனத்தில் இருப்பது, துர்கை மகிஷனை வதம் சிவன், காமனை எரித்தல், சிவன் மட்டும் நடனம் ஆடுவது, இந்திரன் தன்னுடைய ஐராவதத்தின்மேல் சவாரி இப்படி நிறைய!

கம்சவதம்



காம தகனம்


மகிஷாசுர(னை) மர்த்தனம்

எல்லாத்தையும் பழுதுபார்த்துத் திருப்பி எடுத்துவச்சபிறகு பார்த்தால் அட்டகாசமா இருக்கும். ஹூம்..... யாருக்குக் கொடுத்து வச்சுருக்கோ?

தொடரும்......................:-)))

PINகுறிப்பு: பயணிக்களுக்கான ரெஸ்ட்ரூம் படுசுத்தமாத் தனிக் கட்டிடத்துலே இருக்கு. கார் பார்க்கை அடுத்து தனித்தனிக் கொட்டகைகளாக் கடைகள் வரிசை. எல்லாம் அமர்க்களம் போங்க.

20 comments:

said...

//வரும் வழியில் சின்னச்சின்னதா கிராமங்கள். மரத்தூண்களின் மேல் நிற்கும் மரவீடுகள், வீட்டைச்சுற்றி வாழையும் தெங்குமாய் குளுகுளு. இடையிடையே கடைத்தொகுதிகள், பெரிய பெரிய ட்ரம்களின்மேல் வரிசையா உக்காந்துருக்கும் பாட்டில்களில் என்னவோ லெமன் ஜூஸ் போல இருக்கேன்னால்.... அது பெட்ரோலாம்!!!! //
//கடைகளுக்கு முன்னால் பெரிய மண் அடுப்பில் ஏறி நிற்கும் இரும்புச்சட்டிகள். என்னடான்னு பார்த்தால்......பதனீரைக் காய்ச்சி வெல்லம் எடுக்கறாங்களாம்.//
//அங்கங்கே நெல் வயல்கள். குறுவை சாகுபடின்னு ஒரு வகை. நாத்து கீத்து நடாம நெல்விதைகளைத் தூவினால் போதுமாம். எண்ணி 110 நாள் அறுவடை. ஆரம்பத்துலே தண்ணீர் கொஞ்சம் இருந்தாலும் போதுமாம். ஆனால் கதிரில் பால்பிடிச்சு வரும்போது நிறைய தண்ணீர் வேணுமாம். அதுக்கேத்தமாதிரி மழை சீஸன் அனுசரிச்சுப் பயிர் செய்யறாங்க.//
//

என்ன இந்த மக்கள்.?!!! ஒரு கட்சி கூட்டம் கிடையாது, தர்ணா கிடையாது, போராட்டம், திரைப்பட விழா, இப்படி 'உருப்படியா' செய்யாம வேலை வேலை-ன்னு சுறுசுறுப்பா இருக்காங்க....பிழைக்க தெரியாத கூட்டம் :-))

said...

//ரொம்ப அநியாயமா இருக்கே! அதுவும் தன் கணவனுடன் ஃபோர் வீலர்(?) பயணம் செய்யும்போது பொம்மனாட்டி தலையை மட்டும் வெட்டிக்கிட்டுப் போயிட்டாங்கப்பா?//

படத்தை பெர்ரூசாக்கிப்பாத்து நடந்த அநியாயத்தை கண்டுபிடிச்சிட்டேன். நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமப்போச்சு :-))))))))))

said...

கற்கள் தனி தனி துண்டுகளா செதுக்கப்பட்டு இணைக்கப் பட்டது போல் இருக்கு ?

said...

கற்களில் அழகான வேலைப்பாடு நன்றாக உள்ளது டீச்சர்.ஒவ்வொரு இடமும் நீங்கள் விவரித்து பார்க்கும் போது இன்னும் அழகு டீச்சர்.நந்தியின் குறுக்கு வெட்டு பாகம்,உமாவின் தலை பார்க்கும்போது கல்லை கூடவா இப்படி செய்வார்கள் டீச்சர்:((((

said...

மூன்றாம் பிரகார நுழைவு வாசல்,
சிற்ப வேலைப்பாடுகள் விபரணத்துடன் அருமையாக இருக்கிறது.

said...

அருமையான விவரிப்பு.

:-)

said...

டீச்சர்
இந்த மாதிரி பழைய kovilalelam பாகரப்ப ஆச்சரியமா இருக்கு.அங்க அங்க engineers பிளான் போட்டு கட்ற வீடே இடிஞ்சு விழுது. அந்த காலத்துல எப்படி தான் யோசிச்சு creative அஹ கடினன்களோ.

ஹயகரீவர் கும்பிட நல்லா படிப்பு வரும்,மாலை நேரத்துல கோவிலுக்கு போனா கடலை பருப்பு சுண்டல் தருவாங்க இதன் தெரியும்.அவருக்கும் ஒரு வரலாறு இருக்க.ப்ரீயா இருக்குறப அவர பதியும் சொல்லுங்க.

said...

நந்தி அடடா:(

said...

கடை வரிசை அமர்க்களம் சரி ..என்ன வாங்கினீங்க..

said...

வாங்க டாடி அப்பா.

அவுங்க இதுவரை 'தலை'யை யாருகிட்டேயும் கொடுக்கலை சலவை செஞ்சுக்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆணீயம் பேசிக்கிட்டு இருந்த(!) ஆணாதிக்கவாதியின் செயலைக் கண்டித்து நாம் இப்போதே உண்ணும்விரதம் இருக்கணும்.

பொங்கி எழட்டும் நம் மங்கையர் படை!

said...

வாங்க விருட்சம்.

கிலோமீட்டர் கணக்குலே நீண்டு போகும் சுவர்ச்சிற்பங்கள் கூட இப்படித் தனித்தனிக் கல்லிலே செஞ்சு இணைச்சுருக்காங்க. அற்புதம்தான்!

said...

வாங்க சுமதி.

ஆவேசத்துலே அறிவு நின்னு யோசிக்காதுன்றது இதுதான்:(

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

said...

வாங்க மாதேவி.

விட்டதைப் பிடிச்சுட்டீங்க! அதுக்கொரு சபாஷ்!!!

said...

வாங்க நன்மனம்.

அப்பப்ப வந்து ரெண்டு நல்வாக்கு சொல்லுங்க. பின்னூட்டமே வரலைன்னு கோபால் மனம் உடைஞ்சு போயிருக்கார்!

said...

வாங்க விஜி.

அந்தக் காலத்துலே மூளையை மழுங்கடிக்கிற மேடைப்பேச்சு, கட்சி ஊர்வலம், தொல்லைக்காட்சி இதுகள் ஒன்னும் இல்லாம கருமமே கண்ணாயினாரா இருந்துருப்பாங்க போல மக்கள்.

said...

வாங்க கயலு.

கருங்கல்லை எவ்வளவு பலமா உடைச்சுருக்காங்க பாருங்க:(

கடைகளில் ஒன்னும் வாங்கலைப்பா.
மனதில் உறுதி ரொம்ப வந்துருச்சு இப்பெல்லாம்!!!!

said...

கோவிலைக் கண்டுபிடிச்சு பொக்கிஷம் எடுத்துப் போனவங்க இங்கிருந்து கொண்டுபோன கலைப்பொருட்களை இப்பவும் ப்ரான்ஸ் நாட்டில் ம்யூஸியங்களில் வச்சுருக்காங்க(ளாம்)
----------------------
நான் இலண்டனில் பிரித்தானியா அருங்காட்சியத்தில்(British Museum) இலங்கை, இந்தியா, எஜிப்து போன்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகளைப் பார்த்திருக்கிறேன். அருங்காட்சியத்துக்கு சென்று பல வருடங்கள் ஆகிறது என்பதினால் கம்போடியாவில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகள் இருக்கின்றனவா என்பது தெரியாமல் இருக்கின்றது.

said...

வாங்க அரவிந்தன்.

ஃப்ரான்ஸ் நாட்டு ம்யூஸியத்துலே சிலைகள் இருக்கணும்.

நாங்க லூவர் போனப்பச் சரியா நின்னு பார்க்க நேரமில்லாமல் போச்சு. டூர் க்ரூப்புலே போனால் இதுபோல சில தொல்லைகள்:(

said...

பான்டேய் ஸ்ரியில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/CWUCiLJ3tP75xr1H7

- ஞானசேகர்