Monday, December 06, 2010

ப்ருந்தாவனத்தில்.....................கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ.....

ஆறே கிலோமீட்டரில் இப்படி அற்புதம் இருக்குமுன்னு நினைச்சுப் பார்க்கலை. அப்பாடா...... எவ்வளவு நீட்டான சுத்தமான ரோடு!!!! ஆஹா....ஆஹா.... உள்ளே நுழையுமுன்பே ஓடிவந்து வண்டியை மறிக்கும் சிலர். விஷயம் நமக்கும் பிடிபட்டுப்போச்சுல்லே இதுக்குள்ளெ! வெளியூர் வண்டிகளை கார் நம்பரை வச்சுக் கண்டு பிடிச்சுட்டு தொல்லை செய்வதே வேலையாப் போச்சு. ( இதுதாங்க அவுங்க தொழிலே. நமக்கு சல்லியம் அவ்ளோதான்)

நிறுத்தாம ஓட்டிக்கிட்டு ஓடுனோம். நடுவிலே மீடியன் வச்ச டபுள் ரோடு. மொத்தம் நாலு லேன். வலதுபக்கம் 'மா வைஷ்ணோ தேவி ஆஷ்ரம்'. சீறும் சிங்கத்துலே உக்கார்ந்துருக்கும் எட்டுக்கை வைஷ்ணவி. சிங்கத்துக்கு முன்னால் பணிவோடு உக்கார்ந்துருக்கும் அனுமன்.
(இந்த ஆங்கிளில் அனுமன் தெரியலை. வேறொன்னுலே ஒரே பனிமூட்டம். ஆஸ்ரம பக்கத்தில் சுட்ட படம் மேலே)


இடது பக்கம் அப்படியே கண்ணைக் கட்டுவது போல அட்டகாசமான கோவில் கட்டும் வேலை நடக்குது. அன்புக் கோவிலாம். ப்ரேம் மந்திர்!!!!
சாலை முழுக்க இடமும் வலமும் ப்ரமாண்டமான சிலைகளுடன் ஆஸ்ரமங்களும் கோவில்களுமா ஜொலிக்குது.

கொஞ்சதூரத்தில் பெரிய கேட் போட்ட வளாகத்துலே பார்க்க அமைதியா ஒரு கோவில். யூரோப்லே இருப்பதுபோல பெரிய டூம் வச்சக் கிண்ணக்கூரை. நாலரைக்குத்தான் திறப்பாங்களாம். அடுத்த ஸ்டாப்பா நாம் நின்னது இஸ்கான் கோவில். இங்கேயும் நாலரைக்குத்தான். ஒரு மணி நேரம் இருக்கு. அதுக்குள்ளே ச்சும்மா ஊரைச் சுத்திட்டு வரலாமுன்னா......பல்லிகள் தொந்திரவு கூடிக்கிட்டே வருது. வண்டியைக் கிளப்பிக்கிட்டு நேரா போய்கிட்டே இருக்கோம். குறுக்கே வந்து நிக்குது இன்னொரு ரோடு. இதுவரை பார்த்து ஆனந்திச்ச சாலையின் முகம் ஒரேடியா மாறிப்போச்சு:( . அதுக்குள்ளே நுழைஞ்சு போய்ப்போய்ப் போய் கடைசியில் குறுகலான இடத்தில் நிறுத்த வேண்டியதாப் போச்சு. கார் நுழைய முடியாத அளவில் குட்டிச்சந்துகள்.

இதுக்குமேலே கார் போக வழி இல்லைன்னு சொன்ன ஒருத்தர், 51 ரூபாய்க்கு சுத்திக் காட்டறேன்னு தானாய்ச் சொல்லிக்கிட்டு அவருடைய அஸிஸ்டண்ட்டை (???) கூடப்போய் சுத்திக் காமின்னு ஏவிவிட்டார். அந்த நபரோ காலை விந்தி விந்தி நடக்கறார். இடது கை ஒரு மாதிரி மடங்கி இருக்கு. ம்ம்ம்ம்....சரி போகட்டும். நமக்கும் இடம் புதுசாச்சேன்னு அவர்கூடவே நடந்தோம். சைக்கிள் ரிக்ஷாக்கள் நடமாட்டம் தாராளமா இருக்கு. 'ராதே' ராதே ராதே ராதே ன்னு பல பக்கங்களிலும் இருந்து கூவல். வடிவேலுவின் எச்சூஸ் மீ, ஓரம் போ, நிப்பாட்டு, சீக்கிரம் போ, இப்படி எல்லாத்துக்கும் இங்கே ராதே தான்! அந்தந்த சமயத்துக்கு ஏத்தாப்போல என்ன எதுக்குன்னு புரிஞ்சுக்கணும்.

கால் சரி இல்லைன்னாலும் வேகவேகமா நடக்கறார் கைடு. நாங்களும் ஓடறோம் கூடவே. கண்ணாடியைக் கழட்டி வச்சுக்குங்க ன்னார். ஏன்? எதுக்கு? குரங்கு பிடுங்கிட்டுப்போயிரும். ஐயோ! சட்னு கண்ணாடியைக் கழட்டிட்டேன். நிம்மதி.....இப்போ குரங்கு, மனுசன், மாடு எதுவுமே தெரியாது. அந்தகாரம்:-) ரெண்டு பக்கமும் கடைகளின் இரைச்சல் கூடவே ராதே'ஸ். ஊஹூம்..... இது வேலைக்காகாது. கண்ணாடியை மாட்டிக்கிட்டு துப்பட்டாவால் தலையை முழுசா மூடிக்கலாம். கொஞ்சூண்டாவது தெரியுமே!
மதுவனம். வாசலில் நிக்கறோம். விருந்தாவனத்தின் உள்ளே அஞ்சு இடங்களை தரிசிக்கணும்னு தகவல் பலகை சொல்லுது. இந்தப் பக்கங்களில் கோவிலுக்கு வாங்கிப்போகும் ப்ரசாத வகைகளில் பொரியும் சக்கரை மிட்டாயும்தான் பிரதானம். வாசலில் கடைகள். வாங்குனா...உடனே பிடுங்கிட்டுப் போக ரெடியா
குரங்கு நடமாட்டம். ராச லீலாவில் முக்கிய பங்கு வகிச்ச இடம். பிருந்தாவனம். இங்கே தான் ராதாவோடும் கோபிகைகளோடும் களியாட்டம் போட்டுருக்கார். போட்டுண்டும் இருக்கார். இப்பவும் தினமும் நள்ளிரவில் ஒரே ஆட்டம் பாட்டம்தானாம். அதனால் மனுஷஜீவிகள் யாரும் ராத்திரி ஒம்போது மணி ஆனாலே இடத்தைக் காலி செஞ்சுருவாங்களாம். தப்பித்தவறி யாராவது வனத்துக்குள்ளே இருந்தாங்கன்னா? மறுநாள் பைத்தியம் பிடிச்சமாதிரி ப்ரமை, இல்லேன்னா பேச்சு வராது, கண்ணு தெரியாமப் போயிரும் இப்படி எதாவது ஆகிருமாம். கண்டவர் விண்டிலர் இதுதான் போல! சிலர் ரத்தம் ரத்தமாக் கக்கிச் செத்துருவாங்கன்னு சொன்னப்ப ஆடிப்போயிட்டேன்!

'இப்பக்கூட தினமும் கண்ணனும் ராதையும் தோழிகளுமா வர்றாங்க' - கைடு.

" வந்துருப்பான். பட் நாட் எனி மோர். இந்த ஊர்லே கிடக்கும் அசுத்தத்தைப் பார்த்தும்கூட அவன் வருவானா?"


துளசி வனம். வாசனை தூக்கி அடிக்கப்போகுதுன்னு மூக்கை தயார் படுத்திக்கிட்டு மதிலின் இடமும் வலமுமா இருந்த வாசலில் இடப்பக்கம் நுழைஞ்சோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல்! இருட்டு வீட்டில் குருட்டெருமையா இருக்க முடியாமல்....அப்பப்ப நைஸா கண்ணாடியைப் போடுவதும் சட்னு கழட்டிக் கையில் ஒளிச்சு வைப்பதுமா புது விளையாட்டு ஒன்னு! அங்கிருந்து நாலைஞ்சு படிகள் இறங்கணும் தோட்டத்தில் கால் பதிக்க.
நிதிவன் செடிகள். துளசியா இது????? ஆனா இதைத்தவிர வேறு எந்த வகைச்செடிகளும் அங்கே இல்லவே இல்லை.


அஞ்சடி உசரத்துலே நல்லா கனமான அடிப்பாகங்களோடு குட்டி மரங்கள் பரந்து கிடக்கு. மண்தரையைச் சுத்தமாப் பெருக்கி வச்சுருக்காங்க. கிட்டப்போய் இலையில் மூக்கையே நுழைச்சாலும் மணம் ஒன்னும் இல்லை. இது வனத்துளசி. மணம் இருக்காதுன்றார் கைடு. இது துளசியா? எனக்கு படு ஏமாத்தம். நோ..... இருக்கவே இருக்காது! இருக்கவும் முடியாது...... நம்ப முடியவில்லை..... இல்லை.....

கோபால் துளசிவனத்தில் (பின்னால் இருப்பவர் நம்ம கைடு கோபிந்த்)

இப்போ இருக்கும் இந்த நிதிவனம் (இப்படியும் இதுக்கு ஒரு பெயர் இருக்கு) அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவுதான் மொத்தமே! ஆனா கண்ணன் காலத்துலே இது பதினைஞ்சு சதுர மைல் பரப்பளவு இருந்துருக்காம். ஒன்பது லட்சத்துப் பதினைஞ்சாயிரம் மாடுகள் மேய இடம் போதி இருக்குமா??


மதில்சுவரைச் சுத்திவர வெளிப்புறம் மாடிக்கட்டிடங்கள் இருக்கே. அங்கே வசிக்கும் மக்கள் யாராவது அர்த்தராத்திரியில் இந்தப் பக்கம் பார்த்துட்டுச் சித்தப்ரமையாகி இருப்பாங்களோன்னு எனக்கு உள்ளுக்குள் ஒரே கவலை.

பக்தர்கள் நடந்து போக கல்பாவிய பாதை. செருப்பில்லாமல் நடக்கணுமே!

ஒரு இடத்தில் 'பச்சை'த் தண்ணியோடு ஒரு சின்ன குட்டை.. இறங்கிப்போய்ப் பார்க்க படிகள் இருக்கு. லலிதா குண்ட் (kund). கண்ணனுடன் நடனம் ஆடி ஆடி களைச்சுப் போன கோபிகை லலிதாவுக்கு பயங்கர தாகம். தாளமுடியாம 'தண்ணி தவிக்கீ'ன்னு சொல்றாள். உடனே தன்னுடைய புல்லாங்குழலைத் திருப்பி அதால் தரையில் குத்திக்கிளறி விட்டதும் ஊத்துத்தண்ணி மேலே வந்து தாகம் தீர்த்துச்சாம். அதுதான் குளமா நின்னுபோச்சு.

ஆஹா..... அவன் வரமாட்டான்னு நான் நினைச்சது சரியாத்தான் இருக்கணும். யாரும் தொடாத தண்ணி.... இப்படிப் பச்சை பிடிச்சுக்கிடக்கே. இதை லலிதா குடிப்பாளா?

பன்கே பிஹாரி சந்நிதி. இங்கே கண்ணன் காட்சி கொடுத்தாராம் ஊனக்கண்களுக்கு!

இன்னொரு இடத்தில் சின்னதா ஒரு கூரையோடு உள்ள சந்நிதி.சுவர் முழுக்க கண்ணன் ராதா, கோபிகைகள், த்வார்கீஷ் இப்படிப் படங்கள். தரையில் வட்டமான பளிங்கு மேடையில் நாலைஞ்சு படங்கள். காணிக்கை போடுங்கன்னு நம்மைக் கேக்காமல் குறிப்பா உணர்த்தறார் பூஜாரி. சில்லறையா இல்லையேன்னு ஒன்னும் போடலை.
அங்கங்கே உக்கார்ந்துருக்கும் குரங்குகளை பார்க்காதது மாதிரி ஓரக் கண்ணால் பார்த்துக்கிட்டே வனத்துக்குள்ளே நடக்கறோம். ஒரு சின்னக் கட்டிடம். ஒரே ஒரு அறைதான். உள்ளே கட்டில்போல ஒன்னு மெத்தை விரிச்சு இருக்கு. இது ராதாராணியின் ப்ரைவேட் அறை. ஸ்ருங்கார் கர். தினமும் இரவில் இந்த அறையைப் பூட்டுமுன் நாலு லட்டு, செம்பில் தண்ணீர், பல் துலக்கும் ப்ரஷ் ரெண்டு பூக்கள் பழங்கள் வச்சுருவாங்களாம். காலையில் வந்து அறையைத் திறந்து பார்த்தால் இனிப்புகள் பழங்கள் எல்லாம் தின்னுட்டு, செம்புத் தண்ணீரில் பல் துலக்கிட்டு ஈர ப்ரஷை வச்சுட்டுப் போயிருக்கும் அடையாளம் இருக்குமாம்.
இங்கே பெண்கள் கூட்டம் அலை மோதுது. பத்து ரூபாய் கொடுத்தால் ராதாராணியின் குங்குமப்பிரசாதம் கிடைக்கும். நெத்திக்கு வச்சுக்கும் ஸ்டிக்கர் பொட்டு, குங்குமம், கண்மை, வளையல், பூ, பீடா இப்படி அலங்காரச் சாதனங்களைக் கொண்டுவந்து ராதாராணிக்கு படைச்சுட்டுப் போறாங்க. இங்கே(யும்) 251, 501, 1100 இப்படி சேவைக் கட்டணம் எழுதுன போர்டு வெளியே இருக்கு.

'சில்லறையா இல்லையே...நான் பத்து ரூபாய் தர்றேன்'னு முன்வந்தார் கைடு! நம்ம கோபாலுக்கு எங்கே சில்லரை கிடைக்குமுன்னு நல்லாவே தெரியும். சட்னு நோட்டை எடுத்து ராதாராணி அறையில் பண்டிட் ட்யூட்டி பார்ப்பவரிடம் நீட்டினால் அழகா அடுக்கடுக்கா சில்லறை நோட்டுகள் கிடைச்சது.
வனத்தின் இன்னொரு கோவில் அழகா வளவு வாசலுடன் இருக்கு. ராதாராணி, கண்ணனா வேஷம் போட்டுக்கிட்டு நடுவில் நிற்க, ரெண்டு பக்கமும் விசாகாவும் லலிதாவும் நிக்கறாங்க. பங்ஷி ச்சோரி ராதாராணி மந்திர்.

நம்ம கைடு பேசிக்கிட்டே இருக்கும்போது சட்னு ரெண்டு கைகளையும் தூக்கி ஆட்டிப் பேசுனதைப் பார்த்ததும்..... கை நல்லாத்தானே இருக்கு. எதுக்கு அப்படி போஸ் கொடுத்தார்ன்னு குழப்பம் எனக்குள். அப்ப காலு? அது கொஞ்சம் தகராறுதான். நடக்கும்போது தெரியுதே!
கொஞ்சம் பெரிய கட்டிடமா இருப்பது ஸ்வாமி ஹரிதாஸ் மந்திர். குரங்குகளுக்கு பயந்து கம்பி வலை அடிச்சு வச்சுருக்காங்க. இங்கே காலையில் கோவில் திறந்தது முதல் இரவு அடைக்கும் வரை பஜனைப் பாடல்கள் இடைவிடாமல் ஒலிபெருக்கியில் பாட வைக்குறாங்க. 1480 இல் பிறந்த ஹரிதாஸ் ஸ்வாமிஜி மதுரபக்தியில் லயிச்சு இங்கே இருந்து இரவும் பகலுமா பாடல்கள் பாடிக்கிட்டே அப்படியே பூமியில் மறைஞ்சுட்டாராம். அவர் சமாதியாகிட்டாருன்னு இங்கே கோவில் எழுப்பிட்டாங்க.

தொடரும்......................:-)

14 comments:

said...

ம்.. நானும் ஒருக்கா கண்ணாடிய குரங்குக்கு குடுத்துட்டு ஞானக்கண்ணால் க்டவுளைக்கண்ட கதை உங்களுக்குத்தான் தெரியுமே.. பதிவுல போட்டிருந்தேன்..
நல்லவேளை உங்களுக்கு முன்னாலெயே சொல்லிட்டாங்க :)

said...

//இது வனத்துளசி. மணம் இருக்காதுன்றார் கைடு. இது துளசியா? எனக்கு படு ஏமாத்தம். நோ..... இருக்கவே இருக்காது! இருக்கவும் முடியாது...... நம்ப முடியவில்லை..... இல்லை.....//

பாம்பின் கால் பாம்பறியும்.....துளசி வாசனை உங்களுக்கு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தால் அது துளசியாக இருக்கவே முடியாது :)

said...

நீங்க முகமூடிபோட்ட காட்சியை ஏன் போட்டொ எடுக்கலை. ராதாஅராணியே வந்த மாதிரி இருக்கும் இல்ல:0)
பச்சைக் குளத்தைப் பார்த்தாலே பகீர்னு இருக்கு:(
கண்ணன் ஆடுகிறதைப் பார்த்தால் ரத்தம் ஏன் வரணும். நாமளும் சொர்க்கத்துக்குப் போகலாமே.என்னப்பா கதை விடறாங்க:(

said...

கலக்கல் புகைப்படங்கள்.

said...

புதிய கோயில் கண்ணை ரொம்பத்தான் கட்டுது.

said...

வைஷ்ணவிதேவி சிலை நன்றாக உள்ளது டீச்சர்.

said...

வணக்கம் டீச்சர்,

நலமா? :)

மதுவனம்- வாசல்வரை சென்றும், நான் பார்க்க முடியாமல் போன இடம்.
இன்று நீங்கள் காட்டிவிட்டீர்கள் டீச்சர்.

said...

வாங்க கயலு.

கைடு சொன்னதும் முதலில் உங்க நினைப்புதான் வந்துச்சு.

said...

வாங்க கோவியார்.

சதுப்பு நிலத்துலே இருக்கும் மரங்கள் போலத்தான் இருக்கு.

மணமில்லாத் துளசியை மனம் ஏற்கவில்லை:(

said...

வாங்க வல்லி.

கொஞ்சம் 'சிந்திச்சால்' போதும். விடும் கதைகளை எல்லாம் புரிஞ்சுக்கலாம்.

ஒரு வேளை அங்கே இரவில் யாரையும் வரவிடாமல் இருக்கவும், எதாவது அண்டர்க்ரௌண்ட் ஆக்டிவிட்டீஸ் நடத்திக்கவும் இல்லே அசிங்கமா ஏதும் நடக்காம இருக்கவும் செஞ்ச ஏற்பாடோ என்னவோ?

ஆனால் இரவில் இதையெல்லாம் பார்க்கும் குரங்க்ஸ்க்கு ஒன்னும் ஆகலையேப்பா!!!!!!

said...

வாங்க சித்ரா.

நல்ல கெமரா இருந்தா இன்னும் படங்கள் நல்லா இருக்கும். இப்படிச் சொல்லியே அடி போட்டுக்கிட்டே இருக்கணும்:-)

அம்மியை நகர்த்தணுமே!

said...

வாங்க மாதேவி.

கட்டி முடிச்சபிறகு போய்ப் பார்க்கணும். இப்பவே அள்ளிக்கிட்டுப் போகுது!

said...

வாங்க சுமதி.

கிட்டே போய்ப் பார்க்கலை :(

said...

வாங்க புதுவண்டு.

ஆஹா..... வனம் என்றதும் வண்டின் வருகை!!!!!

ஏன் உள்ளே போய்ப் பார்க்கலை?

கு'ரங்க்ஸ்' தொந்திரவா?