Tuesday, May 24, 2011

தர்கா ஷெரீஃப் ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 15)

எலக்ட்ரானிக் கேட் கடந்து உள்ளே போறோம். இடப்பக்கம் உசரமான இடத்தில் பெரிய டேக்ஸாவில் சமையல். உம்மா சொன்ன பாத்திரம்! இதுக்குள்ளே இன்னொரு இளைஞர் வந்து சேர்ந்துக்கிட்டார். சத்தர் ((Chaddar) போடறீங்களா? (ஏற்கெனவே நாங்க தீர்மானம் செய்தபடியால்) இல்லைன்னோம். சத்தர் போடுவதால் உள்ள நன்மைகளையும் இவ்வளவு தூரம் பயணம் செஞ்சு வந்து சத்தர் போடாமல் இருக்கும் கஞ்சத்தனம் நல்லாவா இருக்கு என்பதை மறைமுகமாகவும் சொன்னார். 'பரவாயில்லை. நாங்க சலீம் சிஷ்டி தர்காவில் வழிபாடு நடத்திட்டோம். அது போதும்' என்றதும் அது வேற இது வேறன்னு ஆரம்பிச்ச புது இளைஞர் 'சொல்வது எங்க கடமை. உங்களுக்கு விவரம் தெரியட்டுமேன்னுதான் சொன்னோம். பூ வாங்கிப்போடுவீங்களா'ன்னார். ஆஹா... அதுக்கென்ன போடலாமே! உடனே நூறு இருநூறுன்னு பல தொகைகள் சொன்னார். நூறே போதுமுன்னதும் அங்கே டேக்ஸா பக்கத்துலே இருந்த சின்ன முற்றத்தில் பூத்தட்டு ஒன்னு அவரே வாங்கி வந்தார். சின்னத் தாம்பாளம் சைஸுலே மூங்கில் தட்டு. அது நிறைய சிகப்பு ரோஜாக்கள். ஊதுபத்தி பாக்கெட், வெள்ளைச்சீனி மிட்டாய் பாக்கெட் எல்லாம் இருந்துச்சு. இந்த அளவு ரோஜாக்கள் வெறும் நூறுன்னால் ரொம்பவே சல்லீசு.
சந்நிதிக்கு நுழையும் வாசலில் ரெண்டு பக்கமும் சிலர் உக்காந்து பக்தர்கள் கொண்டுவரும் பூக்கள் தட்டை ஆசீர்வதிச்சு மந்திரம் ஓதி, கையில் உள்ள ரசீது புத்தகத்தைப் பிரிக்கிறாங்க. நிறைய 'நலத்' திட்டங்கள். சேவைகள். ஒவ்வொன்னுக்கும் ஆகும் செலவு இப்படிப் பட்டியல் வாயால் ஒப்பிக்கப்படுது. 'அதெல்லாம் இருக்கட்டும். நாங்க பொதுவாக் கொஞ்சம் டொனேஷந்தான் தருவோம்' என்றதும் வாங்கிக்கிட்டு ரசீது கொடுத்தாங்க.
பூத்தட்டைத் தலையில் சுமந்து கொண்டு போகணும். போனார். உள்ளே மேடையில் இருக்கும் சமாதிக்கு மேல் பல சத்தர்கள் போடுவதும் எடுப்பதுமாய் பயங்கர பிஸி. மேடைக்கருகில் நாம் போய்விடாமல் இருக்க இடுப்பளவு உயரக் கம்பித்தடுப்பு. நம்ம பூத்தட்டை வாங்கி மேடையின் ஒரு பக்கத்தி வச்சுட்டு அதுலே இருக்கும் சீனிமிட்டாய் பாக்கெட்டை மட்டும் எடுத்து நமக்குக் கொடுத்துடறாங்க. கூடவே மயிலிறகில் நம் தலையில் ஒரு தொடல். அஞ்சே நிமிசத்தில் ஆச்சு தரிசனம். இடப்பக்க வாசல் வழியே வெளியேறணும். சத்தர் போடும் மக்களைக் கம்பித்தடுப்புக்கு அப்புறம் கொண்டுப்போய் சத்தர் போர்த்தினவுடன் வலப்பக்க வாசலில் அனுப்பிடறாங்க.
வலம் வந்தோம். அங்கங்கே கொத்துக்கொத்தாக கூட்டம். குடும்பங்கள். சிலர் ஜெபமாலை உருட்டியபடி வழிபாட்டிலும், பலர் பேசியபடியும் உக்கார்ந்துருக்காங்க. ஒரு இடத்தில் சின்னக்குன்று போல அமைப்பு. ரெண்டு பக்கமும் படிகள். ஏறிப்போனால் குன்றின் நடுவில் பெரிய குழிக்குள் பிரமாண்டமான கடாய் ஒன்னு உக்கார்ந்துருக்கு! அது கஞ்சி வைக்கக் காணிக்கை போடும் இடம். மாவு, கோதுமை, சோளம்,. அரிசி, காசு இப்படி பலதரப்பட்ட பொருட்கள் குழியின் உள்ளே!

இந்த தர்காவையும் சிஷ்டி பாபாவையும் கொஞ்சம் பார்க்கலாம். இந்த சிஷ்டி பாரம்பரியம் ஆரம்பிச்சது ஆஃப்கானிஸ்தானத்துலே ஹேராட் ( Herat) என்ற நகருக்குப் பக்கத்தில் இருக்கும் 'சிஷ்டி' என்னும் கிராமத்தில்தான். இது கிபி 930 வது ஆண்டு. அன்பு பொறுமை, சகிப்புத்தன்மை, ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான திறந்த மனம் இப்படிப்பட்ட நல்ல குணங்களை சகமனிதர்களுக்குள் பரப்பி ஒரு முகமாக ஆண்டவனை வழிபட உண்டாக்கின அமைப்பு. அபு இஷாக் ஷாமி என்பவர் ஆரம்பிச்சுவச்சது.

இந்துமத அமைப்பில் நாயன்மார்கள் ஆழ்வார்கள். கிறித்துவத்தில் புனிதர்கள் போல இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் ஞானிகள் வகையில் இவர்கள் இருக்கணுமுன்னு நினைக்கிறேன்.

மூத்தோர்களை மதிச்சு நடப்பது, பூவுலக இன்பங்களைப் புறக்கணிப்பது முக்கியமாக 'காசே தான் கடவுளடா'வை விட்டுடணும். அதிகாரங்களைக் கைப்பற்றும் ஆர்வத்தை விட்டொழிப்பது, ஏழைகளிடம் கருணை, மனிதத்தில் ஆர்வம் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று இருப்பது, முன்னோர்கள் சொன்ன சாஸ்த்திர விதிகளின் படி இறைவனை வழி படுவது, படைச்சவனை மட்டும் நம்புவது, அற்புதங்களைச் செய்துகாட்டி மக்களை வசீகரிக்காமல் இருப்பது என்று இவையெல்லாம் முக்கிய கொள்கைகளாக ஆக்கி வச்சுருந்தாங்க. (ஆனால் இதெல்லாம் வேணாமுன்னு சொன்ன இவுங்களை வழிபட்ட மக்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் பல நடந்துச்சுன்னு சொல்றாங்க)

இப்படியான சிஷ்டி பரம்பரையில் வந்தவர்தான் மொய்னுத்தீன் அவர்கள். ஏழைகளின் மீது அளவில்லா கருணை காட்டியவர் என்பதால் இவரை கரீப் நவாஸ் Gharīb Nawāz ன்னு சொல்றாங்க. கிபி 1141 இல் பாரசீகத்தில் பிறந்தவர். சின்ன வயசுலேயே தாய்தகப்பனை இழந்துட்டார். குடும்ப சொத்தா ஒரு பழத்தோட்டமும், காற்றாலையும் கிடைச்சது. அதை வச்சுத் தன் பிழைப்பைப் பார்த்துக்கிட்டு இருந்துருக்கார். அப்போ ஒரு நாள் சூஃபி ஞானி ஷெய்க் இப்ராஹீம் குந்தூஸி (Shaikh Ibrāhim Qundūzī ) இவரோட தோட்டத்துப்பக்கம் வந்துருக்கார். பெரியவரை வணங்கி தன் தோட்டத்துப் பழங்களை இவர் காணிக்கையா கொடுத்தார். அவைகளை சாப்பிட்டுவிட்டு, மொய்னுதீனை ஆசீர்வதிச்சுத் தன் கையில் இருந்த ரொட்டித் துண்டை 'இந்தா நீ சாப்பிடு'ன்னு கொடுக்க இவரும் அதை பிரசாதமா நினைச்சுச் சாப்பிட்டிருக்கார்.

உள்மனசில் ஒரு ஒளி. ஞானம் தேடும் வேட்கை. இருந்த சொத்து பத்துக்களையெல்லாம் வித்துட்டு அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செஞ்சுட்டு சந்நியாச வாழ்க்கையைத் தேடிக்கிட்டார். க்வாஜா என்னும் பெயர் வந்துருச்சு. தலைவருன்னு பொருளாம்.

தலயாத்திரை செஞ்சுக்கிட்டே வந்து ஒரு சமயம் பாரதத்தில் சுத்தும்போது அஜ்மெர் வந்ததும் அங்கேயே தங்கிட்டார். முஸ்லீம்களுக்கு மட்டுமில்லாம மற்றவர்களுக்கும் இவரையும் இவர் சொன்ன தத்துவங்களையும் பிடிச்சுப்போச்சு. 1230வது ஆண்டு தன் 89 வது வயசில் உலகவாழ்வை நீத்தார். இவரிடம் அன்பு கொண்ட மக்கள் சமாதி எழுப்பி வழிபட ஆரம்பிச்சாங்க. அப்போ இருந்துதான் இவரைப் பின்பற்றுபவர்களால் இங்கே பாரதத்திலும் சிஷ்டி பாரம்பரியம் ஒன்னு உண்டாச்சு. குத்புதீன் பக்தியார் காகி என்ற பக்தர், தலைவர் விட்டுப்போன சேவைகளைச் செய்ய ஆரம்பிச்சார். சின்னதா ஒரு தர்காவும் கட்டினார் தன் தலைவருக்கு.
அப்புறம் பல நிலைகளில் வெவ்வேற முகலாய மன்னர்களால் விரிவுபடுத்திக் கட்டப்பட்டிருக்கு இந்த தர்கா ஷெரீஃப். கதவுகள் எல்லாம் வெள்ளியில் செஞ்சு பொருத்தி இருக்காங்க. முதல்முதலா இந்த தர்காவுக்கு வந்து வழிபட்ட அரசர் முகமது பின் துக்ளக்தானாம். 1332 லே!

சில நூற்றாண்டுகளுக்குப் பின்னே பேரரசர் அக்பர் சக்ரவர்த்தி காலத்துலே ராஜாவே பாத யாத்திரையா ஆக்ராவில் இருந்து அஜ்மெர் வர ஆரம்பிச்சதும் இந்த தர்காவின் புகழ் படுவேகமாப் பரவ ஆரம்பிச்சது. அக்பர் சக்ரவர்த்திக்கு இந்த சிஷ்டி பாபாக்களின் மேல் தணியாத நம்பிக்கை. நாம் கொஞ்ச நாள் முன்னால் ஃபடேபூர் ஸிக்ரி கோட்டையில் ஸலீம் சிஷ்டி தர்கா போய்ப் பார்த்தமே நினைவிருக்கா? அவரை வழிபட்டுத்தான் அக்பருக்கே பிள்ளைச்செல்வம் கிடைச்சது. மகனுக்கு ஸலீம் என்று தான் பெயரும் வச்சார். பட்டத்துக்கு வரும்போதுதான் ஸலீமின் பெயர் ஜஹாங்கீர் என்று மாற்றப்பட்டது. இன்னும் கொஞ்சம் விலாவரியாப் பார்க்கணுமுன்னா இங்கே போய் பார்த்துருங்களேன்.

ஜ்யோதா அக்பர் சினிமாவில்கூட ஒரு கவாலி பாட்டு வருதே 'க்வாஜா மேரி க்வாஜா'ன்னு அதுகூட இந்த அஜ்மெர் மொய்னுதீன் சிஷ்டி பாபாவைப் பற்றித்தானாம்.




கடவுள் என்பதே நம்பிக்கைதான். நம்புனாதான் கடவுளே! நம்பிக்கையோடு இங்கே வந்து தங்கள் குறைகளைச் சொல்லி வழிபடும் மக்களுக்கு எதாவது நல்லது நடந்து அவுங்க துயரம் ஓரளவாவது குறைஞ்சால் அதைவிட மனித சேவை வேற என்ன இருக்க முடியும்? இன்ன மதக்காரர்கள் என்றில்லாம அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டுப் போறாங்க. மத நல்லிணக்கம் என்பதைக் கண்ணால் கண்ட மகிழ்ச்சிதான் நமக்கும்.

வெளியே வந்து கோபால் தன் செல்லில் சில படங்களை எடுத்தார். அவ்வளவு நல்லா வரலை. அதான் சுட்டுப்போடவேண்டியதாப் போச்சு. தர்கா ஷெரீஃப், அவுங்க வலைப்பக்கத்துலே அருமையான படங்களையும் விவரங்களையும் கொடுத்துருக்காங்க. நேரம் இருந்தால் இங்கே பாருங்களேன். காலணிகளைப் போட்டுக்கிட்டுக் கிளம்பினோம். கூட்ட நெரிசலில் பிச்சைக்காரர்கள் (தொல்லை) அதிகம்தான். சொல்லி வச்சாமாதிரி எல்லோரும் கைக்குழந்தைகளோடு இருக்காங்க!

மறுபடி அதே ஆட்டோ சவாரி. வண்டி நிறுத்திய முற்றத்துக்குக் கொண்டு விட்டார். அதுக்குள்ளே அந்த இளைஞரும் பிரதீபும் வந்து சேர்ந்துட்டாங்க. இப்பத்தான் பெயரை விசாரிச்சேன். ஸையது அக்பர் அலி. மாணவர் பிபிஏ படிக்கிறார். இவர் மட்டும் இன்னிக்கு இங்கே நமக்கு உதவலைன்னா....... தரிசனம் ரொம்பக் கஷ்டப்பட்டு நடந்திருக்கும். நம்ம வேலையைச் சுளுவாக்க அந்த சாமிதான் இவரை அனுப்பிச்சாருன்னு இருந்துச்சு எனக்கு.

ஒரு தொகையை அன்பளிப்பாக் கொடுத்தப்ப மகிழ்ச்சியா வாங்கிக்கிட்டார். அப்போதான் ஞாபகத்துக்கு வருது பூத்தட்டு வாங்கினதுக்குக் காசு கொடுக்கலைன்னு.! அதையும் சேர்த்துக் கொடுத்துட்டு ஸையது அக்பர் அலியோடு ஒரு படம் எடுத்துக்கிட்டேன். 'உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது வர்றதா இருந்தால் தகவல் சொல்லுங்க ஆண்ட்டி. நான் அவுங்களுக்கு உதவி செஞ்சு தரிசனம் பண்ணி வைக்கிறேன்'னார். நல்லதுப்பான்னு செல் நம்பர் வாங்கி வச்சுக்கிட்டேன்.

இந்த ஊருலே இன்னும் பார்க்க என்ன இடம் இருக்குன்னு மெள்ள விசாரிச்சார் கோபால். அஜ்மெர் கோட்டை இருக்குன்னதும் கண்களில் சின்ன ஒளி. என் சின்ன உறுமலில் செய்தி கிடைச்சுருச்சு அவருக்கு:-)

ஆமாம். அஜ்மெர் நகரை நிறுவி கோட்டை கொத்தளமெல்லாம் கட்டுனது ராஜா அஜெய் பால் சௌஹான். அது ஏழாம் நூற்றாண்டு. அப்போ முதல் பனிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை சௌஹான் அரச பரம்பரை மட்டுமே ஆண்ட தேசம். அதுக்குப்பிறகு முகமதியர் படையெடுப்பில் அது முகம்மது கோரியின் வசமாச்சு. அதன் தொடர்ச்சியா தில்லி சுல்தான்கள் ஆட்சிக்குக் கீழேயே சில நூற்றாண்டுகள் இருந்துருக்கு. மேவார், மார்வார் பகுதிகளைச் சேர்ந்த ராஜ்புத் ராஜாக்கள் மீண்டும் படையெடுத்து அவர்கள் வசமாக்கி ஆண்டார்கள். மறுபடி மொகலாயர்களுடன் போர். இப்படி ரொம்ப ரத்தம் சிந்துன பூமி இது. ஆனால் இந்த காலக்கட்டங்களில் ஏகப்பட்ட இந்துக்களை மதம் மாற்றிட்டாங்க. இப்ப இஸ்லாமியரும் இந்துக்களுமாச் சேர்ந்து வாழும் ஊராத்தான் இருக்கு. மதங்களைக் கடந்து தர்கா ஷெரீஃபுக்குப்போய் வழிபடும் மக்களைக் கொண்ட ஊருன்னு சொல்லலாம் அந்த வாழைப்பழ வண்டிக்காரரைத் தவிர!

நம்ம வண்டிக்குள்ளே பார்த்தால் எல்லாம் சரியாகப் பத்திரமா இருந்துச்சு. பார்க்கிங் சார்ஜா அம்பது ரூபாயும் ஆட்டோவுக்கு 200ம் கொடுத்துட்டுக் கிளம்பினோம். உம்மா & உப்பாவின் நினைவு மனசில் வந்துக்கிட்டே இருந்துச்சு. அநேகமா இப்ப அவுங்க உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை. கடைசியாப் பார்த்தது இந்தியாவை விட்டு வந்தபோது..... அது ஆச்சு 30 வருசம்.

தொடரும்.........:-)






16 comments:

said...

நல்ல தரிசனம்..... கைப்பிடித்து அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றி துளசி மேடம்.... :))))

said...

வரலாற்று குறிப்புகளுடன் - பல தகவல்களுடன் - அருமையான படங்களுடன் - உங்கள் பயண பதிவுகள் பட்டையை கிளப்புது!

said...

//நம்ம வேலையைச் சுளுவாக்க அந்த சாமிதான் இவரை அனுப்பிச்சாருன்னு இருந்துச்சு எனக்கு.//

எனக்கும் :)

said...

எல்லா தொகுப்பையும் மொத்தமா ஒருநாள் படிச்சுடனும்...படிக்க நிறைய தொடர்பகுதி இருக்கு.

said...

Felt like going back to read your old posts.
It was really nice of you to go and visit a place in memory of Umma andUppa.

said...

வரலாறுகள் அறிந்துகொண்டோம்.

"அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டுப் போறாங்க". இதுதான் சிறப்பு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கூடவே வந்ததுக்கு நன்றி.

said...

வாங்க சித்ரா.

சரித்திர டீச்சர் வரலாறு சொல்லலைன்னா எப்படிப்பா???????????

said...

வாங்க சுசி.

பெருமாளே பார்த்து அனுப்பி வச்சுட்டான்னே இப்பவும் நினைக்கிறேன்.

said...

வாங்க மேனகா.

ஓடிப்போகாதுப்பா. டேக் யுவர் ஓன் டைம்:-)

said...

வாங்க வல்லி.

பூனா வாழ்க்கையில் இந்த உம்மாவும் உப்பாவும் எனக்கு அம்மா அப்பா மாதிரியே இருந்தாங்கப்பா. அந்த அன்பை மறக்க இயலாது!

said...

வாங்க மாதேவி.

உலகம் பூராவும் இப்படி மத நல்லிணக்கம் இருந்தால் பூலோகமே சொர்க்கம்தான்!

said...

ஏதாவது ஊர் பாக்கியிருக்கா? :-)
எப்போதாவது நாங்கள் போனால் இதைப்பற்றி நீங்கள் எழுதியது தான் ஞாபகம் வரும்.

said...

வாங்க குமார்.

//ஏதாவது ஊர் பாக்கியிருக்கா? :-)//

இருக்கே! கண்டது கையளவு. காணாதது உலகளவுன்னு புது மொழி:-)

//எப்போதாவது நாங்கள் போனால் இதைப்பற்றி நீங்கள் எழுதியது தான் ஞாபகம் வரும்.//

ஆஹா.... அப்ப நான் எழுதுனது உண்மையான்னு சரி பார்த்துக்கலாம்:-)))))

said...

அருமையான பதிவு. நான் இரண்டு நாட்கள் ஆஜ்மேரில் தங்கி இருந்தேன்.
இஸ்லாமிய சூஃபிக்கள் என்பவர்கள் நம் சித்தர்கள் போல.

said...

Tulsi amma: Could you please share the phone number of ஸையது அக்பர் அலி?