Monday, July 04, 2011

எப்படி கேக்கணும்? எங்கே கேக்கணும்? எப்போ கேக்கணும்??........((ராஜஸ்தான் பயணத்தொடர் 28)

எல்லாம் இறைவன் கொடுத்த, இன்னும் இல்லைன்னா, இனி கொடுக்கப்போற வரத்தை எப்படிக் கேக்கணும் என்பதுதான்! இன்னும் அழுத்தமாக் கேளுங்க.
விட்டுடாதீங்க........ எதையும் கேக்கறமாதிரி கேட்டால் 'தானே' கிடைச்சுட்டுப் போகுது. என்ன நாஞ்சொல்றது? என்ன செய்யணுமுன்னு கொஞ்சம் எட்டிப் பார்த்தால் காரியம் அவ்ளோ ஒன்னும் பிரமாதமில்லை.சிம்பிள்தான்.
என்ன..... ஒரு 18 நாளைக்கு ஒரு பொழுது. அதுக்காக எங்க அம்மம்மா சொல்வது போல் அன்னத்தை பின்னம் பண்ணி சாப்பிட்டால் போதும்:-)))))
மேவார் நாட்டின் காங்கோர் திருவிழா. ஹோலிப்பண்டிகை வருது பாருங்க...... அந்தப் பவுர்ணமிக்கு மறுநாள் இருந்து விரதம் ஆரம்பிக்குது. கலியாணமானவுங்க வெறும் மூணு நாள் விரதம் பிடிச்சால்போதும். அதான் ரிஸல்ட் தெரிஞ்சு போச்சே. ஆனால் கலியாணமாகாத இளம்பெண்களுக்கு? வர்றவன் எப்படி இருப்பானோ? மனசுலே நினைச்சமாதிரி கிடைக்கணுமுன்னா..... கொஞ்சம் மெனெக்கெடத்தானே வேண்டி இருக்கு, இல்லீங்களா?
கிரிராஜன் ஹிமவான் புத்ரி கிரிஜா இந்த விரதம் பிடிச்சுத்தான் ஈசனையே அடைஞ்சாங்க(ளாம்) பரா'சக்தி'யே இந்த விரதம் பிடிச்சால் இதன் சக்தியைப் பற்றிச் சொல்லணுமா? தினம் குளிச்சுக் காலையில் பூஜைகள் நடத்துவாங்க. மண்ணால் ஆன பார்வதி பரமேஸ்வரன் பொம்மைகளை வச்சுதான் பூஜிக்கணும். இந்த காங்கோர் என்ற சொல் ஈச்வரனையும் கௌரியையும் குறிக்குது. Gகண் என்றால் ஈசர். Gகௌர்ன்னா நம்ம கௌரி.
அந்தந்தத் தெருவில் இருக்கும் கலியாணமாகாத இளம்பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஹோலி முடிஞ்ச ஏழாம்நாள் மண்ணால் ஆன ஒரு சொம்பினுள்ளே அகல் விளக்கு ஒன்னு ஏத்தி வைப்பாங்க.இந்தச் சொம்பில், விளக்கு வெளியே தெரியறமாதிரி ஜன்னல் ஒன்னும் இருக்கும். இந்த 'ஜன்னல்சொம்பை'த் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளுக்குப் போய் அம்மன் பாட்டுகளைப் பாடுவாங்க. அந்தந்த வீட்டுப் பெரியவர்களும் இவுங்களை வரவேற்று கூடவே பாட்டுப்பாடி மகிழ்ச்சி அடைவாங்க. பரிசுப் பொருட்களா வெல்லம், பழங்கள், இனிப்புகள், காசு இப்படி அவரவர் வசதிக்கேற்றபடி தருவாங்க. இதெல்லாம் அந்தந்தப் பேட்டையில் இருக்கும் எளியவர்களுக்கோ இல்லை கோவிலுக்கோ தானமாப் போயிரும்.
இந்த விரதம் பிடிச்சு நடத்துனா என்னென்ன பலன் கிடைக்குமாம்? அதுக்குன்னு ஒரு கதை(யும்) இருக்கு. ஒரு ஊர்லே இருந்த அரசரும் ஏழை விவசாயியும் ஒரே சமயம் அவுங்கவுங்க நிலத்துலே பயிர் செய்யக் கிளம்புனாங்க. அரசர் கோதுமையை விதைச்சார். ஏழை மாடுகன்னுகளுக்குத் தீவனமா இருக்கும் ஒரு வகைப் புல்லை விதைச்சார். ரெண்டு நிலத்துலேயும் தளதளன்னு வளர்ச்சி. ஒரு நாள் ஏழை தன் நிலத்துக்குப் போய்ப் பார்த்தால் கொஞ்சம் புல்லை யாரோ அறுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. ரெண்டு மூணு நாள் இதே கதையா புல் திருட்டுப் போயிருக்கு. ஒரு நாள் ராத்திரி காவலுக்கு இருந்து புல்திருடிகளைக் கையும் களவுமாப் பிடிச்சுட்டார் விவசாயி.

'காங்கோர் பூஜைக்கு இந்த புல் வேணும் என்பதால் உங்க நிலத்துலே இருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு. மன்னிக்கணுமு'ன்னு பெண்கள் கேட்டாங்க. 'சாமிக்குன்னு சொல்றதால் இப்போ விட்டுடறேன். ஆனால் பிரசாதங்களைக் கொண்டுவந்து கொடுக்கணுமு'ன்னு கண்டிஷன் போட்டார் விவசாயி. சரின்னு சம்மதம் சொல்லிட்டுப் போனாங்க.

அன்று இரவு விவசாயி வீட்டுக்குப் பிரசாதம் கொண்டுவந்தாங்க. விவசாயி வீட்டில் இல்லை. அவரோட அம்மா மட்டும் இருந்தாங்க. இந்த பிரசாதத்தை அப்படியே அடுக்குப் பானையில் வச்சுருங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க பெண்கள். அந்தம்மாவும் அப்படியே செஞ்சது. மறுநாள் காலை விவசாயி வீட்டுக்கு வந்ததும் அடுக்குப் பானையில் பிரசாதம் இருக்குப்பா. எடுத்துக்கோன்னு அம்மா சொல்ல............ திறந்து பார்த்தால் பானை முழுதும் தங்கமும் வைரமுமா நிரம்பி வழிய அதன்மேல் சிவனும் பார்வதியும் உக்கார்ந்தபடி காட்சி கொடுத்துருக்காங்க.
கடவுளர்களை வழிபட்டு இந்த விரதம் இருந்து உம்மைப் பூஜிப்பவர்களுக்கு இப்படிக் குறையாத செல்வம் வழங்கணுமுன்னு கேட்க, அப்படியே ஆகட்டுமுன்னு வரம் கொடுத்தாங்களாம் கண்னும் கௌரியும்.

அரசருக்குச் சமமான செல்வம் அடைஞ்சு மகிழ்ச்சியா இருந்தார் விவசாயி. அன்று முதல் விவசாயியின் கிராமத்துலே அனைவரும் இந்த விரதம் பிடிக்கத் தொடங்குனாங்க. சேதி கேள்விப்பட்ட அரசரும் கடவுளின் கருணையை நினைச்சு அரசகுடும்பத்தினரும் இந்த விரதம் அனுஷ்டிக்கணுமுன்னு சொன்னார்.

ஆகக்கூடி விரதம் இருக்கும் அனைவருக்கும் நன்மையே நடக்கும் என்பது ஐதீகம்.

ஹோலிப்பண்டிகை முடிஞ்சு வரும் அமாவாசைதான் புது வருசப்பிறப்பு. வருசப்பிறப்புலே ஆரம்பிச்சு மூணு நாள்தான் விரதத்தின் கடைசிப்பகுதி. இந்த மூணு நாட்களுக்கு ஆண்களும் கூட விரதம் இருக்காங்க. நல்ல பெண்டாட்டி கிடைக்கணுமே! கிடைச்சவளும் மனம் மாறாம கடைசிவரை நல்லவளாவே இருக்கணுமே!
ஹோலி முடிஞ்ச மறுநாள் சின்ன மண் சட்டிகளில் கோதுமையை விதைச்சு விரதம் இருக்கும் நாள்தோறும் அதுக்குத் தண்ணி ஊத்திப் பராமரிக்கிறாங்க. வருசப்பிறப்புக்குக்குள் கோதுமை முளைச்சுருது., (இது நம்மூர் முளைப்பாரிதானே?)

நாலுமணிக்குன்னு சொன்னால்...... இது இந்திய நாலுமணிதானே..... இன்னும் ரெண்டு மணி நீட்டிடுவாங்களேன்னு நிதானமா அஞ்சுக்குக் கிளம்பிப் போனோம். ஓவியங்கள் விற்கும் கடையை எட்டிப் பார்த்தேன். ஒவ்வொன்னும் அள்ளிக்கிட்டுப் போகுது. கடைக்காரர் ஒரு ஓவியர். தன்னுடைய மாணவர்களுடைய ஓவியங்களையும் இங்கேயே வச்சு விக்கறார். குடிசைத் தொழில் போல வீட்டு வீட்டுக்கு ஓவியர்கள் வரைஞ்சு தள்ளுறாங்களாமே!

'இந்த ஊரில் ஃப்ரேம்கள் விலை மலிவு. நீங்க எந்த ஃப்ரேம் எடுத்தாலும் எவ்வளவு பெருசா இருந்தாலும் அதுக்கு 150 ரூபாய்தான்'னு சொல்லிக்கிட்டே சித்திரங்களை எடுத்துப் போட்டார். யானை இருக்கான்னு கேக்க வேண்டிய அவசியமே இல்லை. எங்கெங்கு காணினும் யானைகள்(டா)

உதய்பூர் ஸ்பெஷலா இருக்கட்டுமுன்னு கோபால் விரும்பியதால் மூணு யானைகள், குதிரை, புலி, ஒட்டகம், மயில், ரிஷபம் வகைக்கு ஒன்னா நிற்கும் படம் (சின்ன சைஸ்தான்) ஒன்னு தெரிவு செஞ்சோம் சட்டம் போட்டு வைக்கச் சொல்லிட்டு ஜக்தீஷ் மந்திர் போனப்ப மணி அஞ்சரை. தூரக்க இருந்தே கொட்டுமுழக்குக் கேக்குது. ஆரம்பிச்சுருச்சுன்னு காலை வீசிப்போட்டுப் போனால்....
மரத்தில் செஞ்ச மூணடி உயர பொம்மைகளுக்கு ஜிலுஜிலுன்னு ஜொலிக்கும் பட்டில் உடைகள் தைச்சுப் போட்டு நகையும் நட்டுமா அலங்கரிச்சு மணையில் நிக்கவச்சுத் தலையில் தூக்கிக்கிட்டு ஊர்வலமா வர்றாங்க. கௌரி உருவங்களுக்கு, அந்தப் பெரிய கண்களில் ஜீவன் இருக்கு. ஒவ்வொரு பேட்டையிலிருந்தும் குழுவா வர்றாங்க போல. கோவில் முன்னால் இருக்கும் இடத்துக்கு ஜக்தீஷ் சௌக்ன்னு பெயர். அங்கே வந்து நின்னு வட்டம் போட்டு பாட்டுக்கும் தாளத்துக்கும் தகுந்தாப்போலச் சுத்திச்சுத்தி ஆடுறாங்க. அப்படிச் சுத்தும்போது தலையில் இருக்கும் உருவத்தின் புடவை அப்படியே குடை மாதிரி விரிஞ்சு பார்க்கவே ஒரு அழகா இருக்கு.


ஜக்தீஷ் கோவிலுக்கு ஏறும் படிக்கட்டுகள், கேலரி போல பயன்பட்டுச்சு. அதில் நெருக்கியடிச்சு மக்கள் கூட்டம். ஆனாலும் கோவிலுக்குப் படியேறிப்போக சின்னதா வழிவிட்டுத்தான் உக்கார்ந்துருக்காங்க. நாங்களும் படிகளில் ஏறிப்போய் மேலே அந்த யானைகிட்டே நின்னுகிட்டோம்.
சிகப்பும் ஆரஞ்சுமாத்தான் பலருடைய உடைகளும். சாமிகளுக்கும் இதே நிறங்களில்தான். கௌரி உருவங்கள் மட்டுமில்லாம ஜடாமுடியுடன் சிவன், கருப்பு உடைகளில் பேய்பிசாசுகள், வசிஷ்டர் மகரிஷி, சின்ன ட்ரக்குகளில் சாமி, குதிரை, அம்பாள் இப்படி வந்துக்கிட்டே இருந்துச்சு. தண்ணீருக்குப் பஞ்சம் உள்ள தேசம் என்பதால் 'ஜல் ஹை த்தோ கல் ஹை' னு எழுதிவச்சுருந்த ஸ்லோகன்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சது. நீரின்றி அமையாது உலகு!

இந்த குழுக்களுக்கு ஏதோ பரிசு இருக்கு போல இருக்கு. ஒவ்வொரு வண்டியிலும் ஒவ்வொரு எண் இருந்துச்சு.

சின்னக்குழந்தைகள் குழு ஒன்னு வந்தது. அவுங்களுக்கேத்தமாதிரி சின்ன சைஸ் கௌரிகள் தலையில். இன்னொரு சின்னப்பசங்க குழு தலையில் கலசம் ஏந்தி வந்தாங்க. நல்ல ட்ரெய்னிங்தான் போங்க, இந்த வயசில் இருந்தே! ஆடி முடிச்ச பெண்கள் குழு நகர்ந்து போனதும் இன்னொரு குழு மேளதாளத்தோடு வந்தாங்க. இவும்ங்க தலையில் இருக்கும் கௌரிகளுக்கு வேறுவிதமான அலங்காரம் உடைகள். இப்படியே ஏழெட்டு குழுக்கள். அவுங்களே பக்கத்து சந்துத் தெருவழியா சுற்றிக்கிட்டு மறுபடி மறுபடி வந்து ஆடுனாங்க. இங்கே ச்சும்மா ஒரு நிமிச வீடியோக்கள் ரெண்டு, யூட்யூப்லே போட்டுருக்கேன். பாருங்க.

ராஜபுதன வீரர்கள் உடையில் முதுகில் கேடயமும் கைகளில் வாளும் தரித்த ஆண்கள் கோஷ்டி ஒன்னு வந்து சுழண்டு சுழண்டு மேலங்கி குடைவிரிக்க ஆடுச்சு. பேண்ட் வாத்தியக்குழு மேலே படிகள் ஏறிவந்து கோவில் வெளிப்ரகாரங்களுக்குள்ளும் 'வாசி வாசி'ன்னு வாசிச்சாங்க:-)

இருட்டும்வரை நின்னு வேடிக்கை பார்த்துட்டு நாங்க திரும்பிப்போய் படத்தை வாங்கிக்கிட்டு அறைக்குப் போயிட்டோம். அரைமணி ஓய்வு. மாடிக்குப்போய்ப் பார்த்தால் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் ஒலி கேக்குதே தவிர நம்ம மாடியில் இருந்து லால்காட் கண்ணுக்குத் தெரியாம லால்காட்டின் மேல்தளம் மட்டுமே தெரியுது. என்னமோ நடக்குது. அதை விட்டுட்டா எப்படின்னு லால்காட்டுக்குப் போனோம். பெரிய மேடை போட்டு பாட்டு நடனம் எல்லாம் நடந்து.க்கிட்டு இருக்கு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பிசோலா ஏரியில் படகுகள். அதில் இன்னும் நிறைய கௌரிகள் வர்றாங்க. இது மேவார் ராஜ குடும்பத்து கௌரிகள். அலங்காரம் படு ஜோர். கௌரிகளை கரையில் ஒரு படிக்கட்டில் வரிசையா இறக்கி வச்சாங்க. கோலாகலமா இருக்கு. கூட்ட நெரிசல்.

எட்டரை வரை இருந்துட்டு அறைக்குத் திரும்பினோம். வாண வேடிக்கை ஆரம்பிச்சது. ஏரிக்கு நடுவில் இருந்து வாணங்கள் சீறிப்பாய்ஞ்சு வானத்தில் வர்ணஜாலம் காமிக்க, அதன் ஒளி அப்படியே தண்ணீரில் சிதறிப் பிரதிபலிக்க .............. ஆஹா...... கண்கொள்ளாக் காட்சி. நம் அறைக்கு எதிரில் இருந்த சாளரத்தைப் போல வசதியா வேற இடம் கிடைச்சுருக்குமா!!!!
இந்த விழா மேவாரின் ப்ரெஸ்டீஜியஸ் ஃபெஸ்டிவலாம். நமக்கு இதை நேரில் பார்த்து அனுபவிக்கச் சான்ஸ் கிடைச்சதை நினைச்சு ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துச்சு. இன்னிக்கு இரவு உணவு ரூஃப் டாப்பில்தான்.

ஹரீஷின் பணியாளர்கள் அருமையா கவனிச்சுக்கிட்டாங்க. உபசரிப்பு பிரமாதம்! மெழுகுவத்தி வெளிச்சத்தில் ரொமாண்டிக் டின்னர்தான் போங்க:-)))))) நல்ல மறுபாதி கிடைச்சதுக்கு அடுத்தவருசம் மூணு நாள் விரதம் பிடிக்கச் சொல்லணும், கோபாலை:-)))))

தொடரும்................:-)

11 comments:

said...

எத்தனை தகவல்கள்... உபரியாக காணொளிகள்.... அசத்திட்டீங்க இந்த பகிர்வில்.

உங்கள் மின்னஞ்சல் வந்தது. சந்திப்பு பற்றி மற்ற நண்பர்களுடன் பேசி விட்டு சொல்கிறேன்...

said...

நல்ல பகிர்வு. படங்களும், காணொளிகளும் அருமை. விழாவை நேரில் பார்த்த உணர்வு. தொடருங்கள்.

said...

ராஜஸ்தான் பெண்களோட ஆடையலங்காரம் எப்பவுமே நல்லாருக்கும். அதுவும் கௌரி பூஜைன்னா கேக்கணுமா :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பதிவு வழக்கத்தைவிட நீண்டு போச்சேன்னு கவலையா இருந்தேன்.

said...

வாங்க கோவை2தில்லி.

நீங்கள் தொடர்வது மிக்க மகிழ்ச்சி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆமாங்க. ஒரே கலர்ஃபுல்தான்!!!

said...

namma padmanathanin nidhigal pathi padichutu unga pakkam vandha ,ingaeyum aranmanai, gowri poojainnu ore daiva manam ponga. viratham eppadi kadai pidikanumnu ezhudina engathu mamakku ubayogama irrukkum .(hi,hi).

said...

வாங்க தேனிக்காரி.

இந்த விரதம் இருப்பது ரொம்ப ஈஸிதான்.

அரிசியைச் சோறாத் தின்னாமல், அதை அரைச்சு இட்லி தோசை இல்லைன்னா அரிசி ரவை உப்புமான்னு மூணுநாள் சாப்பிடணும். வீட்டுலே இருக்கும் கௌரிக்கு அப்போதைய சக்திக்கு ஏற்றபடி ஒரு நெக்லெஸ், தோடு இப்படி (வைரமா இருந்தால் பூஜைக்குப் பலன் கூடுதல்) வாங்கி சாத்தணும். இந்த சாத்து அனிவித்தல் என்னும் பொருளில் வருது:-) இது துளசியின் வெர்ஷன் ஆஃப் வ்ரதம் கேட்டோ:-)

said...

வாங்க குடந்தை அன்புமணி.

அதிர்ச்சிக்கு நன்றி:-)

said...

arumaiyana pathivugal amma ,. thangaludan pesi romba naal aachu

said...

வாங்க ப்ரபாகர்.

பார்த்து ரொம்ப நாளாச்சே இந்தப் பக்கம்?