Monday, November 05, 2012

வெள்ளையர்களின் நரகாசூரன்.

இன்னிக்கு கைஃபாக்ஸ் டே!  ராத்திரி ஒன்பது மணிவாக்குலே பீச்சுக்குப் போகணும்.  எப்படியும் சம்பவம் நடக்கப்போவது  ஒன்பதையொட்டித்தான்  இருக்கும்.  ஒரு பதினைஞ்சு நிமிசத்துக்குள்ளே  முக்கியமான விஷயம் நடந்து முடிஞ்சுருக்கும்.  அதுவரை பாட்டுக்கச்சேரி. டே லைட் ஸேவிங்ஸ் இருப்பதால் பிரச்சனை இல்லை. சிட்டிக் கவுன்ஸில் வேற வாவான்னு கூப்புடுது.

வேற வேலைவெட்டி இல்லைன்னா சீக்கிரமா ஒரு ஏழரைக்கே போய் மணலில்  உக்கார்ந்து கச்சேரி கேட்டவாக்கில் கொண்டு போற சாப்பாட்டை சாவகாசமாத் தின்னுட்டு  சம்பவத்தையும் பார்த்துட்டு ஆஹா ஓஹோன்னு  புகழ்ந்துக்கிட்டே வீடு வரலாம். நமக்குத்தான் காலிலே கொதிக்கும் கஞ்சியாச்சே:(  அதுவுமில்லாம.......  ஆமாம்..போ. இளையராஜா கச்சேரியா கெட்டுப்போகுதுன்னு....

முதலில் பத்து நாள்ன்னு இருந்தது 'ஆபத்துகள்'  ஏற்பட ஆரம்பிச்சதும்  தேய்ஞ்ச்ய் தேய்ஞ்சு இப்போ நாலே நாளுக்கு வந்து நின்னுருக்கு.  பட்டாசைத்தான் சொல்றேன்.  நவம்பர் 2 முதல் நவம்பர் அஞ்சு வரை  அதுவும்  அஞ்சாம்தேதிமாலை அஞ்சரைவரைதான் விற்பனை.குறிப்பிட்ட கடைகளில் மட்டும் விற்பனை.  பொட்டி பொட்டியா   தரையில் அடுக்கி வச்சுருக்கு.  குறைஞ்சபட்சம் பத்து டாலர் அதிகபட்சம் 200 டாலர்.   ஒரு குடும்பம் 200 $ பொட்டியை எடுக்குது.   அதுவும் வாங்கும் மக்கள் வயசு 18க்கு கீழ் இருக்கப்டாது.  பதினெட்டுக்குக்கீழ் உள்ள எல்லாப் பொடிசுகளும் தாய்தகப்பனோடு வந்து அது வாங்கலாம் இது வாங்கலாம்னு சொல்லிக் காசைக் கரியாக்கத் துடிக்குதுங்க.


பொதுவா தள்ளுவண்டியில்(ட்ராலி) சாமான்களை அள்ளிப்போட்டுக்கிட்டே கடை முழுசும்  சுத்திட்டு வரும் மக்கள்ஸ்க்கு வச்சாங்க வேட்டு. பட்டாஸ் வாங்குன கையோடு கேஷ்கவுண்டருக்கு நடையைக் கட்டணும். வண்டியிலே வச்சுக்கிட்டு சுத்தறதெல்லாம் வேலைக்காகாது.  சுத்தணுமா.... எல்லாத்தையும் சுத்திப் பார்த்துட்டுக் கட்டக்கடைசியா பட்டாஸ் பகுதிக்கு வா.


நமக்கு தீபாவளிக்கு சாஸ்த்திரப்பிரகாரம் பட்டாஸ் வேணுமேன்னு  இந்த சந்தர்ப்பங்களில் வச்சுக்குவோம்.  தீபாவளி எப்பவும் ஒரே தேதியிலெயா வருது? அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை  அது எப்பவேணுமுன்னாலும் வரும். ஆனா கண்டிப்பா வரும் ! வருது.  அந்தந்த வருசம்  எப்போன்னு பார்த்து வச்சுக்கிட்டு நவம்பர் அஞ்சுக்கு அப்புறமுன்னா  நிம்மதி. இல்லைன்னா  வருசாந்திர பட்டாஸுலே கொஞ்சம் எடுத்து  பத்திரமா வச்சுக்கணும்.

ஒரு பாக்கெட் கம்பி மத்தாப்பு , ஒரு பாக்கெட்  பூச்சட்டி பூமழை வகைகள் நம்ம வீட்டுக்கு.


கைஃபாக்ஸ் விவரம் தெரியாத புதியவர்களுக்கு.................


முதலாம் எலிஸபெத் மகாராணியாரை யாருக்காவது நினைவிருக்குதுங்களா? என்ன........ இல்லையா? போனாப்போகட்டும். இப்ப இருக்கும் மகாராணியார் ரெண்டாம் எலிஸபெத் அவர்கள் என்றதால் முதலாவதா ஒருத்தர் இருந்துதானே ஆகணும்.  அவுங்க காலத்துலே அதாவது அவுங்க மரணமடைந்தபிறகு நடந்த கதை இது. ராணியம்மா 1603 வது வருசம் மறைஞ்சாங்க.  அரசுக்கு வந்தவர்  (முதலாம்)ஜேம்ஸ். ராணியம்மாவுக்குக் கத்தோலிக்கப் பிரிவு மக்கள் மேலே அவ்வளவா பாசம் இல்லை. ஆனா இப்ப வந்துருக்கும் ராசா ஒருவேளை நம்ம மேல் பாசமா இருப்பாருன்னு  கத்தோலிக்க மதத்தினர் சிலர் நினைச்சாங்க. ராசாவோட அம்மா கத்தோலிக்கராச்சே.  ஆனால்..... நினைப்புப் பொய்யாப் போச்சு.

ஒரு சின்னக் குழுவினர் சரியாச் சொன்னா 13 பேர் சேர்ந்து இதை எதிர்க்கணுமுன்னு திட்டம் போட்டாங்க. ( அய்யோ.... 13 என்றது வெள்ளைக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத எண் இல்லையோ?)
குழுவுக்குத் 'தலை'யா இருந்தார் ராபர்ட் கேட்ஸ்பை.

பார்லிமெண்ட் கட்டிடத்தை வெடி வச்சுத் தகர்த்து நம்ம எதிர்ப்பைக் காமிக்கணுமுன்னு திட்டம். அய்யய்யோ.....இளவரசர்கள், பிரபுக்கள் எல்லாம் செத்துட்டா? போகட்டுமே.....

வெடி வைக்க  வெடி மருந்து வேணுமுல்லே?  கொஞ்சம் கொஞ்சமா 36 பேரல் கன் பவுடரைச் சேகரிச்சாங்க. சேர்த்ததைக் காப்பாத்தி வச்ச இடம் பிரபுக்கள் சபைக் கட்டிடத்தின் சுரங்க அறை.  சபை கூடி இருக்கும் நேரம் கட்டிடம் வெடிச்சால் பொதுமக்களில் பலரும் இறக்க நேரிடுமேன்னு சிலர் கவலைப்பட்டாங்க. இன்னும் சிலர், எல்லாருமேவா ராசாவை ஆதரிக்கிறாங்க? கத்தோலிக்கப் பிரிவின் நண்பர்களா இருக்கற சிலரும் மேலே போயிருவாங்களேன்னு கலங்குனாங்க. ரெண்டு பேர் இருந்தாக்கூட அவரவர் எண்ணம் தனின்னும்போது 13ம் ஒரே கருத்தா இருக்குமோ? குழுவில் ஒருத்தர் தனக்கு வேண்டப்பட்ட ஒரு பிரபுவுக்கு, நவம்பர் அஞ்சாம் தேதிக்கு மட்டும் பார்லிமெண்ட் பக்கம் தலை வச்சும் படுக்காதீங்கன்னு கடுதாசி அனுப்புனாருன்னு ஒரு வதந்தி. கடுதாசி அங்கே இங்கேன்னு கை மாறிக் கடைசியாக் கிடைச்சது ராசா கையில்.


36 பீப்பாயைக் காவல்காத்துக்கிட்டு இருந்தார் கைடோ ஃபாக்ஸ் (Guido Fawkes)என்றவர். பொழுது விடிஞ்சும் விடியாமலும் இருந்த பொழுதில் சுரங்க அறையிலே பீப்பாய்களோடு சேர்த்து இவரைப் பிடிச்சாங்க. இன்னொரு வதந்தி என்னன்னா.... இந்த கன் பவுடர் எல்லாம் நாள்ப்பட்டது. தீவச்சு இருந்தாலும் வெடிச்சிருக்காது. உண்மையான 'உண்மை' என்னன்னு இதுவரை யாரும் எழுதி வைக்கலை(-:

ஆனால்...சம்பவம் மட்டும் மனசில் முக்கியமா ராசாங்க அதிகாரிகள் மனசில் பதிஞ்சு போச்சு. இன்றளவும்  ஆட்சியில் இருக்கும் அரசரோ அரசியோ  பார்லிமெண்ட்க்கு ( அதுவும் வருசத்துக்கு ஒரு முறைதானாமே) விஜயம் செய்யும்போது, முன்னதாகவே சுரங்க அறைகள், இன்னும் சுற்றுப்புறமெல்லாம் ஆபத்து இருக்கான்னு ஆராய்ஞ்சுறணும் என்றது ஒரு விதியா ஆகிப்போய் இருக்கு.

இந்த கைடோ என்றவர் , ஸ்பானிஷ் படையில் வேலை செஞ்சவர். வெடிமருந்து வேலைகளில் கெட்டி. அதனால்தான் இந்தப் பொறுப்பு இவருக்குக் கிடைச்சது. இவர் பிடிபட்டப்போது, தீக்குச்சி, கடிகாரம், பத்தவைச்சு எரிக்கும் மரத்துண்டு எல்லாம் இவரோட பாக்கெட்லே இருந்துச்சாம்.

ராசா நல்ல தூக்கத்துலே இருக்கும்போது  கை(டோ) ஃபாக்ஸைப் பிடிச்சுக்கிட்டுப் போய், ராசாவின் படுக்கை அறைக்கு வெளியே நிறுத்திவச்சுட்டு, இவனை என்ன செய்யலாமுன்னு ராசாவைக் கேட்டதுக்கு, சிறையில் அடைச்சு லேசாச் சித்திரவதை செஞ்சு இன்னும் யார்யார் கூட்டுன்னு விசாரிங்கோன்னு சொல்லிட்டாராம்.


கை வாயைத் திறக்கலை. யாரையும் காமிச்சுக்கொடுக்க விருப்பம் இல்லை.
லேசான சித்திரவதையின் கொடூரம் கூடிக்கிட்டே போயிருக்கு.  இதுக்குள்ளே சதித்திட்டம் தீட்டுன  (இந்த பாக்கி 12 பேரை)  ஆட்களை வளைச்சுப் பிடிக்கப் பார்த்தாங்க.  சண்டையில் சிலர் செத்துட்டாங்க. கடைசியில் எட்டுப்பேர் ஆப்ட்டாங்க. தூக்கில் தொங்கவிட்டு உசுரு போனதும் இழுத்துக்கிட்டுப்போய் நாலு துண்டா நறுக்கிப்போடணுமுன்னு தீர்ப்பு.


ஜனவரி 31, 1606 வருசம் ( பிடிபட்ட 88வது நாள்) தண்டனையை நிறைவேத்துனாங்க. பொதுமக்களுக்கு விவரம் தெரியணும், சதித்திட்டம் தீட்டும் ஆட்களுக்குப் பயம் வரணுமுன்னு  பிடிபட்ட நாள் நவம்பர் 5 ஆம் தேதியை பட்டாஸ் கொளுத்தி பான்ஃபயர் நைட்டாக் கொண்டாடுனாங்களாம்.
கையோட கொடும்பாவியைக் கொளுத்தும் விழாவா ஆரம்பிச்சு, பிரிட்டிஷ் மக்கள் எங்கெங்கே புலம் பெயர்ந்து போனாங்களோ அங்கெல்லாமும் இது ஒரு பண்டிகையா ஆகிக்கிடக்கு. இங்கிலாந்து மக்கள், அவுங்க போன இடமெல்லாம் அவுங்க விழாவைக் கொண்டுபோனது சரிதானே? இப்ப நாம் தீபாவளியை உலகம் பூராவும் கொண்டு போகலையா?

தீபாவளின்னதும் நினைவுக்கு வருது. 'மேற்படி சம்பவம்' நடந்ததும் ஒரு ஐப்பசி மாசம் என்றபடியால் ஏறக்குறைய நம்ம பண்டிகை சமயம்தான் இது வருது. இந்த சாக்குலே,  பட்டாஸ் நமக்கும் கிடைக்க ஒரு வழி பொறந்துருக்கு. இல்லேன்னா இந்த நாடுகளில் பட்டாஸ் விற்பனை எல்லாம் கிடையாது.  நாங்க இங்கே நியூஸி வந்த புதுசுலே நவம்பர் 5க்கு ரெண்டு வாரத்துக்கு முன்னே பட்டாஸ் விற்பனை இருக்கும். ராக்கெட்ன்னு வானத்துலே விடறதெல்லாமும்கூட  இருந்துச்சு. சின்னப் பசங்க வாங்கிவச்சுக்கிட்டுச் சும்மா இருக்குமா? சின்னச்சின்னதா விபத்துகள். இந்த அழகுலே 18 வயசுக்குட்பட்டவர்களுக்கு பட்டாஸ் விற்பனை செய்யக்கூடாது. (ஆனால் பதினைஞ்சரை வயசுலே கார் ஓட்ட ட்ரைவிங் லைஸன்ஸ் எடுக்கலாம்)

கழுதை தேஞ்சுக் கட்டெறும்பா ஆனது போல ரெண்டு வாரம் சுருங்கித் தேய்ஞ்சு இந்த வருசம்  நாலே நாள்தான் விற்பனை. அதுவும் ஆபத்தில்லாம வெடிக்கும்(????) கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, கொஞ்சமா மேலே போய் அங்கே இருந்து பூச்சொரியும் சின்ன பயர் பால்ஸ் இப்படிச் சில.  பட்டாஸ் பெட்டிகளில் இருக்கும் பெயர்களைப் பார்த்தால் அரண்டு போயிருவீங்க. என்னமோ ஏதோன்னு:-) இதையுமே  அஞ்சாம்தேதி மாலை 6 மணிக்கு அப்புறம் விக்கக்கூடாது.  வெள்ளைக்கார நரகாசூரன் வருசாவருசம் ஒரே தேதியில் வருவதைப்போல நம்மூர் நரகாசூரன் வர்றதில்லையே. அதுக்காக நம்ம பண்டிகையை விடமுடியுதா? கொஞ்சம் வாங்கி ஸ்டாக் வச்சுக்குவோம். நரகாசூரன் வரும்போது நாம் ரெடி:-))) தோட்டத்துலே போய் கொஞ்சமாக் கொளுத்திக்குவோம்.

ஒவ்வொரு நகரிலும் இருக்கும் கவுன்ஸில்கள், நம்ம காசை வச்சு( அதான் வீட்டுவரியைக் கறக்கறாங்களே, அதுலே ஒரு பகுதியை) ஃபயர் ஒர்க்ஸ் டிஸ்ப்ளேன்னு அதுக்குன்னு ஒரு ஆளைவச்சு வெடிக்க வைப்பாங்க.  நதிக்கரை ஓரமா இருந்தா நல்லதுன்னு நீர்நிலைகள் அருகில் விழா நடக்கும்.

இப்ப ஒரு பத்து வருசமா எங்க ஊரில்  கடலில் pier கட்டுனபிறகு, விழா அங்கேதான் நடக்குது. மாலை 7 மணிபோல இசைக் குழு( கிறைஸ்ட்சர்ச் சிம்போனி ஆர்கெஸ்ட்ரா) பாடத்தொடங்கும். சரியா 9 மணிக்கு வாணவேடிக்கை. பத்தவைக்கன்னே நிபுணர் வெளிநாட்டில் ( ஆஸ்தராலியா) இருந்து வருவார். பத்தே பத்து நிமிசத்துலே நம்ம காசு ரெண்டு லட்சம் டாலரைக் கரியாக்கிருவாங்க.  ஆனாக் கண் கொள்ளாக் காட்சியா இருக்கும்.

ஆகாயத்துலே போறதை அம்மா அள்ளிக்கோ..... ஐயா அள்ளிக்கோ தான். இசை நிகழ்ச்சி உக்கார்ந்து கேட்கும் பொறுமை இல்லை. அதுவுமில்லாம வரும்போது ட்ராஃபிக்லே மாட்டிக்குவோம்.  நமக்குத்தான் நோகாம நோம்பு கும்பிடணுமே.  9 அடிக்க ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி (கண்டுபிடிச்சு வச்சுருக்கும்) ஒரு மேடான இடத்துக்குப் போய்ச் சேருவோம். கடற்கரையில் இருந்து ஒரு ரெண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு. ஒரு குறிப்பிட்ட கோணத்தில்  அட்டகாசமாத் தெரியும் வாணவேடிக்கையைப் பார்க்க வேண்டியது. கடைசியா (ஃபினாலி) பட்டாஸ் அடைமழையா அஞ்சு நிமிசம் விடாமப் படபடன்னு பாய்ஞ்சு வர்ணம் உமிழ்ந்துகிட்டு ஜெகஜோதி காட்டும் நிகழ்வு முடிஞ்ச கையோடு வண்டியைக் கிளப்பிறணும். அஞ்சு நிமிசம் பால்மாறுனா......போச்சு. நம்மைப்போல நினைப்பு எத்தனைபேருக்கு இருக்கும்?

அடிச்சுப்பிடிச்சு ரோடைப் பிடிச்சா 12 நிமிசத்துலே வீடு.

இன்னிக்குத்தான் வெள்ளைக்கார நரகாசூரன் கை ஃபாக்ஸ் தினம். எங்கூர் பெருசுங்க,  உள்ளூர் தினசரியில் இளவட்டங்களுக்கு இன்றைய சரித்திரம் தெரியலையேன்னு புலம்பல் விட்டுருந்தாங்க.  அவுங்களுக்குத் தெரியலைன்னாப் போகுது....உங்களுக்கு? சரித்திரத்தை நம்ம சரித்திர வகுப்புக்கு கொணாந்துட்டேன்.  உங்களுக்கும் சொல்லிக்கொடுத்தது போல ஆச்சு. இல்லீங்களா?



பின்குறிப்பு:  நம்ம தளத்துலே ஒரு நாலு வருசத்துக்கு முன்னே எழுதுன 'சரித்திரத்தில் நரகாசூரன்' பதிவில்  இருந்து கொஞ்சம் எடுத்து ரீமிக்ஸ் செஞ்சுருக்கேன். எங்கியோ ஏற்கெனவே  வாசிச்ச ஞாபகம் இருக்கேன்னு  ஒரு நினைப்புவந்தா......... நல்லது:-))))










24 comments:

said...

Happy " கைஃபாக்ஸ் டே!"

:-)

said...

நல்லா இருக்கு.

said...

அறியாத தகவல் (ஆபத்தில்லாம வெடிப்பதையும்...!!!)

நன்றி...

said...

இது பற்றி முன்னரே படித்தேன்.... உங்க தளத்துல தான்! :)

ஏதோ கை ஃபாக்ஸ் புண்ணியத்துல உங்களுக்கும் “டப்பாஸ்” கிடைக்குது :)))

said...

அதனால் என்ன எப்படியோ டப்பாஸ் பார்க்கணும்:)
மத்தாப்பூ கொளுத்தணும்.
ரெண்டும் நடத்திட வழியிருந்தால் போது.
ஹாப்பி கை ஃபாக்ஸ் டே மா. ரெண்டு தீவுளி ஆகிடுச்சா. அப்போ இன்னும் ரெண்டு பாக்கியோ.

said...

ஹூம்! புஸ்வானத்தை சாலையில் வைத்து விடமுடியாதா, நம்மூர் மாதிரி?

said...

போன தடவை பட்டாசு வெடிக்க மாட்டீங்களான்னு கேட்டேன்.
புகைப்படங்களுடன் அருமையான விளங்கங்களுடன் ஜமாய்ச்சுட்டிங்க!

எங்களையும் நெனச்சுகிட்டே enjoy!

தீபாவளி வாழ்த்துக்கள் துளசி!
கோபால் ஸார் கிட்டேயும் சொல்லுங்க!

said...

தீபாவளி தீபாவளியாக ஒரே கொண்டாட்டமாக இருக்கின்றதே.

நமக்குத்தான் தீபாளி இன்னும் வரமாட்டேன் என அடம்பிடிக்கின்றது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்தமுறை பட்டாசு சத்தம் எப்படி என்று.

said...

தீபாவளி வாழ்த்துக்கள்


கைஃபாக்ஸ் டே!"வாழ்த்துக்களும் !!

said...

வரலாறு எவ்வளவு கொடுமையா இருக்குது. இருந்துக்கிட்டிருக்குது.

இது போல வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளை அப்பப்ப பதிவுகளாப் போடனும்னு கேட்டுக்கிறேன் :)

ஒருவழியா பட்டாசுகளை வாங்கி வெச்சிட்டிங்க. இங்க வெடி வாங்கப் போறதில்லை. ஊரே சேந்து வெடி போடுறது வீட்டுக்குள்ள கேக்கும். அப்புறம் தனியா வெடி எதுக்கு.

said...

உங்க வீட்டுத்தோட்டத்துல மத்தாப்பு கொளுத்தினதையும் உங்க பதிவுல பார்த்த ஞாபகம் :-))

பட்டாஸ் கிடைக்க வழி செஞ்ச புண்ணியவான் நல்லாருக்கட்டும்.

said...

ஹாப்பி கைஃபாக்ஸ் டே....

உங்களுக்கு பட்டாசு கிடைக்க ஒரு வழி கிடைச்சிருக்கறதுல சந்தோஷம்.

said...

வாங்க நன்மனம்.

நன்றி.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

முந்தி ஒரு காலத்துலே கேப் என்று சொல்லும் பொட்டு வெடிகள் கிடைக்கும். பார்க்க சிகப்புக் கலர் ஸ்டிக்கர் பொட்டுப்போல ஒரு முப்பது பொட்டுக்களைக் குட்டியா ஒரு அட்டைபொட்டியிலே வச்சுருப்பாங்க. ரெண்டு சோடா மூடிகளை வச்சு மூடுன டிஸைன்.

அதை வெடிக்க வைக்க நட் ஒன்னும் கிடைக்கும். சாதாரண ஓல்ட் & நட் தான். பெரிய தலை இருக்கும் ஆணியும் ரெண்டு வட்டத்தகடும் திருக ஒரு நட்டும் உண்டு. நட்டை கொஞ்சம் லூஸ் செஞ்சுட்டு ரெண்டு தகடுகளுக்கிடையில் ஒரு பொட்டை வச்சுட்டுத் திருகி டைட் செஞ்சுட்டுத் தரையில் தூக்கிப்போட்டால் டப்ன்னு வெடிக்கும்.

சின்ன கைத்துப்பாக்கியிலமொவ்வொரு பொட்டா வச்சும் டப் டப் ன்னு சுடலாம். தீபாவளி சீஸன் வந்துட்டால் வீட்டில் உள்ளவங்க தலையைப் பிடிச்சுக்கணும். மணிக்கணக்கா டப் டப் டப் டப்ன்னு கேட்டால் தலைவலி இல்லையா?

இதெல்லாம்தான் ஆபத்தில்லாத வெடிகள். உங்க தலைமுறைக்கு இதெல்லாம் புது சமாச்சாரம்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

செத்தும் கொடுத்தான் என்ற வகையில் கைஃபாக்ஸ் நிக்கறாரே:-))))

said...

வாங்க வல்லி.

சரியா ஐப்பசி மாசம் பார்த்து ப்ளான் செஞ்ச கைஃபாக்ஸ் அவர்களுக்கு நியூஸி இந்தியர்கள் சார்பில் நன்றின்னு சொல்லலாம்:-))))

கணக்குப்படி இன்னும் 3 தீவுளி இருக்கு:-))))

said...

வாங்க குமார்.

சாலை முழுசும் காலியா இருந்தாலுமே..... மூச்!!!!!

said...

வாங்க ரஞ்சனி.

பட்டாஸ் கொளுத்தும்போது கட்டாயம் உங்களை நினைச்சுக்குவேன், கேட்டோ:-)

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க மாதேவி.

இந்த வருசம் பக்கத்து வீட்டு ஜோனத்தன் இல்லை. ஆனால் வேலிமேல் ஏறி எட்டிப்பார்க்கும் ஒரு புதுப்பொடியன் இருக்கார். பெயர் மைக்கேல்.

ஒரிஜினல் தீபாவளிக்கு எட்டிப்பார்த்தால் ஷேர் செஞ்சுக்குவேன்:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

இரண்டு வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

ஸேம் டு யூ!

said...



வாங்க ஜீரா.

ஒரு நாலைஞ்சு கம்பி மத்தாப்பு பொட்டிகளும், பதினைஞ்சு புஸ்வாணமும்தான் மொத்தமே!

ஓசையில்லா தீவுளிதான் நமக்கு.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆமாம்.புண்ணீயவான். அவர் மேலுலகில் நல்லா இருக்கட்டும்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

கோபாலுக்குத்தான் இந்த பட்டாஸ் ஆசையெல்லாம். இப்பெல்லாம் நான் வெறும் கம்பி மத்தாப்பு ஆள்.