Monday, February 18, 2013

இன்று போய் நாளை வாராய்.......

சொன்னா , சொன்ன நேரத்துக்குக் கிடைக்காம இருப்பதில்  அந்தக்காலத்திலே முதலிடம் தையல்காரருக்கும் தட்டாருக்கும்தான்.  ரெண்டு இடத்திலும் எப்பப்போனாலும் ' இன்று போய் நாளை வா'  தான். சின்னப்புள்ளையா இருந்தப்ப தையக்கடையிலே பழியாக் கிடப்பேன். இம்சை தாங்காம  குறைஞ்சபட்சம் என் உடையையாவது தைச்சே கொடுக்கும்படியா ஆயிரும்   தையக்காரருக்கு.

இப்பப் பாருங்க எல்லாம் ரெடிமெடு. கடைக்குப் போனோமா,  வாங்கினோமா,  போட்டு ' அழகு'  பார்த்தோமான்னு வாழ்க்கை ஓடுது.  துணிக்கடை கூட கொஞ்சம் பரவாயில்லை. இந்த நகைக்கடைகள்தான்...... பழைய நகையை மாற்றிப் புதுசு எடுக்கும்போது  அன்றைய தங்க விலைக்கே எடுத்துக்கறோமுன்னு விளம்பரம் செஞ்சாலும்  ஏதேதோ கணக்குப்போட்டு  என்னத்தையோ  குறைச்சு அதிலும் குறைவாத்தான்  மதிப்பீடு வருது.  முந்தி மாதிரி இல்லாம எல்லாத்தையும் கம்ப்யூட்டரே  தரம் குணம் மணம் பார்த்துட்டுக் கணக்குப்போடுவதால் நாம் வாயைத் தொறக்க முடியலை.

இந்தப்பயணத்தில்  ஜிஆர்டிக்குப்போய் ஒரு செயினை மாத்தி வேற டிஸைன் வாங்கலாமுன்னு  பழைய (வாங்கி  இதுவரை  போடாமலே வச்சுருந்த ஒன்னு) நகையைக் கொடுத்தால் கம்ப்யூட்டர் சொல்லுதாம் அதுக்கு மாத்து கம்மின்னு!  என்னப்பா அநியாயமா இருக்கு. இது சிங்கப்பூரில் முஸ்தாஃபா கடையில் வாங்குனதாச்சேன்னால்..... இதுலே 916ன்னு முத்திரையைக் காணோம் பாருங்க. எப்ப வாங்குனீங்க? அது இருக்கும்  ஒரு ஏழெட்டு வருசம். அப்போ ஒரு வேளை 916 கட்டாயம் போடவேண்டிய ரூல்ஸ் அங்கே இருந்துருக்காதுன்னு பதில்வருது.  நெசமாவா?????

சிங்கை முஸ்தாஃபா இப்படிப்பண்ணுமோன்னு மனசுக்குள்ளே ரொம்ப நாளைக்குக் குடைச்சல்  இருக்கும். அடுத்தமுறை சிங்கை போகும்போது  இதன்கூட வாங்கிய ஜோடிச்செயினைக் கொண்டுபோய் கேக்கணும்.

பேசாம ஜி ஆர் டியில் மாற்றாமல் வேறொரு கடையில்  இதேபோல கம்ப்யூட்டர் பரிசோதிக்கும்  கடையில் கொண்டு போய் மதிப்பு பார்த்திருக்கலாமோ?  ஒரு டபுள் செக்தான்.   கடைசியில்  31 கிராம் செயினுக்கு  3.7 கிராம் வேஸ்டேஜ்ன்னு  போயிருச்சு:(  நகைகள் வாங்கும்போது கேடி எம் பத்தவைப்பு. விக்கும்போது வேஸ்ட் வராதுன்னு  அப்போ ஒரு கூடுதல்விலையை நம்ம தலையில் கட்டிடறாங்க.  இப்ப வேஸ்டேஜ் வந்துருதாம் எல்லாத்துக்குமே! என்னவோ போங்க........... இத்தனைக்கும் அந்த செயின் டிஸைனில் வேஸ்டேஜே வராது. மாத்தி எடுக்கும்போது உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லைன்னு  விற்பனையாளர் அடிச்சுச் சொன்னாராம் கோபாலுக்கு. எங்கே? சிங்கை முஸ்தாஃபாவிலே!

இதுக்குத்தான் சொல்றது என்னைக் கூடக் கொண்டு போகாமல் நகை எதுவும் வாங்காதீங்கன்னு! ஆனால்  நான் பக்கத்துலே இல்லைன்னா  மட்டும்  இவருக்கு  எனக்குத் தங்கம் வாங்கியே  ஆகணுமுன்னு ஒரு வெறி வந்துருது போல! வாங்கறேன்னு  தொலைபேசியில் கூப்புட்டுச் சொன்னாருதான். கண்ட டிஸைனையும் வாங்கிடப்போறீங்க இப்ப வேணாமுன்னு  (அட! வாழைப்பழம் வேணாமுன்னு சொல்ற யானைகூட இருக்கு பாருங்க!!!) சொன்னதுக்கு  கடைக்காரர் இதுலே வேஸ்டேகிடையாது. எப்ப வேணுமுன்னாலும்   இதே எடைக்கு வேற மாத்திக்கலாமுன்னு  சொன்னதாகச் சொல்லி வாங்கியே வாங்கிட்டார்.  ஆனா ஒன்னு இவ்ளோ தயாள குணம்  என்கூட கடைக்கு வரும்போது(ம்) இருக்கலாம்தானே?

இந்த அழகில்  அந்த ரெட்டைக்கு ஒரு முகப்பு(மோப்பு) வேற!  அது எனக்கு ரொம்பப்பிடிச்சுருந்துச்சு என்பது  உண்மை:-)))

ரெட்டை வடம் சங்கிலியில் இருந்த முகப்பை மாற்ற மனசில்லாமல் அதையே ஒரு பெண்டண்ட்டா ஆக்கினால் என்னன்னு தோணிச்சு. தி நகர்  மங்கேஷ் தெருவில் இருக்கும் சிலபல வருசங்களுக்கு முன்னேயிருந்து  தங்கவேலை செஞ்சுக்கிட்டு இருந்த  ஸ்ரீநிவாச ஆச்சாரி (அவர் பெயரே இதுதான்.'  சாதியைச் சொல்லிப்புட்டாள்' ன்னு குய்யோ முறையோ வேணாம் ப்ளீஸ்)கடையைத் தேடிப்போனோம். போனமுறை கொடுத்த கார்ட் கைவசம் இருந்துச்சு.

அந்த விலாசத்தில் இப்போ இருக்கும் கடை என்னவோ  நடுவில் சுவர் எழுப்பிப்  பாகம் பிரிச்செடுத்த மாதிரி அரையாக் கிடக்கு.  மிஞ்சிமிஞ்சிப்போனால்  ஆறடி அகலம்.  உள்ளே நீளமா  ஒரு  பதினைஞ்சு பதினாறு அடி இருக்கலாம்.  கார்டைக் காமிச்சு இந்தக்கடைதானா ன்னு கேட்டால்...இதுதாங்க. இப்போ வேற புதுக் கார்டு அடிச்சுட்டோமுன்னு சொல்லி  வேறொரு கார்டைக் கொடுத்தார்.  சாயிபாபா பக்தரா மாறிட்டார்ன்னு தெரிஞ்சது.  ஷிர்டி பாபா.

கடையில்  நாலு பேர் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  எல்லோருமே சொந்தக்காரர்கள்தானாம். இந்த வேலையில் புது ஆட்களை வேலைக்கு வச்சுக்கறது ரிஸ்க்காம். நான் எப்படி வேணுமுன்னு சொன்னதைக் கவனமாக் கேட்டுக்கிட்டு,  நம்ம கண்  எதிரில்  சொன்ன டிசைனைச் செஞ்சு கொடுத்தார்.  இத்துனூண்டு கடையில்  ரெண்டு பிளாஸ்டிக் ஸ்டூல் கொண்டு வந்து  போட்டு உபசாரம் வேற !  கையைக் காலை நீட்டாம அடக்க ஒடுக்கமா உக்கார்ந்துக்கிட்டால் நமக்கு நல்லது:-)   குமுட்டி அடுப்பு மாதிரி ஒன்னு இருக்கும் பாருங்க தங்கத்தை உருக்க. அது கடைக்கு வெளியில் ஒரு சாஸ்த்திரத்துக்கு வச்சுருக்கே தவிர ரொம்ப மாடர்னா சின்னதா ஒரு கேஸ் கேன் வச்சு உருக்கல் வேலை நடந்துருது.

அதைப் பத்தவச்சதும் வரும் மெல்லிய தீச்சுவாலையைதொரு சின்னதா இருக்கும்  குழல் ஒன்னை  வச்சு மெள்ள ஊதி தீ நாக்குகளை  தங்கத்தின் மீது செலுத்திய  பத்து நொடிகளில்  தங்கம் அப்படியே உருகிருது!  நடனமாடும்  தீ நாக்குகளை  பார்க்கும்போதே ஒரு அழகு கேட்டோ!  பாபு என்ற இளைஞர் நமக்கான வேலைகளை  வாய் திறக்காமச் செஞ்சு கொடுத்தார்.  பெயர் என்னன்னு கேட்டதுக்கே....  திகைப்பும்  வெட்கமும் முகத்தில் படர'பாபு' ன்னு மெல்லிய குரலில் சொன்னதும் ஒரு அழகு.  உறவினர்தானாம். ஆனால் தனிக்கடை வச்சு நடத்தறாராம் வேறொரு பேட்டையில். இங்கே  கூடுதல் வேலைன்னா   வந்து செய்ஞ்சு கொடுப்பாராம்.

ஒரு நோட்டுப்புத்தகத்தை வச்சுக்கிட்டு அதுலேதான் ஆர்டர் எடுக்கறது, நாம் கொடுக்கும் தங்கத்தின் எடை , கேரட் எல்லாம் எழுதிக்கிறார். பக்கத்துலேயே அதே தெருவில்  தங்கத்தின் தரம் பார்க்கும்  கம்ப்யூட்டர் மெஷீன் கடை ஒன்னு இருக்கு. அங்கே கொண்டுபோய் தரம் பார்த்து எடுத்து, நமக்கு நகையைத் திருப்பிக் கொடுக்கும்போதும் தரம் பார்த்தே கொடுக்கறார். அதனால் நம்பிக்கை ஏற்பட்டுப் போகுது.

கொஞ்சம் ரிப்பேர் பண்ண வேண்டிய நகைகளையெல்லாம் கூட இந்தமுறை கொண்டு போயிருந்தேன்.  த்வாரகைப் பயணத்தில் வாங்குன ரெண்டு  ஜெம் ஸ்டோன்களையும்  வெள்ளியில் பதிச்ச பெண்டெண்ட்டாக   செஞ்சு கொடுத்தார் மகளுக்கு.  இந்தக் கால யுவதிகள் தங்க நகையை விட வெள்ளியை விரும்புவது எனக்கு(ம்) ரொம்பவே பிடிச்சுப்போச்சு:-)

ஸ்ரீநிவாச ஆச்சாரியிடம் ஒரு பழக்கம் நமக்கான  ரிப்பேர் வேலைகளை செய்வதற்கிடையில் தன் பக்கத்தில் இருக்கும்  சின்ன  மேஜை இழுப்பறையைத் திறந்து எதாவது ஒரு சின்ன நகையை   கம்மல், பெண்டன்ட், மூக்குத்தி இப்படி. எடுத்து நீட்டுவார். நான் கைநீட்டி அதை வாங்குனதும்   கோபால்   கண்ணில் திகில் பரவ முழிப்பதைப் பார்க்கும்போது  என்னால் சிரிப்பை அடக்க சிரமம்:-)

சும்மா ... ஒரு  ஐடியாவுக்கு சொல்வார்  ஸ்ரீநிவாசன். நானும்  ரசிச்சுப் பார்த்துட்டு  நம்ம கருத்தைச் சொல்லிட்டுத் திருப்பிக் கொடுப்பேன். பின்னூட்டம் பழக்கமாகிருச்சு பாருங்க:-))) ஒரு நாள் ஒரு செயினை எடுத்துக் காமிச்சார். புது டிஸைனா நல்லா இருந்துச்சு. பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  அதை ஆர்டர்  செய்தவர்  வாங்கிப்போக வந்துட்டார்.  பக்கத்துலே இருக்கும் சூர்யா  டச் ( Surya Touch.  # 7 Mangesh St)  கடைக்கு  அனுப்பி தரம் பார்த்து வந்தவுடன்  பைக்குள் இருந்த ரூபாய் நோட்டுக் கட்டுகளை மகிழ்ச்சியா  எடுத்துக் கொடுத்துட்டு போனார்.  எல்லாம் கேஷ் பிஸினஸ்தான்.  கார்டு  தேய்க்கும் வசதி ஒன்னும் இங்கே இல்லை.  சின்னநகைகளுக்குப் பரவாயில்லை.  அதிக அளவில்  வாங்கணுமுன்னா கொஞ்சம் யோசிக்கணுமோ? சேல்ஸ் டாக்ஸ்க்கு  என்ன ஏற்பாடுன்னு தெரியலை.....

ஏற்கெனவே ரெண்டு முறை  அறுந்து போன  ஒரு செயினை  (இங்கே நியூஸியில் அதைப் பத்த வைக்க  ரொம்ப அலைய வேண்டியதாப் போச்சு. ஒன்பது கேரட்  சமாச்சாரங்கள்தான் இங்கே!  இது ஹை கேரட். எங்களால் ரிப்பேர் செய்ய முடியாதுன்னு சொல்லிடறாங்க) மாத்திட்டு  இந்த டிஸைனில் செஞ்சுக்கலாமான்னு தோணுச்சு. என் செயினை எடுத்துக் கொடுத்ததும்  கடைக்காரப் பையன் தரம் பார்க்கப்போனவன் வாயெல்லாம் பல்லாக வந்தான். ' அசலு!  பூராவும் தங்கமாம் !' என்றதும்  எனக்கும் திருப்தியா இருந்துச்சு. இது  (சமீபத்தில்) 27 வருசத்துக்கு முன்னே பாங்காக்கில் வாங்குனது.

சேதாரம் பற்றிப் பேச்சு வந்தப்ப..... கையால் செய்யும் நகைகளுக்கு சேதாரம் அவ்வளவா இருக்காது. மெஷீன் கட்டிங் அண்ட் பாலிஷிங் என்றால் மட்டும் கூடுதலா வரும்.  தங்கத்தூள் பறக்கும். அதைப்பிடிச்சு எடுப்பது  ரொம்பக்கஷ்டம் என்றார். ஆனாலும்  ஒரு  விதமா துகள்களைப் பிடிப்பீங்கதானேன்னு கேட்டதுக்கு  அப்படிப் பிடிச்சாலும்  அது நமக்கு வராது.  அந்த  மெஷின் வச்சுத் தொழில் செய்றவங்களுக்குத்தானென்றார்.
பேசாம ட்ரெய்னீயா சேர்ந்துக்கிட்டுத் தொழில் படிக்கலாமான்னு  ஒரு யோசனை வந்துருக்கு :-)


 நடுவில் கொஞ்சகாலம்  தொழில் மந்தப்பட்ட நிலையில்  சென்னையின் பிரபல நகைக் கடைகளுக்கு  வேலை செஞ்சாராம். இப்போ அதெல்லாம் இல்லை.  இங்கே நமக்கு வர்ற வாடிக்கையாளர்கள் கொஞ்சம்தான் என்றாலும்  ஒரு மாதிரி குடும்பச்செலவுக்கு  சரிஆகிருது. பிள்ளைகள் படிச்சு வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க.  என்னாலே முடிஞ்சவரைக்கும்  நகைத்தொழிலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். அப்புறம் கடவுள் விட்ட வழின்னு  மேலே சாமிப்படத்தைப் பார்த்தார்.  என் கண் அங்கே இருந்த விஸ்வகர்மா படத்தில் நின்னது.  வடக்கே பலகோவில்களிலும்  விஸ்வகர்மா அன்ன வாகனத்தோடு  இருக்கார்.

மூணு நாளில் செஞ்சு தரேன்னு சொன்னவர், மறுநாள் மாலையே  செல்லில் கூப்பிட்டு  உங்க செயின் ரெடி ஆயிருச்சுன்னார்.  அவர் கூப்பிட்டப்பதான் நாங்க  மால்குடியில் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.  மறுநாள் வந்து  வாங்கிக்கறேன்னு சொல்லி வச்சேன். என்னம்மா... நீ பாட்டுக்கு செயினைக் கொடுத்துட்டு வந்துட்டேன்னு  கோபால்தான்   வழியெல்லாம்  நேத்து  புலம்பிக்கிட்டே இருந்தார்.   மறுநாள் போய்  செயினை வாங்கிக்கிட்டோம்.  மகளுக்கும் டிஸைன் ரொம்பப் பிடிச்சதுன்னு சொன்னது எனக்குத் திருப்தி.  கோபாலை எதுக்கு விட்டு வைப்பானேன்னு  அவர்  மோதிரத்தையும்  புது டிஸைனில் மாத்தச் சொன்னேன்.  இப்ப கிண்னுன்னு இருக்கு:-)

திருப்திகரமான சேவை என்பதால்  கொஞ்சம் விலாச அட்டைகளை வாங்கி வச்சுக்கிட்டு அண்ணியிடம் சேதி சொல்லி  அழிச்சுச் செஞ்சதுகளையெல்லாம் காமிச்சவுடன்,  'இவ்ளோ நாளா இங்கே இருக்கோம் இந்தக்கடை விவரம் தெரியலையே'ன்னாங்க.  எல்லா  கார்டுகளையும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்    'நான் பெற்ற இன்பம்'  வகையில்  கொடுத்ததும்தான் மனசு ஆறுச்சு.   தேவைப்படும் பதிவுலக நண்பர்கள்  இவரிடம் தைரியமா நகை செஞ்சு வாங்கிக்கலாம்.



முக்கியமா நம்ம  நேரத்துக்குச் செஞ்சு கொடுக்கறார் என்பதே  நல்ல விஷயம். என்ன ஒன்னு.... கடையில் வாங்கும் பொருள் போல  பஞ்சு எடை இல்லாம, காத்திரமாத்தான் செய்யறார். ராத்திரி தூங்கும்போது  கம்மலைக் கழட்ட வேணாம். கூலி அதிகமா எனக்குத் தெரியலை.  ஒரு மூணரைப்பவுன் செயினுக்கு  ஐநூறு  கொடுத்தோம்.  (எங்கூர் காசு பனிரெண்டரை. அதுக்கு இங்கே  மிஞ்சிப்போனா  சைனீஸ் டேக் அவேயில் ஒரு ஃப்ரைடு ரைஸ் கிடைக்கும்!)

சென்னைச் சமாச்சாரங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு நாளைக்கு ஆன்மீகப்பயணம் கிளம்பலாம்.  ஒரு அஞ்சாறு நாளைக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கிட்டு தயாராகுங்க.

தொடரும்.............:-)




30 comments:

said...

Amma, vanakkam.
Neenga ethanayo oorgaluku poituvaratha unga ezuthumulama padikiren. kadisiyil non velai seira theruvenu vandu nagai senjitu poirukinga (Mangesh Street), enakku romba sandosama irukkuma padikumbothu. Ungal aanmiga payanam vetri pera vazthukkal
Karunakaran, Chennai

said...

நானும் ரசிச்சுப் பார்த்துட்டு நம்ம கருத்தைச் சொல்லிட்டுத் திருப்பிக் கொடுப்பேன். பின்னூட்டம் பழக்கமாகிருச்சு பாருங்க:-)))

கருத்து கந்தசாமியாய் அவதாரம் எடுத்த பதிவர்கள்....

said...

உண்மைதான் மேடம்,நீங்கள் முதல் பத்திகளில் சொல்லியிருப்பது போல இப்பொழுது எல்லாம் ரெடி மேட்தான்.

எந்த நகைக்கடையாக இருந்தாலும் அவர்களிடம் வாங்குவதுதான் உசத்தி என்றும், வேறு இடத்தில் வாங்கியது என்றால் நிறைய குறை சொல்லி குறைத்துதான் மதிப்பு போடுவார்கள்.

சரி அவர்களிடம் வாங்கியதை எடுத்துச்சென்றால் அதற்கும் ஏதாவது சொல்லி குறைத்துதான் கொடுப்பார்கள்.இது தெரிந்தும் விடாமல் நகை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.என்ன செய்வது ?

said...

//அன்றைய தங்க விலைக்கே எடுத்துக்கறோமுன்னு விளம்பரம் செஞ்சாலும் ஏதேதோ கணக்குப்போட்டு என்னத்தையோ குறைச்சு அதிலும் குறைவாத்தான் மதிப்பீடு வருது//

ஆமாம்.. இது பெரிய்ய கொடுமை. இதனாலேயே, பழசைக் கொடுத்து வேற வாங்கறதுக்கு லேஸில “அப்ரூவல்” கிடைக்க மாட்டேங்குது. “அது இருக்கட்டும்; புதுசு வாங்கிக்கலாம்”னு பெருந்தன்மையா சொல்றது சரிதான். ஆனா, அதுக்கு ”தகுந்த” கையிருப்பு நாள் வர்றதுக்குள்ளே, ஆசையே போயிடுது (ஒருவேளை அதுக்காகத்தான் இந்த ‘பெருந்தன்மையோ’?); மேலும், கையிலிருந்து காசு கொடுத்து புதுசு வாங்கிறதுனால, ரொம்ப சிக்கனம் பார்க்க வேண்டியிருப்பதில், டிஸைனில் சமரசம் செஞ்சுக்க வேண்டியதாகி... மறுபடி கொஞ்ச நாளில் அது பிடிக்காத நகைகளில் ஒன்றாகிப் போகிறது!! உடைந்த/பழைய நகைகளை சேர்த்து வச்சுகிட்டு என்ன செய்றது... சொன்னாக் கேட்டாதானே... :-)) :-((( (கொஞ்சமா புலம்பிகிட்டேன், பிரச்னையில்லைதானே?)

//பின்னூட்டம் பழக்கமாகிருச்சு பாருங்க//

ஹி.. ஹி.. ஸேம் ப்ளட்!! அதுவும் உதாரணம் சொல்லி, கருத்து சொல்றேன் இப்பல்லாம்!! அவ்வ்வ்...

said...

நகையா வாங்கினாத்தானே சேதாரம் போகுதுன்னு, காயினா வாங்கி வைப்பதுண்டு. (உறவு வகை விசேஷங்களுக்கு அன்பளிப்புக்கு ரொம்பவே உதவும்) திருப்பி கொடுத்தா அன்றைய ரேட் கிடைக்கும் முன்பு. இப்போ, அதுலயும் பெருங்கொடுமை என்னனா, அதுக்கும் அன்னிக்கு ரேட்டிலிருந்து கிராமுக்கு 4 திர்ஹம் (60 ரூவா) கழிச்சிடுறாங்க...

said...

நான் கூட வளையல்களை மாற்ற வேண்டும். சின்னதாப் போச்சு - வளையல் சின்னதாப் போகலை..நம் அளவு பெரிசா போயிட்டுது!

தொலைபேசி எண் குறிச்சு வச்சிக்கிறேன். சென்னை போகும்போது ஸ்ரீனிவாச ஆச்சாரியிடம் போய் வரணும்.

எதைப்பற்றி எழுதினால் பக்க விவரங்கள் கொடுக்கும் துளசி டீச்சருக்கு ஒரு 'ஓ!'

நன்றி விவரங்களுக்கு!

said...

இந்த 916, கேடிஎம் இதெல்லாம் பெரிய பிரச்சனை தான். அவங்க சொல்றத நாம நம்ப வேண்டியது தான்.


எங்க ஊர் சிவகங்கையில் நாகராஜன் அண்ணனிடம் தான் எப்போதுமே நகைகள் செய்யக் கொடுப்போம்.

said...

இராஜராஜேஸ்வரி
//கருத்து கந்தசாமியாய் அவதாரம் எடுத்த பதிவர்கள்....//

ஏம்மா, கூப்பிட்டீங்களா?

said...

சின்னதா ஒரு கொசுவத்தி. தூத்துக்குடியில் வீட்டுப் பக்கத்துல ஒரு ஆசாரிப் பட்டரை இருந்துச்சு. பொழுது போகலைன்னா அவங்க என்ன பண்றாங்கன்னு பாப்பேன். மண்சட்டி மாதிரி உலைல அடியில் கரியும் மேல உமியும் போட்டு புஸ்சு புஸ்சு காத்தடிச்சு எரிப்பாங்க.

ஒரு இரும்புக் குழியில் தங்கத்தைப் போட்டு எளக்குவாங்க. அந்த இரும்புக்குழியே செக்கச்செவேல்னு இருக்கும். அதை இடுக்கி வெச்சு எடுத்து ஒரு சின்ன இரும்பு மேடையில் ஊத்தித் தட்டுவாங்க. அதுக்கப்புறம் அந்த இரும்புக்குழிய தண்ணிக்குள்ள போட்டதும் சொய்ங்குன்னு சத்தம் வரும்.

உங்க பதிவைப் படிச்சதும் எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. மத்தபடி தங்கத்தைப் பத்தியெல்லாம் பெண்கள்தான் பேசனும். :)

அன்புடன்,
ஜிரா
gragavanblog.wordpress.com

said...

you are in chennai !!!!!!!!!. recently i started reading your blogs and now regularly read . I like the every minute details you give . and regarding jewellery valid information . will make use when the need comes .
enga oorukku vandhadhu santhosam .
and nice nail polish design . goes well with the ring you hold :)

said...

நான் ரெடிமேட் நகைக்கட்சி. செஞ்சு வாங்கறதை விட நம்பிக்கையான கடைகளில் ரெடிமேடா வாங்கறதுதான் எனக்கு பாதுகாப்பான முறையாத் தோணுது.

நெயில் ஆர்ட் யாருது?.. நல்லாருக்கு. வீட்டு விழாவுக்காக செஞ்சுக்கிட்டதா? :-)))

said...

நல்லா சொன்னீங்க மேடம்.....இப்போ நாம எந்த நகை எடுத்தாலும் சேதாரம் ஜாஸ்தியா போட்டு, ஏதோ நமக்கு உதவுற மாதிரி குறைக்குறாங்க, நிறைய விளம்பரம் செய்யும் கல்யான் ஜுவல்லர்ஸ் 23% ஒரு சின்ன மோதிரத்திற்கு சேதாரம் போடுறாங்க !! என்னத்த சொல்றது போங்க....

said...

பழனி. கந்தசாமி said...
இராஜராஜேஸ்வரி
//கருத்து கந்தசாமியாய் அவதாரம் எடுத்த பதிவர்கள்....//

ஏம்மா, கூப்பிட்டீங்களா?//

ஐயா..நாங்க எங்களைச் சொல்லிக்கிட்டோம் ...!

said...

வாங்க கருணாகரன்.

வணக்கம். நலமாக இருக்கின்றீர்களா?

முதல் வருகைக்கு நன்றி.

மங்கேஷ் தெருவுக்கு ஒரு 'ஓ' போடலாம்!

முடிஞ்சால் நம்ம ஸ்ரீநிவாச ஆச்சாரி அவர்களுக்கு (உங்க லேப் டாப் மூலம்) இந்தப்பக்கத்தைக் காமிச்சால் நல்லது. அவர் நெட் பக்கம் வருவாருன்னு தோணலை.

ஆன்மீகப்பயண வாழ்த்துகளுக்கு நன்றி. இன்று சிதம்பரம் கோவில் எழுதி இருக்கிறேன்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அதானே.... எப்படிங்க நம்ம ரெண்டு பைசாவைச் சொல்லாமப் போறது!!!!

said...

வாங்க ரமா ரவி.

ச்சீச்சீ... வேணாமுன்னு ஒதுக்கித் தள்ள முடியுதா சொல்லுங்க:(

கொஞ்சமாவது போட்டுக்க வேண்டித்தானே இருக்கு! நாமென்ன ஆதிகேசவன் மாதிரியா கேக்கறோம்????

said...

வாங்க ஹுஸைனம்மா.

ரொம்பச் சரி. தங்க பிஸ்கெட் வாங்கி வச்சுக்கிட்டா அதுவும் சீல் பிரிக்காம உள்ளதை வேணுமுன்னா ஓரளவு அதிக நஷ்டமில்லாம விக்கலாம். ஆனால் அதையும் பெண்டெண்ட்டா சுத்திவரச் சின்னதா ஃப்ரேம் சேர்த்து போட்டா.... ஊஹூம்...ஒன்னுத்துக்கும் கேரண்டி இல்லை விலையில்:(

உடைஞ்சு போனது, ஜோடிக்கம்மலில் காணாமப்போயி தனியா நிற்பது, திருகாணி தொலைஞ்சது இப்படி இருப்பவைகளை நாம் தங்கநகை வேலை செய்யும் கடை வைத்திருப்பவர்களிடம் கொடுத்து வேறெதாவது செஞ்சுக்கலாம்.

ஆனா நம்பிக்கையான கடையா இருக்கணுமே!

said...

வாங்க ரஞ்ஜனி.

வளையாலாவது பரவாயில்லை...கொஞ்சம் சோப் போட்டு மெள்ள மேள்ள நகர்த்தலாம்.ஆனால்...இந்த ப்ளவுஸ்கள் சின்னதாப் போறதைத்தான் தாங்கமுடியலை கேட்டோ:-)))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நம்பகமான பொற்கொல்லர்கள் அருகி வர்றாங்க என்பதுதான் இப்போதைய பிரச்சனை:(

said...

என்னங்க பழனி கந்தசாமி ஐயா.

போன பதிவுக்கு உங்க பெயரை எழுதிக் கூப்பிட்டதைக் கண்டுக்கவே இல்லையே:(

said...

வாங்க ஜீரா.

தங்க நகை வேலை, மாட்டுக்கு லாடம் அடிப்பது, வண்டிச்சக்கரத்துக்கு இரும்புச்சட்டம் போடுவது இதெல்லாம் சின்னப்பிள்ளையா இருக்கும்போது பார்த்த முக்கிய சமாச்சாரங்கள்.

இப்பத்துக்குழந்தைகள் இதையெல்லாம் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை பாருங்க:(

இங்கே நம்மூர்லே ஒரு ஹிஸ்டாரிக் பார்க்லே குதிரை லாடம் செய்வதைக் காமிப்பாங்க. பார்க் முழுசும் ஆட்கள் அந்தக்கால உடுப்புகளுடன் இருப்பதே ஜோரா இருக்கும்.

முக்கியமா பொம்னாட்டிகளுக்கு ஏகப்பட்ட துணிகள். நம்ம 6 கஜப் புடவையை மிஞ்சிரும். என்ன ஒன்னு.... உடுப்பாகத் தைச்சுப் போட்டுக்குவாங்க. பத்து மீட்டருக்குக் குறையாது!

said...

வாங்க சசிகலா.

ஒரு காலத்து சென்னை வாசிதான் நான்.

அதான் பழக்க தோஷத்துலே வந்து எட்டிப் பார்க்கறேன்ப்பா:-)))

நெய்ல்பாலீஷ் கை மகளோடது!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதான் சொன்னேனே.... சின்ன ரிப்பேர், சின்ன அளவு நகை இதுக்கெல்லாம் ஓக்கே. பெருசுன்னால்கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும். ரசீது, கேரண்டீ எல்லாம் கிடைக்குமான்னு தெரியலை.

முக்கியமா க்ரீடம் ஒட்டியாணம் இதெல்லாம் பெரிய கடைகள்தான் எனக்குமே:-))))

மகளுடைய ஹாபியே நெயில் ஆர்ட்தான். விதவிதமா போட்டவைகளைப் படம் புடிச்சு வச்சுருக்கேன். தனி ஆல்பம் போடுமளவுக்கு இருக்கு!

தானே ரெண்டு கைக்கும் ஒரே மாதிரி போட்டுக்குவாள்.

ஒரு சின்ன சூட்கேஸ் முழுசும் இதுக்கானவைகள்!

said...

வாங்க சுரேஷ் குமார்.

என்னது 23% ஆஆ??

ஐயோ:(

said...

கோபால் திகில் கலந்த பார்வையோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் உங்க ஆர்டர் பெரிசா இருந்திருக்கணும்னு நினைக்கிறேன். பாவமா இருக்காரே! :))))) ரொம்ப தர்மசங்கடமான நிலைமையோ? :))))))))

said...

அடடா. இவரிடம் தான் மூக்கு குத்திக் கொண்டேன். அப்பவே சொன்னார் வைர பேசரி போடச் சொல்லி:)
கோபால் ஐயோ பாவமா உட்கார்ந்திருக்காரே பசி வேளையோ:)
பெண்டண்ட் அழகாத்தான் இருக்குப் நாந்தான் பாத்தனே!!!

said...

நகை கடைக்கு எல்லாம் கூட்டிக்கொண்டுபோய் நகை வாங்கித் தாறீங்கள் :))

இங்கு நமக்கெல்லாம் வெறும் கழுத்துப் பயணம்தான் காலத்தின் கோலம் :( காயம் ஏற்படாது கழுத்தைக் காப்பாற்ற வேண்டுமே :))

said...

வாங்க கீதா.

நான் ஒன்னும் வாங்கிக்கலை என்பதால் எனக்கு என்னவோ ஆகிருச்சுன்ற திகில் பார்வை அது:-)))

said...

வாங்க வல்லி.

அதுவும் எட்டுக்கல்லு பேஸரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு சொல்லி இருப்பாரே!!!!

எதுக்கு அவர் பேச்சை கேக்கலை நீங்க?????

said...

வாங்க மாதேவி.

சென்னையில்கூட இனி வெறுங்கழுத்துப்பயணமாத்தான் இருக்கும்போல! தங்கம் விலை ...விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு மேலே போகுது.

எனக்குத் தெரிஞ்சவரை இன்னொரு நாட்டில் இன்னும் அதிக ஆபத்தாம். அடுக்கு மாடி வீட்டில் இருந்து கீழே வந்து குப்பையை தெருக் குப்பைத் தொட்டியில்போட வரும்போது கழுத்துச்செயினை கழட்டி வீட்டில் வச்சுட்டுத்தான் வரணுமாம். அங்கத்து தோழி சொன்னது.கொஞ்சம் பயங்கரமா இருக்குல்லே?