Friday, May 10, 2013

சும்மாச் சொல்லக்கூடாது !!!

சாங்கி விமான நிலையம் வழக்கம்போல் சூப்பரா இருக்கு. எப்பப்போனாலும் புதுசா ஒரு அழகு. பயணிகளின் மனச்சோர்வு நீங்க அங்கங்கே புதுசுபுதுசா எதாவது  செஞ்சுக்கிட்டே இருக்காங்க.





 ஒவ்வொன்னும் கண்ணை இழுக்குது. எதை விட எதைப்போட?????? நான் பெற்ற இன்பம் வகையில் 35 படங்கள் தாளிச்சுருக்கேன்:-))))


ஆர்க்கிட் மலர்களும், பெரணிச்செடிகளும், சின்னதா மூங்கில் குத்துகள் இருக்கும்  அமைப்புமா அங்கங்கே வச்சுருப்பாங்க.  தொட்டிகளில் மீன் வைக்காமல் குளம் (Koi Pond )கட்டிவிட்டு அதில்  ஓயாம இங்கும் அங்குமா பயணம் போகும் மீன்கள் எல்லாம்  பார்க்கவே அருமையா இருக்கும். நமக்கு  இந்தியா வரணுமுன்னா சிங்கை வழிதான் எப்போதும். எங்கூரிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டுமே தனியாட்சி நடத்திக்கிட்டு இருக்கு. அதனால் டிக்கெட் எப்பவுமே கூடுதல்தான்.  போட்டியே இல்லைன்னா ........  எப்படி விலை குறைப்பாங்க? ஏன் குறைக்கணும் என்ற எண்ணம் வந்துருதே!

டைரக்ட்டா கிறைஸ்ட்சர்ச் வரணுமுன்னா  எங்களுக்கும் இதைவிட்டா வேற வழி இல்லை. முனகிக்கிட்டே  டிக்கெட் புக் பண்ணுவோம். ஆனால் ஒன்னு  பயணம் ரொம்ப போரடிக்காம இருக்கும்படி பார்த்துக்குவாங்க. நமக்குத்தான் பத்து மணி நேரம்   ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி இருக்கும்:-)


இந்த Bபோரடி எங்கே ஏர்ப்போர்ட்லேயே ஆரம்பிச்சுருமோன்னு  நினைச்சு அவுங்களே பயணிகளுக்கு  மனமகிழ்ச்சிதரும் சமாச்சாரங்களா ஏகப்பட்டவைகளைக் கவனிச்சுச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இப்போ புதுசா இன்னும் சில ஏற்பாடுகள். அவைகளை எங்கே கோட்டை விட்டுருவோமோன்னு தனியா ப்ரோஷர் ஒன்னு போட்டு விளம்பரப்படுத்தி இருக்காங்க.  Garden Trail @ Changi.  இப்ப மூணு டெர்மினல் ஆகிருச்சு பாருங்க, அதனால் குறைஞ்சபட்சம் டெர்மினலுக்கு  ரெண்டு அமைப்புகள். நேரம் அதிகம் இருந்தால்  ஸ்கை ட்ரெய்னில் இங்கேயும் அங்கேயுமாப்போய்ப் பார்த்துட்டு வரலாம். எதுக்கும் எக்ஸ்ட்ரா காசு செலவு செய்யவேணாம் என்பது கூடுதல்  கவர்ச்சி:-)


டெர்மினல் மூணு:  ஃபெர்ன் கார்டன்  பழசு.  அதுவுமில்லாமல்  ஏற்கெனவே  நிறைய படங்களை நம்ம தளத்தில் போட்டுருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னு இங்கே:-)

புத்தம்புதுசுன்னு  சொன்னால்  பட்டாம்பூச்சித் தோட்டம்.  சங்கிலித் திரை கடந்து உள்ளே போகணும்.


நல்லா இயற்கை அழகு மாதிரி(!) செஞ்சு வச்ச அலங்காரச்செடிகள். கற்பாறைகள்.ஆறு மீட்டருயர நீர்வீழ்ச்சின்னு மாடியும் கீழேயுமா ரெண்டடுக்கு.  பூக்களுக்கு எப்படி சீஸன் இருக்குதோ அதே போல பட்டாம்பூச்சி வகைகளுக்கும் சீஸன் இருக்குதாமே!!!  அந்தந்தக் காலத்தில் பிறக்கும் வகைகளைக் கொண்டு வந்து  வைக்கிறார்களாம்.  இப்ப நாம் பார்த்தவைகள் ஒரு நாலஞ்சு வகைகள்.







முட்டை, புழு, கூட்டுப்புழு , பட்டாம்பூச்சி என்ற நாலடுக்கு பரிணாமம் எப்படி ஆகுதுன்னு விளக்கப்படங்களும் தகவல்களுமாக் கொட்டிக்கிடக்கு. வேடிக்கையோடு கொஞ்சம் கல்வி அறிவும் கிடைச்சுருது!  ப்யூப்பாக்கள்  (Pupae)தொங்குறதைச் சட்னு பார்த்தால்  ஃபேஷன் ஜூவல்லரிகடைகளில் தொங்கவிட்டுருக்கும்  ஆட்டுக்கம்மல்கள் ( ட்ராப்ஸ்க்கு  சின்னக்குழந்தையா இருந்தபோது மகள் வச்ச பெயர்) நினைவுக்கு வருது:-)



Gerbera மலர்களையே பட்டாம்பூச்சி டிஸைனில்  அடுக்கி வச்சுருக்காங்க. எப்படி வாடாம இருக்குன்னு  பார்த்தால்  ஒவ்வொன்னும் தனியா தண்ணீரில் நிக்குது. உண்மையில் இவை சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த ரகம்தான்.



T3 டெர்மினலில்  எப்பவுமெ கூட்டம் அவ்வளவா இல்லை.  'ஹோ'ன்னு பரந்து கிடக்கு.  Han Meilin   என்ற பிரபல சீன ஆர்ட்டிஸ்ட்டின்  மதர் அண்ட் சைல்ட் சிற்பங்கள்  (வெங்கலம்) வச்சுருக்காங்க இங்கே. இவர்தான்  பீய்ஜிங் ஒலிம்பிக்ஸ் mascot வடிவமைச்சவர்.

இன்னொன்னு சூரியகாந்தி தோட்டம். இது ரெண்டாவது டெர்மினலில் இருக்கு.  இங்கே எப்பவுமே கூட்டம் அதிகம்.  சுருக்கமாச் சொன்னா மூணாவது டெர்மினல் நியூஸி. ரெண்டாவது இந்தியா:-) அப்படி ஒரு ஃபீலிங்ஸ் வந்துரும். ஸ்கை ட்ரெய்ன் சர்வீஸ்கள்   இந்த மூணு டெர்மினல்களுக்கும் சுத்த வசதியா இருக்கு.  காலையில் அஞ்சு மணிக்கு  ஓட ஆரம்பிக்கும் ரயில்கள்  ராத்திரி ரெண்டரைவரை ஓடிக்கிட்டேதான் இருக்குதுகள்.



போனபதிவில் சொன்ன அம்பாஸிடர் லவுஞ்சுக்குப் பக்கத்தில்தான் சூரியகாந்தித் தோட்டம். பெரிய பெரியவட்டத் தொட்டிகளில்  வளர்ந்து நின்னு சிரிக்குது பூக்கள். மொட்டைமாடி என்பதால்  கொஞ்சநேரம் ஓய்வா விளக்கு மேலே (!)உக்கார்ந்து இயற்கைக் காற்றை சுவாசிக்கலாம்.   அமைதியான அலங்கார விளக்குகள் இருப்பதால் இரவு நேரத்திலும்   ரிலாக்ஸ் செய்ய முடியுது.  இவ்வளவு பிஸியான ஏர்ப்போர்ட்டில் இருக்கோம் என்பதே  மறந்து போகுது  கண்ணாடித் தடுப்பு மூலம் எட்டிப்பார்க்கும்வரை:-)

பயணிகள் மனதைக் கவரும் வண்ணம் எல்லாம் பார்த்துப்பார்த்து  வடிவமைச்சு இருக்கும் அழகைப் பாராட்டத்தான் வேணும். எழுபதாயிரம் சதுர அடிகள் அளவில் ஷாப்பிங் ஏரியா.  பொதுவா எல்லா விமானநிலையங்களிலும் இருப்பது போல் 'தீ பிடிச்ச விலை'  என்றாலும் நாம் என்ன வாங்கவா போறோமுன்னு சும்மா விண்டோ ஷாப்பிங் செய்வதுதான். ஆனால் பொருட்கள் தரமானவைகளா இருக்கு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

நிறைய இடங்களில்   வலை மேய்ஞ்சுக்க ஏராளமான கணினிகளும், குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ், கார்ட்டூன்ஸ் ன்னு வசதிகளும் இருக்கைகளுமா இருக்கு. ஜங்கிள் ஜிம் கூட ஒன்னு பார்த்தேன். நம்முடைய சொந்த மடிக்கணினின்னா  இன்னும் சௌகரியம். இலவசமா  வலையில் மேயலாம்.  நெட் கனெக்‌ஷன் ஃப்ரீ.

எதுவும் வேணாமுன்னா.... ச்சும்மாவே  சுத்திவரலாம்.  அஞ்சு கிலோமீட்டர் நடைப்பயிற்சி கிடைச்சுரும். ஷாப்பிங் ஏரியா தவிர்த்து  விமானம் ஏறும் கேட்டுகளுக்குப்போக ட்ராவலேட்டர்ஸ் ஏராளம். அதுலே  ட்ராவல் பண்ணிக்கிட்டேகூட பொழுது போக்கலாம்.

விமானநிலையத்துலேயே உக்கார்ந்து போரடிக்குது. போதும் வேடிக்கைன்னு நினைச்சால்  சிங்கப்பூரை ரெண்டு மணி நேரம் இலவசமாச் சுத்திப்பார்க்கும் ஏற்பாடு ஒன்னும் செஞ்சுருக்காங்க  இங்கே.  தினமும் நாலு முறை பகல் பொழுதிலும் ரெண்டு முறை .இரவு நேரத்திலும்  டூர்கள் உண்டு. இதுக்கு பதிவு செஞ்சுக்க  தனி கவுன்ட்டர் வச்சுருக்காங்க. ஒரே ஒரு கண்டிஷன்  உங்களுக்கு அடுத்த ப்ளேன் பிடிக்க குறைஞ்சது 5 மணி நேரம் இருக்கணும்.

ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வரலாம்.  ஹெரிடேஜ் டூர்னு முக்கிய இடங்களைக் காமிச்சுட்டு, திரும்ப ஏர்ப்போர்ட்டுக்குக் கொண்டு வந்து விட்டுடறாங்க. ஹெரிடேஜுன்னதும்  மெர்லயன் நினைவுக்கு வருது. போனவருசம் அதுக்கு  வயசு 40! ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் நடக்குது!




முதலாம் டெர்மினலில் ஒரு  காக்டெஸ் கார்டனும், ஹெலிகோனியா கார்டனும் வச்சுருக்காங்க. இன்னும்  அவைகளை நான் பார்க்கலை.  காக்டெஸ்ஸில் நூறு வகை இருக்காம் அங்கே. அடுத்தமுறை அதைக் கண்டுக்கணும் என்பது இப்போதைய ப்ளான்.

தனி உலகமா இருக்கும் இடங்கள்ன்னு நான் எப்பவும் நினைச்சு அதிசயப்படுவது  விமானநிலையங்களும், மருத்துவ மனைகளும்தான்.  ரெண்டு இடங்களிலும் ஒரு எதிர்பார்ப்போடுதான் இருப்போம். புது அனுபவங்கள் கிடைக்கும். மருத்துவ மனைகளுக்கும் நோயாளியாப் போககூடாது. பார்வையாளராப் போக வேணும் கேட்டோ!

எங்க நேரம் வந்ததும் விமானத்துக்குள்ளே   பத்து மணி நேரம் அடைஞ்சு கிடந்து ஊர் வந்து சேர்ந்தோம்.  நம்ம சென்னை, சிங்கைப்பயணம் இனிதே முடிஞ்சது. அடுத்து  எல்லாம் வழக்கம்போலே!


கூடவந்த அனைத்து நண்பர்களுக்கும் வாசகப்பெருமக்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.



பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!




33 comments:

said...

படங்களில் அள்ளிக் கொண்டு வந்து விட்டீர்கள் அழகை. சூரியகாந்தித் தோட்டமும், Gerbera மலர்களால் பட்டாம்பூச்சித் தோற்றமும் அருமை. [அந்த மலரின் பெயர் அறிந்து கொண்டேன்:). எடுத்த படத்துக்கு ஃப்ளிக்கரில் இதோ பெயரை சூட்டி விடுகிறேன்.]

இறுதியாய் சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்கிறோம்.

said...

ஆனால் ஒன்னு பயணம் ரொம்ப போரடிக்காம இருக்கும்படி பார்த்துக்குவாங்க. நமக்குத்தான் பத்து மணி நேரம் ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி இருக்கும்:-)

எனக்கு சுதந்திரமாய் பாதுகாப்பாய் சுற்றிவர பத்துமணி நேரம் போதமாட்டேங்குது ....

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பிடித்த படங்கள் பிடித்தது என்ற மகிழ்ச்சி எனக்கு:-)

பயணக்கதையின் நீதி அந்தக் கடைசியில்தான் :-))))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நான்சொன்ன ஹவுஸ் அரெஸ்ட் விமானத்துக்குள்:(

முதுகு வலி, கால் வலின்னு வலிகளின் நேரம் அவை.

கொஞ்சம் போர்தான். அதுக்குத்தான் ஜன்னல் வழியாக க்ளிக்கிக்கிட்டே இருப்பேன். எங்கூரிலிருந்து சிங்கப் பயணம் பகல் நேரம் என்பதால் தூக்கமும் வந்து தொலைக்காது. அஸ்ட்ராலியாவை மட்டும் கடக்க அஞ்சு மணி நேரமாகிரும்.

அதிக உயரத்தில் பறப்பதால் நமக்குக் கீழே வெறும் மேகக்கூடங்களே. அதிலும் தேவர்கள் நடமாட்டம் இருக்கான்னு பார்த்துக்குவேன்:-)

said...

எத்தனை படங்கள்... அத்தனையும் அருமை... அழகு...

பயணத்தைப் பற்றி நன்றாகவே சொல்லி உள்ளீர்கள்...

வாழ்த்துக்கள்...

said...

பயணங்கள் வாழ்க்கையில் மிக மிக அவசியம். பலதரப்பட்ட மக்களையும் பலவிதமான உலகத்தையும் மாறுபட்ட பழக்கவழக்கங்களையும் புரிஞ்சிக்க உதவும்.

எனக்கும் பயணம்னா ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி டூர் போறது ரொம்பப் பிடிக்கும். சும்மா பக்கத்துல இருக்குற கேரளாவுக்காச்சும் போயிட்டு வருவேன். இப்பல்லாம் எங்கயும் போறதில்ல. சென்னைய விட்டு வெளிய போயே ரொம்ப நாளாகுது. நல்லவேளையா நடுவுல வீட்டோட கல்ஃப் போயிட்டு வந்துட்டேன். அப்புறம் உள்ளூர்ப் பயணங்கள் ரெண்டொன்னு திட்டம் போட்டு... திட்டம் திட்டத்தோடயே போச்சு. அடுத்த வாரம் பெங்களூர் போகனும். அத்தை பையனோட கல்யாணம். இப்பிடியாச்சும் வெளியூர் போய்க்க வேண்டியதுதான்.

மூன்றாவது டெர்மினலில் அவ்வளவா கூட்டமில்லை. ஒரு வாட்டி போயிருந்தப்போ எங்க மச்சான் கூட்டிட்டுப் போய் காமிச்சாரு. காத்தோட்டமா ஆள் நடமாட்டமே இல்லாம இருந்துச்சு. அந்தப் பக்கம் ஒரு அம்பது பிளைட்ட திருப்பி விட்டா கூட்டம் தன்னால வந்துட்டுப் போகுது.

சென்னை - சிங்கப்பூருக்கு எத்தனை பிளைட் இருக்கு. ஆனாலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் காசைக் கொறைக்க மாட்டேங்குறானே. ஜொய்யின்னு மேல ஏறி உக்காந்திருக்கு டிக்கெட் வெல. ஆனா நல்ல சர்வீஸ்னு கேள்விப்பட்டேன். இதுவரைக்கும் போனதில்லை.

said...

அள்ளிக்கொண்டு வந்ததை கிள்ளி கொடுக்காமல் ஆனந்தமா அனுபவிங்கன்னு படத்தொகுப்பா கொடுத்ததற்கு நன்னி.

பாடக்குறிப்புக்கள் எடுத்துக்கிட்டாச்சு. (மெர்லயனுக்கு 40) :))

இறுதில சொல்லியிருப்பது ரொம்ப பிடிச்சிருக்கு. என்னோட வலைத்தளத்துல போட்டு வெச்சுக்கலாம்னு நினைக்கிறேன். பரவாயில்லையா!!!

said...

அருமையான போட்டோக்களை ரசித்தேன்.

said...

அட, சிங்கை விமானநிலையத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? அடுத்தமுறை போகும்போது தவறாமல் கண்டுகளிக்கவேண்டும். அழகழகான படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

said...

மலர்க் கண்காட்சி பார்த்து விட்டோம்.கண்ணுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி தந்தது.

பயணம் செய்யும் போது கவனிக்க சொன்ன விஷயம் அருமை.
பயணம் செய்வது மனதுக்கு உடலுக்கு புத்துணர்ச்சி.
ஆதலினால் பயணம் செய்வோம்.

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸிங்கப்பூராஆஆஆ வென நினைக்க வச்சிட்டீங்களே. இனி கிழக்குப் பக்கமும் பார்க்கவேண்டியதுதான். என்ன விஸ்தீரணம். அதிலியே எவ்வளவு அதிசயங்கள்.படங்கள் அசத்திவிட்டன.வண்ண மலர்த்தோட்டங்கள்,பட்டாம்பூச்சிகள்னு பிரமிச்சுப் போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதான் எல்லோரும் சிங்கைக்குப் படை யெடுக்கிறாங்க. இத்தனை இனிமையா நீங்க பதிவு போடும் போதே மனம் நிரம்பிவிட்டது. வாழ்க சிங்கப்பூர்.

said...

அப்பப்பா.... படங்கள் அப்படியே அள்ளுது!

said...

"பயணங்கள் முடிவதில்லை" :)

said...

ஆதலினால் போட்டோவும் எடுத்துக் கண்குளிரப் போடுவீர் :) மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும்..... இன்னும் இன்னும் ம்ம்ம்ம்களும் அட்டகாசம் :)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சர்வீஸ் பரவாயில்லைன்னு சொல்லலாம்.

பொதுவாப் பார்த்தீங்கன்னா..... உ.பா. குடிக்கும் மக்களைத்தான் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க எல்லா ஏர்லைன்களிலும்:(

காரணம் என்னவா இருக்கும்?

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஆஹா.... ஆஹா..... தாராளமாப் போட்டுக்குங்க.கூடவே ஒரு சின்னக்குறிப்பும்! 'இது துளசியானந்தமயி அருளிய அருள்வாக்கு'

காப்பிரைட் இருக்குப்பா:-)))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க கீத மஞ்சரி.

இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கு அங்கே!

நாம்தான் விமானம் விட்டு இறங்குனதும் பொட்டியைக் கலெக்ட் பண்ணிக்கிட்டு வெளியே ஓடுவதிலேயே கவனமா இருப்போமே:-)

அதே போலத் திரும்பி வரும்போதும் கொண்டு வந்து விடும் உறவுகளோடு கடைசி மினிட் வரை பேசியாகணுமே. வேடிக்கைக்கு ஏது நேரம்:-))))

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா ஆஹா.... கயிலை தரிசனம் செஞ்சவுங்க சொல்றது அத்தனையும் உண்மை உண்மை.

said...

வாங்க வல்லி.

சிங்கப்பூர் நோக்கிப் படை எடுக்கும் மக்களுக்கு இலக்கே ஷாப்பிங்தான்.
நமக்கு அதுஇல்லை என்பதால் ஜாலியோ ஜாலி:-)

சிங்காரச்சென்னையை சிங்கப்பூராக மாற்றிக் காண்பிப்போமுன்னு அரசியல் வியாதிகள் சொல்வது பலிக்கட்டும்!

அப்புறம் நம்மூரிலேயே பட்டாம்பூச்சி பார்க்கலாம்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

said...

வாங்க கே ஆர் எஸ்.

அதே அதே! இன்னும் ஒன்னு நெருங்கி வந்துக்கிட்டு இருக்கு:-))))

said...

வாங்க கவிதாயினி.

நேரில் பார்த்தால் உங்களுக்குக் கவிதை இன்னும் ஊற்றெடுக்கும் அளவுக்கு இருக்கு அங்கே:-))))

said...


அட !அட!! அடடடா !!!கலக்க்க்க்கிடீங்க துளசி !!!
இப்ப தான் பாத்தேன் இன்னும் படிக்கலை . அற்புதம் . திருஷ்டி கழிச்சேன் உங்களுக்கு .நீங்க நல்லா இருக்கணும்!! .அத்தனை படங்களும் அருமை . நன்றி பகிர்ந்ததற்கு .படிச்சுட்டு அப்பறம் எழுதறேன் .

said...

வாவ்! வண்ணமலர் கூட்டமாகவே இருக்கிறது.

மிகவும் அருமை.

said...

உங்கள் கண்ணுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அருமையான காட்சிகள் கிட்டுகின்றன துளசியம்மா....


சூப்பரோ சூப்பர் !!

ஆகவே நாங்களும் பயணம் செய்கிறோம்.

நன்றி

said...

மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள்! அனைத்தும் அருமை!

said...

வாங்க சசி கலா.

மிளகாய் நெடி வந்ததா, இல்லை வரலையா?

கேஸ் அடுப்புலேயும் சுத்திப்போடலாம் கேட்டோ:-))))

said...

வாங்க மாதேவி.

பயணக் களைப்பெல்லாம் பட் னு போயிருதே!

said...

வாங்க கைலாஷி.

நான் உறங்கினாலும் நம்ம கெமெராக் கண்கள் உஷாராகவே எப்பவும் இருக்கு:-)

கொட்டிக்கிடக்கும் அழகை விட்டுவர மனசில்லை!

said...

வாங்க புலவர் ஐயா.

உங்கள் ரசனைக்கு என் நன்றிகள்.

இன்று எங்க ஊர் பூந்தோட்டத்தில் எடுத்த படங்களைப் பதிவு செய்துள்ளேன்.

நேரம் கிடைக்கும்போது எட்டிப்பாருங்கள்.

வருகைக்கு நன்றி.

said...

அனைத்துப்படங்களும் செய்திகளும் அழகோ அழகு.

இந்தப் பதிவின் மூலம் விமானத்தில் ஏறி பறந்துசென்று அவைகள் அனைத்தையும் பார்த்து ரஸித்தது போல மனதுக்கு ஓரே மகிழ்ச்சியாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.