Friday, September 12, 2014

நேற்றைய 'இதை'ப் பார்த்தவர்களுக்காக..... இன்றைய இது.....


கொஞ்சம் கூடுதல் விவரத்தோடு வருது:-)

இந்தப்பெயர் கோல்ராபி (Kohlrabi) ,ஒரு ஹிந்திப்பெயருன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.  தென்னிந்தியாவிலே நூக்கோல்னு சொல்வோம் பாருங்க அதுதான் இது.  வடக்கே இதை  கோல்ராபின்னு சொல்றாங்க.  கடைசியில் பார்த்தால் இந்தப்பெயர் ஜெர்மன் மொழியாமே!!


இங்கே நம்மூரில்  நமக்குப் பரிச்சயமான காய்களைப் பார்ப்பது  கண்ணுக்கு விருந்து.   அப்படி ஒரு சமயம்  சீனக்கடையில் இதைப் பார்த்ததும்  ஒன்னே ஒன்னு வாங்கியாந்தேன்.அதன் நிறம் பச்சை.   நம்மூரில் கிடைப்பதுபோல  இளசா, சின்ன சைஸுலே அதாவது பெரிய வெங்காயம் அளவில் இங்கே கிடைக்கலை. பெருசுபெருசா மொந்தையா இருக்கு ஒவ்வொன்னும்.

கிடைச்ச மகிழ்ச்சியை பதிவுபோட்டும்  பகிர்ந்தாச்சு, ஒரு ஆறு வருசத்துக்கு முந்தி.

நூல்கோலா இல்லை நூக்கலா  




இப்படி இருக்க,  போனவருசம்  திடீர்னு கடைகளில்  பர்ப்பிள் நிறத்துலே வெள்ளை பட்டை போட்டுக்கிட்டு  ரெண்டு டாலருக்கு மூணுன்னு  இருந்துச்சு.பெயர் விவரம் Kohlrabi ன்னு எழுதி வச்சுருந்தாங்க.  பரவாயில்லையே.... ஹிந்திச் சொல் நியூஸி நாக்குலே!  'நமஸ்டே'க்குப் பிறகு இதுதான்னும் நினைச்சேன்.

அப்புறம் பார்த்தா..........  Kohl என்பது ஜெர்மானிய மொழியில்  கேபேஜ் (முட்டைக்கோசு  )  என்று   rabi  என்பது ஸ்விஸ்-ஜெர்மனி  வகையில்  turnip  டர்னிப் என்பதாம்.  எனக்கும் இப்போ  (ரெண்டுமூணு   சொற்கள்) ஜெர்மன் மொழியில் பேச வரும் என்று சொல்லிக்க ஆசைதான்.  கேட்ஸி, குட்டன்டாக்,  இப்ப  கோல்ராபி:-))))

எதுக்கு இப்படி  வெள்ளைப்பட்டைகளோடுஇருக்குன்னுதான்  புரியாமல் இருந்துச்சு. இன்னொரு  நாள் பட்டை போடாததைப் பார்த்துட்டு ஒன்னு வாங்கியாந்தேன்.  நல்லா பெருசா வளரவிட்டுட்டு, அப்புறம் பறிப்பதால்  சைடுகளில்  முளைச்சு நிக்கும் இலைகளை, நிறுத்திப் பிடிச்சு நறுக்கிடறாங்கன்னு  புரிஞ்சது.   இலைகளோடு இருந்தால் சீக்கிரம்  அழுகிப்போகும் ச்சான்ஸ் இருக்குல்லே!

இந்த பர்ப்பிள் வகைகளுக்கு  பர்ப்பிள் டனூப்,  பர்ப்பிள் வியன்னா என்று கூட  அங்கங்கே பெயர்கள் இருக்காம்.

வெளியே பார்க்கதான்  பர்ப்பிள் தவிர உள்ளே  வெள்ளை நிறம்தான். முழுக் காயையும்  நீண்டவாக்கில்  ஆரஞ்சு சுளை ஷேப்பில் வெட்டிட்டு, மேலே ஒரு முனையில் கத்தி வச்சு  உரிச்சால் கனமான தோல் சுலபமா  வந்துருது.
அப்புறம் என்ன?  வழக்கமா சமைப்பது போல் சமைக்கவேண்டியதுதான்.  பச்சைக்கு ஒரு குருமா செய்முறை மேலே இருக்கும் சுட்டியிலிருக்கு.  நூல்கோலா இல்லை நூக்கலா  அதையேதான் இதுக்கும் ரிப்பீட் பண்ணிக்கணும்.  

சமைக்கும்போது  தலைக்குல்லா மாட்டிக்கலை:(


அதான் மூணு இருக்கேன்னு ஒரு முறை   ச்சன்னா  குழம்பில் போட்டேன்.  நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறம் இன்னொன்னை ஒரு நாள்  கூட்டு செஞ்சப்போ போட்டுவிட்டேன். நாட் பேட். என்ன ஒன்னு..........  வாங்கி கிட்டத்தட்ட ஒரு மாசம் வரை காய் கெடாமல்தான் இருக்கு.  இது(வும்) ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.

நன்றி நவிலல்: 

  இது எதுன்னு தெரிஞ்சுக்கும் ஆவலோ என்னமோ.....  திடீர்னு பார்த்தா  இது சூடான இடுகையில் வந்துருக்கு!!!!

நேற்றையப் பதிவில்  பின்னூட்டமிட்ட  பதிவுலக நண்பர்கள், ராமலக்ஷ்மி,  இராஜராஜேஸ்வரி,  சிவஞானம்ஜி,  கீதமஞ்சரி, ஏஞ்சலீன், யாழ்பாவண்ணன்,  யோகன் பாரீஸ், அருணா செல்வம் அனைவருக்கும் என் மனம்நிறைந்த நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி, யோகன் பாரீஸ் இருவரும்   சொன்னது பாதி சரி:-)

கீதமஞ்சரி சரியாச் சொல்லிட்டாங்க.

ஆனால்  முற்றிலும் சரியான பதில் சொன்னவர், நம்ம ஏஞ்சலீன்!

இனிய பாராட்டுகள்!!!






15 comments:

said...

நான் அங்கே எட்டு வருஷம் இருந்தேன்க்கா .
இங்கே uk வந்த பிறகும் ஜெர்மன் காய்கறி பேரைத்தான் மறந்து சொல்வேன் :) blumenkohl ..இது காலிப்ளவர் .,apfel..ஆப்பிள்
zweibel .. வெங்காயம் ..kürbis..பூசணி ..அங்கே காய்கறிகளை தோட்டத்திலேயே சென்று வாங்குவோம் அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டேன் ..ஜெர்மனில இருந்த வரைக்கும் ஒரு ஆசிய காய்கறி பார்த்ததில்லை அவங்க அவங்க நாட்டு பொருட்களை மட்டுமே உண்பாங்க இம்போர்ட்ஸ் முன்பு ஸ்ட்ரிக்ட் ,,இப்போ எப்படின்னு தெரில ..

said...

விடை சொன்னவர்களுக்குப் பாராட்டுகள். நூல்கோல் என்றே நினைத்தேன். பர்பிள் வண்ணத்தை விட அந்த வெள்ளை வரிகள் சந்தேகத்தைக் கொடுத்தது:). நிறம் மாறினாலும் சுவையில் பெரும்பாலும் மாற்றமிருப்பதில்லைதான்.

நன்றி:).

said...

இதில் வெளிர் பச்சையில் கண்டுள்ளேன். இந்த நிறத்தில் காணவில்லை.
அஞ்சலீனுக்கு!
இப்போ ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலிய நகரங்களில் , யாவும் கிடைக்கும்.

said...

நேற்று ஒரு பதிவா.போய்ப் பார்க்கிறேன். ஏஞ்சல் சொல்லி இருக்கும் அத்தனை பெயர்களும் இங்கும் உண்டு .உச்சரிப்புக் கொஞ்சம் மாறுபடும். கத்தி நல்லா இருக்கேப்பா. படு ஷார்ப்பா இருக்கும் போலிருக்கு.

said...

உடம்பு பூரா தழும்பாக்கிட்டு வந்து நிக்குதே.. அதான் கண்டுபிடிக்க முடியலை.

said...

நூல்கோல்.... கொஞ்சம் வித்தியாசமாய் இரண்டு வண்ணங்களில்!

பார்ப்பதோடு சரி. வாங்குவதில்லை - அதனால் சமைப்பதுமில்லை! :)

said...

துளசி அம்மா! நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாது படித்து விடுவேன் எனினும் பின்னூட்டம் இடுவது இதுவே முதல் தடவை!

உங்கள் எழுத்து நடை எனக்கு ரெம்ப பிடிக்கும். கூடவே சுவாரஷ்யமான் பயணக்கட்டுரைகளுடன் அவசியமான விபரங்களும் இருப்பது உங்கள் பதிவில் சுவாரஷ்யத்தினை தருமொன்றாய் இருக்கின்றது.

பாராட்டுகள்.

இந்த கோல்ராபி இலைகளை நாங்கள் சமையலும் செய்வோம். தேங்காய்ப்பூ, சின்ன வெங்காயம் சேர்த்து கீரை ப்ரை செய்வோம். சோறுடன் சாப்பிட ரெம்ப சுவையாக் இருக்கும். இலைகள் மேலே வளர வளர தேவைக்கு வெட்டி எடுப்போம்.

சுவிஸ் மெனுவில் சூப் செய்வார்கள். முயலுக்கு பிடித்த சாப்பாடு இந்த இலைகள்.

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

நட்புடன் நிஷா சுவிஸிலிருந்து

said...

வாங்க ஏஞ்சலீன்.

எட்டு வருசமுன்னா.... சொற்கள் எல்லாம் பழகிப் போயிருக்குமேப்பா! அதான்...

நம்ம பசங்க ரெண்டுபேர் ( மைத்துனரின் மக்கள்) இப்போ ரெண்டுவருசமா ஜெர்மெனியில்தான் படிக்கிறாங்க. இப்போ நம்மூர் சாமான்கள்,காய்கறி கிடைக்குதுன்னு சொல்றாங்க.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வரிபோட்டு உங்களை ஏமாத்திருச்சு பாருங்க:-)))

சுவை அதேதான்ப்பா.

said...

வாங்க யோகன் தம்பி.

வெளிவேசம் மட்டுமே!

said...

வாங்க வல்லி.

அந்தக் கத்தி சண்டிகரில் வாங்குனது. அங்கே ஃபாரின் சாமான்களுக்குன்னே ஒரு கடை இருக்குப்பா. இது Brazil தயாரிப்பு.

நாலுவருசம் உழைச்சுட்டு, இப்போ பிடி லூஸு:(

said...

வாங்க சாந்தி.

விழுப்புண்கள் என்றால் சும்மாவா:-)))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அங்கே தில்லியில் இன்னும் இளசாக் கிடைக்கும். ஒருநாள் சமைச்சுப் பாருங்களேன்.

said...

வாங்க நிஷா.

முதல் வருகைக்கு நன்றிப்பா.

இங்கே சின்ன வெங்காயம் பயங்கரவிலை. கிலோ 13 டாலர்:(

அதான் கப்சுப்:-))))

சொந்த சாகுபடின்னா, இலைகளை வரவர வெட்டி எடுத்துக்கலாம்.

அடிக்கடி வந்துபோங்க நிஷா.

said...

டர்னிப் கோல்ராபின்னு விதவிதமான பேர்கள் உண்டு. ஆனா நம்மூர் சமையலுக்கும் ஏத்த காய்தான். பருப்புக் கூட்டு, பிரியாணி, குருமா, புளிக்கொழம்புன்னு எப்படி ஆட்டி வெச்சாலும் ஆடும்.

நிறந்தான் கொஞ்சம் புதுசா இருக்கு. நீங்க சொன்னாப்புல உள்ள ஒரே மாதிரிதான் இருக்கு.