Friday, September 19, 2014

பனிரெண்டு பெற்றவள்!

பனிரெண்டு பிள்ளைகள், அதுவும் ஒரே  ப்ரசவத்தில்!   தாயைப் பார்த்து மனசு நெகிழ்ந்துதான் போச்சு.  ஓய்வே இல்லாத ஒரு வாழ்க்கை:( பாவம்...........

ஓணத்திருவிழா போயிருந்தோம் பாருங்க.... அப்ப என்னோட கேமெராவின் பிணக்கம் தொடங்கிற்று. அதுக்கு எதாவதுன்னால் எனக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது. சுருக்கமாச் சொன்னால் ஒடிஞ்ச கை.  படம் எடுக்குதுன்னாலும்  Zoom மெக்கானிசம்  சரியா  வேலை செய்யலை. கைக்கடக்கமான கேமெரான்னால்....  பொழுதன்னிக்கும் இந்த  Zoom தகராறுதான்.  இது மூணாவது கேமெராவாக்கும்:(

புகைப்படக்கலை நிபுணரான நண்பர் சொல்வார்,  "Zoom  எதுக்கு? எதாவது எடுக்கணுமுன்னாக் கிட்டக்கப்போய் எடுத்தால் ஆச்சு"

எனக்கு அதெல்லாம் வேலைக்காகாது. ஓடற ஓட்டத்துலே, போறபோக்குலே  க்ளிக்கிட்டே போறவ நான். அதுவும் வெளிநாட்டுப் பயணத்துலே  பெரிய கேமெரா கொண்டு போறது கஷ்டமா இருக்கு.

ஏகப்பட்ட லென்ஸ்களோடு ஆரம்பிச்ச ஹாபியை, நண்பர்  நல்லா திறமைகளை வளர்த்துக்கிட்டு, இப்போ  Fujifilm X100S  வாங்கி, சுட்டுத்தள்ளிக்கிட்டு இருக்கார்.  புதுசு, ரொம்ப பல்க்கியா இல்லாம  லேசா இருக்கு!  அப்பப் பழைய கேமெரா?  மகன் எடுத்துக்கிட்டார்!


மேலே படம்:  நண்பரின்  புதுசுலே எடுத்தது:-) 

நேத்து ஓணம் விழாவில் நம்ம  கேமெரா,  பழிவாங்கிருச்சுன்னு மூக்கால் அழுதேன்.  மகள் வந்திருந்தாள்.     கைக்கு அடக்கமா சின்னதா ஒன்னு வாங்கிக்கணும் என்றதும், நானும் கூடவரேன்னு  மகள் சொன்னதால் மூணுபேருமா மாலுக்குப் போனோம்.  ரெண்டு கடைகளில் பார்த்துட்டு  மூணாவதா ஒரு கடைக்குப் போனபோது,   அங்கே ஒன்னு கண்ணில் ஆப்ட்டது.  ஸோனி.   என்னுடைய  ரெண்டாவது  டிஜிட்டல் கேமெராகூட ஸோனிதான்.   வாங்கி  8 வருசங்களாச்சு.   அதுலே படங்கள் எல்லாம் தரமா இருந்த நினைவு.  அதனால்   ஸோனியே வாங்கலாமுன்னு முடிவு செஞ்சேன்.

(முதல் கேமெரா பத்தி ஒன்னும் சொல்லலை பாருங்க.  அது ஒரு மினோல்ட்டா. 2002 லே  வாங்குனது. 2.3 Mega pixel.  memory  16 MB.  2 X Zoom !!!!  அப்புறம் இதுக்கு  பேட்டரி பவர்  6 Volt . சாதாரண 1.5 AA செல் நாலு போட்டுக்கணும். பத்துப்படம் எடுக்கறதுக்குள்ளே  கார்ட் ஃபுல் ஆகிரும், இல்லேன்னா பேட்டரி மண்டையைப் போட்டுரும்:-)  அப்புறம்  சிங்கப்பூர் போனபோது  கூடுதலா  memory  64 MB வாங்குனதெல்லாம் இப்ப நினைச்சாலும்  'ஐயோ' ன்னு இருக்கு) 

அதுக்குப்பிறகு  ஒவ்வொரு  வகையா  சாம்ஸங், ஃப்யூஜிஃபில்ம்  ரெண்டுமுறைன்னு கணக்குப்  பார்த்தால்  இது  கைக்கடக்கமானதுலே ஆறாவது. அப்ப  சராசரியா  ரெண்டுவருசத்துக்குத்தான் தாக்குப்பிடிக்குது அந்த Zoom மெக்கானிஸம்:(

ஆனால்  இவை எல்லாமே இப்பவும் Zoom போடாம ஜஸ்ட் க்ளிக்கினால் நல்ல படங்களையே தருது என்பதும் நிஜம்.  பேசாம இந்த வருசக் கொலுவுலே ஒரு படியில் இடங்கொடுக்கலாமான்னு யோசனை. இதெல்லாம் இல்லாம,  நம்ம ஆதிகாலத்து ஃப்ல்ம் ரோல் போடும் கேமெராக்கள் யாஷிகா வில் தொடங்கி  இன்னும் சிலது கிடக்கே. அதையும் கொலுவில் வச்சுடலாம், இல்லே?  ஆமாம்.... அறுக்கத் தெரியாதவளுக்கு  அம்பத்தெட்டு அரிவாள்!


 (இதுக்கு நடுவிலே ஒரு  Canon DSLR, அதுக்கு நாலு கூடுதல்  லென்ஸுன்னு  தனி ட்ராக்லே ஒரு கதை இருக்கு)


சரி, இப்ப ஸோனிக்கு வரலாம்.  இந்த ஸோனியில் ஒரு தொல்லை அப்பெல்லாம் என்னன்னா,  மெமரி ஸ்டிக்  இதுக்குன்னு தனிரகமா இருப்பதுதான். அதுவும் அப்போ  512 MB தான் அதிகபட்சம்.  விலையும் அப்பெல்லாம் தீ பிடிச்சமாதிரி!

இன்றைக்குப் பார்த்ததில்  எல்லா கேமெராக்களுக்கும் பயன்படுத்தும்  SD கார்டையே இதுக்கும் பயன்படுத்தலாமுன்னதும்  நிம்மதி ஆச்சு:-)  இதே போல  யுனிவர்சலா  பேட்டரியும் வந்துட்டா....  நாம்  வாங்கி வச்சுருக்கும் எக்ஸ்ட்ராக்களுக்கும்  வாழ்வு கிடைக்கும்.  ஆனால்...   இப்பப் பார்த்துக்கிட்டு இருக்கும் ஸோனி, உலகத்துலே சின்னக் கேமெரான்னு  சொல்லிக்குதே!  அதுக்கேத்தவகையில்  பேட்டரி சைஸும்சின்னதாத்தானே இருக்கணும்?  அப்படித்தான். இதுலே 20  X   zoom  இருக்காம்,   இந்த  DSC  WX350 மாடலில்.   டிஸ்ப்ளே யில் இருந்ததை  எடுத்துப் பயன்படுத்திப் பார்த்தால்  தெளிவாகத்தான்  படங்கள் வந்தன.   விலையும் பரவாயில்லைன்னு  நினைச்சுக்கிட்டே,  (கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்) ஃபர்தர் டிஸ்கௌண்ட் உண்டான்னு  கேட்டால்....  உள்ளே போன விற்பனைப் பையர்,  ஸேல்  வருதுன்னார். கிட்டத்தட்ட  40 சதம் தள்ளுபடி.

வாங்கியாச்சு.  வீடு திரும்பலாமுன்னா...  மகள் சொல்கிறாள், கன்னிங்ஹாம் ஹௌஸ் திறந்தாச்சு.  எப்பவாம்?  தெரியலை....ஃபேஸ்புக்லே யாரோ போட்டுருந்தாங்க. நம்மூர்  ஹேக்ளி பார்க் இருக்கு பாருங்க... அங்கே இருக்கும்  ஹாட் ஹௌஸ் இது. என்னோட ஃபேவரிட் ப்ளேஸ்.  ஊருக்குள் வந்து போன நிலநடுக்கத்தால்  உள்ளே  கொஞ்சம் சீரழிவுன்னு   பொதுமக்கள் பார்வையிட முடியாமல் மூடி வச்சுருந்தாங்க.  அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் மூடிக்கிடக்கும் கதவுகளைப் பார்த்து பெருமூச்சு விடுவேன்.  வாழை, காஃபி,  பர்ட் ஆஃப் பாரடைஸ் இப்படி இஷ்டமுள்ள சமாச்சாரங்கள் எல்லாம் உள்ளே, என்ன ஆச்சோ? எப்படி இருக்கோ?  நம்ம கள்ளித்தோட்டம்  போகவும்  வழி இதுக்குள்ளேதான்.

இப்ப திறந்துட்டாங்கன்னதும்,  மகளை நீ போய் பார்த்தாயான்னு கேட்டால்  இன்னும் போகலை.   நீங்க இப்போ போறதுன்னால் நானும் கூட வரேன்னு (அபூர்வமா)  சொன்னதும்,  சான்ஸை விடவேணாமுன்னு   மாலில் இருந்து நேரா கிளம்பிப்போனோம்.  மனக்குறை....  கேமெரா கொண்டு வரலை:(    புதுசின் பேட்டரியை குறைஞ்சது  நாலைஞ்சு மணி நேரம் சார்ஜ் செஞ்சுக்கணும்.  முகவாட்டம் பார்த்து,  நோ ஒர்ரீஸ். செல்போனில் படம் எடுத்துத்தரேன்னாள், என் செல்லம்:-)


இது புதுசு. பதிவர் வட்டம் சந்திப்புக்காகப்போட்டு வச்சது போல இருக்கே! 

அரக்கப் பரக்கக் கன்னிங்ஹாம் ஹௌஸ் போகும்போது மணி நாலடிக்க அஞ்சே நிமிசம்.   நாலுமணிக்கு  இதை மூடிருவாங்க.  நம்ம சமாச்சாரம் இருக்கான்னு ஓடிப்போய்ப் பார்த்தேன். வாழை மரங்கள், இப்போ ஏழெட்டு நிக்குது.  அதுலே நாலைஞ்சு குலை தள்ளி இருக்கு!  காஃபியிலும் நிறைய பழங்கள். செயற்கை நீர்வீழ்ச்சி  அப்படிக்கப்படியே! சுத்திவர  இருந்த செடிகள் எல்லாமே நல்லா, செழிப்பாவே வளர்ந்துருக்கு.  மாடி ஏறிப்போய்ப் பார்க்க நேரம் இல்லை. பொறுப்பாளர் வந்து மணி நாலுன்னு  நாசூக்காய் நினைவூட்டினார்.

1923 வருசம் கட்டுன ரெண்டு நிலைக் கட்டிடம்.  ஆச்சு வயசு இப்போ  91!  New Zealand Historic Places Trust  இதை தன் பொறுப்பில் எடுத்துக்கிட்டு இருக்கு.  நிலநடுக்கத்தில் தப்பிப்பிழைச்ச பாரம்பரியக் கட்டிடங்களில்  இதுவாச்சும் மிஞ்சியதேன்னு எங்களுக்கு பரம திருப்தி.


இந்த பிரமாண்டமான  கண்ணாடிவீட்டுக்குள்ளேஅடுத்தபக்கம் இணைப்புப்பகுதியா இன்னுமொரு கன்ஸர்வேட்டரி  (Townsend conservatory. இதுவும் பெருசுதான்)இருக்கு.இங்கே  அவ்வப்போது உள்ள சீஸனை அனுசரிச்சு மலரும் பூச்செடிகளை வச்சுருப்பாங்க.  ஒரே இனம், வெவ்வேறு நிறம் இப்படிப்  பார்க்க  அட்டகாசமா இருக்கும்.  இப்போ வசந்தகால மலர்களிடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு. எல்லாம் தொட்டியிலுள்ளவையே. வேற எங்கோ வளர்த்தி எடுத்து இங்கே கொண்டு வந்து அடுக்கி வச்சுடறாங்க.  இதுவும் எனக்கு  ரொம்பவே  பிடிச்ச இடம்தான்.


இது எல்லாத்தையும்விட இன்னும்  அதிகமா பிடிச்சது  நம்ம கள்ளித் தோட்டம்தான். இதுக்கு  காரிக் ஹௌஸ் என்று பெயர்(Garrick House). அங்கே இன்னும் பழுதுபார்க்கும் வேலை முடியலைன்னு மூடிக்கிடக்கு:( அநேகமா அங்கே ஒன்னும் ரொம்பப் பழுது ஆகி இருக்காதுன்ற நம்பிக்கையுடன் கிளம்பி கார்பார்க் வந்தபோதுதான்....  அந்தப் பனிரெண்டு பெத்தவளைப் பார்த்தேன்.   வழியில் குளக்கரையாண்டை இருக்கும்  இருக்கைகளில் உட்கார்ந்தப்ப  குவாட்டர் க்ரோனா ரெண்டு பேர்.  ஆமாம்.... வசந்தம் வந்துருச்சே...பாப்பாக்கள்  கண்ணில் படலையேன்னு சொன்ன மகள்,   சட்னு அதோன்னு கை நீட்டிக் காமிச்சாள்.

பாவம், அந்தத் தாய்:(  ஒருவிநாடி நிக்க நேரமில்லை!  ஒவ்வொரு பிஞ்சும் ஒவ்வொரு திசையில்  ஓடுனால், அவள்தான் என்ன செய்வா சொல்லுங்க!   கனமான அடிக்குரலில்

 ' ஏய்.....  அங்கே இங்கே ஓடாமல் ஒழுங்கா என்னாண்டை வாங்க'

கொடுத்த குரலுக்கு  சட்னு கீழ்ப்படிஞ்சு சிலதுகள் வந்துருதுன்னாலும், குடும்பத்துக்கு ஒன்னுரெண்டு அடங்காப்பிடாரிகளும் இருக்குமில்லே?  பத்து அங்கே அம்மாவிடம் போக , ரெண்டு கொஞ்ச தூரத்தில் நின்னு திரும்பிப் பார்க்குதுகள்.  இவுங்க இனத்துலே மற்ற பெரியவர்களும் குழந்தை வளர்ப்பில்  உதவி செய்றாங்க போல்.

 ' பாவம்.... அவ கூப்புடறால்லே.... போ போய் அம்மாகிட்டேயே இரு'


மிரட்டல் குரல் கொடுக்கும் வெள்ளையன்.  ஓசைப்படாமல் நீந்தி அம்மாவிடம் வந்து சேர்ந்தன அந்த ரெண்டும்.

பார்க்கப்பார்க்க அலுக்காத சமாச்சாரம்.  சீனக்குழந்தை ஒன்னு  (ஒன்னரை வயசு இருக்கும்) கோபாலைப் பார்த்து அங்கே 'டக்'னு சொன்னான். இவர், உனக்கு டக் பிடிக்குமான்னார்.  ஆமாம்னு வேகமாத் தலையாட்டல்.  சாப்பிடவா?ன்னு  கேட்டேன். பாவம் குழந்தைக்குத் தமிழ் தெரியாது:-)

பெயரென்ன என்று கேட்டதுக்கு எய்டன் என்றான். கன்னத்துலே சிரிக்கும்போது குழி விழுது. அதிர்ஷ்டக்காரப்பிள்ளைன்னு அம்மாவிடம் சொன்னேன். பூரிப்பு அவுங்க முகத்தில்.

PIN குறிப்பு:  மகள் எடுத்த படங்களில் சில இத்துடன்:-)


15 comments:

said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

said...

//சாப்பிடவா?ன்னு கேட்டேன்//

செம நக்கல் ஒங்களுக்கு;

said...

அருமையான படங்கள்.....

said...

அன்பின் டீச்சருக்கு,

உங்கள் இருவரையும் அருமையாகக் கிளிக்கியிருக்கு கேமரா..சுத்திப் போடுங்கள் டீச்சர்.

//அறுக்கத் தெரியாதவளுக்கு அம்பத்தெட்டு அரிவாள்!// ஹா ஹா.. :D

அந்த 'மரத்தடி', பதிவர் வட்டம்..சூப்பர் டீச்சர் :)

said...

கேமரா எத்தன வாங்கினாலும் பத்தாது நமக்கு. உங்க பதிவைப் பாத்து நானும் ஒரு பதிவு தேத்த வேண்டியதுதான். :)

கடைசில குழி விழுந்த கன்னத்தைப் பாராட்டி அந்தக் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்துனீங்க பாருங்க.. அங்க நிக்கிறீங்க நீங்க :)

said...

ஹாப்பி பர்த்டே கோபால். வாத்துக்கூட்டங்களொட அம்மா கூட வந்து வாழ்த்துகள் சொல்லித்தாமே. துளசி தளத்துக்கும் வாழ்த்துகள் மா.10 வருடங்கள் பூர்த்தியாகிறது இல்லையா.இன்னும் பல்லாண்டு பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

said...

படங்கள் அத்தனையும் பார்க்க சந்தோஷம் வெயில் வந்துட்டதே. இன்னும் ஆறுமாசம் கவலையில்லை.வாத்துகள் டயலாக் வெகு சூப்பர். புதுக் காமிராவும் சூப்பர். நலமே படம் எடுக்க வழ்த்துகள்.

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

புள்ளைக்குத் தமிழ் தெரியலையேன்னு எனக்கு இப்போ வருத்தம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ரிஷான்.

நண்பர் வீட்டுக்குப் போகும்போது சுத்திப் போடணும்:-)

ரசனைக்கு என் நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

படமில்லாத வாழ்க்கையை இப்போ, இனி, நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது:-))))

விரைவில் உங்க பதிவை எழுதி வெளியிடுங்க.

said...

வாங்க வல்லி.

புதுக்கேமராப் படம்.... நம்ம ஜன்னுதான் போணி:-)

வெய்யல் வர்றது மாதிரி ஃப்ல்ம் காட்டுதுப்பா. வசந்தம் வந்து ஒரு மாசமாச்சு. இன்னும் இந்தியா டிசம்பர்தான்:(

விஷப்பனின்னு கோமளாமாமி சொல்வது நினைவுக்கு வர்றது:-)

said...

புதுகாமெராவுக்கு வாழ்த்துகள்.

said...

வாங்கா மாதேவி.

இந்தப் பதிவில் உள்ள படங்கள் மகள் அருளித் தந்தவையே.

புதுக்கெமெரா... நம்ம ஜன்னுதான் போணி:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.