Thursday, March 19, 2015

தெரு ஓவியங்கள் கலைகளில் சேருமா?

எனக்குத் தெரிஞ்ச 'தெருவில் வரைந்த ஓவியங்கள்'னு பார்த்தால் என் சிறுவயதில் சென்னை ப்ளாட்ஃபாரங்களில் பிள்ளையார், சிவன், முருகன் இப்படி சாக்பீஸால் வரைஞ்சு  வச்சுருந்ததே. அதுவும் பஸ் நிறுத்ததையொட்டியேதான் . அப்பதானே பஸ்ஸில் இருந்து இறங்குறவங்களும் பஸ்ஸுக்காகக் காத்துநிற்பவர்களும்  பார்ப்பாங்க.  ஐயோ... எங்கே 'சாமி'யை மிதிச்சுடப்போறோமுன்னு  கவனமா காலடி எடுத்து வச்சு வருவேன். இதை வரையும் ஓவியர்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளா இருந்தாங்க அப்போ. இது அவர்களுக்கு ஒரு ஜீவனோபாயம் என்றாலும்கூட   கலை உணர்ச்சி இருப்பதால்தானே வரையவும் வருது இல்லையா?  சாக்பீஸ் என்பதால்  மழை வந்தால் ஓவியம் அழிஞ்சுபோயிரும். தினம் தினம்  வெவ்வேறு இடமென்றாலும்  தினம் வரைஞ்சு வச்சால்தான்  எதோ ரெண்டு காசு கிடைக்கும்.  ப்ச்....   பாவம்தானே?


இப்ப எதுக்கு இந்த நினைவு? காரணம் இருக்கே! எங்கூரில்  ஆர்ட் ஃபெஸ்டிவல் வருசாவருசம் நடக்குது பாருங்க, அதில் இந்த தெரு ஓவியம்  ஸ்ட்ரீட் ஆர்ட்  விசேஷ இடத்தைப் பிடிச்சிருக்கு. அதிலும் இந்த வருசம் கூடுதல் விசேஷம்.
நிலநடுக்கத்தால் அழிஞ்சு போன ஊரில் அங்கங்கே தப்பிச்சு நின்னு இருக்கும் கட்டிடங்களை விரல்விட்டு எண்ணிடலாம். வெறும் மொட்டை வெளிகள் தான்  பாக்கி அத்தனையும்.  பார்க்கப்பார்க்க  ரத்தக்கண்ணீர்தான்.








 நல்லவேளை, இப்போ எல்லா இடிபாடுகளையும்  அகற்றி அந்த இடங்களைச் சமன் செஞ்சு வச்சுட்டதால்  கொஞ்சம் நிம்மதி.  இனி அதற்கான காப்பீடுகளை வச்சு மட்டும் புதுக்கட்டிடத்தை  இடத்தின் உரிமையாளர்  கட்டமுடியுமான்னா  முடியாது. விலைவாசிகள் தாறுமாறா ( முக்கியமா கட்டிட சம்பந்தமுள்ள பொருட்களின் விலைவாசிகளைச் சொல்றேன்) எகிறிப்போய்க் கிடப்பதால்   இன்னும் கூடுதல் நிதிக்கு அவர்கள் ஏற்பாடுகள் செய்து  கட்டும் வரை  அது அப்படியேதான் இருக்கப்போகுது.  இந்த நிலையால்  நிறையப்பேர்,அந்த இடங்களையே இப்போ வித்துக்கிட்டு இருக்காங்க.  வாங்கறவன் அவனிஷ்டம் போல் கட்டிக்கட்டுமே!  எங்கே பார்த்தாலும் ஃபார் ஸேல் போர்டுகள். இந்த ஏரியா நகரின் மையப்பகுதி என்பதால் நிலமெல்லாம்  ப்ளாட்டினம் (எவ்ளோநாள்தான் பொன் பொன்னுன்னு சொல்வதாம்?) விலையைக் காட்டிலும் அதிகம்.

ஆமாம்....Californium 252 னு ஒன்னு இருக்காமே . ஒரு கிராம்  விலை 27 மில்லியன் அமெரிகன் டாலராமே!  இதுலே காசுமாலை செஞ்சு போட்டுக்கிட்டா நல்லாவா இருக்கும்?  பார்க்கவே சகிக்காது. சீச்சீ எனக்கு வேணாம்ப்பா!





கட்டிடத்தைத் தொட்டடுத்து நிற்கும்  மொட்டை  வெளிகளில் கண் போகாமல்,  நிற்கும் கட்டிடத்தின் சுவரில்  பார்வையைச் செலுத்தினால் துக்கம் கொஞ்சம் குறையுமேன்னு ஒரு ஐடியா யாரோ புண்ணியவானுக்குத் தோன்றி இருக்கு.


ஊரில் அங்கங்கே படங்களை வரைஞ்சு தள்ளிட்டாங்க.  ஒவ்வொன்னும் பார்க்க அள்ளிக்கிட்டுப்போகுது.

எங்கூர் காலநிலைக்கு  யானையை வச்சுக் காப்பாத்த முடியாது.வீட்டுயானை மட்டும் எப்படியோ தப்பிச்சுருது:-) அப்படி இருக்க, ஒரு நாள் மகள் ஒரு படம்  எடுத்து அனுப்பினாள். நாலுயானைகள்!  பார்த்ததும் என் நெனப்பு வந்துச்சாம்லெ:-)


எங்கே இருக்குன்னு கேட்டுக்கிட்டேன். அப்பதான்  நம்ம  சிட்டிக்கவுன்ஸில்  ஊருக்குள்ளே படம்போட  உதவி செஞ்சுக்கிட்டு இருப்பது தெரியவந்தது.


அம்பத்தியொரு படங்கள் இருக்காம். எது எது எங்கெங்கேன்னு சொல்லலைன்னா எப்படி?அதுக்கு ஒரு ப்ரோஷர் அச்சடிச்சுக்கொடுத்துட்டாங்க. இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்!

ஒரு வீக் எண்ட் இதுக்குன்னே ஒதுக்கி வச்சேன்.  ஊரைச் சுத்தப்போனோம். கிடைச்சதெல்லாம் இங்கே உங்களுக்கும் விளம்பியாச்சு:-)

ஊருக்குள்ளே  கட்டிடவேலைகளும் ரோடு வேலைகளும் தொடந்து நடந்துக்கிட்டே இருப்பதால் ஒன்வே, டு வே இவைகள் இல்லாம, அங்கங்கே  ட்ராஃபிக் டைவர்ஷன் என்று  ட்ராஃபிக் ஸைன்  வச்சு திருப்பி விடும் சமாச்சாரங்களால்   காரில் போவதைவிட  நடந்துபோனால் இன்னும் நிறைய படங்கள் கிடைச்சுருக்கும்தான்.  நான்.....நடந்துட்டாலும்.....:(




காலிச்சுவர் கிடைச்சா  கண்ணீர் அஞ்சலிகளும், அரசியல் வியாதிகளின் அல்லக்கைகள் போட்டு வைக்கும் விளம்பரமும் ,   கண்ட்ரி டாக்குட்டர்ஸ்களின்   மூலத்துக்கான ஸ்பெஷல் மருத்துவசேவைன்னு  சொல்லிக்கும் சமாச்சாரங்களும் இருக்குமோன்னு பார்த்தால்.....  சீச்சீ... இந்த கலாச்சாரம் இதுவரைக்குமிங்கே வந்து சேரலை பாருங்க:(

இதுலே,  காலி  மனையில் கட்டிடம் வந்துட்டா .... (செலவு பண்ணி)'போட்ட படம் போச்சே'ன்னு ஆகிருமேன்னு ஒரு கூட்டம் கிளம்புச்சு.  அதுக்காக  ஊரை  மொட்டையா விடமுடியுமா?  அழகு படுத்தினோமுன்னா  அதைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளால்  நமக்கு நன்மைதானே? அப்படியே உள்ளூர் கலைஞர்களை வளர்த்தாப் போலவுமாச்சு, இல்லையோ? ஒரு கல்லில் ரெண்டு மாம்பழம்:-)


PINகுறிப்பு:   நிறைய சமாச்சாரங்களும் அதற்கேற்ற படங்களுமா இருப்பதால்   மீதி நாளைக்கு:-)




11 comments:

said...

அழகிய படங்கள். அனைத்துப் படங்களும் திறக்க சற்று நேரமாகின! என்ன அழகான ஓவியங்கள்! தெருவில் 3d ஓவியங்கள் வரைந்து வைத்துப் பார்த்திருக்கிறேன். (படங்களில்தான்) இந்த ஓவியர்கள் மிகத் திறமையானவர்களாய் இருக்கிறார்கள்.

said...

ஒவ்வொன்றும் அற்புதம்...

வேணாம்ப்பா என்பதிலே கொஞ்சூண்டு ஆசை இருக்கே... ஹிஹி...

said...

உள்ளூர் தெருவோவியங்களில் சில உங்கள் பார்வைக்கு!
http://thulasidhalam.blogspot.com/2015/03/blog-post_19.html = அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா Tulsi Gopal

said...

மிகவும் அழகான படங்கள். இடிபாடுகளை பற்றி படிக்கும் போது மனது கலங்குகிறது துளசி மேடம்..

said...

மிக அழகான படங்கள். தெருஓவியங்களும் கலைதான் .

said...

அனைத்தும் அழகானபடங்கள். நல்ல முயற்சி.

said...


புகைப்படங்கள் அனைத்தும் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

அத்தனை ஓவியங்களும் அருமை.. வெற்றுச் சுவரைப் பார்த்தால் மனம் வேதனைதான் படும். இவ்வளவு
அழகான ஓவியங்கள் உள்ளத்துக்கே புத்துணர்ச்சி கொடுக்குமே.
வரைந்தவர்கள் கைகளுக்கு கலிஃபோர்னியம் வாங்கிப் போடலாம்மா.

said...

ஓவியங்கள் அனைத்தும் அசத்தல்!
சும்மா கிடக்கும் சுவர்களில் இப்படி படங்கள் வரையலாம், நம்ம ஊரில்தான் சுவர்களை சும்மா விடுவதில்லையே அரசியல்வாதிகள்.

said...

இந்தப் பதிவின் தலைப்புக்கு அடுத்தபதிவின் தலைப்பே பதில். அருமை. அத்தனை ஓவியங்களும் அற்புதம்.

said...

arumai...