Wednesday, May 06, 2015

நம்ம கஜாவின் கதை! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 47)

முன்னொரு காலத்தில்  பாண்டிய மன்னன் இந்திரத்துய்மன்  ஆட்சியில் இருக்கார்.  அரசரைக் காணவந்த அகத்திய முனிவரை, சரியானபடி வரவேற்காமல்  அலட்சியம் செய்கிறார்.  வந்ததே கோபம் அகத்தியருக்கு!  நீ யானையாகப் போன்னு சாபம் விட்டார். அரசனாக இருந்து  யானையான காரணத்தால் கஜேந்திரன் ஆனான் பாண்டியன்.  சாபம் விட்டவர் துர்வாசர் என்றும் ஒரு வெர்ஷன் இருக்கு கேட்டோ!  யாரா இருந்தாலும் சாபம் மட்டும் ஸேம் ஸேம்தான்:-)

தன் தவறுக்கு மனம் வருந்தும்  கஜேந்திரன்,  தாமரை மலர்கள் பூத்து நிற்கும் ஒரு குளத்தில் இருந்து  தினமும் ஒரு பூவைப் பறித்துப் பெருமாள்(சிலை) காலடியில் வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்கு!  மஹாலக்ஷ்மிக்கு  அந்தப் பூவைப் பார்த்ததும் இவ்ளோ அழகான பூவை நாம் கொண்டு வந்து  பெருமாளை பூஜிக்கணும் என்ற ஆசை வருது.

ஒரு நாள்   மஹாலக்ஷ்மி இந்தக் குளத்தைப் பார்த்துட்டாள்.  அட! இங்கிருந்துதானா?  இடம் தெரிஞ்சு போச்சுல்லே. .... இனி விடக்கூடாதுன்னு  அன்று மலர்ந்துள்ள எல்லா தாமரைகளையும் பறிச்சுக்கொண்டு வந்து பெருமாளுக்கு சார்த்தி பூஜை செய்யறாள். தினமும் இப்படியே போகுது.  கஜேந்திரன் வந்து பார்க்கும் போதெல்லாம்  ஒரு பூவைக்கூடப் பார்க்க முடியலை:(  

(நம்ம சென்னை  தி.நகர் வெங்கடநாராயணா சாலை திருப்பதி தேவஸ்தானக் கோவில் வாசலில்  அல்லி ( கேட்டால் தாமரைன்னு சொல்லுவாங்க)  மொட்டுக்களை வச்சு விக்கிறாங்க. நாம் காசு கொடுத்ததும் அதன்  மூக்கிலெ  ஒரு தட்டு தட்டுவாங்க பூக்காரம்மா.  மொட்டு உடனே மலர்ந்துரும். இந்த டெக்னிக் நம்ம கஜேந்திரனுக்குத் தெரியலை பாருங்க!)

பெருமாளிடம் போய் முறையீடு வச்சதும்,  மஹாலக்ஷ்மிக்கு உத்தரவு போடறார் பெருமாள். "இனி நீ பூவெல்லாம் பறிக்கக்கூடாது. அந்த உரிமை கஜேந்திரனுக்கு மட்டுமே கொடுத்துட்டேன்."  மஹாலக்ஷ்மிக்கு மனம் வருத்தமாப்போச்சு. மறுநாள் பூவை எடுத்துக்கிட்டு ஆடி ஆடி வர்றார் கஜேந்திரன். லக்ஷ்மி  ஆதங்கத்தோடு பார்க்கிறாள். பெருமாள் என்ன செஞ்சார் தெரியுமோ? சட்னு லக்ஷ்மியைத் தூக்கித்  தன்னருகில் சிம்மாசனத்தில் உக்கார்த்தி வச்சார்.  இல்லே..... மடிமேல்  உக்கார்த்தி வச்சுருப்பாரோ ?


யானை பார்க்குது! அதையும் தூக்கி மடியில் உக்கார்த்தி வச்சார்னு சொல்ல எனக்கு ஆசைதான். என்னதான் பெருமாளே ஆனாலும் யானையைச் சட்னு தூக்கி வச்சுக்க முடியுதா ?

 " இப்ப எங்க ரெண்டு பேருக்குமாச் சேர்த்து அந்தப் பூவை வச்சுக் கும்பிடு"  யானைக்கு பரம சந்தோஷம்!  கஜேந்திரனுக்கு தரிசனம் கொடுத்தது இப்படித்தான்.

மஹாலக்ஷ்மிக்கு இந்தக் கோவிலில் தனியா ஒரு சந்நிதி இருக்கு! கேரளாவில் இருக்கும் ஒரே சந்நிதி (யாம்!)

சரி, நம்ம கஜாவை (செல்லப்பெயர்!) பார்க்கலாம். இந்த தாமரைக் குளத்தில் ஒரு முதலை  வந்து சேர்ந்தது.  இதுவும் சாபம் பெற்று எடுத்த பிறவிதான். கூஹூ என்ற ஒரு அரக்கன்  மக்களுக்கெல்லாம்  தொல்லை கொடுத்து வந்தானாம்.  மக்களை ஏமாத்திக் குளத்துத்தண்ணீரில் மூழ்கடிச்சு கொல்லுவது அவனுக்குப் பொழுதுபோக்கு!  இப்படி இருக்கும் நாளில் ஒரு சமயம் அகத்தியர் (மீண்டும் அகத்தியரா!!!)  பூஜை செய்யத் தண்ணீர் வேண்டி கமண்டலத்தோடு குளத்துக்குள் இறங்கினார். அரக்கன் வந்து அவர் காலைப்பற்றி நீருக்குள் இழுக்கறான். கோபம் கொண்ட முனிவர்  மனிதன் காலைப்பிடிச்சு இழுக்கும் நீ முதலையாகப் போகக்கடவாய் என்றதும்  முதலை உருவம் வந்துருச்சு.

ஐயா...மன்னிக்கணுமுன்னு கண்ணீர் விட்டு (முதலைக் கண்ணீர்!!!) அழும்போது,  உனக்கு சாபவிமோசனம் விஷ்ணுவின் கையால் என்று சொல்லிட்டுப் போயிடறார்.  முதலை அன்றுமுதல் தண்ணீருக்குள்ளேயே கிடக்குது. முதலை என்பதால்....அதன்  இயல்பான குணம் மட்டும் மாறவே இல்லை.

அந்தக் குளம்தான் தினமும் கஜா வந்து போகும் தாமரைக்குளம். ஒருநாள் பூப்பறிக்க கஜா வந்து தண்ணீரில் இறங்கியதும் முதலை வந்து காலைக் கவ்வியது. தரையில்  யானைக்கு என்னதான் பலம் என்றாலும் தண்ணீரில் இருக்கும் முதலைக்கு  இன்னும் பலம் கூடுதல். ரெண்டு பேருக்கும் இடைவிடாத போராட்டம். கடைசியில் முடியாமல் போன கஜா, ஆதிமூலமே! ன்னு  பெருமாளைக் கூவி விளிச்சது.




ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த பெருமாளுக்கு இந்த  அபயக்குரல் கேட்டதும்  காப்பாத்தக் கிளம்பறார். கருட வாகனம் எப்போது போய்ச்சேரும் என்று கணிக்கமுடியாமல்   உடனே கையில் உள்ள ப்ரயோகச்சக்கரத்தை  ஏவிவிட்டார்.  அது நொடியில் வந்து முதலையின் கழுத்தை வெட்டி, யானையின் காலையும் உயிரையும் காப்பாத்துச்சு. செத்துப்போன முதலை மீண்டும் சுய உருவத்துக்கு மாறி,  பெருமாளின் ஆயுதத்தால் கொல்லப்பட்ட காரணம் மோட்சம் கிடைத்து  மேலோகம் போச்சுன்னு  கதை. ஆக்ச்சுவலாப் பார்த்தால்  முதலைக்குத்தான் மோட்சம்.  ஆனால் எப்படியோ கதைக்கு கஜேந்திர மோட்சம் என்ற பெயரே நிலைச்சுருச்சு பாருங்க.  இந்த சம்பவம் நடந்த இடம் இதுதான்னு  சொல்றாங்க தலப்புராணக் கதையில்!


கம்பி கேட்டைக் கடந்து கோவில் வளாகத்துக்குள் போறோம். கண்ணெதிரே பெரிய நதி!  பாரதப்புழா! நதிக்குப்போக படிக்கட்டுகளுடன்  படித்துறை.  கடைசிப்படி கடந்து   கொஞ்ச தூரத்தில் வலை அடிச்சு வச்சுருக்காங்க. (  ஒருவேளை முதலை வந்துருமோ?) வலைக்கும் படிக்கட்டுக்கும் இடையில் உள்ள தண்ணீரில்தான் பக்தர்கள், கர்மகாரியம் செய்யவந்த யாத்ரிகர் குளிக்கணும்.






கோபால் கொஞ்சம் மெத்தனமா  முண்டு கொண்டு வரலை. 'வெறும் ஷர்ட் ஊறியிட்டால் மதி'ன்னு தோணல். கோவில் வாசலில், பக்தஜன ஸ்ரத்தைக்கு (கூடாதுகள் )போர்ட்  இருக்கு. ' என்ன போட்டுருக்கு  பாரு'ன்னார். படிச்சுப்பார்த்தால்  முதல்வரியே 'க்ஷேத்திரத்தின் மதிலகத்து, லுங்கி, ஷர்ட், பனியன், பாண்ட்ஸ், மாக்ஸி, செருப்பு எண்ணிவை தரிச்சுக்  கடக்குவான் பாடுள்ளதல்ல'




ரெண்டாவது கூடாது எனக்கு!  "நாலம்பலத்தினகத்து வச்சு ஃபோட்டோ,வீடியோ எடுக்குவான் பாடுள்ளதல்ல"   ஐயோ.... போட்டே...வழக்கம்போல் புறத்து எடுத்தால் மதி, அல்லே:-)

முண்டு கொண்டு வரலையான்னு  கேட்கும்போதே...சீனிவாசன் உதவிக்கு வந்தார்.  'வண்டியில் அன்றைக்கு நீங்க வாங்கித்தந்த வேஷ்டி அப்படியே இருக்கு. கொண்டு வரேன்'னு ஓடுனார். கோபால் போய் தரிசனம் முடிச்சு வந்தபிறகு சீனிவாசன்  போகணும், இப்ப:-)

ஆண்களுக்கும் பெண்களுக்கும்  உடை மாற்றிக்கும்   அறைகள் தனித்தனியா   இருக்கு! பேக், கவர்(?) மொபைல் ஃபோன்  எண்ணிவ சூஷிக்குன்ன  ஸ்தலம் என்ற எழுத்துக்களுடன் ஒரு பொட்டிக்கடை ஸ்டைலில்  ஒன்னு!  எதுவுமுள்ளே  கொண்டு போகப்டாது!   நோ ஒர்ரீஸ்ன்னு  ஃபோனை சீனிவாசனிடம் கொடுத்தாச்சு.   கேமெராவையும் சீனிவாசனிடம் கொடுத்தேன். வெளியே  வந்தபின் கோவிலை க்ளிக்கலாம்.

பேண்ட்ஸ் மேலேயே முண்டு சுற்றிக்கிட்டு  ஒன்பது அடுக்குள்ள கல் தீபஸ்தம்பம் கடந்து உள்ளே போனோம்.வாசல் முகப்பில்  'ஹரே நவா முகுந்த' ! வாசலுக்கு நேரெதிரே கொடிமரமும் அதன் இருபக்கங்களிலும்  ஒன்பது அடுக்குக் கல் (குத்து விளக்குகள்)தீப ஸ்தம்பங்கள். கோவிலின் வெளிப்புறசுவர்கள் பளிச்ன்னு  இருக்கு. அங்கங்கே கருப்புக்கல்லால் ஒரு அலங்காரம்.


ஒருவிசேஷ நாளில்!  மேலே ரெண்டும் சுட்டவை.  கூகுளாருக்கு நன்றி.

பெருமாளை சேவிச்சபின்   ப்ரஸாதம் வாழை இலைநறுக்கில் கிடைச்சது. நல்ல சகுனம்!


தாயார்  மலர் மங்கை நாச்சியார்  என்ற மஹாலக்ஷ்மி தனி சந்நிதியில். புள்ளையாருக்கும் ஒரு சந்நிதி இருக்கு. உள்ப்ரகாரம் சுத்திட்டு மீண்டும் வெளியில் வர்றோம். வாசலுக்கு நேரே  நதிக்குப்போகும் படிக்கட்டுகள்.

 ஆற்றின் அக்கரையில் சிவனுக்கும், ப்ரம்மனுக்கும் தனிக்கோவில்கள் இருக்கு.  ஆகவே இதை மும்மூர்த்தி ஸ்தலம் என்றும் சொல்றாங்க.  கடந்து போக  சின்னப்படகுகளும்  இருக்காம்.  நாம் போகலை.




வெளியே வந்ததும்   ஒரு ஐய்யப்பன் கோவில் (!)  தனியா இருக்கு.   கருவறைக் கதவு சாத்தி இருந்துச்சு.

பெரிய அரசமரங்கள் மேடைகளுடன் பார்க்கவே பரவசம்.

நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் வந்து ஸேவித்து பெருமாள் மேல் பாடல்கள் பாடி மங்களாசாஸனம்  செஞ்சுருக்காங்க.  108  திவ்ய தேசங்களில்  இந்தக் கோவிலும் உண்டு.

சனி தோஷத்துக்குத்  தனியா   நிவாரண பூஜை செஞ்சுக்கலாம்! 300 ரூபாய் மட்டுமே!

சீனிவாசன் தரிசனம் முடிச்சு வரும்வரை நான் அங்கே இங்கேன்னு  க்ளிக்குவதில் பயங்கர பிஸி:-)

இந்தக் கோவிலுக்கு வந்தது முதல் மனசுக்குள் ஒரு பாட்டு ஓடிக்கிட்டே இருந்தது. இப்போ இந்தப்பதிவு எழுதும்போதும்.  நேரம் கிடைக்கும்போது கேட்டுப் பாருங்க.

படம் :தேசாடனம்.



யூ ட்யூபில் அப்படியே Thirunavaya Templeனு  தேடிப்பாருங்க . சின்னச்சின்ன வீடியோக்கள்  இருக்கு.  கேரள ஸ்டைலில் ஆடி அமாவாசை சமாச்சாரங்களைப் பார்க்கலாம்.


நாம்  தரிசனம் முடிச்சுக்கிட்டு திரும்ப குருவாயூர் வந்து சேர்ந்தோம்.  சீனிவாசன் அப்பதான் சொல்றார், ஹொட்டேலில் இருந்து  ரொம்பக் கிட்டக்க கோவில் இருக்குன்னு.   கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்புனோம்.  காரில்  ஒரு நிமிசப் பயணம். எங்களை இறக்கி விட்டுட்டு, திரும்பும்போது செல்லில்  கூப்பிடுங்க.  இங்கே பார்க்கிங் இல்லை.நான் போய் வண்டியை ஹொட்டேல் பார்க்கிங்லே வச்சுட்டு  வர்றேன்னு   சொல்லிப்போனார்.

தொடரும்.........:-)


10 comments:

said...

கோவிலைப் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகளை அறிந்தேன் அம்மா... நன்றி...

படங்கள் அனைத்துமே பிரமாதம்...

said...

Spectacular photos.
சாபமா கொடுக்குறே? ரொம்ப சந்தோஷம்னு அகஸ்தியரை யானைக்காலாலே ஒரு மிதி மிதிச்ஷிருக்க வேண்டாமோ? என்ன ராஜா இவரு?
கதைக்கு ஒரு சான்சு.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இந்தக் கதை சொல்லிக்கு மகிழ்ச்சி!

said...

வாங்க துரை.

சாபம் கிடைச்ச நொடி அது மனுஷ இனத்து ராஜாவாச்சே! பாவ புண்ணியத்துக்கு பயந்துருப்பாரே!

யானைக்கால்(நோய்) வந்த ராஜாவா ஒருவேளை இருந்துருந்தால்... மிதிச்சிருப்பாரோ? யோசிக்கிறேன்:-))))

said...

2004ல் போய் சேவித்தது நினைவில் வருகிறது. அதுவும் அந்த மரத்தைப் பார்த்தபின்புதான் நல்ல நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு நல்ல வாய்ப்பு ('நீங்களே முனைந்து ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பு). All the best

said...

எத்துனை அருமையான வரிகள். அழகிய புகைப்படங்கள். கருத்துக்கள். பயணம் அருமை. வாழ்த்துக்கள்.

said...

ஸ்ரீரங்கத்தில் கூட (அம்மா மண்டபம்) காவிரியில் இப்படி வலை கட்டி வைத்திருக்கிறார்கள்.

படங்கள் அருமை.

பொதுவாக கேரளக் கோவில்களைப் பார்த்தால் ஏனக்கு ஒரு அரண்மனை போலத் தெரியுமே தவிர, கோவில்கள் போலத் தோன்றாது! என் பார்வையில் குற்றம்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மரத்தை வச்சு அடையாளமா!!!!!

வாய்ப்பு தானே வருமுன்னு உக்கார்ந்துருந்தா எப்படி? கடையில் வாழைப்பழம்தான் கிடைக்கும்.உரிச்சு நாம்தானே தின்னணும்:-))) அதான் நமக்கு நாமே திட்டம். பெருமாள் நடத்திக்கொடுக்கறார்.

said...

வாங்க மகேஸ்வரி.

உங்க ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஸ்ரீராம்.

அரண்மனை ஞாபகம் வந்தால் நல்லதுதானே! அவன்தானே அனைவருக்கும் அரசன்!

கோபுரம் இல்லாததால் இப்படித் தோணுது போல!

அம்மா மண்டபம் தகவல் சரியே!