Wednesday, June 10, 2015

சாமியா இருந்தாலும் பொறாமை கூடவே கூடாது! இல்லை.... பிச்சை தான் எடுக்கணும் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 56)

பெருமாள் வழி காமிச்சுக்கிட்டே போறார். நாமும் பின் தொடர்கின்றோம்.  மண்ணச்சநல்லூர்  தெருவோரக் கடையில் வாழைப்பூ விக்கறாங்க!
  போயிட்டுப்போகுது.  பொல்லாத வாழைப்பூ.... யாருக்கு வேணும்? வாங்குனதும் வடையா செய்யப் போறோம்!  சட்னு தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு மிடறு  குடிச்சேன். ஆசை அறுமின் ஆசை அறுமின்....





பாலம் விட்டு இறங்குன  பெருமாள் ' இடப்பக்கம் போ'ன்னு ஒரு வார்த்தை சொல்லப்டாதா?   கொஞ்சதூரம் போனபின்தான்   திரும்பவேண்டிய இடத்தைக் கோட்டை விட்டது  தெரிஞ்சது. ரைட் எடுத்து வந்து பாலத்தின் அடியில் போகும் வழிக்குள் நுழைஞ்சால்  குணாவுக்கும் தீபிகாவுக்கும் கல்யாணமாம்!  விஜயகாந்த், அஜீத், விஜய் எல்லோரும்  டிஜிட்டல் பேனரில் நின்னு வாழ்த்திக்கிட்டு இருக்காங்க.





மதில் சுவரையொட்டி முன்வாசல். சட்னு கோவிலுக்குள் நுழைஞ்சுடலாம்.

திருக்கரம்பனூர் என்னும் திவ்ய க்ஷேத்ரம். 108 கோவில்களில் ஒன்னு!  அதுக்கான ஆடம்பரமொன்னும் இல்லாமல் தேமேன்னு இருக்கு.
திருமங்கையாழ்வார் வந்து தரிசனம் செஞ்சு பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.

'பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகேழுண்டும்
 ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே'

கோவிலுக்குப் புராணப்பெயர் திருக்கரம்பனூர்.  கலிகாலப்பெயர்....
சிவபக்தர்களுக்கு  பிக்ஷாடனர் கோவிலாகவும்,  விஷ்ணு பக்தர்களுக்கு உத்தமர் கோவிலாகவும் இருக்கு.  (ஒருவேளை அதர்வே ரௌண்டோ?)

ஆதிகாலத்தில் சாமிகளுக்குத் தலை அஞ்சுதானாம்!  அதென்னடா இவருக்கும் என்னைப் போலவே அஞ்சு தலைன்னு  நினைச்சு,  நம்மைவிட ஒன்னு குறைச்சலா இருந்தாத்தானே நல்லது. நமக்குத்தானே ஒன்னு கூடுதலா இருக்கணும் என்ற  அகம்பாவம் வந்ததும்,  பிரம்மாவின்  அஞ்சு தலைகளில் ஒன்னை, தன் கைவிரல் நகங்களால் கிள்ளி எடுக்கறார் சிவர்.  இவர் யாரா? நம்ம பரமசிவன்தான்.  மரியாதையாச் சொல்லிப் பார்த்தேன்!

இங்கே இன்னொரு வெர்ஷன்  இருக்குன்னாங்க. அஞ்சு தலை இருக்கும் ப்ரம்மனை, சிவன் என்று நினைச்சுக்கிட்டு பார்வதி பணிவிடை செஞ்சாங்களாம்.  அதைக் கண்டு பொறுக்கமுடியாத சிவன்  பிரம்மன் தலையைக் கொய்தாராம்.  அய்ய.... இருக்கும்ங்கறீங்க? கணவன் முகம் பார்க்காமல் தலையை எண்ணிக்கிட்டா இருப்பாங்க  பெண்கள்?  இப்ப எல்லோருக்கும் ஒரு தலைதான். அதனால்  நாங்க எல்லோரும் கன்ஃப்யூஸாகிக் கிடக்குறோமா என்ன? பாவம் பார்வதி..... என்னெல்லாம்  சொல்றாங்க பாருங்களேன்:(   அவ்ளோ நினைச்ச கணவர், தன் தலையில் ஒன்னைக் குறைச்சுக்கிட்டா என்னவாம்?  என்னவோ போங்க.  போங்குக்கதை!

பிரம்மனை ரத்தம் சிந்தவச்சதில் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடிக்குது. நகத்தில் ஒட்டிக்கிட்ட தலையை  கீழே எடுத்துப்போட முடியலை. பயங்கர  ஃபெவிகாலா இருந்துருக்கு!  நாளாக ஆக  தலை உலர்ந்துபோய் வெறும் மண்டையோடா ஆகிக்கிடக்கு.  இதையே பாத்திரமா ஏந்தி பிச்சை எடுத்து வாழ்ந்துக்கிட்டு இருக்கார் சிவன். பவதி பிக்ஷாம்தேஹி.....

  ஊர் ஊராப்போகும்போது  இந்தக் கதம்பனூர் (இப்படியும் ஒரு பெயர் இருக்கு இந்த ஊருக்கு!) வர்றார்.

நம்ம பெருமாள் , மனைவி மஹாலக்ஷ்மியிடம் சொல்றார், 'வாசலில் நிற்பவருக்கு பிக்ஷை போட்டனுப்பு'ன்னு.  தாயார் வந்து கபாலத்தில்  அன்னம் போட்டதும்,  ஒட்டிக்கிட்டு இருந்த மண்டையோடு சட்னு  கையைவிட்டுப் பிரிஞ்சது.  சாப விமோசனம்! ப்ரம்மஹத்தி தோஷம் போயே போச்!  அட!ன்னு  கண்ணை அகலத்திறந்து பார்க்கும்போது எதிரில்  'கிடந்த நிலை'யில் மஹாவிஷ்ணு! புருஷர்களில்  உத்தமரான புருஷோத்தமர்!  அருகில் பூரணவல்லித் தாயார்!

 108 திவ்யதேசக் கோவில்களில் 27 கோவில்களில் பெருமாள் சயன திருக்கோலத்தில்  இருக்கார் என்றாலும் பஞ்ச சயன ரங்கமென்று  அஞ்சு கோவில்களைச் சொல்றாங்க. அதில் இந்த உத்தமர் கோவிலும் ஒன்று. (மீதி நான்கு, ஸ்ரீரங்கம்,  கோபுரப்பட்டி, கோவிலடி, திரு அன்பில் என்றவை)

சாபம் நீங்கிய  சிவன் இங்கேயே தன்  தேவி சவுந்தர்ய நாயகியுடன்  கோவில் கொண்டிருக்க,  ப்ரம்மாவும் தன் மனைவி சரஸ்வதியுடன் இங்கேயே தங்கிடறார்.  பொதுவாக  நம்ம பக்கங்களில் ப்ரம்மன் கோவில் அபூர்வம் என்பதுடன், இங்கே சிவன், விஷ்ணு, ப்ரம்மன் என்று மும்மூர்த்திகளும்  தத்தம் தேவியருடன் ஒரே கோவிலில் இருந்து பக்தர்களை அனுகிரஹிப்பதால்  கொஞ்சம் விசேஷமான கோவிலாகத்தான் இருக்கு.



 இதன்காரணமாவே இங்கே எக்கச்சக்கமான திருமணங்கள்  இந்தக்  கோவிலில்  நடக்குது. முகூர்த்த நாட்களில்  கல்யாணமாம் கல்யாணம்தான். இப்பவும் கோவிலில் அங்கங்கே மண்டபங்களில் யாககுண்டம் இல்லாமல்  வெறும் தரையில் மாமரத்தூள் போட்டு  தீ வளர்த்தே  'சுருக்' னு கல்யாணங்கள்  நடந்துக்கிட்டு இருந்ததைப் பார்த்தேன்.

கோவில் கல்யாண நிபந்தனைகள் என்னென்னன்னு   போர்டில் தகவல்கள் தெளிவா இருக்கு.

புருஷர்களில் உத்தமரான  ஸ்ரீராமர் இங்கே தனிச் சந்நிதியில் இருக்கார். ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர், ஸ்ரீ வேணுகோபாலன், தசரதலிங்கம், ரெட்டைப்பிள்ளையார், ஆஞ்சநேயர்,  ராமானுஜர் இப்படித் தனித்தனி சந்நிதிகள் இருக்கு. சில சந்நிகளில் போய் நின்னு தரிசிக்க முடியலை.  கிடைச்ச இடத்தில் எல்லாம்  கல்யாணக்கூட்டம்தான்.



கோவில் திறந்திருக்கும் நேரம்  காலை 6 முதல் பகல் 12,   மாலை 4.30  முதல் 8 வரை. பார்த்தவுடன் பழமை தெரியும் நல்ல பெரிய கோவிலாகத்தான் இருக்கு. சந்நிதிகள் ஏராளம் என்பதால் கொஞ்சம் இடுக்கம்.  கொஞ்சம் பராமரிப்பு  போதாதுன்னு  இருக்கு. இன்னொரு அதிசயமுன்னு  சொல்லும் வகையில்  வாழை மரம்தான்  கோவில் தலவிருட்சம் !




நம்ம கல்யாணம் எப்போ?  இங்கேதானே? 



கோவில்  முழுசும் கல்யாணத்துக்கு விட்டாச்சு போல.  பெருமாளைத்தவிர மற்ற சந்நிதிகள் எல்லாம்  கம்பிவழி தரிசனம்தான். கிடைச்சவரைக் கும்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.


ப்ரம்மா & ஞான சரஸ்வதிக்கான சந்நிதிகள் மட்டும் வெளியில் தங்கம்போல் மின்னும் கவசங்களோடு ஜொலிப்பா இருக்கு! சரஸ்வதி கையில் வீணை கிடையாது.  ஓலைச்சுவடிகளும் ஜெபமாலையும் மட்டும்தான்!






லட்சக்கணக்குலே  ஹால்,  இன்னபிற ஆடம்பரங்கள்,  அனாவசியச்செலவுகள்   இல்லாம இப்படிக் கோவிலில் நடக்கும் கல்யாணங்கள் ரொம்ப நல்லதுதான். பொண்ணைப் பெத்தவன் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்!  

நாதஸ்வரம், தவில் இசை இல்லாததுதான் கொஞ்சம் வெறுமையா இருந்தமாதிரி என் தோணல். இப்பதான் செல்லில்  பாட்டெல்லாம் போட்டு வச்சுக்க முடியுதே.  நாதஸ்வர இசையை மெல்லிசான சவுண்டில் ஓடவிட்டால்  நல்லா இருக்காது? ச்சும்மா ஒருஅரைமணி நேரத்துக்கு மட்டும்!

சீக்கிரமா பொண்ணு மாப்பிள்ளையை வரச்சொல்லுப்பா....


கோவிலுக்கு வெளியில்,  நண்பனின் கல்யாணத்துக்கு  வந்திருந்த  மணமகனின் நண்பர்கள்குழாம்.  தாலி கட்டறதைப் பார்க்கலையான்னு  கேட்டதும்   திருதிரு.  சரி. நில்லுங்க  க்ளிக்கலாம் என்றதும்  எல்லோரும் சேர்ந்து நின்னு போஸ் கொடுத்தாங்க.


கொள்ளிடம்  பாலம் கடந்து அம்மா மண்டபம் ரோடு  ஆரம்பம் வர ஒரு பத்து நிமிசம்தான் ஆச்சு.  மணி  பதினொன்னுதான். சரி அம்மா மண்டபம் பார்த்துட்டுப் போயிடலாமேன்னு ரைட் எடுத்தவுடன் ஓடிவந்து நம்ம வண்டியை நிறுத்தினார் ஒருவர்.

ஊருக்குள் போக  கட்டணம் 40 ரூ! வெளியூர் வண்டிகள், ட்ராவல்ஸ் வண்டிகள்னு நம்பர் ப்ளேட் பார்த்து  வண்டிகளை நிறுத்திடுவாராம். இதென்ன அநியாயமா இருக்கே.  உங்க பெயர் என்ன?  உங்க முகத்தைக் காமிங்க. படம் எடுத்து பத்திரிகையில் போடலாமுன்னதுக்கு 'எடுத்துக்குங்கம்மா. நல்லா எடுத்துக்குங்க.என் பெயர் ரங்கநாதன்.  நான்  என் வேலையைத்தாம்மா செய்யறேன்'னார்.


ஒவ்வொருமுறையும்  கட்டணுமான்னால்... நாளுக்கு ஒரு முறை மட்டும்தான்.   ரசீதை பத்திரமா வச்சுக்குங்கம்மான்னார்.
போகட்டும், இங்கேயாவது  நகராட்சி வருமானத்துக்கு வழி செஞ்சுக்கறாங்க. வட இந்தியப் பயணங்களில்,  போக்குவரத்துத்துறை காவலர்கள்,வெளியூர் வண்டிகளை வழிமறித்து  மிரட்டி லஞ்சம் வாங்குவதை நிறைய அனுபவிச்சாச்சு:(

தொடரும்.........:-)


PINகுறிப்பு:  நியூஸியில் வண்டி எண்களைப் பார்த்து  அது எந்தப் பகுதியைச் சேர்ந்ததுன்னு கண்டுபிடிக்கவே முடியாது.  நாடு முழுக்க  வண்டிகளின் ரெஜிஸ்ட்ரேஷன்  ஒரு வரிசையில் மட்டுமே. அப்போ  ஆரம்பகாலத்தில்  A    வரிசையில்  ஆரம்பிச்சது  இப்போ ரெண்டெழுத்து,   முடிஞ்சு மூணெழுத்தில் நடந்துக்கிட்டு இருக்கு.  லஞ்ச ஊழல் இல்லாததால்.... எல்லாம் முறைப்படி ஒரு ஒழுங்கில் நடக்குது.

11 comments:

said...

சுருக்கமாக கதை சொல்வதில் தான் எத்தனை அழகு... உங்களின் பயணத்தில் பல கோவில்களை அறிய முடிகிறது அம்மா...

said...

வாழைப்பூ எதற்கு வைத்திருக்கிறது? நாங்கள் திருவரங்கம் சென்றிருந்தபோது, திருவானைக்கா கோவிலின் அருகில், வாழைப்பூவைக் கள்ளனை எடுத்துச் சுத்தம் செய்து 10 ரூபாய்க்கு விற்பனைக்கு வைத்திருந்தார்கள் (2014). உங்கள் புண்ணியத்தில் நாங்கள் பல கோவில்களைத் தரிசனம் செய்யமுடிகிறது. வாழ்த்துக்கள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

குறைஞ்சபட்சம் உங்கபின்னூட்டம் வந்துருமுன்னு கோபாலுக்கு அதீத நம்பிக்கை! அது பொய்க்கவில்லை:-)

நன்றீஸ்

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சுத்தம் செஞ்சு கிடைத்தால் வேலை சுலபம் என்றாலும் அன்றைக்கே சமைக்கணுமே!

என் புண்ணியம் ஒன்றும் இல்லை. எல்லாம் பெருமாள் க்ருபை! பயணத்தொடரில் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

said...

இப்படி ஒரு கதை இருக்கா? சரிதான்! வாழைப்பூ நானும் எப்போதாவது நிறையப் பேர் வந்தால் தான் வாங்குவேன். இரண்டு பேருக்கு மூணு நாள் வரும்! :) வாழைத்தண்டே இரண்டு நாள் வந்துடும்.

said...

புகைப்படங்கள் அருமை மேடம் வாழ்த்துகள்...

இந்தக் கட்டவுட்டை பார்த்ததும் வயித்தெரிச்சலா இருந்துச்சு இவ்வளவு செலவு செய்து கட்டவுட் செய்யிறவங்கே.... பொண்ணு - மாப்பிள்ளையை சிறியதாக போட்டு தெரிஞ்சுக்கிறாமல் போற நடிகர்களை எவ்வளவு பெரிசா போடுறாங்கே,,,,, இந்த சிந்தனை எல்லோருக்கும் வந்தால் அரிசி விலை அடுத்த ஐந்து வடத்துக்குப் பிறகாவது குறைய வாய்ப்பு உண்டு....

உங்களுடைய தளத்தில் இணைத்துக் கொள்ள முடியவில்லையே.... எப்படி ?

said...

காண முடியுமான்னு நினைக்கிற கோவில்களையும் கண் முன்னே கொண்டு வந்துடறீங்க , நன்றிகள் பல !!
//. நம்ம கல்யாணம் எப்போ? இங்கேதானே? //
:)))))

said...

படங்கள்: அருமை கோயில் பற்றிய கதையும் நல்லாத்தான் இருக்கு......என்ன....பார்வதி பாவம்பா.....இந்த மாதிரி போங்கு கதைகள்தான் நம்ம ஊர்ல நிறைய இருக்கே...பின்னி வைச்சுருக்காங்க....

அது சரி இந்தக் கல்யாண பேன்ர் வைத்த அன்பர்கள் அந்தப் பெருமாள் ஃபோட்டோவையும் அதுல போட்டுருக்கக் கூடாதோ?!! கோயில் மதில்ல வைக்க மட்டும் தெரியுது....

said...

உத்தமர்கோயில் சென்றுள்ளேன். நான் நேரில் பார்த்ததைவிட கூடுதலாகப் புகைப்படங்களைத் தங்கள் பதிவு மூலமாகக் கண்டேன்.

said...

திருச்சி பக்கத்துலன்னு தெரியும். ஆனாப் போனதில்ல. அடுத்த வாட்டி போய்ப்பாத்துற வேண்டியதுதான்.

ஒருவகைல நம்மூர் கல்யாணங்கள் தேவையில்லாத ஆடம்பரமானது. பொண்ணப் பெத்தவனுக்குத்தான் அந்த வலி தெரியும். இந்த மாதிரி கோயில்ல நடக்கும் எளிமையான கல்யாணங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு. எங்க குடும்பத்துல ரெண்டு மூனு திருமணங்கள் இவ்வளவு எளிமையா நடந்திருக்கு. வேனை எடுத்துட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போய் திருமணம். வழியில் இராஜபாளையத்தில் ஓட்டலில் மதியச் சாப்பாடு. கல்யாணம் முடிஞ்சது. சின்ன வயசுல அந்தக் கல்யாணத்துக்குப் போனப்போ வித்யாசமா இருந்துச்சு. இப்ப யோசிச்சுப் பாத்தா அது எவ்வளவு நல்லதுன்னு புரியுது.

கோயில்ல ரெண்டு பேரு சுவரோரமா என்னவோ சாப்பிடுற மாதிரி இருக்கே. பிரசாதமா? இல்ல சுவத்துல இருக்குற கிண்ணத்துல இருந்து திருநீறு பூசிக்கிறாங்களா?

கல்யாணத்துக்கு வந்துட்டு வெளிய நின்னுருக்கானுக. கல்யாணப் போஸ்டர்ல சினிமாக்காரங்களை போடுறவங்க வேற என்ன செய்வாங்க!

said...

படங்களும் பதிவும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன.