Monday, July 13, 2015

அட்டகாஸமான சாப்பாடும், அமைதியான புத்தரும்....... (தலைநகரத்தில் ! பகுதி 11)

நண்பர் ராம்ஸ் வீட்டுக்கு  ஒருமணிக்கு முன்னே வந்துருவோமுன்னு சொல்லி விலாசம் வாங்கிக்கிட்டோம்.  நாம் தங்கியிருக்கும் ட்ராவல் லாட்ஜில் இருந்து ஒரு 20கிமீ தூரம்தான்.  21 நிமிட்லே போயிறலாமுன்னு கூகுள்காரர் சொல்றார்.  கொஞ்ச நேரம் சிட்டிக்குள்ளே சுத்திட்டு  அப்புறம் அங்கே போகலாம்.  அவுங்களுக்கும் ஆக்கிஅரிக்க நேரம் கொடுக்கணுமுல்லே!


ஹார்பராண்டை வரும்போது  குக் ஸ்ட்ரெய்ட் ஃபெர்ரி வர்றது தெரிஞ்சது.  இது இப்போ பிக்டன் என்ற ஊரில் இருந்து வந்துக்கிட்டு இருக்கு.



நாம் வசிப்பது க்றைஸ்ட்சர்ச்  என்னும் நகரம். இது தெற்குத்தீவின்  நடுப்பக்கம் கிழக்குக்கரையாண்டை.  பிக்டன் என்ற ஊர் இருப்பது தெற்குத்தீவின் தலைப்பக்கம்.  வெலிங்டன் நகரம்  இருப்பது வடக்குத்தீவின் கீழ்க்கோடியிலே.  ரெண்டு தீவுகளுக்கும் இடையில் இருப்பதுதான் இந்த குக் ஜலசந்தி Cook Strait)  ஒரு 63.5 மைல் வரும். கடலுக்கடியில் இருக்கும் பாறைகளைச் சுத்திக்கிட்டுப் போகணும்.  விமானத்துலே கடந்தால்  40 மைல்.  இது இந்தப் பிக்டன் என்ற ஊரிலிருந்து  வெலிங்டன்  ஹார்பர் வரை.


நம்மூரில் இருந்து பிக்டன் போகணுமுன்னா காரில் அஞ்சு மணி நேரப்பயணம்.  அப்புறம் இங்கிருந்து ஃபெர்ரி எடுத்தால் அது ஒரு  மூணரை மணி நேரப்பயணம்.  என்ன ஒன்னு அதிகமான சாமான்கள், கூடவே கார் எடுத்துக்கிட்டுப் போகணுமுன்னால்  ஃபெர்ரிதான்.

நாங்க ஒரே ஒருமுறை  இந்த  கப்பலில் பயணம் செஞ்சுருக்கோம். அதுகூட அப்ப நம்ம  ரங்கா மாமா ரொம்ப உடல்நிலை மோசமாகி  ஆஸ்பத்திரியில் இருந்த  நேரம். நாள் குறிச்சிட்டாங்க.  எங்கே பார்க்கமுடியாமப் போகுமோ என்ற பதைப்பில்  கார்ப்பயணமா பிக்டன் வரை போய் அங்கே வண்டியைப் பார்க்கிங்கில் விட்டுட்டு கப்பலில் பயணம்.  வெலிங்டன் ஆஸ்பத்ரிக்குப்போய்   அவரைப் பார்த்துட்டு, அக்கா வீட்டில் இரவு தங்கி, மறுநாள் அதிகாலைக் கப்பலைப் பிடிச்சு  பிக்டன்வந்து சேர்ந்து, காரை ஓட்டிக்கிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.

 எனக்கு கடல்பயணம் ஆகாது. வெலிங்டனில்  கப்பலேறி  ஒரு  காமணி நேரத்துக்குள்ளே வயித்தைப் பிரட்டிக்கிட்டு  வழியெல்லாம் ஒரே டேஷ் தான். வாஷ் பேஸின் கிட்டே நின்னே  முழுப்பயணமும் போச்சு. பிக்டன் வந்த பின்தான்  மூச்சே ஒழுங்க வந்துச்சு.   இந்தக் கடல்பயணத்தில் உண்மையா அனுபவிக்க வேண்டியது  டால்ஃபின்களை. நமக்கு  அதிர்ஷ்டம் இருந்தால் கூட்டங்கூட்டமா கப்பலைத் தொடர்ந்து  வரும்.  மகளும் கோபாலும்  ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க.

நம்ம ஊருக்கு  அஞ்சு மணி நேர ட்ரைவ். நல்ல  குளிர்காலம்.  வழியெல்லாம் பனி மூடிக்கிடக்கும் சாலைன்னு  ரொம்பவே ஆபத்தான பயணமா இருந்துச்சு. விமானத்தில் போனால் முக்காமணி நேரப்பயணம்தான்.  ஆனால் அப்ப  செலவு ரொம்ப அதிகம். நாங்க மூணு பேர் போய் வர ஆயிரம் டாலர்.  கொள்ளை அடிச்சுக்கிட்டு இருந்துச்சு ஏர் நியூஸிலேண்ட்.  இப்பப் பாருங்க நாம் வந்துருக்கோம், ஸ்பெஷல் ஃபேர்ன்னு  49 டாலர் ஒன்வே!

(அப்புறம் ஒரு வாரத்தில் மாமா, சாமிக்கிட்டே போயிட்டார். நான் மட்டும் காலை நேர விமானத்தில்  போய்  இறுதிச்சடங்கில் கலந்துக்கிட்டு  மாலை விமானத்தில் ஊர் திரும்பிட்டேன். ஆச்சு 20 வருசம்!)

இப்ப ஃபெர்ரி வருதுன்னதும்  போர்ட்டுக்குள்ளே போய்வண்டியை நிறுத்திட்டு வேடிக்கை பார்த்தோம்.அப்படியே திரும்பி ரிவர்ஸ் எடுத்து ஜெட்டியில் போய் நின்னது. பிக்டனில் காலை எட்டுக்குக் கிளம்பி, இங்கே சரியா  பதினொன்னரைக்கு  வந்துருச்சு. கப்பல் பயணம் இனிதே, இந்த டேஷ் தொல்லை மட்டும்  இல்லையெனில்!

 இந்தக் கப்பல் தவிர  Interislander என்னும்  இன்னொரு கப்பல் சர்வீஸ் 1962 இல் ஆரம்பிச்சதும்  இருக்கு.  இதை நடத்தறது  Kiwi Rail. ரயில் கப்பல் ரயிலுன்னு மாத்தி மாத்திப் பயணம் செஞ்சு   நாட்டின் வடகோடியிலிருந்து தென் கோடிவரை போகலாம்.   கார்கள் பெருகிப்போனதால் ரயிலுக்குப் போக ஆட்கள் இல்லைன்னு  ஆகிப்போச்சு . இப்போ வெறும் சரக்கு ரயில்கள்தான் போய் வருது.

நகரின் முக்கிய சாலைகளை ஒருமுறை வலம் வந்தபின்,  லோயர் ஹட் போகும்  வழியில் போறோம்.  இதைத்தாண்டித்தான்  நண்பரின் பேட்டை வருது. கடலையொட்டியே போகும் சாலை.  மழை வேற ஆரம்பிச்சது. சிறு தூறல். சொன்ன நேரத்துக்குப் போய்ச்  சேர்ந்தோம்.  நண்பர் ராம்ஸ்   நம்ம குறிஞ்சி முருகன் கோவில் பூசகர்களில் ஒருவர். இதெல்லாம் வாலண்டியர்  வேலைதான். அவரவர்  ஆஃபீஸ் போய் வந்துட்டு  கோவில் வேலைகளில் பங்கெடுத்துக்கறாங்க.  நண்பரின் மகன் எங்க ஊர் யூனியில் படிக்கிறார்.

  குறிஞ்சிக்  குமரனைப் பார்க்காமல் விட்டவர்கள் இங்கே பார்க்கலாம்.


பேச்சு,  அட்டகாசமான  சாப்பாடு எல்லாம் நல்லபடியாப் போய்க்கிட்டு இருக்கும்போது  'இங்கே பக்கத்தில் ஒரு புத்தர் கோவில் இருக்கு போகலாமா'ன்னு கேட்டாங்க தோழி.  கரும்பு தின்னக்கூலியா?  ஆனாலும்  மாலை ஃப்ளைட் பிடிக்கணும். இன்னொரு இடமும்  போற வழியில் பார்த்துக்கணுமுன்னு இருக்கேன். இப்ப.... ...

இதைத்தவிர டிஸ்ஸர்ட்டுக்கு பாதாம்கீர்.


பக்கத்துலேதான்.  ஒரு , ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும்.  நல்லபேரமைதி அங்கேன்னதும் கிளம்பிட்டோம்.  ஸ்டோக்ஸ் வேலி (  Stokes Valley  ) என்ற இடத்தில்  புத்தமடம் ஒன்னு கட்டி இருக்காங்க.  போதிஞானராமா மடம்  என்று பெயர். ( Bodhinyanarama  monastic sanctuary )


தாய்லாந்து பிக்ஷூ  Ajahn Chah  என்பவர்  மேற்குலக மக்களை  புத்தமதத்துக்கு தன்  நகைச்சுவைப் பேச்சால் கவர்ந்துருக்கார்.  நிறைய நாடுகளில் (Australia, Switzerland, Italy, Canada, United States, France and Malaysia)  போதிஞானராமா மடங்கள்   ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வந்தார்.   1982 ஆண்டு  Ajahn Chah  நியூஸிக்கு வந்துருந்தார்.  இங்கேயும்  நிறைய ஆதரவாளர்கள்  இருப்பதால்  ஒரு மடம் தொடங்கலாமுன்னு  திட்டம் போட்டு,  காடாக இருந்த இந்த ஸ்டோக்ஸ் வேலி என்னுமிடத்தில் 126  ஏக்கர்   நிலம் வாங்கி  1985 இல் மடத்தைக் கட்டி எழுப்பிட்டாங்க.   ரெண்டு புத்த பிக்ஷுக்களை  இங்கிலாந்து மடத்தில் இருந்து இங்கே கூட்டிவந்து நித்தியப்படி அனுஷ்டானங்களை ஆரம்பிச்சாங்க.


ராம்ஸ் வீட்டில் இருந்து  பத்து கிமீக்கும்  குறைவுதான். காமணியில் போய்ச் சேர்ந்தோம். ரொம்ப  தொலைவில் இருந்தே  குன்றின் மேலொரு கோபுரம்  தெரிஞ்சது. அதன் அடிவாரத்தில்தான் மடம். நாங்க  குன்றின் மேல் ஏறிப்போகலை.  கீழே இருக்கும் மடத்துக்குள் போய்  புத்தரை தரிசித்தோம்.


கேட்டைக் கடந்து போனதுமே  திறந்த வெளியில்  ஒரு புத்தர் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.  அவருக்கு முன்னால்  சின்ன மண்டபத்தில் ஒரு பெரிய மணி!





மேலே 2 படங்கள், உபயம்:  ராம்ஸ்.



அடுத்த பகுதியில்  மூணுபக்கமும் பெரிய தாழ்வாரங்களோடும்  நாலாவது  பக்கம் பெரிய ஹாலோடும்  ஒரு அமைப்பு  இருக்கு. நடுவில் ஒரு திறந்தவெளி முற்றம்.  இங்கேயும்  ஒரு நின்ற கோலம்.


 ஹாலுக்குள்ளே   அமர்ந்த கோலத்தில் புத்தரின் சிலை.  அங்கே உக்கார்ந்து தியானம் செஞ்சுக்கலாம்.  சுற்றிவர அடர்த்தியான  மரங்கள்.  ஈ பறந்தால் கூட சத்தமாக் கேட்கும் அளவுக்கு பேரமைதி. நம்மை அறியாமலேயே நாமும் ரகசியக்குரலில்  பேசறோம்.



மேலே படம், உபயம்:  ராம்ஸ்.

மேலே படம், உபயம்:  ராம்ஸ்.








ஹாலையொட்டி இருந்த ஒரு சின்ன இடத்தில் நிறைய புத்தமத சம்பந்தமுள்ள புத்தகங்களை வச்சுருக்காங்க.  இலவசம். எடுத்துக்கலாம். ரொம்ப உயர்தரமான தாளில் அச்சடிச்சு வேறேதோ நாட்டில் இருந்து வந்தவை. பக்கத்தில் ஒரு  உண்டியல்.  விருப்பம் உள்ளவர்கள் எதாவது தானம் செய்யலாம்.  கோபாலும் ராம்ஸ்ம் சில புத்தகங்களை எடுத்துக்கிட்டு  உண்டியலில் ஒரு தொகையைப் போட்டாங்க.


இடமெல்லாமே அப்பழுக்கு இல்லாமல் படு சுத்தமாவும் நேர்த்தியாவும் இருக்கு!


கொஞ்சம் படங்கள் க்ளிக்கினேன்.  ராம்ஸ் எடுத்த படங்களை எனக்கு அனுப்பினார்.



அங்கிருந்து கிளம்பி,  ராம்ஸ் தம்பதியினரின் பேட்டை வந்ததும்  டாட்டா சொல்லிட்டு அவுங்க அந்தப்பக்கமும், நாங்க வெலிங்டன் சிட்டி பக்கமுமா பிரிஞ்சுட்டோம்.  வீட்டில் இருந்து கிளம்பும்போதே  அவுங்க பூஜை அறையில் போய்  கும்பிட்டுட்டு, வச்சுக் கொடுத்ததை எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டேன்:-)  மூணு வீடு மூணு வசூல்!


சொன்னாப்போல  மடத்துக்குக் கிளம்பிப் போய், தரிசனம் முடிச்சு   ஒரு மணி நேரத்துலே  வெலிங்டன் நகருக்குள் நுழைஞ்சாச்சு. லீவுநாள் (ஈஸ்ட்டர் மண்டே) என்றதால் அவ்வளவாப் போக்குவரத்து இல்லை. ஏற்கெனவே போகலாமுன்னு பார்த்து வச்ச இடத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். அஞ்சு மணிக்கு மூடிருவாங்க.  இப்போ  மணி,   மாலை  4.

தொடரும்........:-)




12 comments:

said...

தியானம் செய்ய என்னவொரு சிறப்பான இடம் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடிகிறது அம்மா... நன்றி...

said...

செம படங்கள் சகோதரி! இந்த ஐலன்ட் அமைப்பு, ஸ்ட்ரெய்ட் எல்லாம் வாசித்துக் கேள்விப்பட்டிருந்தாலும், உங்கள் விவரணம் வாசிக்கும் போது ஸ்வாரஸ்யம் இன்னும் கூடியது. அட புத்தர் அங்கயும் வந்துருக்காரே!! அமைதியான அழகான இடத்தை உங்கள் மூலம் அறிந்து, பார்க்க முடிந்தது (மனக் கண்ணால்) மிக்க நன்றி பகிர்வுக்கு...

said...

அருமைன்னு ஒரு வார்த்தையில் சொல்லி அடக்கி விட முடியாது. விதவிதமான புத்தர்கள் அழகு. நின்று சேவை சாதிக்கும் புத்தர்கள் உட்பட :-)

said...

ரொம்ப நல்லாருக்கு. ஆலயத்தில் உள்ள அமைதியே, தியானத்துக்கு அனுகூலமாக இருக்கும். எப்போதும்போல, சாப்பாட்டு மேஜையை நன்றாகப் பார்த்துவிட்டேன். எல்லாம் நல்லாருக்கு.

said...

அமைதியான இடம் .அழகிய புத்தன் படங்கள் , அருமை!! . கோபால் அவர்களின் போஸ் நன்றாக இருக்கு .

அந்த மணிகள் wallhanger வெகு அழகு .

said...

புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

புத்தர் கோயில்ல எப்பவும் ஒரு அமைதி இருக்கும். குறிப்பா இமயமலைச்சாரல்கள்ள இருக்கும் சில புத்தமடலாயங்களுக்குப் போயிருக்கேன். அங்கேயும் இதே அமைதி. பேசாம அங்கயே உக்காந்து தங்கிறலாம்னு தோணும். நம்ம நாக்குக்கு நல்ல சாப்பாடு கிடைக்காதுன்னே மனசு மாத்திக்க வேண்டியதாப் போச்சு.

சாப்பாடு படங்கள் அட்டகாசம். பாத்தால் பசி கூடும். :)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தோழி மட்டும் சொல்லைன்னா இப்படி ஒரு அருமையான இடம் இருப்பதே தெரிஞ்சுருக்காது!

நன்றிகள் அனைத்தும் தோழிக்கே!

said...

வாங்க துளசிதரன்.

புத்தர் எங்க தெற்குத்தீவுக்கும் வந்துட்டார். எங்க ஊரிலேயே மூணு கோவில்கள் இருக்கு. தாய்வான், தாய்லாந்து, இன்னும் ஒரு தனிப்பட்ட கோவில் (ஒரு வெள்ளைக்காரர் வீட்டுலே ) இருக்கு.

http://thulasidhalam.blogspot.com/2012/04/blog-post_23.html

இது தாய்வான் கோவில். தாய்லாந்து கோவிலைப் பற்றியும் எழுதித்தான் இருக்கேன். அதன் சுட்டியைத் தேடி அப்புறமா உங்களுக்குச்சொல்ரேன். சரியா. இதைவிட அது இயற்கைச்சூழலில் ரொம்ப அழகா இருக்கு.

said...

வாங்க அமைதிச்சாரல்.

போஸ் கொடுக்கும் புத்தர்களுக்கும் ஆசையே இல்லைப்பா:-))))

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

முந்தி ஒரு பதிவருக்காக சாப்பாட்டுப் படங்களை அதுவும் கோபால் சாப்பிடுவதை படம் போடுவேன். இப்போ உங்களுக்காக சாப்பாடு போடறேன்:-)

said...

வாங்க சசி கலா.

ஏறக்குறைய இந்த டிஸைன் உள்ள வால் ஹேங்கர்களை போன இந்தியப்பயணத்தில் கும்பகோணத்தில் வாங்கியாந்தேன். இன்னும் தொடரில் அந்த பாகம் வரலை. சீக்கிரம் வருமுன்னு தோணுது:-)

said...

வாங்க ஜிரா.


நம்ம தில்லியிலேயே ஆரவாரம் உள்ள பிர்லா மந்திருக்குப் பக்கம் ஜஸ்ட் ஒரு பில்டிங் தள்ளி ஒரு புத்தர் கோவில் இருக்கு. இங்கே கோலாகலமும் கூட்டமும். அங்கே படு அமைதி!

சொன்னாப்லெ... இந்த நாக்கு இருக்கே.... சொன்ன பேச்சைக் கேட்டுட்டாலும்........