Friday, August 14, 2015

நம்ம நம்பி ஒரு ஹென்பெக்டு ஹஸ்பெண்டாமே!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 71)

காற்றிலேறி விண்ணை எல்லாம் சாட வேண்டாம். சம்பாரிச்சுப் போட்டு, சொன்ன பேச்சைக் கேட்டால் போதும்!

கூந்தலூரில் இருந்து கிளம்பிய அடுத்த  25 நிமிசங்களில் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்திருந்தோம். பெருமாள் பெயரைப் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.  எதுக்கும் தாயார் கிருபை  வேணும்.  நாச்சியார் கோவில்னு சொன்னதும் சட்னு புரிஞ்சுரும் இல்லே!  நாச்சியார் கோவில் என்னும் திருநறைஊர்.
மாலை நேரத்துக்காகக் கோவில் திறந்ததும்,  முதலில் ஸ்வாமிக்கு  பூஜைகள் முடிச்சு நைவேத்யம் ('கை காமிச்சு')  கண்டருளப் பண்ணியதும், பக்தர்களுக்குப் பிரஸாதமா விநியோகம் செஞ்சுடறாங்க. டான்னு நாம்  சரியான நேரத்துலே போய்ச் சேர்ந்தோம். சுடச்சுட வெண்பொங்கல் வாழை இலை நறுக்கில்.  முதல்லே ப்ரஸாதம்  சாப்பிட்டுட்டுதான் மத்த வேலைன்னு கறார் கட்டளை! ஆச்சு.

பெருமாள் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். அவருக்குப்பின் இன்னும் நாலுபேர்! அவருக்கு  ஒரு எட்டு முன்னாலே தாயார் வஞ்சுளவல்லி. கருவறைக்கு வெளியே  நமக்கிடதுபக்கம்  பெரிய திருவடி தனிச்சந்நிதியில்.  இவர் கல்கருடர். வெள்ளியில்  மூக்கும் முழியுமா  கம்பீரமாப் பார்க்கிறார். நகைநட்டாப் போட்டுருப்பவை பாம்புகளே!  மொத்தம் எட்டு! இல்லை ஒன்பதா?  இந்தச்சந்நிதிக்கு மூலவரும் இவரே உற்சவரும் இவரே!.  திருவுலாப் போகும் நாட்களில் இவரையே அலாக்காத் தூக்கிண்டு போறதுதான் வழக்கம்.
சந்நிதியை விட்டு வெளிவரும்போது நாலு பேரால் தூக்கமுடியும் அளவுக்கான கனம் கொண்டவர் போகப்போக கனம் கூடிக்கிட்டே வர்றாராம். நாலு எட்டாகி  எட்டு பதினாறு, முப்பத்திரெண்டு ஆகும் அளவுக்குக் கனம் கூடிப்போகுதாம்.  ஊர்வலம் முடிஞ்சுத் திரும்பக் கோவிலுக்கு வரும்போது கனம் குறைஞ்சுக்கிட்டே வந்து கடைசியா நாலு பேர் தூக்கி உள்ளே வைப்பதற்குத் தோதாய் கனத்தைக் குறைச்சுக்கறாராம். கல்கருடர் படம் ஒன்னு  வாங்கிக்கிட்டேன். அப்படியே கோவிலை வெளியில்  படம் எடுத்துக்க அனுமதியும் வாங்கிக்கிட்டு, இருட்டாகுமுன்  க்ளிக்ஸை முடிச்சுக்கலாமுன்னு  கிளம்பிட்டேன்.  பெருமாள் கதையை அப்புறம்தான் சொல்லனும்.

அஞ்சு நிலை ராஜகோபுரம்.  உள்ளே நுழைஞ்சதும்  பெரிய பெரிய தூண்களுடன் நீண்டு போகும் முகமண்டபம். தூண்களோட சைஸைப் பார்த்தால் திருமலைநாயகர் மஹால் நினைவு வரத்தான் செஞ்சது. ஆனால் உயரம் கொஞ்சம்(!) குறைவுன்னு நினைக்கிறேன்.  இதுலே கொஞ்சதூரத்தில் கொடிமரமும் பெரிய திருவடிக்கானக் குட்டிச் சந்நிதியும்.
பிரகாரத்தில் வலம்போனால்.... முற்றத்தில் நீராழிமண்டபம் போல ஒரு அழகான மண்டபம். தேர்போல வடிவமைச்சு இருப்பாங்க போல. படிகள் முடிவில்  தேர்ச்ச்க்கரத்துக்கான் வட்டம். ஆரங்கள் இல்லை:-( முற்றத்தின் இடப்பக்கம் அன்னதானக்கூடம்.
சுற்றிலும்  வட்ட மேடை போட்ட ஒரு மரத்தடியில் நாலு பசங்க ஊசியால் பூக்களைக் கோர்த்துக்கிட்டு இருந்தாங்க. கிட்டப்போய்ப் பார்த்தால் மகிழம்பூ!  அந்த மரமே மகிழமரம்தான். பூக்கள் உதிர்ந்து சிதறி  இருப்பதைப் பொறுப்பாக் கோர்த்துக்கிட்டு இருந்தது  மனசுக்கு நிறைவா இருந்துச்சு.  கோவிலுக்குள்ளே நுழையும்போதே வாசலில் இருந்த பூக்காரம்மாவிடம் மகிழம்பூ சரங்கள் பார்த்தாக நினைவு.

சாமிக்குப் போடவான்னு கேட்டதுக்கு 'ஆமாம்'னு கோரஸா ஒரு பதில். பள்ளிக்கூடம் போய்வந்துட்டு,  சாயங்காலம் கோவிலுக்கு வர்றாங்களாம். ஒரே வகுப்பு. நாலாங் க்ளாஸ். பேரென்னன்னு கேட்டுக் க்ளிக்கிக்கிட்டேன்.

அருண்குமார், ரவிஷங்கர், தர்மநாராயணன், ராமன்.  க்ளிக்கிய படத்தை ரிவைண்ட் பண்ணிக் காமிச்சதும் பசங்களுக்கு  முகத்தில் சிரிப்பு.  இண்ட்டர்நெட்லே போடப்போறேன். உலகமே உங்களைப் பார்க்கப் போகுதுன்னதும் மலந்த முகங்கள்.  டிஜிட்டல் கேமெரா வந்தபின்னால்.... இப்படிச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் வந்துருக்குல்லெ!
'இந்த வயசுலே எவ்ளோ பக்தி பார்'ன்னார் கோபால்.  நான் என் புள்ளையார் கோவில் அனுபவத்தை எடுத்துவிட்டேன். பார்க்கில் விளையாடுவோம்.  பார்க்கை ஒட்டியே ஒரு  புள்ளையார் கோவில். அங்கே பூஜை மணி  ஒலி வந்தவுடன்  கட்டைச் சுவரைத் தாண்டிக் குதிச்சு ஓடுவோம்.  உச்சியில்(!) தொங்கும்  சின்ன காண்டாமணி(!) கயித்தை  யார் இழுக்கறதுன்னு  போட்டி இருக்கும் என்றாலும்  முக்காவாசி நாட்கள்  நானாத்தான் இருப்பேன்:-) எனக்கு விடலைன்னா விளையாட்டுலே சேர்த்துக்க மாட்டேன்லெ.

பூஜை முடிஞ்சதும் ஒரு அச்சுவெல்லத் துண்டைக் கல்லால் நசுக்கி  சிட்டிகை அளவெடுத்து நீட்டும் கைகளில் தடவிவிடுவார் பூஜாரி ஐயா. ஜஸ்ட் ஒரு தீற்று.  உத்துப்பார்த்தாலும்  இருக்குமிடம் தெரியாது:-) ஆனாலும் கையை நக்கிக்கிட்டே  போய் பார்க்லே இருக்கும் தாமரைக்குளத்துலே(!)  கையை அலம்பிக்கறதுதான்.  என்ன பக்தி பாருங்களேன் அப்ப  இருந்தே!

 ஏங்க,  உள்ளே ஒரே சூடு.  வெளியே வாங்க இப்படி ஹாயா மரத்தடியில் உக்கார்ந்து பேசலாம். சரிங்க. நீங்க சொன்னபடியே  வந்துட்டேங்க :-)

பிரகாரம் சுத்தமாத்தான் இருக்கு. குப்பைகள் இல்லை.  ஆனால்   புல்முளைச்சு  வரும் தரையைக் கொஞ்சம் சீர் படுத்தணும். பழைய கோவில்தான். பிரகாரத்தின் கோடியில் இன்னொரு சந்நிதி.  ஆண்டாள்!

வெளிப்புற மதிலைச்சுற்றி இருக்கும் மரங்களிலிருந்து கூச்சல்போடும் காக்காய் கூட்டம்!  காதே செவிடாகிரும் போல!  கூடடையும் நேரம் பாருங்க.  பறந்து பறந்து, கத்திக் கத்தி   இருக்கும் சக்தியை எல்லாம் செலவழிச்சுட்டுப் போய் தூங்குவாங்க போல!  அதான் உடம்பு ஊதாம சிக்ன்னு  இருக்குதுங்க பறவைகள்.




ஆஞ்சநேயர், நரசிம்மர், ஆழ்வார்கள் சந்நிதிகளைக்க் கும்பிட்டுப் பிரகாரம் சுத்தி மீண்டும் பெருமாளுக்கு முன்னால் போய் நின்னோம்.

பெருமாளுக்கு இங்கே ரெண்டே கைகள்தான்.  மேதாவி முனிவரிடம்  பெண்கொடை கேட்டுக் கையேந்தி நிற்கிறாராம்.

நம்ம மேதாவி முனிவர்  கொஞ்சம் அப்பாவிதான் போல!   மஹாலக்ஷ்மியே தனக்குப் பொண்ணா வந்து பிறக்கணுமுன்னு  வேண்டிக்கிட்டவர்.  பாருங்களேன்...  அவனவன் பெண்குழந்தையா.... வேணவே வேணாமுன்னு அலறியடிச்சுக்கிட்டுக் கருவிலேயே அதுக்கு சமாதி கட்டும் இந்தக் காலத்தில் இருக்கும் எனக்கு  .... என்ன தைரியத்தில்  இவர் அதுவும் ஒரு முனிவர்....  பொண் குழந்தை வேணுமுன்னு  வேண்டி இருக்கார்னு வியப்புதான்.

நம்ம புராணங்களில் பார்த்தீங்கன்னா சாமிகள் எல்லாம்   மரத்தடியிலோ,  இல்லை  தடாகங்களில் இருக்கும் தாமரை மலர்களிலோ  டைரக்ட்டா குழந்தையாவே வந்து  அவதரிச்சுடுவாங்க.  அதே போல் ஒரு வகுள மரத்தடியில் பெண்குழந்தையொன்னு இவருக்குக் கிடைக்குது!  வகுளம் = மகிழம். மகிழ மரத்தடியில் பாப்பா!  மகிழமரம்தான் இங்கே தல விருட்சமும்! அதான் பசங்க மகிழம்பூ தொடுத்துக்கிட்டு  இருந்தாங்களா!!!

வகுளமரத்தடியில் கிடைச்ச பாப்பாவுக்கு வஞ்சுளவல்லின்னு நாமகரணம் ஆச்சு.  ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து  இங்கே வந்துட்டாங்க  மஹாலக்ஷ்மித் தாயார்.   கொஞ்சம் பெரியவளாகட்டுமுன்னு  பெருமாள் ஸ்ரீவைகுண்டத்துலேயே காத்திருந்தார்.  பிக்கல் பிடுங்கல் இல்லாமல்   ஹாயா இருந்துருப்பார்னு நினைக்கிறேன்.


இங்கே சின்னப் பாப்பா வளர்ந்து பெரிய பாப்பா ஆகியிருந்த சமயம்,  பெருமாள்  வர்றார்.  மனைவி எங்கே  போய்ப் பிறந்தாள்னு தெரியாததால்  தேடிக்கண்டுபிடிக்க நாலு பேர் வேணுமேன்னு  இவரே தன்னையும் சேர்த்து அஞ்சு  ஆளா  வர்றாராம்.

சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன்,  வாசுதேவன், புருஷோத்தமன் இப்படி  தன் பிள்ளை, பேரன்னு தன் குடும்ப அங்கத்தினர்கள் பெயரிலேயே   ரூபம் எடுத்தாச்சு.   நாலுபேரை நாலு திசைக்கு அனுப்பித் தேடிப் பார்க்கச் சொல்றார்.  அவுங்களும்  தேடிக் கண்டுபிடிச்சு சேதி சொன்னாங்க. மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்கு அஞ்சு  இளைஞர்களும் வந்து சேர்ந்தாங்க.

ஆசிரமவாசலில் நின்ன அதிதிகளைப் பார்த்து  மகிழ்ந்த முனிவர் , அவுங்களை உள்ளே வரவேற்று,  சாப்பாடு போடறார்.  சாப்பிட்டு முடிச்சவங்களுக்குக் கைகழுவத் தண்ணீர் ஊத்தச் சொல்லி மகளிடம் சொல்றார்.  நான் அப்பாவின்னு நினைச்சது இப்பத்தான். தடிதடியா வாலிபப் பசங்க  வந்துருக்காங்க.   அதுவும் முன்பின் தெரியாதவங்க. வயசுக்கு வந்த பொண்ணை இப்படியா அவுங்க முன்னால்  கொண்டு நிறுத்தறது?

நாலு பேரும்  ஓசைப்படாமத்  தலை குனிஞ்சு சாப்பிட்டோமா,  குனிந்த தலை நிமிராமல்  கை கழுவுனோமான்னு  போனப்ப , அஞ்சாவதா வந்தவன் ( வந்தவர்) பொண்ணைக் கையைப் பிடிச்சு இழுத்துட்டான். உண்ட வீட்டுக்குச் செஞ்ச துரோகமில்லையோ?  பயந்துபோன பொண்ணு 'குய்யோ முறையோ'ன்னு கத்த, வந்து பார்த்த மகரிஷிக்கு கோவம் பொங்கிக்கிட்டு வந்துச்சு. சபிக்கப்போகும் தருணம் அந்த 'அஞ்சாத அஞ்சாமத்து ஆள்' (வாசுதேவன் என்ற பெயர்) உங்க பொண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்கோன்னு கெஞ்சினாராம். இவன் யாரடா போக்கிரின்னு நினைக்கும்போது தன்னுடைய 'சுயரூபத்தை' வெளிப்படுத்தி இருக்கார் பெருமாள்.

ஆஹா.... ... விஷ்ணுவே மாப்பிள்ளையா வந்தாக் கசக்குமா? ஆனாலும் இப்ப மாமனார் கை ஓங்கி இருக்கு. 'பொண்ணைத் தா' ன்னு கெஞ்சிக் கேட்பவரிடம் சில கண்டிஷன்களைப் போட்டுக்கணும். இந்த நொடியைத் தவறவிட்டா.....அப்புறம் இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்குமா?

"என் பொண்ணுக்குத்தான் எல்லாத்துலேயும் முதலிடம் கொடுக்கணும். அவள்தான் இங்கே அதிகாரம் செய்யறவளா இருக்கணும். நீ வீட்டு மாப்பிள்ளையாக் கிட. இன்னும் சுருக்கமாச் சொன்னால் அவள் பேச்சைக் கேட்டு நீ ஆடணும்"

பொண்ணு கிடைச்சாப்போதுமுன்னு தலையை ஆட்டிட்டார் வாசுதேவன். அப்புறம்?

அம்மாதான் இங்கே எல்லாம். இடுப்பிலே சாவிக்கொத்து கூட இருக்கு. கெஞ்சும் முகபாவத்தோடு கை நீட்டும் பெருமாளும், அவரைவிட ஒரு எட்டு முன்னால் நிற்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருமா இருக்காங்க கருவறையில். பெருமாளின் முகம், பாவனை அட்டகாசம். அந்த நாலுபேரும்தான்  கருவறை பின்பக்கம்  நின்னுக்கிட்டு இருக்காங்க.

மனைவி சொல்லே மந்திரம் என்றநிலை என்பதால்  பக்தர்களுக்கு அருளும் பொறுப்பை எல்லாம்  பவர் ஆஃப் அட்டர்னின்னு பெரிய திருவடிக்குக் கொடுத்துட்டார். அவரும் பொறுப்பை ஏத்துக்கிட்டு விஷக்கடி முதல் சகல வேண்டுதல்களுக்கும்  இல்லை என்னாமல்  வரங்களை வாரி வாரிக்கொடுப்பதால்  அவருக்குத்தான் பக்தர்கூட்டம் அதிகம்!

பூக்கள் அலங்காரத்தில் பிரமாதமா இருக்காங்க  வஞ்சுளவல்லியும் வாசுதேவனும்.  உற்சவருக்கு 'இடர்கடுத்த திருவாளன்' என்று பெயர்.  மூலவருக்கு திருநறை நம்பி என்னும் பெயரும் உள்ளது. அதைக் கொண்டுத்தான் ஊருக்கும் திருநறையூர் என்ற பெயர்.  ஊருக்குப் புராணப்பெயர் வேறொன்னு... சுகந்தகிரி க்ஷேத்ரம்!

தாயார் இடுப்பில் சாவிக்கொத்து இருக்கான்னு தேடுனதில் என் கண்ணுக்கு ஆப்டலை. பட்டர்ஸ்வாமிகளிடம் கேட்டதுக்கு,  பூ அலங்காரத்தில் மறைஞ்சுருந்த சாவிக்கொத்தைத் தேடி  வெளியே நீட்டிக் காமிச்சதோடு, 'இதுக்கு முன்னால் தரிசனத்துக்கு வந்திருந்தேளா'ன்னார்.

'ஆமாம்.  அது ஆச்சு  அஞ்சு வருஷம்' என்றேன். அப்போ ஆனந்ததுலே தங்கல்.  அங்கே நாம் சந்தித்த மிருதங்க வித்வான்  நாச்சியார் கோவில்காரர்தான். கோவிலுக்கு வந்து போன நாள்தான் அவருடைய கச்சேரி  கேட்டோம். பேச்சுவாக்கில் அவர் தன் ஊர் நாச்சியார் கோவில் என்றதும், 'இப்ப அங்கேதான் போயிட்டு வந்தோம். அங்கே அதிகாரமெல்லாம்  அம்மாவுக்குத்தான்' என்றேன்.  எங்க பெருமாளைப்போல ஒரு 'ஹென்பெக்டு ஹஸ்பெண்டை'ப் பார்த்திருக்க முடியாதுன்னு சொல்லிச் சிரிச்சார். நான் கோபாலை ஏறிட்டுப் பார்த்தேன். (என்ன இருந்தாலும் மதுரைக்காரர் ஆச்சே)

அப்போ எழுதுனதைப் பார்க்காதவர்கள் விருப்பம் இருந்தால் இந்தச்சுட்டில்  பார்க்கலாம். தொடர்ச்சிக்கு இதை அடுத்தும்  ஒரு இடுகையைச் சேர்த்துக்குங்க.

சீச்சீ.....விருந்தாளி செய்யும் வேலையா இது..

என்ன திரிசமன் பாருங்களேன்!


நம்ம திருமங்கை ஆழ்வார் இங்கே வந்து  இந்தப்பெருமாளுக்கு மட்டுமேன்னு நம்பி நம்பின்னு உருகி உருகி நூற்றுப்பத்து  பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார். அந்த வகையில் இது 108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்னு.  ஆமாம்  அது என்ன நூத்துக் கணக்காக? எல்லாம் ஒரு  நன்றிக்கடன்னும் சொல்லிக்கலாம்.
அவருடைய பழைய வாழ்க்கையில்  ஒரு குறுநிலமன்னராக இருந்தார். பெயர் நீலன்.  பெருமாளிடம் அளவில்லாத பக்தி அப்பவே!  தன்னுடைய செல்வத்தையெல்லாம்  பெருமாளுக்கான கோவில், குளம், கட்டி வெட்டுவதற்கே செலவு செஞ்சவர்.  அப்படியும் இவரை  வைணவராக யாருமே ஏத்துக்கலை.

தோள்களில் சங்கு சக்கரம் முத்திரை இல்லாதவர் வைணவர் கிடையாதுன்னு அப்போ ஒரு எண்ணம்.  இதை யார் வேணாவந்து வச்சுடமுடியாது.  ஆச்சாரியன், தன் சிஷ்யரின் நியம நேஷ்டைகளைப் பார்த்து,  அவருக்குத் திருப்தியானால்தான்  பழுக்கக் காய்ச்சிய  சங்கு சக்கரச் சின்னங்களை தோளில் பதிப்பார்கள்.

  (ஆமாம்...நேஷ்டைன்னு ஒரு சொல் உண்டா? எனெக்கென்னமோ தட்டச்சும்போது தானா வந்து விழுந்துருச்சே! இல்லைன்னா சொல்லுங்க. எடுத்துடலாம். சேஷ்டை ஆகிடகூடாது பாருங்க.)  தூங்கி எழுந்ததும் மனசில் வந்த சொல் நிஷ்டை!  நியமம் நிஷ்டை சரின்னு நினைக்கிறேன். ஓக்கே?

நீலன், பெருமாளிடம் வந்து வணங்கி,  தன்னை ஒரு வைணவனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டறார். மனம் இரங்கிய மஹாவிஷ்ணு, தானே ஆச்சாரியனாக வந்து முத்ராதானம் செஞ்சு வைக்கிறார்.  அதனால்தான் இங்கே பெருமாள்  ரெண்டே கைகளோடு இருக்கார்னு சொல்றாங்க. அப்ப,பொண்ணு கேக்க  நாலுகையோடு வந்தரா என்ன?  அப்பவும் சாதாரண மனுஷ்யனா ரெண்டு கைகள்தானே இருந்துருக்கும், இல்லையோ!

பெருமாள் தன்னை ஏற்றுக்கொண்ட நன்றியில் பரவசமான  மன்னர் திருமங்கை 110 பாசுரங்களாப் பாடித் தீர்த்துட்டார்!

பஞ்சக்ருஷ்ண க்ஷேத்ரங்கள் (க்ருஷ்ணாரண்யம்)  என்று அஞ்சு கோவில்கள் விசேஷமாம்.  திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் மற்றும் திருக்கண்ணங்குடி.  முக்தி தரும் பனிரெண்டு திருக்கோவில்களில் திருநறையூரும் உண்டு என்கிறார்கள்.

நமக்கும் முக்தி கிடைச்சாச்சுன்னு நம்பிக்கையோடு நம்பியிடமும், நம்பிக்கை நாயகி வகுளவல்லியிடமும்  சொல்லிக்கணும்.
பூஜை நேரத்தில்  ஜோடியா வந்து சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்த கருட பட்சிகள் 18-1.99 அன்று  கோவில் தலவிருட்சமான மகிழமரத்தடியில் ஜோடியாகவே மோட்சத்திற்கு போயிட்டதாம்!


கோவில் காலை 7.30   முதல் பகல் 12.30 வரையிலும், மாலை  4.30 முதல் இரவு 9 மணி வரையும் திறந்துருக்கு.

திருமங்கை ஆழ்வாரைப்பற்றி இன்னும் ஒரு சுவையான சமாச்சாரம் படிச்சேன். இவருடைய பூர்வாசிரமத்துலே  குமுதவல்லி என்றொரு பெண்ணை விரும்பறார்.  அவளிடம் போய் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வந்துருக்கேன்னு சொன்னதும், அவள் சொல்றாள், 'நீர் முத்ராதானம் பெறவில்லை. உம்மை மணம் முடிக்க இயலாது'
அதுக்குப்பிறகு பெருமாளிடம் அழுது அரற்றி முத்திரை வாங்குனதும் திரும்பப் போறார் குமுதவல்லி வீட்டுக்கு.  இப்போ இன்னொருவிதமான நிபந்தனை விதிக்கிறாளாம் அவள்.

"தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்குத் திருவமுது படைத்து,  அவர்கள் அனைவரும் உண்டு முடித்தபின் மீதியான எச்சிலை உண்டு, அவர்தம் பாதம்பட்ட தீர்த்தத்தை பருக வேணும். இப்படி ஓராண்டு காலம் செய்துமுடித்த பின்  திரும்பி வந்தால் மணம் புரிவேன்"

ஃபோர் மச்சா இல்லை?

ஆனால்  திருமங்கை, குமுதவல்லி சொன்னபடி செஞ்சுக்கிட்டே வந்துருக்கார். செல்வம் எல்லாம் கரைஞ்சு போயிருது. ஆனால் ஒரு வருசம் இன்னும் முடியலை.  அதுக்காக வழிப்பறி செய்து  செல்வம் சேர்த்து,  அதில்  அமுது படைக்கும் செயலை விடாமல் செஞ்சு, கடைசியில்  குமுதவல்லியையே  கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்! காதல் எப்படியெல்லாம் ஆட்டுவிக்குது!!!

கோபுரவாசலில் வந்து நின்னாவே தூரத்தில்  பெருமாள் நிக்கறது  தெரியும்விதமா இந்தக் கோவிலைக் கட்டுனவர்  கோச்செங்கட்சோழன்.  முகமண்டபம் தாண்டி படிகளேறிபோனால் முன்மண்டபம். அதுக்கு அந்தாண்டை கருவறை!  நல்ல விளக்கு போட்டு வச்சுருப்பதால்  பளிச்ன்னு இருக்கார் பெருமாள்.  (இதே போல் திருப்பதியில் இருக்கப்டாதோ அந்த ஸ்ரீநிவாசன்? இந்தக் கோவிலுக்கே சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் என்றுதானே போர்டே போட்டு வச்சுருக்காங்க! ) 


நாம் வெளிவரும் சமயம்  பசங்க,  தூண் மறைவில் ஒளிஞ்சு  ஐஸ்பாய் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. சாமிக்கு  பூ மாலை போட்டாச்சான்னேன். சட்னு   விவரம் புரியாத ஒன்னு,  பூக்காரம்மாட்டெ கொடுத்துட்டேன் என்றது:-)

கோபுரவாசலுக்கு வெளியேயே ஒரு புள்ளையார் சந்நிதி இருக்கு.   தும்பிக்கை ஆழ்வாராக அருள் புரிகிறார் இவர்.

பொதுவா கோவில்களில் எடுக்கும் படங்களுக்கு ஃப்ளாஷ் பயன்படுத்துவதில்லை.இங்கே வேற  இருட்டிக்கிட்டு வருது. அதனால் படங்கள் அவ்ளோ  க்ளியரா வரலை:-(

அதென்னவோ ஏற்கெனவே சிலமுறைகள்  இந்தக் கோவிலுக்கு வந்திருந்தாலும்.... எல்லாமே சாயங்காலம் இருட்டும் சமயத்தில்தான்.
இன்னும் கோவிலைச் சரியாப் பார்க்கலைன்னு  மனசு சொல்வதால், அடுத்த கும்மோணப்பயணத்தில் இன்னொருக்காப்போய்  வஞ்சுளவல்லியைக் கண்டுக்கணும். பகல் நேரமாக இருக்கும்படி பார்த்துக்கணும்.

இந்தக்கோவிலில்  இருந்து  திருச்சேறை  சாரநாதப்பெருமாள்   கோவிலுக்குப் பத்தே நிமிசம்தான்.  அங்கே போய் ஜஸ்ட் சாமி கும்பிட்டுட்டு வந்துட்டோம். அடுத்தமுறை நாச்சியார் கோவிலுக்குப் பகலில் போகும்போது இங்கேயும் போய் வந்தபின்தான் எழுதணும். இந்தக் கோவிலும் 108 இல் இருப்பதே!  போனேன் வந்தேன் என்றிருக்கும்போது  விஸ்தாரமா எழுத இயலாது:-(

திரும்ப அறைக்கு வந்து சேர்ந்தப்ப  இரவு மணி எட்டு. குளத்தைச் சுற்றி ஒரு  நடைன்னு ஆரம்பிச்சுப் பாதி வழியிலேயே திரும்ப வேண்டியதாப்போச்சு. கொஞ்சம் விளக்கு போட்டு வச்சுருக்கக்கூடாதோ?   ஒரே இருட்டு. குளக்கரைப்படிக்கட்டுகளில் அங்கங்கே அரை இருட்டில்  கடலைகள் வறுத்துக்கிட்டு இருக்காங்க  காதலர்கள்.   கும்மோணத்தின் மெரீனா!
கடைத்தெருவை வேடிக்கை பார்த்தப்ப  நேந்திரங்காய் சிப்ஸ் பொரிச்சுக்கிட்டு இருந்த   கடையில்  சுடச்சுட  ஒரு நூறு கிராம் சிப்ஸ் வாங்கினோம்.  சுமாராத்தான் இருந்தது.

ராயாஸ்  க்ராண்டில் ஒவ்வொரு மாடியிலும் இருக்கும் மெயின் ஹாலில்  இருக்கும்  விக்கிரக அலங்காரங்களைக் கிளிக்கிட்டு வந்தோம்.

நாளைக்கு இன்னும் சில கோவில்கள் போகலாம்.  தூங்கி எழுந்து ஃப்ரெஷா வாங்க.

தொடரும்......:-)


12 comments:

said...

நாச்சியார்கோயில் சென்றுள்ளேன். கோயிலை முழுமையாகப் பார்த்துள்ளேன். தற்போது தங்கள் எழுத்தின்மூலமாக மறுபடியும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல அனுபவப்பகிர்வு. நன்றி.

said...

நாச்சியார் கோவில் சென்றுள்ளோம் அதைப் பதிவுமாகி இருக்கிறேன் ஆனால் இவ்வளவு இஷயங்கள் இல்லை.

said...

மகிழம்பூ கட்டும் பையன்களில் ஒருத்தன் பேரு ரவிசங்கரா?
படத்துல, யாரு டீச்சர் அந்தப் பையன்?

அந்தப் பசங்களை நல்லா வச்சிருக்கட்டும் தாயாரும் பெருமாளும்..
பூ கட்டிச் சாமிக்குக் குடுக்குறதை விட, பூக்காரம்மாவிடம் குடுப்பதே புண்ணியம். அந்தம்மா பிழைப்பதோடு, எப்படியும் சாமிக்குத் தானே போய்ச் சேரப் போகுது?

வெண்பொங்கல், வாழையிலைச் சருகில்..பார்க்கவே ஆசையா இருக்கு:)

மகிழம் பூக்கள் அழகு!
எனக்கு ரொம்பப் பிடிக்கும், தனி வாசனை

பார்வைக்கு ரோஜா, செண்பகம் போல் பெருசா இல்லீன்னாலும், "பொடிப் பொடியாய்" இருக்கும் அழகு..!
முருகன் கழுத்தில் சூடி விளையாடலாம், பொடிப்பொடியா அவன் கழுத்தோடவே முகர்ந்து பார்க்கலாம்:)

எங்க வாழைப்பந்தல் கிராமத்துப் பள்ளிக் கூடத்தில், கீழேயும் சிதறிக் கிடக்கும், மகிழம் பூக்கள்! அதைப் பொறுக்கறதே என் வேலை;)
நம்மாழ்வார் எனும் மாறன்..32 வயசு நாயகி பாவப் பையன், அவனுக்கும் பிடிச்ச பூ.. மகிழம்/வகுளம்; "வகுளாபரணன்" என்ற சிறப்புப் பேரு ஆழ்வாருக்கு உண்டு!

கல் கருடன்.. 4, 8, 16, 32 தூக்குறது உண்மை தான், ஆனா கனம் கூடுது என்பதெல்லாம் வழக்கமான ஆலய உடான்ஸ் தானே? Ha ha:))

said...

நாச்சியார் கோவில் - உங்கள் பதிவு மூலம் நானும் சென்று வந்தேன்.

கல் கருடன் கனம் கூடுவது பற்றி படித்ததுண்டு....

said...

பொங்கல் வாழையிலையில் பிரசாதம் - அருமை. கல் கருடன் ஆச்சர்யமான ஒன்று. நான்கு பேர் ஏளப்பண்ணுவது (சேர்ந்து தூக்கிக்கொண்டு வருவது) நினைக்கவே கடினம். நம்பிக்கைதான் வாழ்க்கையில் சுவாரசியத்தைக் கொண்டு வருவது. டீச்சர் சும்மா எங்களைக் கேட்கிறீர்களே 'நியம நிஷ்டை'தான் சரி.

said...

கல்கருடன் கனம் கூடுவது பழைய நாட்களிலிருந்து பாட்டி சொன்னதுதான். கருடன் முகத்தில் வேர்வைத்துளிகள்
வருவது கண்கூடு. நல்ல நினைவுகளைக் கொடுத்திருக்கிறீர்கள் துளசி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சரியா எழுதி இருக்கேனா? இன்னொருக்காப் பகலில் போகணும் என்ற ஆசை!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இன்னும்கூட விவரங்கள் இருக்கலாம். பார்க்கலாம் அடுத்தமுறை போக நேர்ந்தால்.....

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கே ஆர் எஸ்.

வலதுபக்கம் தனியா இருப்பவர் ரவிஷங்கர்னு நினைவு. பொருத்தமா இல்லைன்னா சொல்லுங்க.மாத்திக்கலாம்:-))))

நம்புனாதான் சாமியே என்பதால் 32, 64, 128 எல்லாத்தையும் நம்பிவைக்கலாம். என்ன முடை?

எனக்கும் வகுளம் பிடிக்கும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுறாதீங்க. அந்த முகமண்டபத்துக்கே ஒரு முறை போய் வரலாம்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நிஷ்டை என்ற தெளிவு அப்புறம் வந்தாலும் மனம் பண்ணும் கொனஷ்டைக்கு வரவர எல்லையே இல்லாமல் போகுது!

சுவாரஸியம் இல்லாம ஒரு வாழ்க்கையா? சப்.....:-(

said...

வாங்க வல்லி.

வேர்வைத் துளிகள் வருகின்றனவா? அட!