Wednesday, September 30, 2015

ஜலமா இல்லே ஸ்தலமா ? ...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 82)

இன்றைக்குப் பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பறோம். நம்ம அறை ஜன்னலுக்கு எதுத்தாப்லே  அம்மன் கோவில் ஒன்னு.  சிம்ஹவாஹினிக்கு இங்கிருந்தே ஒரு கும்பிடு. கடமைகள் முடிச்சு   காலை உணவுக்குப் போனோம்.  எத்தனை ஸ்டாரா இருந்தால் நமக்கென்ன?
இட்லி, வடை கூடவே கொஞ்சம் பொங்கல். ஒன்பது மணிக்கு செக்கவுட் செஞ்சுட்டு நேரா மாமல்லபுரம்.  ஒன்னரை மணி நேரமாச்சு. தூரம்  95 கிமீ.  சாலை அருமையா இருக்கு.




திருக்கடல் மல்லை.  ஸ்தலசயனப் பெருமாள் கோவில்.  இதுவும்  அந்த நூற்றியெட்டில் ஒன்னு!


பலிபீடம், தீபஸ்தம்பம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதி கடந்தால் எதிரில் நூற்றுக்கால் மண்டபம்!

ஒரு சமயம்....  இங்கே தாமரைப்பூக்கள்  ஏராளமாப் பூத்து நிற்கும் பொய்கை இருந்தது. இங்கே ஆசிரமக்குடில் ஒன்னு கட்டி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார்  புண்டரீக மகரிஷி.  புண்டரீகம் என்ற சொல்லுக்கே  தாமரை என்றுதான் பொருள்!  தாமரைக் குளத்தாண்டை  குடில் இருந்ததால் கூட இவருக்குப் புண்டரீக மகரிஷி என்ற பெயர் வந்துருக்கலாம்!   தாமரையின் அழகைப் பார்த்தவர், இவையெல்லாம் எம்பெருமாளுக்கேன்னு நினைச்சு  பூக்களைப் பறிச்சு ஒரு கூடையில் எடுத்துக்கிட்டுப் பாற்கடலில் பள்ளிகொண்டவனைத் தேடிப்போறார்.  குறுக்கே வந்தது   வெறுங்கடல். இதைத் தாண்டினால்தான் பாற்கடல் வரும் போல!  எப்படித் தாண்டிப்போறது?  யோசிச்சார். ஐடியா கிடைச்சிருச்சு.

பேசாம, இந்தக்  கடல் தண்ணீரைக் கோரி அப்பாலிக்கா ஊத்திட்டா  கடலின் அடியில் தரை தெரியும். அதன் வழியே நடந்தால் பாற்கடல் போய்ச்  சேர்ந்துடலாமே!  ஆஹான்னு  ஒரு ஓரமா உக்கார்ந்து தன் கைகளால் கடல் தண்ணீரை  அள்ளி இந்தாண்டை ஊத்த ஆரம்பிச்சார்.

பக்தி மனசுக்கு  இது நடக்கற வேலையான்னு கூட  சந்தேகம் துளிகூட வரலை.  நாட்கள், மாதங்கள், வருசங்கள்ன்னு கடந்து போய்க்கிட்டே இருக்கு. வேற ஒரு கவனமும் இல்லை.... இவருக்கு.  ஒருநாள் கை வலி பொறுக்கமுடியாமல் போய் ஒரு  நிமிசம்  தண்ணி அள்ளப்போன கைகள் அப்படியே நின்னுச்சு.

அப்ப அங்கே ஒரு  கிழவர் வந்தார். 'கடலாண்டை உக்காந்துக்கிட்டு என்ன செய்யறீர்'னு  ரிஷியைக் கேட்க,  'கடல்தண்ணியை இறைச்சு  ஊத்திட்டு,  கடல்தரையில் நடந்துபோய்  பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளை ஸேவிச்சு  இந்தத் தாமரைப் பூக்களை  அவருக்குச் சமர்ப்பிக்கணும். அதான்.......'

"அதுவரைக்கும் இந்த பூக்கள் வாடாம இருக்குமா என்ன?"

"அதெல்லாம் பெருமாள் பார்த்துக்குவார். பறிக்கும்போதே இது பெருமாளுக்குன்னு சொல்லிட்டேன். இனி அவர் பொறுப்பு."

"ஓ....   அதுவும் சரிதான்.  ஆமாம்....தனியா உக்கார்ந்து  சிரமப்படுகின்றீரே  ஐயா. நான் வேணுமுன்னா கூடச்சேர்ந்து தண்ணியை இறைக்கவா?"

"இது என்ன கேள்வி?  கமான் ஹெல்ப் மீ."

"ஆனால் எனக்கு இப்போ பசி அதிகமா இருக்கே. மயக்கம் வர்றது .....  எனக்கு எதாவது  சாப்பாடு கொடுத்தால்  அதை உள்ளே தள்ளிட்டு உமக்கு உதவுவேன்..."

"முதல்லே இந்த வேலை முடியட்டும்...  உமக்கு சோறு  போடறேன்."

"அப்படிச் சட்னு முடியுமா? கொலைப் பசி வேற.  இந்த பாவம் உமக்கு வந்துடப் போகுது...."

"அப்டீங்கறீர்?  சரி. இந்த பூக்கூடையைப் பத்திரமாப் பார்த்துக்கும். நான் போய் உமக்கு எதாவது கொண்டு வரேன்...."

கிளம்பி ஊருக்குள் போய்  கொஞ்சம் சாப்பாடு வாங்கி வர்றார். வந்து பார்த்தால்....  பூக்கூடையையும் கிழவரையும் காணோம். அப்புறம்?  கடலில் தண்ணியைக்கூடக்  காணோம். ஹா....  தரை பளிச்ன்னு  கிடக்கு.
அதுலே இறங்கி விடுவிடுன்னு நடந்து போறார்.  தூரக்கே  பாற்கடல் வெள்ளையாத் தெரிஞ்சது.  அதில்....

அதில்?

கிழவர்  ஒய்யாரமாப் படுத்திருக்க, அவரை அலங்கரிக்கும் கூடைத் தாமரைப் பூக்கள்!

"பெருமாளே.... நீரா?  நீரா?"

இதே போல  அனைவருக்கும் எப்போதும் சிம்பிளாக ஸேவை சாதிக்கணும் என்று கேட்டுக்கிட்டார்.  அதே போல் ஆச்சு.

பாம்புப் படுக்கை இல்லாமல் வெறும் தரையில்  கிழக்கு நோக்கிக் கிடந்த கோலம்!

ஜல சயனப்பெருமாள் என்றுதான்  பெயர்!  எப்போ இப்படி ஸ்தல சயனப்பெருமாள்  ஆனாருன்னே தெரியலை!  உற்சவருக்கு இங்கே உலகுய்யநின்றான்  என்று நாமம்.  கையில் ஒரு தாமரைப்பூவுடன் நிக்கறார். இந்த நூற்றியெட்டு திவ்யதேசங்களில் கையில் தாமரையுடன் நிற்பவர் இவர் மட்டும்தானாம்!   ரொம்ப விசேஷமாச் சொல்றாங்க.  தாயார் நிலமங்கை என்ற பெயருடன்!  பூதேவி!

ஆதியில் ஒன்பதாம் நூற்றாண்டில் கடற்கரையிலேயே பல்லவர்கள் கட்டிய கோவில் இருந்ததாகவும்,  அதன்பின் இப்போ இருக்கும் கோவில் பதினாலாம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் பராங்குசன் என்பவரால் கட்டப்பட்டு, பிள்ளை லோகாச்சாரியார் முன்னிலையில் பெருமாளை இங்கே ப்ரதிஷ்டை  செஞ்சதாயும் கோவில் வரலாறு  சொல்கிறது.

ரொம்பப்பெரிய கோவில்னு சொல்ல முடியாது. மீடியம் சைஸ்தான். கோவிலில் எதோ விசேஷம் நடந்து முடிஞ்சுருக்கு போல .... ஓலைப்பந்தலுக்கான கம்பங்கள் அங்கங்கே...

கதவுகள், நிலைவாசல் இப்படிக் கொஞ்சம்  வுட் ஒர்க் நடந்துருக்கு. தசாவதாரக் கதவு பரவாயில்லை.

இன்றைக்கு இங்கே  உண்டியல்  திறக்கறாங்களாம். பதினொரு மணிக்கு, அறநிலையத் துறை மக்கள்  வந்துருவாங்க.  இன்னும்  ஒரு 20 நிமிசம்தான் இருக்குன்னாலும்....  வேடிக்கை பார்க்கணுமுன்னு தோணலை. அவ்வளவு  வருமானம் வரும் கோவிலாத் தெரியலை.  பாவம்.... பெருமாள். அவருக்குக் கிடைக்கும் கொஞ்சத்தில் அரசு பங்கு போட்டுக்குது :-(

பூதத்தாழ்வார்  அவதாரம் செய்த ஊர் இது. அவரும்,  திருமங்கை ஆழ்வாரும் பாசுரங்கள் பாடி  மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க.


தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால், 
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும் 
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே, 
ஏவல்ல எந்தைக் கிடம். 

இப்படி நம்ம பூதத்தாழ்வார் சிம்பிளா ஒரு பாட்டு பாடி இருக்கார்!



ஆனா  நம்ம திருமங்கை?

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்
பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.....

இப்படி திருமங்கை ஆழ்வார் பாடியது,  திருநின்றவூர் பக்தவத்ஸலன் அவரைத் துரத்திக்கொண்டு வந்து, 'அங்கே வாயத்திறக்காமல்  வந்துட்டீரே... இப்ப  பாட்டு வாங்கிண்டு போக வந்துருக்கேன். இல்லைன்னா  மனைவியிடம் பாட்டு  வாங்க வேண்டி இருக்கும்' என்று கெஞ்சியதால்தானாம்!

பக்தவத்ஸலனுக்கு  ஒரு பாட்டைக் கொடுத்து அனுப்பிட்டு, நின்னு நிதானமாக

1
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்நூலை மெய்நூலென்று மோதி
மாண்டு அவத்தம்போகா தேவம்மின் எந்தை
எண்வணங்கப்படுவானை கணங்களேத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லை தலசயனத்தே'

2
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே.

3
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்
பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

4

பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்
பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப்
பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

5
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்
கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி
இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

6
பேணாத வலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்
பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை
உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே.

7
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை
இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

8
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப்
படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை
விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

இப்படிக் கடல்மல்லைத் தலசயனத்தேன்னு முடியும் எட்டுப்பாடல்களுடன், தலசயனத்துப்பெருமாளுக்காக இன்னும் ஒரு பதினோரு பாடல்களுமா மொத்தம் இருபது பாடல்கள் இங்கே பாடி இருக்கார்.

திருமங்கை ஆழ்வாரிடம் பிடிச்ச விஷயமே இதுதான்....   எந்தப்பெருமாளைப் பார்த்து அனுபவிக்கறாரோ.... அங்கே மடை திறந்த வெள்ளம்போல் பாட்டுகளை  பாடித் தீர்த்துருவார்! இங்கிருந்து போனபின்பும்  இந்தப் பெருமாளை நினைச்சு இன்னும் ஆறு பாடல்களும் பாடினார்.  ஆக மொத்தம் ஸ்தலசயனப் பெருமாளுக்கு  இருபத்தியேழு பாசுரங்கள்.


1
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப்
படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க்
கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
தீவினையை முதலரிய வல்லார்தாமெ.

2
நண்ணாத வாளவுண
ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும்
பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடல்மல்லைத்
தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை
யிறைப்பொழுது மெண்ணோமே.

3
பார்வண்ண மடமங்கை
பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வகத்தி
லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க்
கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா
ரவரெம்மை யாள்வாரே.

4
ஏனத்தி னுருவாகி
நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால்
மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத்
தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை
நினைவாரென் நாயகரே.

5
விண்டாரை வென்றாவி
விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம்
அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத்
தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா
ரவரெங்கள் குலதெய்வமே.
6
பிச்சச் சிறுபீலிச்
சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு
மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர்
கடல்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை
நச்சென்றன் நன்னெஞ்சே

7
புலன்கொள்நிதிக் குவையோடு
புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்ளென் மடநெஞ்சே.

8
பஞ்சிச் சிறுகூழை
யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட
அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர்
கடல்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே.

9
செழுநீர் மலர்க்கமலம்
திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ
ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும்
கடல்மல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே.

10
பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம்
பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை
வணங்கென்றன் மடநெஞ்சே.

11
கடிகமழு நெடுமறுகில்
கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு
மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன்
கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம்
முதல்வர்முத லாவாரே.


இந்தப் பெருமாளை ஸேவித்தால், திருப்பாற்கடல்  ஸ்ரீ வைகுண்டநாதனையே ஸேவித்த பலன் கிடைக்குமாம்!  நமக்கும் கிடைச்சதேன்னு  மகிழ்ச்சிதான்.
அஞ்சு நிலை ராஜகோபுர நுழைவு வாசலில் தொடங்கிருது ,சிற்பங்களின் வரிசைகள்.  சும்மா அப்படியே  கண்ணில் ஒத்திக்கும் வகையில் செதுக்கித்தள்ளி இருக்காங்க அந்தக் கால சிற்பிகள்!


மாசி மகத்துக்கு இங்கே கடல்மல்லையில் தீர்த்தமாடினால் (நான் சொல்றது  கடலில் முங்கிக் குளிப்பதை!)  காசி , ராமேஸ்வரத்தில் நீராடுவதற்குச் சமமாம்.  ச்சும்மாப்போய் கும்மோணத்து மஹாமகக்குளத்தில் கூட்டம் போடவேணாம்னு  பொருள்!

கோவில் திறந்துருக்கும் நேரம் காலை 7 முதல் 12. மாலை  3 முதல் 8 வரை.

இப்படி மூணு மணிக்குத் திறக்குறாங்கன்னு தெரியாம, பலமுறை மகாபலிபுரம் போயிருந்தாலும் கோவில்கள் அஞ்சு மணிக்குத் திறப்பாங்கன்னு நினைச்சுக் கோட்டை விட்டுருக்கேன். அப்புறம்  சிலமுறை  காலை நேரங்களில்  போனதும் உண்டு.  ஊருக்குள்ளே போனதும் முதலில் கோவிலுக்குப் போயிட்டு, அப்புறமா கடற்கரைக் கோவில்களைப் பார்க்கணுமுன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்.

இன்னும் ஒரு கோவில் (பூஜைகள் நடக்கும் கோவில்தான்) இங்கே இருக்குன்னாலும்  இதுவரை அங்கே போக வாய்க்கலையேன்னு  கிளம்பினோம்.

தொடரும்.......:-)


12 comments:

said...

108-க்கு இன்னும் எத்தனை பாக்கி. பக்தி மேலிட்டால் மரை கழலலாம் ஒரு வேளை அதுவும் பக்திப் பெருக்கீடோ. கதைகள் சுவாரசியம்

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இன்றைக்கு நம்ம கடையில் ஆளே இல்லைன்னு மனம் நொந்து போயிருந்த கோபாலுக்கு ... உங்க பின்னூட்டம் தேன்!

பக்தி பெரிய போதை !

74 ஆச்சு. இன்னும் 32 பாக்கி. ப்ளஸ் மேலோகத்தில் ரெண்டு.

said...

அட! இப்ப நான் இருக்கற ஊரு...அதாங்க சென்னை...இந்தக் கோயில் எல்லாம் யாரு வீட்டுக்கு வந்தாலும் லிஸ்ட்ல உண்டு....ஸோ நிறைய விசிட்...ஆனா பாருங்க உங்க எழுத்துல அதை வாசிக்கும் போது இன்னும் ஸ்வாரஸ்யம் கூடுது!!!!

துளசி: நானும் பார்த்துருக்கேன் இந்தக் கோயில்....4 வருடங்களுக்கு முன்....

அருமை சகோ...அப்ப நாங்களும் உங்க கடைப்பக்கம் வந்துட்டோம்ல.....

நன்னாயுட்டுண்டில்லே...சந்தோஷிச்சோ....!!!?

said...

அருமை.

said...

சிற்பங்கள் ஒவ்வொன்றும் அற்புதம். ஆஹா கலைப்பொக்கிஷம். இது வரை சென்றதில்லை. உங்கள் பதிவு மூலம் சென்றதைத் தவிர!

said...

oh my god! how i missed this..
இது டீச்சர் பதிவா? ஆழ்வார் பதிவா?
பாசுர மழையாப் பொழிஞ்சி இருக்கேப்பா:)

ஒரு பதிவில், இத்தனை ஈரத் தமிழ்ப் பாசுரங்கள், ஒருங்கே குடுத்த முதல் பதிவு, இது தான்னு நினைக்கிறேன்; சரியா டீச்சர்?:)
தலசயனத்துறைவாருக்கு நன்றி!

said...

எத்தனை முறை மாமல்லபுரம் போனாலும் அலுக்காது . இப்போ உங்க கூடவும் ஒரு முறை பாத்தாச்சு . படங்கள் அருமை!!

said...

வாங்க துளசிதரன்.

வளரே சந்தோஷம்! நன்னி:-)

said...

வாங்க சாந்தி.

நன்றீஸ்ப்பா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

குடும்பத்தோடு சென்னைக்கு வரும்போது கண்டிப்பா ஒரு நாள் மாமல்லபுரத்துக்குன்னு எடுத்து வச்சுக்கணும். பலசமயங்களில் இது நினைப்போடவே போயிருதுல்லே? பேசாம அங்கே ஒரு பதிவர் மாநாடு நடத்தணும்போல:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

என்னவோ இப்படிப் பாசுரங்களைப் பதிவில் சேர்க்கணுமுன்னு பெருமாள் நினைச்சுட்டார் போல!

ஒன்னு ரெண்டோடு நிறுத்த முடியாமல் போச்சு:-(

ஆழ்வார் நெஞ்சுக்குள் புகுந்ததை பெருமாள் அங்கீகரிச்சதா வச்சுக்கலாம்:-)

said...

வாங்க சசி கலா.

ஆமாம்ப்பா. பேசாம ஒருநாள் அங்கே தங்கி இருந்து இன்னும் நல்லாப் பார்க்கணும். ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு சென்னையில் இருந்து கிளம்பினாலும் ரெண்டுமணி நேரப்பயணத்தில் பத்தாகிருது. அப்புறம் மாலை திரும்பும்போது ட்ராஃபிக்கில் மாட்டிக்கப்போறோம் என்ற பயத்துலே அடிச்சுப்பிடிச்சுக் கிளம்பிடறோமே :(