Wednesday, November 04, 2015

எழுதுறவங்களுக்கு வாசகர் சந்திப்பு கசக்குமா என்ன?

உங்களுக்கெல்லாம் தெரியாத ஒரு வாசகர் துளசிதளத்துக்கு வந்து போறார். தனிமடலில் மட்டும் தொடர்பு. என்னை சந்திக்கணுமுன்னு ஒரு ஆவல். பயணக்கட்டுரைகளை வாசிச்சதும்,  'வந்துட்டுப் போயிருக்கீங்க, என்னிடம் சொல்லவே இல்லையே'ன்னு மடல் அனுப்புவார். இப்படிப் பலமுறைகள்! அதனால் இந்த முறை சந்திக்கலாமுன்னு ஒரு ஏற்பாடு.

அந்த நன்னாள் இன்றுதான் என்பதால்  இன்னொரு 'முக்கியமான வேலை'யைக் கொஞ்சம் தள்ளிப் போட்டுருந்தேன்.  அவரும் வேலைக்குப் போகுமுன் வர்றதாச் சொல்லி இருந்தார். சொன்னபடியே சொன்ன நேரத்துக்குச் சரியா வந்தார் அனந்து.
உடம்பொறந்தாளைப் பார்க்கப்போகும் உடம்பொறந்தான் தான்! கையில் இனிப்பு, காரம், மல்லிகைப்பூ! எனக்கு மனசே குழைஞ்சு போச்சு!
எதோ அடிபட்டுக் கை தொட்டிலில் கிடந்தது :-(
முதல்முறை சந்திக்கும்  வாசகர் என்ற எண்ணமே தோணலை. வீட்டு, நாட்டு விஷயங்களைப் பேசிக்கிட்டு இருந்தோம். நெடுநாள் எண்ணம் நிறைவேறின  ஒரு அபூர்வ திருப்தியும்  பரவசமும் முகத்தில் தெரிஞ்சது போல எனக்கொரு தோணல். எங்களுக்கு  நம்ம பூனா வாழ்க்கையில் குருசாமி என்றொரு நண்பர் இருந்தார்.  அவரை சந்திச்சதுபோல் இருக்கேன்னு நினைச்சால், கோபாலும் இதையே சொல்றார்!
 எதோ பூர்வஜென்மத்து பந்தம்போலத்தான் இந்த  பதிவர் வாசக உறவுகள்!  ஒரு மணி நேரம் போனதும் தெரியலை. அடுத்தமுறை வீட்டுக்கு வரணும் என்பதோடு  விடைபெற்றுப் போனார்.

நாங்களும் கிளம்பி  அண்ணன் வீட்டுக்குப் போனோம். முகலிவாக்கம். அங்கே சூடா ஒரு காஃபியை அண்ணி கையால் குடிச்சுட்டு, நேற்றே போட்ட திட்டத்தின்படி  வேளச்சேரி  ஃபீனிக்ஸ் மால் போய்ச் சேர்ந்தோம். வெளியே லுக் இல்லையே தவிர உட்புறம் நல்லாவே இருக்கு.  சென்னையின் புதியமால் இது. இன்னும் வெளி அலங்காரம் முடியலை போல! பெயருக்கேத்தாற்போல் உயிர்த்தெழட்டும்!

வேளச்சேரி  இப்ப தி.நகருக்குப் போட்டியா உருவாகுதுபோல. அங்குள்ளவை அனைத்தும் இங்கேயும்!

எனக்கொரு மோதிரம் வாங்கித்தரணுமுன்னு நம்ம கோபாலுக்குத் தாங்க முடியாத ஆசை:-) அதுவும் வைரமாத்தான் இருக்கணுமுன்னு நிர்ப்பந்தம் பிடிக்கிறார்! நாப்பதாவது  திருமணநாள் வந்தப்போ,  நியூஸியில் வேணாம். அஞ்சு மாசத்தில் இந்தியா போறோமே அப்ப வாங்கித்தாங்கன்னு தள்ளிப் போட்டுருந்தேன்.(சரியான கைகேயி!) 

தி நகர் ஏரியாவில் ஒரு சில கடைகளில் தேடியும் மனசுக்குப் பிடிக்காமல் போனதால் அண்ணி வாங்குன கடையில் பார்க்கலாமுன்னு இங்கே வந்து இருக்கோம். சரியானதும் ஆப்ட்டது!



ஆனாலும் அண்ணி போட்டுருக்கும் டிஸைன் சூப்பரா இருக்குல்லே!
பகல் சாப்பாட்டை இங்கேயே முடிச்சுக்கலாமுன்னு ராஜ்தானி போனால் செவ்வாய் தோறும் தாலி(யாம்!) நல்ல ருசியான சாப்பாடுன்னு அண்ணன் சொன்னார். மூத்தோரின் முன் அனுபவங்கள்!

சும்மாச் சொல்லப்டாது....ராஜ்தானியில்  ராஜ உபச்சாரம்தான்! ராஜஸ்தான், குஜராத் உணவு வகைகள். அன்லிமிட்டட். ஆனால் நமக்கு  என்ன ரெண்டு வயிறா இருக்கு?








மாலில்  அங்கங்கே அலங்காரமா வச்சுருக்கும் மறுசுழற்சி முறையில் செய்யப்பட்ட சில  சமாச்சாரங்கள் நல்லாவே  இருக்கு.


மனீஷ் நய் சின்ன வயசுக்காரர். அவரோட ஐடியாக்களுக்கு அங்கீகாரமும் கிடைச்சுருக்கு! (கீழே படம்)



அண்ணன் வீட்டில் கொஞ்சம் வேலை செய்ய எலக்ட்ரீஷியன் வர்றதாச் சொல்லி இருந்தார்.  இப்ப விட்டா மறுபடி ஆளைப்பிடிக்க முடியாதேன்னு  கிளம்பிட்டோம்.  அண்ணி வீட்டை ரொம்ப அழகா வச்சுருப்பாங்க. எனக்கு பலவகைகளில் இன்ஸ்ப்ரேஷனே அவுங்கதான்!  எந்த  ஒரு வேலையையும்  முகம் சுளிக்காமல் நறுவிசா செய்யும் பாங்கு!  எதுக்கும் அலட்டிக்காமல் 'இங்கெல்லாம் இப்படித்தாங்க' ன்னுடுவாங்க. எனக்கு இது மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது. மூஞ்சைத் தூக்கி வச்சுக்குவேன் :-)




அண்ணனையும் அண்ணியையும் அவுங்க வீட்டில் விட்டுட்டு அறைக்குத் திரும்பினதும் கொஞ்சமா ஒரு ஓய்வு.  நமக்கும் சென்னையை விட்டுக் கிளம்பும் நாள் நெருங்குவதால்  கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கணும்.

மயிலைக்குப்போய் நம்ம விஜயா ஸ்டோர்ஸில் கொஞ்சம் சாமி சாமான்கள் வாங்கிக்கணும். அப்படியே  எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ போய் மகளுக்கு சில  அலங்காரப் பொருட்கள்.



சுத்திப் பார்த்தபோது  ஒரு  கைவினைப்பொருட்கள் கடை என் கண்ணில் பட்டது.  நிறைய அலங்காரப்பொருட்கள். 50% ஆஃப் ஸேல் ஐட்டம் பகுதியில் கொஞ்சம் யானைகள் இருக்கு. எல்லாம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் வகைகள்தான். ஒரு ஹரிக்கேன் விளக்கு பார்க்க நல்லாவே இருந்துச்சு.


மார்பிள் வகை. ராஜஸ்தான் சரக்கு. குமிழைத் திருப்பினா வெளிச்சத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியுது.  கொலுவுக்கு இருக்கட்டுமுன்னு  வாங்கினேன். இது போன்ற சமயங்களில் கோபாலோடு ஐ கான்டாக்ட் கூடவேகூடாது :-)

பாண்டிச்சேரியில்  நம்ம புள்ளையார் கோவில் கடையில் பார்த்தவகையில் பொம்மை ஒன்னு இங்கே இருந்துச்சு. நாட்டியப் பெண்மணி. ஆனால் வேற போஸ். ப்ச்..... வேணாம். இதை மட்டும்  கோபாலிடம் சொல்லணும். " நல்லாத்தான் இருக்கு. ஆனால் வேணாம்."   போகட்டும்.... மனசமாதானம்  அடையட்டுமே!

அங்கிருந்து கிளம்புமுன் சீனிவாசனுக்கு தகவல் சொல்லணும்.  மாலில் பார்க்கிங் கொள்ளை இருப்பதால் எங்களை இறக்கி விட்டுட்டு வெளியே  வேறெங்காவது பார்க் பண்ணிக்கறேன். நீங்க ஃபோன் பண்ணதும் வரேன்னார்.  எப்படியும் ஒரு மாலுக்குள்ளே நுழைஞ்சால் ரெண்டு மணி நேரம் ஆகிருமேன்னு  வேணுமுன்னா வீடுவரை போய் வாங்களேன்னதுக்கு  சரின்னார்.

அதே போல ஃபோன் செஞ்ச பத்தாவது நிமிட் வந்துட்டார். நாம் இப்போ ஒரு மூத்த  பதிவரை சந்திக்கப்போறோம். மூத்த என்றால் வயதில். பதிவுலக அனுபவத்தில் இல்லை. இப்பெல்லாம் பதிவு எழுதறதே இல்லை.  ஏழுவருசம் ஆச்சு :-(  இவரும் இவர் குடும்பம் முழுசும் என்னை தத்து எடுத்துக்கிட்டாங்க. எனக்கு இன்னொரு அண்ணன், சிவஞானம்ஜி.

வரேன்னு கூப்பிட்டுச் சொன்னதும்.... போய்ச்சேருமுன் வாசலுக்கும் உள்ளுக்குமா பத்துதடவை நடந்து எட்டிப் பார்க்கும் அன்புக்கு என்ன கைமாறு?

அண்ணி ஊருக்குப்போயிருக்காங்க, மகள் வீட்டுக்கு. இங்கே வீட்டையும்  மாமனாரையும் பார்த்துக்க மகன், மருமகள் இருக்காங்க என்பதால்  கவலை இல்லை. பொழுது போக இருக்கவே இருக்கான் பேரன்!! இவன் ஒரு டிவி ப்ரேமி. பார்க்கணும் என்பது  ஒரு பிரச்சனையே இல்லை. அதுபாட்டுக்கு கத்திக்கிட்டு இருந்தால் போதும். தாத்தாவை விட டிவி நல்லாப் பேசுதுன்னு நினைப்போ! அன்றைக்குப் பக்கத்து ஃப்ளாட் நண்பனும்  தன் அம்மாவோடு அங்கே இருந்தாலும் அவரவர் விளையாட்டு அவரவருக்கு!  பின்னணி மட்டும் ஒன்னுதான். டிவி :-)

அதிகநேரம் தங்கலை. முக்காமணிக்கூறுதான். அடுத்த பயணத்தில் அங்கே போய் சாப்பிடணும். அண்ணியும் வந்துருவாங்க.  அண்ணனுக்கு அவ்வளவா உடம்பு முடியலையாம். அதான் எழுதறதே இல்லைன்னார்.  ஆனால் துளசிதளம் மட்டும் அப்டுடேட் வாசிப்பு.

இப்படியாக அன்றைய தினம் அருமை ! எழுதுறவங்களுக்கு  வாசகர் சந்திப்பு கசக்குமா என்ன?

இந்தப்பதிவை நேத்து இரவு எழுதி வச்சேன். காலையில் அண்ணன் சிஜி (சிவஞானம்ஜி) யின் மெயில் வருது  நலமான்னு கேட்டு!  டெலிபதி......!!! ஆயுசு 100ன்னு பதில் போட்டேன்.

தொடரும்.......:-)



28 comments:

said...

நட்புகளின் சந்திப்பு அருமை. நீங்கள் சென்ற இடம் எல்லாம் நாங்களும் கூடவே பயணித்தோம்.

said...

அருமையான சந்திப்பு! உடன் பயணம் செய்த திருப்தி!

said...

அடடா...எத்தனை தடவை பீனிக்ஸ் போயிருக்கிறேன்...உங்களைப்போல் பதிவு செய்ய முடியலயே...
திண்ணைகள் மறந்த சென்னையில் இப்படி ஒரு வரவேற்பு....
நானும் ஒருமுறை வரவேண்டும்... உங்கள் கரம் குலுக்க....
அருமையான பதிவு..மனசு மென்மையாகிரது

said...

அருமை அம்மா அருமை...

said...

ராஜஸ்தான் உணவு, மயில் மற்றும் மற்ற கைவினை விஷயங்கள, மால் , பதிவர் சந்திப்பு....அனைத்தும் சூப்பர்

said...

மயிலும் அரிக்கேன் விளக்கும் ரொம்ப அழகாயிருக்கு.

said...

பீனிக்ஸ் மால்ல பார்க்கிங் கொள்ளை. இதப்பத்தி எப்பயோ எழுதிய நினைவு. பீனிக்ஸ் மால்ல எனக்குப் பிடிச்சது நண்டூஸ் தான். மேன்செஸ்டர்ல சாப்டுப் பழகுனது. பிடிச்சிப் போய் சென்னைக்கு வந்ததும் போய் சாப்ட்டாச்சு :)

ராஜ்தானியெல்லாம் சாப்புட்டு முடிக்க முடியாது. ரெண்டு வயிறில்ல.. நாலு வயிறு வேணும். என்னைக்காவது ஒரு நாள் ஆசைக்குச் சாப்டுக்கலாம்.

அரிக்கேன் விளக்கு அட்டகாசம். பளிங்கினால் ஒரு மாளிகை மாதிரி.. பளிங்கினால் ஒரு விளக்கு.

சிவஞானம்ஜி.. பழைய பதிவர். நல்லா இருக்காரா?

said...


என்ன ஒரு ஒற்றுமை. நானும் என் தளத்தில் நான் சந்தித்த ஒரு பதிவர் பற்றி எழுதி இருக்கிறேன் இவர் இன்னும் எழுதி கொண்டிருக்கிறார் இவர் தளத்தில் இவரது புகைப்படம் கிடையாது அநேகமாக பலருக்கும் பரிச்சயம் இருக்க வாய்ப்பில்லை நல்ல நட்புகள் வலையுலகம் மூலம் கிடைத்தாலும் நேரில் சந்தித்து உரம் ஏற்றுவது மகிழ்ச்சிதான்

said...

அருமையான பதிவு மேடம். மிக்க நன்றி.

said...

அக்கா
உங்கள் திருமனத்தை பார்கலியென்னு ஒரு வருத்தம் ஆனா இப்ப மோதிரம் போட்டதை பார்தச்சு. கல்யாண சாப்பாடு சாப்பிட வாரென் ஹா ஹா ஹா

said...

eஎந்தக் கடையில மோதிரம் வாங்கினீங்க துளசி ? பேரு சொல்ல முடியுமா?

said...

மயில்கள், ஜார்கள் அந்த விளக்கு எல்லாமே அழ்கு...அருமையான சிந்திப்பு...படங்களும் அழகு..

கீதா: ஃபீனிக்ஸ் மால் வரை வந்துருக்கீங்க. சே தெரியாமப் போச்சே...கொஞ்சம் இப்பாலே ஐஐடி பக்கத்துலதான் வீடு...ஹும் கொடுத்து வைக்கல...யாருக்கு?..எனக்குத்தான்....நல்ல சாப்பாடு கொடுத்துருப்பேனேனு...அதே ராஜதானி சாப்பாடு....

நெக்ஸ்ட் டைம் வந்தா சொல்லுங்க சந்திச்சுருவோம்....

said...

துளசி கல்யாண வைபோகமே
கோபால் கல்யாண வைபோகமே

பாட்டுக்காகப் பேர் சொல்லிக் கூப்டுட்டேன், மன்னிச்சிக்கோங்க டீச்சர்:)
மோதிரம்/மாலை மாற்றல் அருமை:)

அத்தினி மயிலு இருக்கே, ஒன்னு எனக்குக் குடுக்கப்படாதா? ஏற்கனவே இருக்கும் 20 collectionல, 21 ஆ வச்சிப்பேன்ல்ல?:)
பளிங்கு ராந்தல் விளக்கு, பிரமாதம்! என்னவொரு நேர்த்தி, ஆனா புகை படியாதோ?

சாப்பாட்டுத் தட்டைல்லாம் பாத்தாப் பயமாருக்கு:) இராவணன் மாதிரி பத்து வாய் எனக்கில்லைப்பா, அம்புட்டு திங்க:)
Phoenix Mall போனதே இல்லை.. எப்பவாச்சும் வரும் போது, போவோம்:)

சிஜி சாருக்கு, என் நனி மிகு வணக்கம்!

said...

சந்திப்பு - திகட்டுவதில்லை......

தொடரட்டும் சந்திப்புகள். நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க கோமதி அரசு.


நீங்கெல்லாம் கூடவே வர்ற தைரியம்தான் இப்படி ஊர் சுத்தச் சொல்லுது:-)

said...

வாங்க செந்தில் குமார்.

உங்கள் வாசிப்பு எனக்கும் திருப்திதான்.

said...

வாங்க, நான் ஒன்று சொல்வேன்.


சென்னையைச் சும்மாச் சொல்லக்கூடாது. ஒரு ஆபத்துன்னா யாரும் யாரையும் விட்டுக்கொடுப்பது இல்லை. இந்த மழைக் காலத்தில் எப்படி உதவ முன் வர்றாங்கன்னு பார்த்தால் எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.


உங்களுக்கு என் நன்றிகள்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க சாந்தி.

அழகை அழகுன்னுதான் சொல்லணும்:-)

said...

வாங்க ஜிரா.


நாமும் எப்போவாவது ஒருமுறைதான். தினமும் அப்படி சாப்பிட முடியாது!
மால் பார்க்கிங் கொள்ளை ப்ரிஸ்பேனில் ரொம்பவே அதிகம். ரெண்டு மணி நேரத்துக்கு 45 டாலர் சார்ஜ். வயிறு எரிஞ்சு போச்சு.

பளிங்குலே என்னமா செஞ்சுடறாங்க பாருங்களேன்!!!!

சிஜி நல்லா இருக்கார். வயதாவதின் தளர்ச்சிதான்:-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.


பதிவரானபின் எத்தனையோ நல்ல நட்புகள் கிடைச்சது உண்மை. இணையம் தந்த கொடை!

said...

வாங்க ரத்னவேல் ஐயா.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க மீரா.

கல்யாணம் பார்க்கலையா? 60 ம் நடந்துச்சேப்பா. சுட்டி வேணுமா?

said...

வாங்க அகிலா.

மலபார் ஜூவல்லரி என்னும் கடைதான். வைரத்தில் பல விலைகளில் நல்ல டிஸைன்ஸ் வச்சுருக்காங்க.

said...

வாங்க துளசிதரன் & கீதா.

ஆஹா....சொல்லிட்டீங்களே. அடுத்தமுறை ராஜதானி உங்க வீட்டில்தான்! அப்படியெல்லாம் விட்ருவோமா:-)

said...

வாங்க கே ஆரெஸ்.

அடடே... நீங்க மயிலார் கலெக்‌ஷனா? ஆஹா.... போனமுறை ஃபிலிப்பைன்ஸில் இருந்து நம்ம முருகனுக்கு ஒரு மயில் வாங்கியாந்தார் கோபால். எனக்கு மயிலை விட அதன் தோகைதான் பிடிக்கும். நெக்லெஸ் மாட்டி அழகுக்கு அழகு செஞ்சுருக்கேன்:-)

பளிங்கு லாந்தரில் புகை பட்டால் என்ன? துடைச்சு வச்சுக்கக் கூடாதா? ச்சும்மா.... இது மின்சாரத்துலே எரியும் விளக்கு :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


சந்திப்பு திகட்டினதா சரித்திரம் உண்டோ?