Monday, January 11, 2016

எழுத்தாளரை இப்படியும் கௌரவிக்கலாம்!

அதிலும்  இவுங்க ஒரு குழந்தை எழுத்தாளர். குழந்தைகளுக்கு  எழுதணுமுன்னாத் தனித் திறமை வேணும் இல்லையா?  இதுவரை எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 160.   இதுலே சுமார் 100 புத்தகங்கள் பிக்ச்சர் புக் வகைகள்.  இதுபோக உள்ளூர் தினசரிகளில் எழுதுனவை ஏராளம்.  முதல் 'கதை' வெளியிட்டபோது அவுங்க வயசு வெறும்  ஏழு!

இவுங்க பெயர் மார்கரெட் மாஹி.  பிறந்து வளர்ந்தது நியூஸியின் வடக்குத் தீவுன்னாலும்  தன்னுடைய இருபத்தியொன்பது வயசுமுதல்  தெற்குத்தீவுக்கு  வந்துட்டாங்க. அதுவும் எங்க ஊரான க்றைஸ்ட்சர்ச்சில்!   47 வருசம் நம்மூரில்!

ஏழு வயசுலே ஆரம்பிச்ச எழுத்து,   நின்னுபோனது எழுபத்தி ஆறாவது வயசிலே :-(


பொதுவா இங்கே நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரிவு  கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும்.  விளையாட்டு, கதை சொல்லல் இப்படி அப்பப்ப நடக்கும். குழந்தைக்கான கதைகளை எழுதும் எழுத்தாளர்கள் நேரில் வந்து கதை சொல்வாங்க. நானும் மகள் சின்னவளா இருந்தபோது இப்படிப்போய் கதைகளைக் கேட்டுருக்கேன்.(அப்பா அம்மா கூட்டிட்டுப் போகணுமுல்லே!)
எழுத்தாளர்கள் அவுங்க எழுதுன புத்தகத்தில் சில கதைகளை வாசிச்சுக்காட்டி விளக்குவாங்க.

நம்ம மார்கரெட் மாஹியிடம் ஒரு விசேஷ குணம் என்னன்னா....  குழந்தைகளுக்குப் பிடிச்ச முறையில் தானும் ஒரு குழந்தையாகவே மாறி அவர்களுடைய உலகத்துக்குள் போயிருவாங்க.  இதுக்குன்னே  ஒரு வானவில் விக் ஒன்னு வச்சுருக்காங்க. கூடவே ஒரு ஸ்கார்ஃப் நிறைய குத்திவச்ச பேட்ஜ்கள். அதைப் போட்டுக்கிட்டுக் கதை சொல்ல / படிக்க,  வந்துட்டால் குழந்தைகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. பசங்களுக்கு பேட்ஜ் பார்த்தாலே  சந்தோஷம்  வந்துரும்.  இதெல்லாம் அவுங்களுக்குக் கிடைக்கும் ஊக்கப்பரிசுகளாச்சே!

கீழே படம் மகளோட  பேட்ஜ் கலெக்‌ஷன்ஸ்.
நான் ஒரு குழந்தைகளுக்கான நூலகத்தில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்ப,  ஒருமுறை  மார்கரெட் மாஹியைக்கதை சொல்லக் கூப்பிட்டு இருந்தோம். பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுக்கு வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டும் விதமா இப்படியெல்லாம் செய்வது இங்கே வழக்கம்.

ரொம்ப சிம்பிள் லேடி. தன்னுடைய செல்லத்தோடு வந்து  நூலகத்தையொட்டி இருந்த  சூப்பர்மார்கெட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்துனாங்க. அதிர்ஷ்டவசமா  பக்கத்துப் பார்க்கிங்கில் நான் வண்டியை நிறுத்திட்டு, இறங்கிக்கிட்டு இருந்தேன்.  எங்க நூலகத்துக்குன்னு பார்க்கிங் ஸ்பேஸ் கிடையாது. எப்பவும் சூப்பர் மார்கெட்  பார்க்கிங்கைப் பயன்படுத்திக்க அனுமதி கொடுத்துருக்காங்க.  அவுங்களை அங்கேயே வரவேற்று, செல்லத்தைத் தடவிக்கொடுத்து, வண்டியிலேயே விட்டுட்டுவர இருந்தவங்களிடம், அவனைக் கூட்டிப்போகலாமுன்னு சொல்லி மூணுபேருமா நூலகத்துக்குள் போனோம்.  அன்றைக்கு என் ட்யூட்டி.  சாவியைப் போட்டுத் திறந்ததும் வெளியே காத்திருந்த குழந்தைகள்  ஓடி வந்தாங்க. எல்லோருடைய அன்பும் நேராச் செல்லத்துக்குதான் போச்சு:-)


தலையில் வானவில் விக்கைப் போட்டுக்கிட்டு சின்ன  நாற்காலியில்  அவுங்க உட்கார்ந்ததும்தான், பிள்ளைகளுக்கு  கதை ஞாபகம் வந்துச்சு.  எல்லோருமா  கீழே கார்பெட்டில் கூட்டமா உட்காந்து  கதைகளைக் கேட்டோம்.  அப்போ எனக்குக் கேமெரா மோஹம் அவ்வளவா இல்லை. பதிவராகாத காலம் அது :-( மேலும் டிஜிட்டல் கேமெரா இல்லை என்பதால் ஃப்ல்ம் ரோல் போட்டு அளவாத்தான் படம் எடுப்பது வழக்கம். எடுத்த நாலைஞ்சு படங்கள் ஆல்பத்தில் இருக்கு. ஒருநாள் உக்கார்ந்து  தேடணும். கிடைச்சால் ஸ்கேன் செஞ்சு போடறேன்.   

நம்மூர்லே நிலநடுக்கம் வந்து நகர மையத்தை அழிச்சுட்டுப்போனபிறகு, இப்போ புது நகரம் நிர்மாணிக்கிறோமில்லையா!  அதுலே குழந்தைகளுக்காக கொஞ்சம் இடம் ஒதுக்கலாமுன்னு  ஃப்யூச்சர்  க்றைஸ்ட்சர்ச் திட்டம் போட்டு,  புது நகர வரைபடங்களை  ஊர்மக்களுக்குக் காமிச்சு அதுக்கான விவாதங்கள் எல்லாம் நடந்து முடிஞ்சது.  இங்கே நம்மைக் கேக்காமல் எதையும் முடிவு செஞ்சுறமாட்டாங்க. இதைப் பற்றி எழுதுனது இங்கே.

விருப்பம் இருந்தால் வாசிக்கலாம்:-)  

மான்செஸ்டர் தெருவுக்கும் மெட்ராஸ் தெருவுக்கும் இடையில் ஒரு முழு ப்ளாக் இடத்தை  இடிஞ்ச கட்டிடங்களோடு வாங்குனாங்க. இதுலே வடக்குப் பக்கம் பார்டர் போட்டாப்லே எங்கூர் ஏவான் நதி ஓடுது.  தெற்குலே போறது  ஆர்மா  (Armagh) தெரு. நல்ல பெரிய இடம்தான். இதுக்கே 19.6 மில்லியன் டாலர்.  அரையும் குறையுமா நிலநடுக்கம் இடிச்சு விட்டுட்டுப்போன கட்டிடங்களை அப்புறப்படுத்தி நிலத்தை சமன் செய்ய இன்னும் ஒரு 1.3 மில்லியன் டாலர் செலவு.

விளையாட்டு  மைதானத்துக்கு வேண்டிய  பொருட்கள், வடிவமைப்பு இன்னபிற சமாச்சாரங்களுக்கான  செலவு விவரங்கள் இன்னும் வெளியிடலை. இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு.  இன்னும் பல விளையாட்டு சாதனங்கள் ஜெர்மனியில் இருந்து வரவேண்டி இருக்காம்.  பத்து மீட்டர் கோபுரங்கள், அதனிடையில்  அசைந்தாடும் பாலங்கள் இப்படி.... அது முடியட்டுமுன்னு பார்த்தால் நம்ம கோடைகாலம் முடிஞ்சு, பள்ளிக்கூடங்கள் திறந்துருவாங்க. அதனால் பிள்ளைகளுக்குப் பொழுது போகக் கட்டிய  விளையாட்டுத் திடலை  முக்கிய வேலைகளை முடிச்சவுடனே திறந்துட்டாங்க.

அதுக்கான நல்ல நாள் டிசம்பர் 22 தேதியா இருந்துச்சு. மைதானத்துக்கு மார்கரெட் மாஹி  ஃபாமிலி ப்ளே க்ரௌண்ட் என்ற பெயர் சூட்டியாச்சு.  குழந்தை எழுத்தாளருக்கு  இதைவிடப் பெரிய கௌரவம் கொடுக்க இயலாது. அவுங்க பெயருக்குக் குழந்தை உலகில் நீங்காத இடம் கொடுத்தாச்சு!

  பகலிலும் இரவிலும் விளையாட ஏற்ற வசதிகள். நல்ல பளீர் விளக்குகள் போட்டு வச்சுருக்காங்க. வருசம் முழுசும் திறந்தேதான் இருக்கும்.  குழந்தைகள் மட்டுமில்லாமல் மொத்தக் குடும்பமும் அனுபவிக்கும் வகையில் இருக்கு.

கடந்த ரெண்டு வாரங்களா, நமக்குக் கொஞ்சம்  வீட்டு வேலைகள்   இருந்ததால்  போய்ப் பார்க்க நேரமில்லை.  கோடை காலத்தை விட்டால்  அப்புறம் வீட்டுவேலைகள் செய்ய உடம்பு வணங்காது. முக்கியமா கோபால் ஆஃபீஸ்   க்றிஸ்மஸ் லீவு விட்டுருக்கும் நாட்களைக் கோட்டை விடமுடியாது கேட்டோ:-)  முந்தநாள் சனிக்கிழமைதான்   பகல் சாப்பாட்டுக்குப் பின் கிளம்பிப் போனோம்.

திடலில் ஏகப்பட்டக் கூட்டம்.   பின்பக்கக் கார் பார்க்கிங் ஃபுல். ஆண்டி எப்ப சாவான்? மடம் எப்போ காலியாகுமுன்னு இருக்கு சனம். ஒரு இடம் நமக்கு ஆப்ட்டது.

திடலில் நுழைஞ்சதுமே காலுக்கு மெத்தை! பிவிசி சிப்ஸ் கலந்து தயாரிச்ச தரையாம்!  கோபால் சொன்னார். கீழே விழுந்தாலும் அடிபடாது.  சில இடங்களில்  மரச்சிப்ஸ் ( bark) போட்டு வச்சுருக்காங்க. கொஞ்சம் புல்தரை, கொஞ்சம் மணல் வெளி, வெட் லேண்டுன்னு தண்ணீர் பீரிட்டு வரும் காங்க்ரீட் தரைகள், நீர்விளையாட்டுன்னு  கொஞ்சம்,  நாலு மீட்டர் அகலமுள்ள சறுக்கு மரம்(!), சின்னப்பிள்ளைகளுக்குத் தனியா ஒரு சின்னச் சறுக்கு மரம்,  வளைக்குள் தவழ்ந்து  வெளியே வரும்  விளையாட்டு,  குன்றுகள் மேலே ஏறி இறங்குதல்,  ஊஞ்சல்கள்,  ஃப்ளை ஃபாக்ஸ்கள்,  தலை சுத்தி விழுந்துருவோமோன்னு நாம் நினைக்கும் சுத்துகள், இதுலே தனித்தனி வகை சுத்தல்ஸ் ஒரு பக்கம் என்றால்  இன்னொரு பக்கத்தில் ஒரு பெரிய  கூட்டமே உக்கார்ந்து சுத்தும் பெரிய அளவு  பம்பரம் ஒன்னு:-)  சிலந்தி வலைன்னு  கயிறுகள்  கட்டி விட்டுருக்காங்க. அதைப்பிடிச்சுப் போகுது  சின்னப்பசங்ககூட்டம். அந்தக் கயிறுகளை  பலமா இணைச்சுப் பிடிப்பிச்சு இருக்காங்க. சட்னு அறுந்து போக வாய்ப்பே இல்லை.

குட்டிப்பசங்களுக்கு ஏத்தாப்போல சின்னச்சின்ன ட்ராம்போலின்கள்.

 அங்கங்கே உக்கார்ந்து ஓய்வெடுக்க, வேடிக்கை பார்க்கன்னு குட்டிச்சுவர்கள்:-)  தாகத்துக்குத் தண்ணீர் குடிக்க ஊற்றுகள்.  
காஃபி, டீ பானங்களுக்கு ஒரு பொட்டிக் கடை.  ஐஸ் க்ரீம் ஸ்டால் ஒன்னு. சின்னாளவு ஸ்நாக்ஸ் தயாரிச்சு விற்கும் கடை ஒன்னு.
சைக்கிள் ஸ்டேண்டு. சின்னதுதான். ஒரு பத்து சைக்கிள்ஸ் வைக்க முடியும். அது போதும்தான்.  99% காரில்தானே வர்றாங்க.


முக்கியமா சொல்ல வேண்டியது  கழிப்பறைகள். படு நீட்!  எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சுருக்காங்க.  உண்மையிலேயே பாராட்டத்தான் வேணும்!

மவோரி இனம் முதல்முதலில்  இடம் பெயர்ந்து நியூஸி வந்து சேர்ந்த 'கதை' களை 130 மீட்டர் நீள  வளைந்து போகும் நடைபாதைகளில் பொறிச்சு வச்சுருக்காங்க.  கதைகள் மவோரி மொழியில் இருக்கு!

 திடலின் முகப்பில் வரவேற்பா ஒரு  கோலம்!  இது மவோரி டிஸைன்.



அங்கங்கே புல்வெளிகள்,  திடலின் ஒரு  பக்கம் அமைதியாக  ஓடும் உள்ளூர் நதி, கரையையொட்டி வரிசைகட்டி நிற்கும் மரங்கள்னு  ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரே இடத்தில் ! அவரவர் ரசனைக்கேத்தபடி ரசிக்கலாம் :-)

கோடைகாலம்(!) என்பதால் நீர்விளையாட்டுக்கு ரொம்பவே மவுசு:-)
விளையாடும் பிள்ளைகளின் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே  வேணாம்.  முகம் முழுசும் சிரிப்பு! பெற்றோர்களுக்கோ அதை விட மகிழ்ச்சி! ஆனால்  பிள்ளைகளை அங்கிருந்து கிளப்பக் கொஞ்சம் பாடுபடத்தான் வேணும்!  யாரும் போதுமுன்னு நகர்ற மாதிரி தெரியலை :-)

உங்களுக்கான விளையாட்டு மைதானத்தில் என்னென்னமாதிரி விளையாட்டு சாதனங்கள் வேணுமுன்னு  கேட்டாங்கதான்.  கேள்விக்குப் பதில் சொன்னது ஒரு ஆறாயிரம் பிள்ளைகள். அந்த கருத்துகளைக் கேட்டுத்தான் வடிவமைச்சு இருக்காங்க. நான் சொல்லலே... கேக்காமச் செய்ய மாட்டாங்கன்னு :-)

இதுக்கான செலவு கொஞ்சம் அதிகமுன்னு தோன்றினாலும்  எல்லாம் நல்ல செலவு என்பதால் நமக்கும் மகிழ்ச்சியே!  இதைப்போல  கம்யூனிட்டிக்கும், குழந்தைகளுக்கும்  செய்யும் செலவில்  கணக்குப் பார்க்க மாட்டேன்.  இதெல்லாம் நான் ஏற்கெனவே புலம்பிய தண்டச்செலவில் சேராது கேட்டோ :-)

சின்னதா மூணு  வீடியோ க்ளிப்ஸ் போட்டு வச்சுருக்கேன் ஃபேஸ்புக்கில்.  கூடவே ஒரு ஆல்பமும்.  நேரம் கிடைக்கும்போது பாருங்கள். அங்கே போகமுடியலைன்னா இங்கேயே கூடப் பார்க்கலாம்.




  ஆல்பம் இங்கே:-)


வீடியோக்கள்  இங்கே.

1. 


2

குழந்தை எழுத்தாளருக்கு இப்படி ஒரு நினைவுச்சின்னம் ரொம்பவே பொருத்தம்தான், இல்லையோ?

10 comments:

said...

ஜூப்பரு..

said...

"குழந்தைகளுக்குப் பிடிச்ச முறையில் தானும் ஒரு குழந்தையாகவே மாறி அவர்களுடைய உலகத்துக்குள் போயிருவாங்க" - இவங்கதான் படைப்பாளி துளசியம்மா.

மைதானத்த கண்முன்னே கொண்டுவந்த நீங்களும் படைப்பாளிதாங்க..வாழ்த்துகள்.

said...

அற்புதமான குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல்.

said...

மிகவும் நன்றாக இருக்கிறது.

said...

அருமையான நினைவுப் பரிசு துளசி. ! புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

கௌரவிக்கும் முறை பாராட்டுக்குரியது. அதனைத் தாங்கள் புகைப்படங்களுடன் பகிர்ந்த விதம் மிகவும் அருமை. நன்றி.

said...

அருமை .

said...

திருப்பாவை பதிவுகள் தினமும் போட வேண்டியிருந்ததால நடுவுல கொஞ்சம் வரமுடியலை. மன்னிக்கவும் :)

இதைவிட ஒரு குழந்தைகள் எழுத்தாளருக்கு என்ன மரியாதை செய்ய முடியும்! வாழ்க அவர் எழுத்துத் தொண்டு! குழந்தைகளுக்குக் கதை சொன்னவர் இறைவன் வீட்டில் குழந்தையாக விளையாண்டு கொண்டிருப்பார்.

டீச்சர்.. ஒரு சந்தேகம். நீங்க போடுற படங்கள்ள வெள்ளைக்காரங்க தான் நெறைய இருக்காங்க. மாவோரிகள்னு யாரையும் பாத்த மாதிரி இல்லையே. ஒருவேளை கிரைஸ்ட்சர்ச்ல அவங்க எண்ணிக்கை ரொம்பவும் குறைவோ?

said...

ப்ரம்மிப்பாக உள்ளது

said...

நல்லாப் பண்ணியிருக்காங்க. ம்.. அது நல்லவர்கள் ஆளும் நாட்டிலயும், நல்ல, பொறுப்பான குடிமக்கள் இருக்கும் நாட்டிலயும்தான் சாத்தியம்.

"அண்ணன் எப்போ சாவான். திண்ணை எப்போ காலியாகும்'தான் நான் கேள்விப்பட்ட பழமொழி. நீங்கள் ஆண்டிக்கும் மடத்துக்கும் முடிச்சுப்போட்டிருக்கீங்க.

நம்ம ஊர்ல, வாண்டுமாமான்னு ஒருத்தர் எழுதுனதை எவ்வளவு ஆசையோடு சின்ன வயசுல படிப்போம்னு சொல்லி மாளாது. அவருக்கு யாரும் கௌரவம் செஞ்சோ அல்லது, குழந்தைகளைச் சந்திப்பதுபோல் ஒரு நிகழ்ச்சியோ 'நடத்தி நான் கேள்விப்படலை. அவரும் பெரிய பணவரவுடன் இருந்ததுபோல் தெரியவில்லை. எத்தனை கதைகள் அவர் எழுதியிருக்கிறார்? என்னைப்போல் (1970-75கள்ல) எத்தனை சிறுவர்களின் மனதில் மகிழ்ச்சியை விதைத்திருப்பார்? அவர்கள் அறியாத ஃபேன்டஸி உலகத்தில் அவர்களைக் கூட்டிச்சென்றிருப்பார்.. பெருமூச்சு வருவதைத் தடுக்க இயலவில்லை..