Wednesday, April 20, 2016

சம்பவம் நடந்த இடம். ரொம்பக் கோவம்!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 23)

இங்கே உக்ர நரசிம்மர் கோவிலுக்குள்  எதோ பூஜை காரணம் சந்நிதி சாத்தி இருக்காங்க. கூட்டம் வரிசையில் காத்திருக்கு. இப்போ திறக்கிற நேரம்தானாம். நம்மவர்  கேமெராவில்  க்ளிக்கிட்டு இருந்தார்.  நான் கைடுகிட்டே தகவல்கள் சேகரிப்பில் பிஸி. அப்போ  ரெண்டு ஆட்கள்  ஒரு  உலக்கைத் தடியில் தலைகீழா ஒரு ஆட்டைத் தூக்கிட்டு  கோவில் பின்னால் இருந்து வந்து நம்மைக்  கடந்து போனாங்க. ஆட்டின் கழுத்து அறுபட்டுத் தொங்கி,  ரத்தத்  துளி சொட்டிக்கிட்டு இருக்கு.  வெட்டிக் கொஞ்சநேரம் ஆகி இருக்கணும்.  திகைச்சுப்போய் நின்னுட்டேன்.


'நரசிம்மம்'  இங்கே ஒரு வேடுவக்குலப் பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டார். அவுங்க பெயர் செஞ்சுலக்ஷ்மி.  அவுங்க  'நான் வெஜிடேரியன் ' என்பதால் ஆடு பலி  கொடுக்கும் வழக்கம்.  ஆனால்...  வேற  இடத்துலேதான்  பலி கொடுப்பாங்க. இங்கே எப்படின்னு தெரியலையே. கீழேதான்  செஞ்சுலக்ஷ்மித் தாயாருக்குக் கோவில் இருக்கு'ன்னார் கைடு.
நம்ம மஹாவிஷ்ணு அவதாரங்களிலேயே...  ராமன், கிருஷ்ணன்  போல குழந்தையாப் பிறந்து  வளர்ந்து ரொம்ப நாள் வாழ்ந்துன்னு இல்லாம, சட்னு எடுத்த அவதாரம்  நரசிம்ம அவதாரம்தான்.  சட்னு எடுத்தது போல சட்னு மறையாமல் பேசாம இங்கேயே டேராப் போட்டுக்கிட்டு  இங்கத்துப் பொண்ணையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மஜாவாத்தான் இருந்துருக்கார் நரசிம்ஹர், இல்லே!!!  பார்யா வீட்டில் பரமசுகம்! 

அதுக்குள்ளே கோபால் திரும்பி வந்துட்டார். கைடு போய் கம்பிக்கூண்டு நபரிடம்  பேசிட்டு வந்தவர், நம்மை கோவிலுக்குள் கூட்டிப்போனார். கோபுர வாசலுக்குள்ளே வலப்புறம் ஒரு கேட் இருக்கு. இடப்பக்க கேட்டுக்கு முன்னாடிதான் மக்கள் கூட்டம்  கம்பித்தடுப்பு  வரிசையில். கேட்டில் ஒரு அறிவிப்பு உள்ளே கேமெரா செல்ஃபோன் அனுமதி இல்லை.  கைப்பைக்குள் கேமெராவை வச்சுட்டேன்.  வலப்பக்கக் கேட்டைத் திறந்து உள்ளே போனவரை நாங்க பின்தொடர்ந்தோம்.
வளைஞ்சு போய், சில படிகள் ஏறினதும்  வலப்பக்கம் திரும்பணும்.  திரை போட்டுருக்கு. சீரான கட்டுமானமா இல்லாம மலையைக் குடைஞ்ச குகை மாதிரி இருக்கேன்னு கண்ணை ஓடவிட்டப்ப  சட்னு திரை  விலகுச்சு. எதிரே  இடுப்புயர மண் மேடையில்  உக்ர நரசிம்ஹர்! சின்ன  சிலை தான்.

 தரையில் சாப்பிடறதுக்கு உக்காருவோம் பாருங்க அப்படி சம்மணம் போட்டு சுகாஸனத்தில் உக்கார்ந்துருக்கார். மடியில்  ஹிரண்யகசிபு. (டின்னர்!) பக்கத்துலே (செஞ்சு)லக்ஷ்மி பத்மாஸனம் போட்டு உக்கார்ந்துருக்காங்க.

கோபத்தில் இருந்த நரசிம்ஹர், ஹிரண்யகசிபு வயிற்றைக் கிழிச்சுச் சொட்டு ரத்தம்  தரையில் விழாமல்  மொத்தத்தையும் உறிஞ்சிக் குடிச்சாராம். இதுலே குடல் மாலை வேற!  (ரத்தம் தரையில் விழுந்தால் ஒவ்வொரு சொட்டும் இன்னொரு  ஹிரண்யனா மாறி  வந்துருக்குமோ?  இப்படி ஒரு வரம் வாங்குன அசுரனைப் பற்றி எங்கெயோ படிச்ச நினைவு) இவருக்குக் கொஞ்சம் இந்தாண்டை  ப்ரஹலாதன்!

இவர் சுயம்பு! இவர் மட்டுமில்லை இங்கே இருக்கும் நவநரசிம்ஹர்களும் சுயம்புதானாம்!  ஆக்ச்சுவல் சம்பவம் நடந்த இடம்  (வாசப்படி?)  இங்கேதான், அதனால்தான் உக்ரமா (கோபமா ) இருக்காருன்னு சொல்றாங்க.
ஆதி சங்கரர், மாத்வாச்சாரியார், ராமானுஜர் ஆகிய மூவரும் இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செஞ்சுருக்காங்க!  ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிவலிங்கம் இங்கே இருக்கு. மஹாமேரு, சுதர்ஸனம்கூட பிரதிஷ்டை செஞ்சுருக்கார்.

இங்கே இருக்கும் கோவில்களில் வயசில் மூத்தது கூட இந்த உக்ரநரசிம்ஹர் கோவில்தானாம்!  நவகிரகாதிபதியில்   இவர் குரு.


சாளுக்கிய மன்னர்கள் (எட்டாம் நூற்றாண்டு)  விஜயநகர மன்னர்கள் (பதினாறாம் நூற்றாண்டு) ஆகியோர் அவரவர் ஆட்சி காலத்தில்  குகையையொட்டி இந்தக் கோவிலை நிர்மாணித்ததாகக் கல்வெட்டுகளில்  தகவல் இருக்காம். சோழர்கள் கூடக் கட்டி இருக்கலாம். அந்த ஸ்டைலும் இருக்கு. ஆனால் எங்கே அந்தக் காலத் தமிழ் மன்னர்கள்  கட்டுன கோவில்களில் தங்கள் பெயரைப்போட்டு வச்சுக்கிட்டாங்க,  சொல்லுங்க! மக்களாட்சியில் பெயர் போடலைன்னா அதுவே ஒரு  அஹோ, இல்ல:-)

தரிசனம் கிடைச்சதும் இல்லாமல் பெரிய பூச்சரம் ஒன்னு எனக்கும், துளசி மாலை ஒன்னு கோபாலுக்கும்  ஒரு சாமந்திப்பூ மாலையை நம்ம கைடுக்கும் கொடுத்து ஆசிகள் சொன்னார் பட்டர்!  மன நிம்மதியோடு  சந்நிதியை விட்டு வெளிவரும் சமயம்,  வெளியே காத்திருந்த வரிசையை உள்ளே விட்ருந்தாங்க. அரக்கப்பரக்க ஓடிவந்தவங்களுக்கு  இடம் விட்டு ஒதுங்கி, நாம் உள்ளே போன அதே வாசலுக்குத் திரும்பி வந்துட்டோம்.  கோவில் உள்ளே வேறென்ன சந்நிதிகள் இருக்குன்னு பார்க்கலையேன்னும் இருந்தது உண்மை. ஆனால் மூலவர் தரிசனம் லபிச்சதே!

வெளியே வந்ததும்  சில க்ளிக்ஸ். திரும்பப் படிகள் இறங்கி கார் பார்க் வரும்போது, 'கோவிலுக்குள்ளே அஹோபில மடத்தின் ஆறாவது ஜீயரின் ஜீவ சமாதி இருக்கு'ன்னார் கைடு.  அப்போ நடந்த இஸ்லாமியர் படையெடுப்பு காரணம்,  மடத்தில் இருந்த  செல்வங்களை இங்கேகொண்டு வந்து நிலவறையில் வச்சுட்டார். அதுக்குப்பின் இங்கேயே ஜீவசமாதி ஆனார். அந்த நிலவறை கோவிலுக்கடியில் இன்னும் திறக்கப்படாமல் இருக்குன்னார்.

ஆறாம் ஜீயர் பரமபதிச்சது 1513 ஆம் வருசம். அப்போ  இஸ்லாமியர்  படையெடுப்புன்னா அது பாபர் காலமா இருக்கணும், இல்லெ?
நம்ம சீனிவாசன், இடம் கிடைச்சு வண்டியை பார்க் செஞ்சுருக்கார். ஆளைக் காணோம். ஒரு  அஞ்சு நிமிஷம் காத்திருந்தோம். எங்கிருந்தோ ஓடி வந்தார். பார்க்கிங் இடம் கிடைச்சதும்  வண்டியை விட்டுட்டு, மேலே  வந்து பார்த்துட்டு வந்தாராம்.  கோவிலுக்குள்தான் போகலைன்னார். கூட்டம் அதிகமாம். உண்மைதான்.
கீழிறங்கும் பாதையில்  சுமார் ஒரு கிமீ வந்ததும்  போகும்போது பார்த்த கோவில் இருக்கு. அளவில் சின்னக் கோவில்தான்.


இவர் காரஞ்ச நரசிம்ஹர்!  சந்திரனுக்கு  அதிபதி!   முகப்பில் இருக்கும் சுதைச்சிற்பத்தில்  ஒரு வலது கையில் சக்கரமும், ஒரு இடது கையில் வில்லுமாயிருக்கார்.  நெற்றிக்கண் போல் மூணாவது கண் ஒன்னும் இருக்கு.


மூலவர்  காரஞ்ச மரத்தடியில்  அமர்ந்த கோலம்.  முகப்பில் இருக்கும் அதே நிலையில் கையில் வில்!  இவருக்கு எதிரே பெரியதிருவடி (வழக்கம்போல்) கைகூப்பிய நிலையில்!

அதென்ன காரஞ்ச மரம்? வேறொன்னுமில்லை இது நம்ம புங்கை மரம்தான். சமஸ்க்ருதத்தில் காரஞ்ச என்று பெயர்.  இந்த இடத்தில் ஒரு காலத்தின் நம்ம ஆஞ்சி வந்து தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார்.  ராமாவதாரம்  முடிஞ்சு  போனதுக்கப்புறம் ராமனைப் பிரிஞ்சு பூலோகத்தில் இருக்கும்  ஆஞ்சிக்கு  தன்  யஜமானைக் காணாத தவிப்பு.  இது நரசிம்ஹக்ஷேத்ரமுன்னு தெரியாது போல!  அடர்ந்த காடு, அமைதியான இடமுன்னு  இங்கே வந்துருக்கார்.
தவத்தைப் பார்த்து மகிழ்ந்த  விஷ்ணு,  நரசிம்ஹராக இங்கே ஆஞ்சிக்குக் காட்சி கொடுக்கறார். "பக்தா...கண்ணைத் திறந்து பார்!  உன் ராமன் வந்துருக்கேன்! "

கண்ணைத் திறந்த குரங்குக்கு முன்னால் ஒரு சிங்கம்!  நம்ம ஆஞ்சிக்குப் பயமே இல்லையாக்கும்.  'யார் நீ?'ன்னு கேட்டது  சிங்கத்தைப் பார்த்து. "நாந்தான்  உன் ராமன்."

"அட.... யார்கிட்டே? என் ராமனை எனக்குத் தெரியாதா?  இடத்தைக் காலி பண்ணு. நான் ராமனை எதிர்பார்த்து இங்கே உக்கார்ந்துருக்கேன். ம்... போ போ  "

'என்னை நம்பு ஆஞ்சி. நான் ராமனேதான். இங்கெ பாரு'ன்னு  ஒரு கையில் தன் கோதண்டத்தைக் காமிச்சார்.

ஆஞ்சிக்கு ஒரே எரிச்சல்.  "மச்சம் வச்சுக்கிட்டு  மாறுவேசம் கட்ற மாதிரி கையில் வில் வச்சுக்கிட்டா நீ ராமனா....  ஹாஹா"

சிங்கத்துக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. நரசிம்ம க்ஷேத்ரத்திலே  நரசிம்மமா வந்தது தப்பா?  போகட்டும் போன்னு  ராமராகவே மாறினார்.  ஆஞ்சிக்கு ஒரே ஆனந்தக் கண்ணீர்.  ராமா ராமான்னு உருகுது!  பக்தனைப் பார்த்து மனம் கசியுது  ராமனுக்கும்!  அப்படியே கட்டிப்பிடிச்சு ஆலிங்கனம் செஞ்சார்.  அதே சமயம் இப்போ இங்கே ரொம்ப நேரத்துக்கு மனுசனா இருக்கமுடியாதுன்னு அப்படியே சிங்கமாவும் மாறிக்கிட்டார்.

நியாயமுன்னு  ஆஞ்சி ஒத்துக்கிட்டு  அங்கேயே ஒரு பக்கம்  மூலவரைப் பார்த்தபடி போஸ் கொடுத்துக்கிட்டு இருக்கார் இப்போ!  கட்டித்தழுவுனதில்  அவர் தோளில் இருந்த சங்குசக்ரம் இவர் தோளில் அழுந்திப் போய் அப்படியே அடையாளமா  ஆகிருச்சு. ஆஹா... முத்திரை  போட்டாச் :-)

'ஆமாம்... என்னவோ நரசிம்ஹ க்ஷேத்ரம்னு சொன்னீரே   அது என்ன'ன்னு கேட்கப்போய், தன்னுடைய நெத்தியில் ஒரு  கண் வரவச்சு அதைத் திறந்து , இங்கிருக்கும்  நவ நரசிம்ஹர்களை  அப்படியே  ஒவ்வொன்னா காட்டி விளக்கினாராம். ( உலகின் முதல் டிவி!)

காரஞ்ச நரசிம்ஹர்  சந்திரனுக்கு அதிபதி . அதனால் சந்திரனுக்கு இங்கே  மூணு கண்ணு !
கோவிலில் நிறைய கூட்டமுன்னு சொன்னேனே... எல்லாம் தமிழ்நாட்டுப் பயணிகள்!
கோவில் வளாகத்துக்குள்ளே  நிறைய துளசிச்செடிகள்.  நரசிம்ஹருக்கு துளசி மாலைகள் தான்  பிடிக்குமாம்:-)
ஆச்சு நாலு கோவில்கள். இன்னும் ஒன்னுதான் இவர் கணக்கில் பாக்கி.   இதோ அங்கே போறோம்.

தொடரும்........:-)


15 comments:

said...

//ஆதி சங்கரர், மாத்வாச்சாரியார், ராமானுஜர் ஆகிய மூவரும் இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செஞ்சுருக்காங்க!//

அவர்கள் காலடி பட்ட இடங்களில் நாமும் நிற்கிறோம் என்கிற உணர்வே தனிதான். புங்க மரம்தான் காரஞ்ச மரமா...

said...

நரசிம்மரை பல்வேறு அமைப்பில் கண்டோம். துளசிச்செடி தொடர்பை அறிந்தோம். நன்றி.

said...

//பார்யா வீட்டில் பரமசுகம்! //

அதுக்கெல்லாம் பூர்வ ஜன்மத்திலே புண்யம் பண்ணி இருக்கணும்.

சுப்பு தாத்தா.

said...

//இங்கத்துப் பொண்ணையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மஜாவாத்தான் இருந்துருக்கார் நரசிம்ஹர்//

லக்ஷ்மியும் முன்னேற்பாடா இங்கே பிறந்து வளர்ந்து காத்திருந்தாங்கன்னு ஒரு கதையும் இல்லையா!!!

said...

நரசிம்மரும் ஒரு நான்வெஜ் தானே. என்ன.. அது நரமாமிசம்.

இந்தக் கடவுள்கள் அந்தந்த ஊர்ப் பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணதுக்குப் பின்னாடி உள்ள உண்மையான வரலாறு என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன். துலுக்க நாச்சியார். இப்போ செஞ்சு லெட்சுமி. எதோ ரெண்டு கதையை ஒன்னா ஒட்டிப் பதியம் போட்டிருக்காங்கன்னு மட்டும் புரியுது.

நர்சி தரையிலேயே உக்காந்திருக்காரே. இது மாதிரி வேற எங்கயும் பாத்த நினைவு இல்ல.

said...

வேஷத்துக்கு ஏற்ப சாப்பிடூகிறார் போலிருக்கு.
பழைய செஞ்சுலக்ஷ்மி படம் நினைவுக்கு வருகிறது.
நாகேஸ்வரராவ் நரசிம்ம வேஷம்.
20 வருடங்களில் நிறைய மாற்றம். டிராக்டர்களைக் காணோம்.

படங்கள் மூலம் அங்கயே போய்விட்ட நினைவு. நன்றி துளசி.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆழ்வார்களும் மஹான்களும் போய் தரிசித்த இடங்களுக்கு நாமும் போற பாக்கியம் கொடுத்தீரேன்னு பெருமாளுக்கு நன்றி சொல்லிக்கறதுதான் எப்பவும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பெருமாளுக்கும் துளசிக்கும் உள்ள தொடர்பே தனி ரகம். அப்ப 2005 இல் எழுதியதின் சுட்டி இது. நேரம் இருந்தால் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2005/11/blog-post_16.html

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

பார்யா (கணவனோடு )வீட்டில் இருந்தாலே பரம சுகம்தான் இல்லையோ (அந்தக் கணவனுக்கு) :-)

said...

வாங்க சாந்தி.

அதெல்லாம் இல்லாமல் இருக்குமா? லக்ஷ்மி இங்கே செஞ்சுவா அவதரித்துதான் இருக்கணும். கதை இன்னும் காதிலே விழலை.

வேடனுக்கு எந்த மரத்தாண்டை பொட்டைப்பிள்ளை கிடைச்சதோ? எப்பவும் 'லக்ஷ்மிக்குழந்தை' கிடைக்கும் வஸ்துதான் இல்லையோ!

said...

வாங்க ஜிரா.

இன்னும் பலரையும் கண்ணாலம் கட்டித்தான் இருப்பார். என்ன ஒன்னு.... அவுங்கெல்லாம் ஸ்ரீ அண்ட் பூதேவிகளின் அவதாரங்கள்.

சிங்கத்துக்குப்போய் சாம்பார் சாதம் கொடுத்தால் திங்குமா என்ன? :-)

சர்க்கஸ் சிங்கமா என்ன? நம்ம சிங்கர் எளிமை. அதான் தரையிலே உக்கார்ந்துக்கிறார்.

said...

வாங்க வல்லி.

இப்பெல்லாம் ஏகப்பட்ட ஆட்டோஸ் வந்துருச்சேப்பா. செஞ்சுலக்ஷ்மி பார்த்த நினைவு இல்லை. யூ ட்யூபில் தேடணும்.

நாய் வேசம் போட்டால் குரைக்கணும் இல்லையா..... அதுதான் சிங்க வேஷத்துக்கு ஏற்ற சாப்பாடு:-)

said...

சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.
'பார்யா வீட்டிலே பரமசுகம்' ரசிச்சுகிட்டே இருக்கேன்!!

said...

இப்போதெல்லாம் பலி கொடுக்கக் கூடாது என்பதெல்லாம் சும்மாத்தானா.?எனக்கு நம் கோவில்களில் பிடித்ததும் பிடிக்காததும் அதைச் சுற்றி இருக்கும் கதைகளே

said...

ஸ்ரீ அஹோபிலம் அங்கு 9நரசிம்மர்கள் அந்த இடம் தானே இது? போயிருக்கிறோம். நடந்து. நரசிம்மர் பாதங்கள், மலை க்ளிஃப் உச்கியில் கீழேபார்த்தால் பள்ளத்தாக்கு, அங்கு ஏறுவதற்கு முன் ஜ்வால நரசிம்மர் இருக்கிறார் இல்லையா அவரை ஒரு சின்ன அருவியைக் கடந்துதானே போகணும்..நாங்கள் அதில் நனைந்து கொண்டே சென்றோம் வெயிலுக்கு இதமாக இருந்தது...அந்த இடம் தான் ரொம்பப் பிடித்தது...

ஒரே ஒரு இடம் உக்ர நரசிம்மர் அப்புரம் இன்னொரு நரசிம்மர் மட்டும் ஜீப்ல போனோம். அப்போ செம செம்மண்..நாங்க திரும்ப வந்த போது எல்லாரும் ஏதோ பூதம் போல சிவப்பு கலரில் இருந்தோம்...
உங்கள் ஃபோட்டோ பார்த்தால் நிறைய மாறியிருக்கு போல இருக்கு

கீதா