Wednesday, June 15, 2016

தவிட்டுப்பானையில் ஒளிஞ்சுருந்த காழிச்சீராம விண்ணகரத்துத் தாடாளன் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 47)

காழிச்சீராமம்!  அதுவும்  சீர் மிகுந்த காழிச்சீராம விண்ணகரம்!   நீட்டி முழக்கவேணாமேன்னு இப்போ செல்லமா சீர்காழியா இருக்கு!  வர்ற  வழியில் பிரம்புச்சாமான்கள் வியாபாரம் ஏழெட்டு இருக்கு. ரொம்ப விசேஷமான  இடம் போல!
தாடாளன் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.  கோவிலின்  மூலவர் விண்ணளந்த விக்ரமன்  என்றாலும், உற்சவர்  பெயர் தாடாளன் என்பதால்  இப்படியும் சொல்றாங்க. உற்சவர்தானே எப்பவும் ஊர்சுத்திப் பார்க்கப்போறார். அதான் அவர் பெயர் எல்லோருக்கும்  தெரிஞ்சுருக்கு:-) தாடாளனின் மனைவி பெயர் மட்டவிழும் குழலி !      அடடா.... என்னமா பெயர் வச்சுருக்காங்க!!!!!
நம்ம திருமங்கை ஆழ்வார் இங்கே வந்து மூலவரை தரிசித்துப் பத்துப் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். நம்ம ஆண்டாளம்மாளும் காழிச்சீராமனைப் போற்றிப் பாடி இருக்காங்க. மணவாளமாமுனிகளும் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.
ரொம்பப்பெரிய கோவில்னு சொல்லமுடியாது. மீடியம் சைஸ்தான். வெயில் மழைக்குப் பாதுகாப்பு வேணுமுன்னு  தகரக்கூரைகளாப் போட்டு  கோவிலின் அழகைச் சுத்தமா மறைச்சு வச்சுருக்காங்க. கொடிமரத்துக்கு இடம் விட்டுக் கொட்டாய். இந்தாண்டை  ஒரு சந்நிதி ஸ்ரீராமருக்கு.
தொட்டடுத்து  ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஒரு சந்நிதி.
இந்தச் சந்நிதிக்கு அடுத்தாப்லெ  கொஞ்சம் பின்பக்கம் தள்ளி கோவில் தல விருட்சம். பலா!  
பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடி கடந்து  ஒரு எட்டொம்பது படிகள் ஏறிப்போய் மூலவரை சேவிக்கணும். பெரிய திருவடியின் சந்நிதியை உசத்திக் கட்டி இருக்காங்க.  மேலே  நடைக்கதவு  திறக்கலை.  அதுவரை கோவிலைச் சுத்தி வரலாமுன்னு  வலம்போறோம்.
முதலில் தாயார் சந்நிதி. பெயர் லோகநாயகி! ஆமான்னு சுவரில் பதிச்ச கல்வெட்டு சாட்சி சொல்லுது.  மண்டபக்கதவு  திறந்துருக்கு.  ஆனால் சந்நிதிக் கதவு மூடி இருக்கு.  நல்லவேளையா... கம்பிக்  கதவு என்பதால்    இருட்டுக்குக்கண் பழகியபின் லேசா தெரிஞ்சாள் தாயார்!  கும்பிட்டுக்கிட்டு வலத்தைத் தொடர்ந்தோம்.
கோவில் சுத்தமாத்தான் இருக்குன்றது மகிழ்ச்சியே!
அடுத்த பக்கம்  நம்ம ஆண்டாள் !  தாயார் சந்நிதியின்  அதே அளவில்!  இங்கெயும் மூடிய கதவினூடாகவே தரிசனம். தூமணி மாடத்து(ம்) ஆச்சு :-)

நந்தவனத்தில் நாலைஞ்சு பெரிய செடிகள்!   கோவில் புஷ்கரிணியை  ஒரு நாலு வருசத்துக்கு முந்தி தூர்வாரிப் பழுது பார்த்ததாக ஒரு  தகவல் கல்வெட்டு. சங்கு சக்ரதீர்த்தம். என்னவோ சங்கபுஷ்பகரிணின்னு  வெட்டி இருக்கு.
அதுக்குள்ளே பட்டர்ஸ்வாமிகள் வந்துருந்தார்.  மூலவர் கருவறை நோக்கிப் படிகளேறிப் போனோம். முன்மண்டபச் சுவரில்  கோவில் தலப்புராணம் !! ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் உபயம் போல!
மூலவர் திருவிக்ரம நாராயணப் பெருமாள். வாமன அவதாரத்தில், மகாபலி மன்னனிடம் வந்து மூணடி நிலம் கேட்டு, தானம் வாங்கியபின்  விண்ணுக்கும்  மண்ணுக்குமா விஸ்வரூபம் எடுத்து,  முதலடியில் ஒட்டு மொத்த பூமியையும்  அளந்துட்டு, ரெண்டாவது அடியில்  மேலுலகங்கள் அத்தனையையும் அளந்துக்கிட்டு இருக்கும் கோலம்.  இடதுகால் ஆகாயத்தில் சஞ்சரிக்குது!

மேலே... மூலவர். சுட்ட படம்.

உற்சவமூர்த்தி தடாளர், பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிக்கறார். வைகுண்ட ஏகாதசிக்கு  மட்டும், அந்தாண்டை நகர்ந்து நிற்பாராம். அப்ப மட்டும்தான் நாம் வலது பாதத்தை ஸேவிக்க முடியும்!

தீபாராதனையில் பெருமாள் முகம் பார்த்ததும், தீர்த்தம் கிடைச்சது.


உற்சவருக்குத் தவிட்டுப்பானை தாடாளன் என்ற பெயர், கேக்கவே விநோதமா இருந்தது.  ஏன்?  என்ன கதையாம்?

இந்தக்கோவில் அந்தக் காலத்தில் எதோ காரணத்தால் பூஜை புனஸ்காரம் எல்லாம் முடங்கிப்போய் கிடந்துருக்கு. அப்போ உற்சவரைக் கொண்டுபோய்  தன் வீட்டுத் தவிட்டுப் பானையில் ஒளிச்சு வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க  ஒரு பாட்டி.

அந்தக் காலக்கட்டத்தில்தான்   அம்பிகையிடம் ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தர் இந்த ஊர்க்காரர் என்பதால் இங்கேயே இருந்து சிவத்தொண்டு செஞ்சுக்கிட்டு இருக்கார். நம்ம திருமங்கை ஆழ்வார் அப்போ  இங்கே வர்றார். அவருடன் கூட வந்த அடியார்கள் அவரைப் போற்றிப் பாடிக்கிட்டே வந்துருக்காங்க. சம்பந்தரின் சிஷ்யப்பிள்ளைகள், பஜனை பண்ணிக்கிட்டு சத்தம் போட்டுக்கிட்டுப் போகப்டாதுன்னு  சொல்ல ரெண்டு க்ரூப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுப் பெருசாகுது. ஒரு கட்டத்தில், தலை இருக்க வால் ஆடலாமோன்னு , பேசாமல் தலைகள் வந்து பேசித்தீர்த்துக்கணுமுன்னு  முடிவு  செஞ்சாங்க.  அதுக்கான நாள் மறுநாள்னு ஏற்பாடு.

இவ்ளோ ஆனநிலைக்கு, உடனே ஊரைவிட்டுப் போக முடியாதேன்னு  அன்றைக்கு  அங்கே தங்கறாங்க யாத்ரை கோஷ்டியார்.  தூங்கும்போது  கனவு  வருது திருமங்கை ஆழ்வாருக்கு!  பாட்டிவீட்டுத் தவிட்டுப் பானையில் இருக்கும் தாடாளனைக் கும்பிட்டுக்கோ.  வாதத்தில்  வெற்றி உமக்கேன்னு  சொல்றார் பெருமாள்!  இந்தத் தாடாளன் என்ற பெயரே நம்ம ஆண்டாள் வச்சதுன்றதால் பெருமாளுக்கும் பிடிச்சுப்போச்சுன்னு தனியாச் சொல்லணுமா என்ன?

பாட்டி வீட்டுக்குப்போய் தவிட்டுப்பானைக்குள் இருந்தவனைக் கும்பிட்டுக்கிட்டு,  அவனையும் கூட எடுத்துக்கிட்டுப்    போட்டிக்குப் போறார்.  சம்பந்தரும் வந்து சேர்ந்தார்.  இதோ... முதல் கேள்வி.  குறள் ஒன்று சொல்லும் என்றார். திருக்குறளில் இருந்து முதல் கேள்வியா!!! அகரமுதலன்னு ஆரம்பிச்சிருப்பாரோ?   ஊஹூம்....

குறள் என்ற சொல்லையே வச்சு  பெருமாளின் பத்து அவதாரங்களையும் ஒன்னு ரெண்டு மூணுன்னு பாடிக்கிட்டே போறார் திருமங்கை!!

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
 உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி
அருமறையின் திறள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவையாறு மிசைகளேழும்
தெருவில் மலிவிழாவளமும் சிறக்கும் காழிச்
சீராம விண்ணகரே  சேர்மினீரே

இப்படி கடகடன்னு  பத்துப்பாசுரங்கள்!

திருமங்கையின் பெருமையை  மனஸிலாக்கிய சம்பந்தர் தன் கையில் இருக்கும் வேலைப் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்! அந்தக் கால வழக்கப்படி  காலில் தண்டையையும் அணிவிச்சாராம். (வீரக்கழல்?)

எல்லோருமாக் கிளம்பி ஊர்வலமாக் கோவிலுக்கு வர்றாங்க. கையில் சுமந்துவந்த  உற்சவரைக் கோவிலில் திரும்ப வச்சு, தாயாரையும் பெருமாளையும் பாடியதோடு,  ரோமசர் மகரிஷியையும் போற்றிப்பாடினார். எதுக்காக? அவர் காரணமாத்தானே  உலகளந்தான் இங்கே கோவில்  கொண்டது!

அப்படியா?  எப்படி?

ரோமசர் என்னும் மகரிஷி,  உலகளந்த கோலம் தரிசிக்கவேணும் என்ற ஆசையில் மஹாவிஷ்ணுவை தியானிச்சுப் பல காலம் இங்கே தவம் செய்யறார். மனம் இரங்கிய பெருமாள்   மகரிஷியின் விருப்பப்படியே காட்சி கொடுத்தார். வந்துட்டுச் சும்மாப் போகமுடியுமா? எதாவது வரம் கொடுக்கணுமா இல்லையா?  'ஏகாந்தமா என்னை தரிசனம் செஞ்சதால் உமக்கு  எல்லா நலன்களும்  குறையில்லாமல் பெறுவீர்!  அவற்றையெல்லாம் ஆண்டு அனுபவிக்க  ஏராளமான ஆயுசும்  தந்தேன்' என்றார்.

ஏராளம்ன்னா எவ்ளோன்னு அடுத்த கேள்வி. அதானே...  தெரிஞ்சுக்கிட்டால்  அதுக்கேத்தமாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கலாமேன்னுதான் இருக்கும் , இல்லே?

"எவ்ளோன்னா.....   ம்ம்ம்ம்   ப்ரம்மனை விட  அதிகம்னு வச்சுக்கலாம்.  உம் உடலில் இருக்கும் முடியில் ஒன்னு உதிர்ந்தால் ப்ரம்மனுக்கு ஒரு வருசம் ஆயுள் போச்சு ! ஓக்கேவா..."

உடம்பு முழுசும்  கரடி மாதிரி ரோமம் இருக்கும் ரோமசர், சந்தோஷமாப் பெருமாளை வணங்கி, இதே உருவில் பக்தர்களுக்கு  அருள் செய்யவேணுமுன்னு  கேட்டுக்கிட்டார். ( பெரியவங்க இப்படித்தானே கேட்பாங்க?) அதே போல் இங்கே கோவில் கொண்டவர் இந்த திரிவிக்ரமர்!

அதுசரி...  ப்ரம்மாவின் ஆயுசை என்னத்துக்கு இப்படிக்  குறைக்கணும்? அதுக்கும் ஒரு காரணம் இருக்கே!  நம்ம ப்ரம்மாவுக்கு ஆணவம் அதிகமாயிருக்கு, செய்யற வேலையில் கவனம் இல்லைன்னு அவரைப் பழிவாங்கும் நடவடிக்கை இது!

விவரத்தைத் தெரிஞ்சுக்கிட்ட ப்ரம்மா தன் கர்வத்தை விட்டொழிச்சு,  வேலையில் கவனமா இருந்தார்னு போகுது கதை. இந்த ரோமசருக்கு ரோமமே விழாதபடி என்ன செய்யலாம் என்ற யோசனையில்  இருந்திருப்பாரோ என்னவோ! ப்ச்....  பாவம்......

இந்த ரோமம், ஆயுள் என்ற   வகையில்  சிலபல வித்தியாசங்களோடு சில கதைகள் இருக்கு. கோவிலிலும் எழுதி இருப்பது என்னன்னா....   ப்ரம்மனின் ஆயுசு  முடிஞ்சதும் ஒரு ரோமம்  விழும் !   ப்ரம்மனின் ஆயுசு தானே முடிஞ்சுருமுன்னா...   அப்ப தண்டனை ஏது?  ஆணவம் கொண்ட ப்ரம்மனுக்குத்  தன் உயிர்ப்  பயம் வேணாமோ?  

இந்தக் கதையை  இங்கே எழுதும்போது,  நம்மகிட்டே இருந்த ஒன்னொரு புத்தகத்தைப் (108 வைணவ திருப்பதிகள்) புரட்டிக்கிட்டு இருந்தேன். அங்கே இன்னொரு கதை இருக்கு. அதையும் இங்கே  போட்டுருன்னு நம்மவர்  சொல்றார். ரெக்கார்ட் வேணுமாம்:-) ஸ்டோரீஸ் ரீ டோல்ட்!

இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையோன்னு  வாசிச்சுக்கிட்டே வந்தால்... கடைசியில் ஒரு சம்பந்தம் இருக்கத்தான் செஞ்சது :-)
கண்குவ மகரிஷி ஒரு சமயம் கடுமையான  தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார்.  எங்கே தன் பதவிக்கு ஆபத்து வந்துருமோன்னு பயந்த இந்திரன்,   இவர் தவத்தைக் கெடுக்க ஒரு திட்டம் போட்டு, ப்ரம்மலோசை என்ற  தேவலோக அழகியை அனுப்பி வச்சான். பெண்ணாசை யாரை விட்டது, சொல்லுங்க? தவம் கலைஞ்ச முனிவரும், இவள் அழகில் மயங்கினார். பலன்? இவள் பிள்ளைத்தாய்ச்சி  ஆனாள்.

கண்குவருக்கு , இவள்  இந்திரன் அனுப்பிய  சதிகாரின்னு தெரிஞ்சு போயிருது.  பயங்கர கோபத்தோடு  குடிலுக்கு வர்றார்.  கோபாவேசத்தைக் கண்ட ப்ரம்மலோசைக்குக் கதி கலங்குனதோடு கர்பமும் கலைஞ்சுருச்சு.  அபார்ஷன் :-(

கலைஞ்சு போன கருவை, வாயுபகவான் எப்படியோ ஒன்னாச் சேர்த்து ஒரு பிள்ளையை உருவாக்கிடறார். (அந்தக் கால டெஸ்ட் ட்யூப் பேபி!)  புள்ளை கோணலும் மாணலுமா  உருவாயிருச்சு.     எட்டுக்கோணல். அதனால் அஷ்டகோணர் ஆனார்.  இதே கருவில் இன்னொரு பொண்குழந்தையையும் உருவாக்குனதாகவும் அவள் பெயர் மாரீஷை என்றும் ஒரு கிளைக்கதை இருக்கு. இவள் நமக்கு இப்போ தேவை இல்லை என்பதால்  அவளைப் பற்றிய கூடுதல் விவரம் ஒன்னும் கிடைக்கலை.

அதுக்காக இவளை விட்டுட்டாங்கன்னு நினைக்கப்டாது. வேறொரு கதையில், வேறொரு சந்தர்ப்பத்தில் இவளைக் கொண்டு வந்து சேர்த்துருவாங்கன்னு நினைக்கிறேன். இதெல்லாம் ப்ரம்மபுராணத்தில் இருக்கும் கதை(யாம்!) சம்பவங்களை எதிர்பாராத இடத்தில்  கோர்த்துவிட்டு நம்மை 'அட!' போட வைப்பதில் புராணங்களுக்கு எப்பவும் வெற்றிதான்!

இந்த அஷ்டகோணர், தவவாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கார். ப்ரம்மச்சரிய விரதம்!  குபேரனின் சபையில் இருந்த கன்னியர்கள் பலர் இவரை மயக்கறதுக்குன்னு  வர்றாங்க.  கோணர்  அசைஞ்சு கொடுக்கலை.  அப்புறமா வாதன்ய மகரிஷியின் மகளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.

மந்தாரா என்ற சூரிய குலச் சக்ரவர்த்தி, குடும்பத்தோடு யமுனை ஆற்றுக்கு  நீராட வர்றார்.  ஃபேமிலி பிக்னிக்.  இளவரசிகள், அப்ப அஷ்டகோணரின் அழகில்(!) மயங்கி அவரைக் கல்யாணம் செஞ்சுக்க  ஆசைப்பட்டார்கள். அப்படியே ஆச்சு. ஒருநாள் அஷ்டகோணரிஷி, எழுந்து நிற்கும்போது , கோணல் உடம்பைப் பார்த்துச் சிரிப்பு வந்துருது இளவரசிகளுக்கு. பலன்? "பிடி சாபம் தான். கூனிகளாப் போகக்கடவீர்!"

இன்னொரு சமயம், சத்யலோகத்துக்குப் போன அஷ்டகோணர், ப்ரம்மனை தரிசிச்சு வணங்கறார். பக்கத்தில் இருந்த ப்ரம்மன் மனைவி சரஸ்வதிக்கு   இவர் கோணல் உடம்பைப் பார்த்துச் சிரிப்பு வந்துருது.  கோணர் சும்மா இருப்பாரோ?  சரஸ்வதிக்கும் சாபம் கிடைச்சது.  "பூலோகத்தில் போய் பிறக்கக் கடவது!"

பூலோகத்தில் பிறப்பதே சாபத்தால் தானோ? அடடா....

காசிராஜனுக்கு மகளாகப் பிறந்த கலைமகள்,  வளர்ந்து ஆளானதும் வேதியர் ஒருவரை மணந்து, சாரஸ்வதன் என்ற  மகனைப் பெற்று வளர்க்கறாங்க. சாக்ஷாத்  சரஸ்வதியின்  மகன், வேதம் , ஞான, கல்வி, சாஸ்த்திரங்கள்னு எல்லா கலைகளிலும் மேதையா ஆனார்னு கதை போகுது. இதெல்லாம் எதுக்குன்னா... அஷ்டகோணருக்கு எவ்ளோ பவர் இருக்குன்னு காமிக்க எழுதி இருக்கலாம்.
இப்ப நாம் முன்னால் பார்த்த ரோமச மகரிஷி கதைக்கு வர்றோம்.  இவருடைய  ரோமங்கள் ஒன்னொன்னாய் விழ, பிரம்மனுக்கு  ஆயுசும் ஒவ்வொரு வருசமாக் குறைஞ்சு பிரம்மனும் மறைஞ்சுடறார். அதுக்குப்பிறகு புது பிரம்மனை படைச்சுருவார் நம்ம பெருமாள். படைப்புத்தொழில் இடைவிடாமல் நடக்க ப்ரம்மன் வேணாமா?  இப்படி  ப்ரம்ம பதவிக்கு புதுப்புது ப்ரம்மாக்கள் வந்துக்கிட்டு இருப்பாங்க.

ஒவ்வொரு ப்ரம்மாவின் ஆயுள் முடியும்போது, அஷ்டகோணரின்  ஒரு கோணல் சரியாகும்.  பார்த்தீங்களா...   ரோமசருக்கும், பிரம்மனுக்கும், அஷ்டகோணருக்கும் எப்படி முடிச்சு போட்டு வச்சுருக்காங்கன்னு!!!!

கொஞ்சநஞ்சம் இருக்கும்  மூளையை ரொம்பப் போட்டுக் கசக்கிக்காம, இந்தக் கதைகளைக் கேட்டால்..........  எப்படித்தான் இவைகளை உருவாக்குனாங்களோன்னு  வர்ற வியப்பை அடக்க முடியலை பாருங்க!!!!

உலகளந்த திரிவிக்ரமனை, இந்தக் கோவிலுக்குள் கொண்டுவந்த ரோமசரையும் வணங்கி   சந்நிதியை விட்டு வெளியே வர்றோம்.  வெளியே  மணவாளமுனிவர் சந்நிதிக்குப் பக்கம் ஒரு போர்டு இருந்தது. தேடப்போன வள்ளி காலில்  ஆப்ட மாதிரி!
திருநாங்கூர் திவ்யதேச வரை படம்! இங்கெல்லாம் போகணும் என்பதுதானே நமது ப்ளான். எங்கே இருந்து எப்படி ஆரம்பிக்கலாமுன்னு  யோசனையா இருந்தோமே....
அடடா....   இன்றைக்கு எட்டாம்நாள்  கருடசேவையாம்!!!!!

அப்பதான்  ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த கோவில் ஊழியரிடம் விவரம் கேட்டப்ப, முதலில்  அண்ணன் பெருமாள் கோவிலுக்குப் போயிருங்க. அங்கே  கைடு கிடைப்பார்னு சொல்லி உதவினார்.  பெருமாளே அனுப்பி வச்சவர்னு நினைச்சேன்.
இங்கே தாடாளன்   கோவில்நடை திறந்திருக்கும் நேரம் காலை 7.30 முதல் 11.30. மாலை 5 முதல் 8.30.
வெளியே போய் கோவில் திருக்குளத்தைப் பார்த்துட்டு, அப்படியே அக்ரஹாரம் வழியே போறோம்.  ஏறக்குறைய எல்லா வீடுகளுமே ஆளில்லாம பாழாகிக்கிடக்கு. திண்ணைகளைப் பார்த்ததும்..........  ஐயோ....  வீணாக்கிடக்கே.......  ப்ச்.....

இப்பதான் மணி அஞ்சரை ஆகப்போகுது. இன்னொரு கோவிலையும்  தரிசனம் செஞ்சுக்கிட்டு சிதம்பரம் திரும்பணும்.  சரியா!

தொடரும்....  :-)




18 comments:

said...

வைகுண்ட ஏகாதசி அன்று பாத தரிசனம் செய்தோம்.
நான் அங்கு இருந்தால் வந்து இருப்பீர்கள் வீட்டுக்கு.
அப்போது குலதெய்வம் கோவில் போகும் சமயம் ஆகி விட்டது.
பதிவும், படங்களும் அழகு.

said...

எங்கேயோ சுத்தி சுத்தி ஒரு முடிச்சு போட்டுட்டாங்க.. கருட சேவை பார்த்தீர்களா டீச்சர்... தொடர்கிறேன்.

said...

அஷ்ட வக்கிரருக்கே அஷ்ட கதைகள் இருக்கும் போல. கதை எழுதுறவங்களோட கற்பனைத் திறமைக்கு ஏற்ப புராணக் கதைகள்ள கனெக்‌ஷன்கள் உருவாகும்.

மட்டவிழும் குழலி - என்ன அழகான பெயர்.

said...

அஷ்ட வக்கிரர் ,கோணலில்லாமல் நிமிர்ந்ததே நிம்மதி. ஆண்டாள் தான் எத்தனை அழகாய் வெய்யிலில் நிற்கிறால். அவளுக்கும் ஒரு பந்தல் போட்டு இருக்கக் கூடாதோ.
திருமங்கையாழ்வர் குறள் மிகச்சீர்.
துளசி கோபால் புண்ணியத்தில் இத்தனை பெருமாளையும் சேவிக்கப் போகிறோம். நன்றி மா.

said...

சீர்காழி என்றாலேயே நினைவுக்கு வருவது சிவன் கோவிலே அது சரி நீங்கள்தான் பெருமாள் பக்தையாயிற்றே இந்தக் கோவில் போனதில்லை தெரியாது.

said...

varugai pathivuuuuuuu :)

said...

வாங்க கோமதி அரசு.

நாம் எங்கே சந்திக்கணுமுன்னு ‘அவன்’ முடிவு செஞ்சால்தான் உண்டு!

வைகுண்ட ஏகாதசி பாத தரிசனமா!!!!

கொடுத்து வைத்தவர் நீங்கள்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்வது மகிழ்ச்சி! நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ஜிரா.

நம்ம கற்பனைக்கும் எட்டாத புனைவுகள் ! வியப்புதான் !

said...

வாங்க வல்லி.

இவர் கோணல் இன்னும் நிமிர்ந்து இருக்காதுன்னு நினைக்கிறேன். இப்பதானே நாலாவது யுகம். மிஞ்சிப்போனால் நாலு கோணல் மறைந்து இருக்கும். ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி :-)

ஆண்டாள்.... ஹூம்.. அவளுக்கு எப்பவுமே தனி.... ப்ச். மார்கழியைத்தவிர வேறெப்போதும் கண்டுக்கறதில்லை :-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அடடா... சிவனைத் தள்ளி வச்சுட்டேனா என்ன? இதோ உங்களுக்காக ஒரு சிவன் கோவிலுக்குப் போறோம், நாளைக்கு :‍‍-)

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

வருகைக்கு நன்றி.

said...


தவிட்டுப்பானை தாடாளன்....ஆஹா என்ன அழகான பெயர்



எவ்வலோ பெரிய கதை ...அருமை ..

said...

அருமையான கோவில். எத்தனை எத்தனை கதைகள்.

திண்ணை வைத்த வீடுகள் - ஆளில்லாமல், பராமரிப்பில்லாமல் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது......

தொடர்கிறேன்.

said...

>>இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மேலே ஏறிப்போய் காட்சிகளை ரசிக்கலாம் <<
நன்றி என்னைப் போன்றவர்களையும் சேர்த்து கொண்டமைக்கு. எவ்வளவுதான் காலமும், தொலைவும் அதிகரித்துக் கொண்டே போனாலும், பிறந்து, வளர்ந்த ஊர் நல்நினவுகள் (nostalgia) விட்டு விலகி போக மாட்டேன் என்கிறது.
நன்றி # 2 சீர்காழி இந்து கோவில்கள் பற்றி எழுதியமைக்கு.

தாடாளன் கோவில் கிழக்கு கோபுர வாசற்படிக்கு அருகில்தான் என் அருமை ஆசிரியர் கீழச்சாலை மாதவன் ஐயங்கார் வீடு. இருப்பதாக நம்பப்படும் கடவுளர்கள் குறித்து சொல்ல ஒன்றுமில்லை, ஆயினும் மாதவன் ஐயங்கார் போன்றோர் நீங்கள் நம்பும் கடவுளர்களுக்கு இணையானவர்கள். எழுதும் போதே கண்ணில் நீர் திரை கட்டுகிறது. படிப்பு மட்டும் போதாது, அன்பும், பண்பும் தான் முதல் என்பதை அன்பொழுக கற்றுக் கொடுத்தவர்.
பெருமாள் கோவில் படங்களுக்கு நன்றி # 3. வீர வைஷ்ணவியாக இருந்த என் கொள்ளுப் பாட்டியுடன் வைகுண்ட ஏகாதசி அன்று போயே ஆகி வேண்டும். தம்பிக்கு சைவப் பெயர் என்பதால், நான்தான் வர வேண்டும்! கொ.பா நினைவாகத்தான் மகனுக்கு விஷ்ணு எனப் பெயர்.
நிற்க.
சட்டநாதர் கோவிலில் என் பதின்ம வயது காலத்தில் நடந்தது. ஆதீனத்து கட்டளையாய் இருந்தவருக்கு பெரிய உடலும், கூடுதலாக யானைக்காலும் உண்டு. அவர் வலம் வரும் போது, ‘” கட்டள, ஒனக்கு சோறு போட்டு கட்டல’” என சில நூறு அடி தள்ளி நின்று கூவி விட்டு ஓடுவது எனது குழாமின் பொழுது போக்கு.
20 வருடம் கழித்து 2017ல் போகலாம் என உள்ளேன். உங்கள் பதிவும் ஒரு காரணம்

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கோவில்கதைகளை இன்னும்கூட விஸ்தாரமா எழுதலாம். அவ்ளோ கொட்டிக்கிடக்கு பல கோவில்களில்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


திண்ணை வச்ச வீடுகளைப் பார்க்கும்போது ஆசையாக இருக்கு! ப்ச்.... கொடுத்து வைக்கலையே :-(

said...

வாங்க வாசன்.

ஊர்ப்பாசம் அப்படி ச்சும்மா இருக்கவிடாது!

அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.

அடுத்தமுறை போய்த்தான் வாருங்கள்! மனம் மறக்க விரும்பாது!