Monday, August 01, 2016

அபி அப்பாவின் இஷ்டக்கோவில் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 67)

தனியார் கோவிலோன்னு ஒரு நினைப்பு.   நாம் போகும்நேரம் திறந்திருக்குமான்னு  கேட்டதுமே, நம்ம கோவில்தான்.  நமக்குத் திறக்கலைன்னா எப்படின்னார் அபி அப்பா. உள்ளே நுழையும்  கம்பிகேட் பூட்டி இருந்தது.   உடனே செல்லில் ஒரு அழைப்பு விட்டார்.  அதுவரை அங்கேயே நிக்காமல் வலப்பக்கம் தலையைத் திருப்பினால்...........   அட!
துலாகட்டம் பற்றி ஏராளமா வாசிச்சு, பார்க்கணுமுன்னு ஆசையோடு இருந்த இடம்!  ஐப்பசி துலா  ஸ்நானம்,  கார்த்திகை முடவன் முழுக்கு இப்படி   தண்ணீர் இருக்கும் காவிரியைத்தான் எனக்கு படங்களில் பார்த்த நினைவு.  ஆனால்....  இப்போ  நேரில் பார்த்தால்....  கண்ணீர்தான் வருது.
ஐயோ....   என்ன இப்படி அழுக்கும் குப்பையுமா போட்டு வச்சு ஆத்தோட அழகைப் பாழ்பண்ணி வச்சுருக்கு சனம் :-(

ஒரு சமயம் கன்வர் என்னும்முனிவர், புனித பூமி காசியையும், புனித நீர் கங்கையையும்  தரிசிக்கணுமுன்னு கிளம்பிப் போய்க்கிட்டு இருக்கார்.   பாதிவழியில்  மூன்று பெண்கள்  ரொம்ப கோர உருவில்  அழுதகண்களும்   சிந்திய மூக்குமாய் உடம்பில் வலு இல்லாம முணங்கியபடி மெள்ள நடந்து வந்துக்கிட்டு இருக்காங்க.  இந்தக்கதையை ஏற்கெனவே  மாயூரம் பதிவில் சொல்லி இருக்கேனே..........   இப்பத் திரும்பவுமா?   அதையே இன்னொருக்கா இங்கேயே போடறேன், பார்த்துக்குங்க.

துலா முழுக்கு இவ்விதம் புகழ்பெற்றதற்கு   புராணக் கதை ஒன்னு இருக்கு. ஒரு சமயம் கண்வ மகரிஷி கங்கையை நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில்  மூன்று பெண்கள் தங்கள் அழகெல்லாம் இழந்து உருக்குலைஞ்ச நிலையில் தள்ளாடி நடந்து வர்றாங்க. யாரு என்னன்னு விசாரிக்கிறார். அவுங்க மூவரும் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை,சரஸ்வதி!  இந்த நிலைக்கு என்ன காரணமுன்னு கேக்கறார்.  பூலோக மக்கள் , தங்கள் பாவங்களைப்போக்கிக்க  எங்களிடம் வந்து நீராடறாங்க. அவுங்களை விட்டுப்பிரிந்த பாவச்சுமை எங்கள் மேல் படர்ந்து  எங்களை இப்படி ஆக்கிருச்சு. இதுக்கு பரிகாரம் எதாவது கிடைக்குமான்னு தேடிபோறோமுன்னு அழுதுகிட்டே சொன்னாங்க. 

கவலைப்படாதீங்க.  இப்படியே போனா  பாரதத்தின் தென்பகுதியிலே காவேரி என்னும் புண்ணிய நதி ஒன்னு ஓடுது. அது மயிலாடும்துறை என்ற ஊரைக்கடந்து  போகும் இடத்தில் நீங்கள் போய் முழுகினால்   உங்கமேல் உள்ள பாவச்சுமை நீங்கிவிடும்.  சீக்கிரம் போங்கன்னார். துலா மாசம் என்று சொல்லப்படும் ஐப்பசி மாதம் முழுசும் இம்மூவரும் நீராடித் தங்கள் மேல் படிந்திருந்த  பாவங்களைப் போக்கிக்கிட்டு,மாயூரநாதரையும்  அபயாம்பாளையும்  வழிபட்டு, தங்கள் சுய ரூபத்தை அடைஞ்சாங்க. கங்கையினும் புனிதமாம் காவேரின்னு உசத்தியாச் சொல்றாராம் கம்பர்.

இதனால் இந்த ஊரையொட்டி ஓடும்  காவேரியில் துலா ஸ்நானம் செய்ய  பக்தர்கள் ஏராளமா வர்றாங்க. மாசமுழுவதும் முங்க முடியாதவர்கள்,  ஐப்பசி மாச அமாவாசையில் முங்கி எழுந்தால் இதே பலன்.  அமாவாசைக்கு வரமுடியலையா? நோ ஒர்ரீஸ். ஐப்பசி மாசக் கடைசி நாளில் முங்கிருங்க. இதே பலன் கிடைச்சுரும்னு சாஸ்திரங்கள் சொல்லுது. நம்ம மதம் ரொம்பவே ப்ளெக்ஸிபிளா இருக்கு  பாருங்க. கடைசிநாள் முழுகுவதை கடைமுழுக்குன்னு கொண்டாடிடறாங்க.

ஐப்பசி மாசம் முழுக்க ரொம்ப பிஸியாப்போயிருச்சு. என் பாவம் தீரவே தீராதான்னு  அழுது புலம்பாதீங்க யாரும். இருக்கவே இருக்கு கார்த்திகை மாசம்.  ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை பிறக்கும் நாளுக்கும்  இதே பலன் உண்டு. இதுக்குப்புண்ணியம் கட்டிக்கிட்டவர் நினைவா இதுக்கு முடவன்முழுக்குன்னு பெயர் வச்சுருக்காங்க.

ஐப்பசி மாசம் காவேரியில் மூழ்க ஆசைப்பட்டு ஃபிஸிக்கலி சேலஞ்சுடுஆன ஒருவர்  ரொம்ப தூரத்தில் இருந்து புறப்பட்டு இங்கே வந்துருக்கார்.  அவர் வந்து சேரவும் ஐப்பசி மாசம் கடை(சி) முழுக்கு நடந்து முடிக்கவும் சரியா இருந்துருக்கு!  அடடா.... நமக்குக் கொடுத்து வைக்கலையேன்னு மனம் உருகி இறைவனை வேண்டினார். யாராவது கரைஞ்சால் சிவனுக்குத் தாங்கமுடியாது கேட்டோ!  வருத்தப்படாதே, இன்னிக்குக் கார்த்திகை பிறந்துருக்கு.  அதே பலன் இன்னைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டேன். இப்பவே நீ போய் முங்கி நீராடு ன்னு அசரீரியா அனௌன்ஸ் பண்ணினார்.  அவரும்  நீராடி தன் பாவங்களைப் போக்கிண்டார்!

இன்னும் வேற வெர்ஷன்களும் உண்டு. அதை  இன்னொருசமயம் பார்க்கலாம். மேலே சொன்னதுக்குத்தான் லாஜிக் வொர்கவுட் ஆகுதுன்னு என் தோணல்.

மேலே சொன்ன புராணக் கதை ஏற்கெனவே துளசிதளத்தில் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்ற பதிவில் சொன்னதேதான். நமக்கு அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு இல்லையாக்கும் கேட்டோ:-)
அப்படி பார்க்க ஆசைப்பட்ட காவிரி இப்போ இப்படி கிடக்கு  :-(  ப்ச் ....
கொஞ்சம் க்ளிக்கினேன். அதுக்குள்ளே கோவில் திறக்க ஆள் வந்தாச்சு.
கோவிலுக்குள் போறோம். ஸ்ரீ விசாலாக்ஷி  சமேத ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி திருக்கோயில்.
முன்மண்டபத்துக்கு நேரெதிரே கருவறை.  விஸ்வநாதர்  லிங்க வடிவில்.  முன்மண்டபத்தில் அவரோட நந்தி அவரையே பார்த்துக்கிட்டு வழக்கம்போல் உக்கார்ந்துருக்கு.  கன்வ மகரிஷியால் பூஜிக்கப்பட்ட சிவன் இவர்!  முப்பெரும் நதிகளுக்கு வழிகாட்டியபடியே இங்கே வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை  செஞ்சுருக்கலாம், இல்லே!

 கன்வ மகரிஷிக்கு சாங்க்ய யோகமும், ஞானவித்தைகளும் வழங்கியவர் இந்த விஸ்வநாத ஸ்வாமிதானாம். மயிலாடுதுறை துலாகட்டத்தில் ரிஷபதீர்த்த வடகரையில்  இந்தக் கோவில் அமைந்துள்ளது.

கற்பூர ஆரத்தி காமிச்சு நமக்குப் பிரஸாதம் கிடைச்சது.  நமக்கிடதுபக்கம் மண்டபத்தில் இன்னும் ரெண்டு சந்நிதிகள்.

 அதுலே முக்கியமா நமக்கு அபி அப்பா காண்பித்தது  ஒரு யந்திரத்தை!  நல்ல பெரிய அளவுதான். நாலடிக்கு நாலடி இருக்கலாம். அபி அப்பாவும் அப்படித்தான் சொன்னார். இதே யந்திரம்தான் சிதம்பரம் கோவிலிலும் இருக்காம்! சிதம்பர ரகசியம் இங்கே யந்திரவடிவமாக அருள் வழங்குவது சிறப்பு என்றே கோவில் தகவலில் சொல்லி இருக்காங்க.

அனுமதி கேட்டுக்கிட்டு யந்திரத்தைக் க்ளிக்கிக்கிட்டேன்.  பெருசுதான். ருத்ராக்ஷ பந்தல் போல ஒரு அலங்காரம் சந்நிதி முகப்பில். சின்ன தோரணம் போல! கீழே பீடத்தில் கோவிலைப் பழுது பார்த்தப்பக் கிடைச்சதோ என்னமோ சின்னதா ஒரு சதுரக் கல்.  பூவராஹர்னு நினைக்கிறேன்.  ஒருவேளை இல்லையோ.....

இந்தக் கோவில், ரொம்ப சிதிலமாக் கிடந்ததாம். சமீபத்துலே (2013) 'அம்மா'வின்  தயவால்  சீரமைச்சுக் கட்டி, கருவறை கோஷ்டங்களில்  சில கடவுளர்களை வச்சாங்களாம்.  அதான்...  பூவராஹன் சிற்பம் கிடைச்சுருக்கு போல!

கோவிலின் வெளிப்ரகாரத்தை வலம் வரலாமுன்னு போனோம்.  கோமுகி அருகில் (வழக்கம்போல்) சண்டிகேஸ்வரர் இருக்கார்.  இவர் நாலு யுகமாகத் தொடர்ந்து வந்துக்கிட்டுத்தான் இருக்கார். அதை அவர் சந்நிதியின் நாலு பக்கங்களிலும் குறிப்பிட்டு இருக்காங்க. க்ருதயுகத்தில்  பிரசண்டர், த்ரேதாயுகத்தில் விக்ராந்த சண்டிகேஸ்வரர்,    த்வாபரயுகத்தில் சண்டநாதர், கலியுகத்தில்   வீர  சண்டிகேஸ்வரர்.

 இவரைக் கும்பிடும்போது கை தட்டுதல், சொடக்குப்போடுதல் எல்லாம் செய்யுதே சனம். உண்மையா அதெல்லாம் கூடாதுதான். சிவன்  சொத்து , குலநாசம் என்ற மொழியின்படி, கோவிலில் இருந்து எதையும் தூக்கிக்கிட்டுப் போகலைன்னு இவர்கிட்டே சொல்லிக்கணும். 'பாரேன்ப்பா. கையில் ஒன்னும் இல்லை'ன்னு  கையை அசைச்சுக் காமிக்காம, ரெண்டு கையையும் சேர்த்துத் தட்டிக் காமிக்கும் பழக்கம் எப்படியோ வந்துருச்சு.  அந்தத் தட்டி, சப்தம் எழுப்புவது சாஸ்த்திரமுன்னு நினைச்சுக்கிட்டு, நாசுக்கா சிட்டிகை போட்டுட்டு போறாங்க.
பாவம் சண்டிகேஸ்வரர். ஏற்கெனவே கோமுகிப் பக்கம் எப்பவும் அபிஷேகத் தண்ணீர் தேங்கி  ஒரு மாதிரி நாத்தம் லேசா வீசிக்கிட்டு இருக்கும். அதைத் தாங்கிக்கிட்டு அங்கேயே இருப்பவருக்கு, கை தட்டிக் கைதட்டி ஒலி இம்சை வேற.....  நல்லவேளை இங்கே கோமுகி, திறந்தவெளியில் இருக்கு என்பது ஆசுவாசம்.

நவகிரக மண்டபம் அழகா வட்டமாக்கட்டி இருக்காங்க.  இங்கே   ஒரு விசேஷம் நவகிரகத்திலும்  இருக்கு.  இது தம்பதி சசித நவக்ரஹ ஸ்தலம் !   எல்லோரும் ஜோடியாவே இருக்காங்க.  தம்பதி ஒற்றுமை ஓங்குக.  நாமும் கொஞ்சம் ஒற்றுமையா இருக்கப் பழகிக்கணும்டா சாமின்னு  கும்பிட்டுக்கிட்டேன்.

 இங்கே பூஜை செய்ய குருக்கள் பிரிவினர் இல்லை.  மஹாசதாசிவ மூர்த்தியின் தென் முகத்து உதித்த முனி வழி வந்தவர்களே இங்கே பூஜை செய்ய பாத்தியதைப்பட்டவர்கள். இந்த சிவனை பூஜிக்க ஆதி சைவர்களே  உடமையானவர் என்றபடி, இத்திருக்கோயில் ஆதி சைவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது  என்பதும் கூடுதல் தகவல்.
இந்தக் கோவிலைத் தொட்டுக்கிட்டே இன்னொரு கோவில் இருக்கு. ஐயப்பன் கோவில். இவுங்கதான் இடம் கொடுத்துருக்காங்க(ளாம்!)

வேறெங்கே போகணுமுன்னு கேட்ட அபி அப்பாவுக்கு,  அடுத்த கோவில் பெயரைச் சொன்னேன்:-)

தொடரும்........  :-)




14 comments:

said...

// ஆத்தோட அழகைப் பாழ்பண்ணி வச்சுருக்கு சனம்//
பணம் ஒன்றே குறியாக
பறக்குது மனிதம்.
ஆறு தூய்மை எல்லா அப்புறம்.

said...

தம்பதி சகித நவக்ரஹ ஸ்தலம் ... அருமை



நம் நீர் நிலைகளின் நிலை மிகவும் கொடுமை...

said...

திருச்சிக்கு பக்கத்துல பழூர் என்ற இடத்திலும் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் காட்சி கொடுக்கறாங்க...

said...

யந்திரத்துக்கு மேலே விதானமாகப் போட்டிருக்கும் உருத்திராட்ச மாலையைப் பற்றிச் சொல்ல விட்டுவிட்டீர்களே..

மான்செஸ்டர் அருகில் லேக் லேண்ட் என்ற இடத்தில், ஒரு நதியைக் காண்பித்தார்கள். எனக்கு, அது கொஞ்சம் பெரிய ஓடையாகத்தான் தெரிந்தது. கரையெல்லாம் கிடையாது ஆனால் தண்ணீர் பளிங்குமாதிரி. Natural resourceஐ, வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் பொதுச்சொத்தாக எண்ணுகிறார்கள். சமீபத்தில் படித்தேன்.. அமெரிக்காவில் ஆற்றில் குளிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று ('எண்ணெயும் சீயக்காயும் தேய்த்துக் (தண்ணீர் முழுவதும் எண்ணெயும், குப்பைக் கரைசலுமாக ஓடாத) குளிக்க முடியாத நயாகரா என்ன நயாகரா). நம் தமிழகத்தில், கோவிலோடு சேர்ந்த ஆறுகளையும் நீர்னிலைகளையும் நாம் வைத்திருக்கும் பாங்கு, நம்முடைய பக்தி (ஆடிப்பெருக்கு, குளத்தில் தீர்த்தவாரி போன்றவை) வெறும் show போன்றுதான் தோன்றுகிறது. அந்த ஊர்க்காரர்களுக்கு, ஆறு அவர்களது சொத்து என்ற எண்ணம் வராமல் போய்விட்டதே..

said...

உருத்திராட்சத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள். நான் அதை மிஸ் பண்ணிவிட்டேன். அந்த அலங்காரம் ரொம்ப அழகாகவும் கலை நயத்தோடும் செய்துள்ளார்கள். நீங்கள் சண்டிகேசுவரரைப் பற்றிச் சொன்னது சரிதான். யாரேனும் ஒருத்தர் நடைமுறையை மாற்றினால், அதுவே புது நடைமுறையாகிவிடுகிறது. (கோவிலில் விளக்கேற்றுவதுபோல)

said...

ஆயிரம் இருந்தாலும் மாயூரம்னு சொல்லிருக்கீங்க. அந்த மாயூரம் கூட ஆத்தை இப்பிடி பாழ் பண்ணி வெச்சிருக்கே. இப்பவும் அந்த ஆத்துல குளிச்சு மக்கள் பாவத்தைப் போக்கிக்கிறாங்களா?

மாற்றுத் திறனாளிக்கு உதவிய சிவபெருமானுக்கு என்னுடைய பாராட்டுகள். வாழ்த்துகள். வணக்கங்கள். கும்பிடுகள்.

சண்டிகேசுவரரை நெனச்சாப் பாவமாத்தான் இருக்கு. என்ன பண்றது? ஆனா அவர் மக்களோட மடத்தனத்தை நல்லாப் புரிஞ்சி வெச்சிருப்பாரு. அதுனால கோவிச்சுக்க மாட்டாரு.

said...

தொடர்ந்து நானும் வருகிறேன்.

படங்கள் வழமை போல அழகு.

காவிரி நிலை - வருத்தம் தான்.

said...

வாங்க விஸ்வநாத்.

ஊருக்கு வெளியே இருக்கும் ஆறுகளில் மணல்கொள்ளை..... பணம் படுத்தும்பாடு.

ஊருக்குள் இருக்கும் ஆறுகளில் குப்பை. மக்களின் மனம் சிந்திக்காததால் நடக்கும் கொடுமை.

ப்ச்....... :-(

said...

வாங்க அனுராதா ப்ரேம்.


கொடுமையோ கொடுமை:-(

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ஆஹா.... பழூர்! கவனத்தில் வச்சுக்கறேன். நன்றீஸ்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எங்க ஊரிலும் ஏவான் நதி, சுத்தமாகவே இருக்கும். சுற்றுலாப்பயணிகளுக்கான படகுகள் கூட உண்டு!

said...

வாங்க ஜிரா.

விழாக்காலத்துலே மாத்திரம் காவிரி நீர் வரும். மற்ற நாட்களில் அழுக்கும் குப்பைகளும் மட்டுமே!

மக்கள் இதைப் பொருட்படுத்தலை போல! பாவம் போனால் சரின்னு இருக்காங்க போல :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இயற்கைச் செல்வத்தை, அரசுகள் முடக்கி வச்சுக்கும் நிலை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல வறண்ட நதியில் அழுக்கும் குப்பையும்.......... :-(

said...

பார்க்க பார்க்க மனசு கொதிக்குதும்மா. நாங்க போனபோது இன்னும் மோசம், தினமும் ஆயிரக்கணக்குல நீராடுவாங்கன்னு தெரிஞ்சும் சரியான ஏற்பாடு ஏதும் செய்யல. அழுக்கு தண்ணி, உடை மாற்ற வசதியில்லன்னு ஆயிரம் குறை..