Monday, August 08, 2016

தேரழுந்தூர் தேவாதிராஜன் ஆமருவியப்பன் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 70)

வீரசோழனாறு என்ற இடத்தில் ரயில்பாதையைத் தாண்டி போய்க்கிட்டு இருந்தோம். பத்து நிமிசத்தில் ஒரு ஊருக்குள்ளே  கடைவீதி போல ஒன்னு.  கடைகளின் இருந்த  பெயர்ப்பலகை  சொல்லுது தேரழுந்தூர்னு!    பெயரைப் பார்த்ததும் மூளைக்குள் மணி அடிச்சதோ?  ஆமாம்.   நினைப்பை உறுதிப்படுத்தும்  அலங்கார வளைவு!  கம்பர் நினைவு வளைவு!
நமக்கு முன் போகும் ஒரு சின்ன ட்ரக்கில் இருந்து பாட்டு முழக்கம். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தியின் இளைஞர் அணி.
தூரே தெரியும் கோவில் கோபுரமும், கோவிலுக்கு முன்னால் இருக்கும் குளமும்!

ரைட் எடுத்து  சுத்திக்கிட்டுப்போய்  கோவில் வாசலில்  இறங்கினோம். மண்டபத்தினூடே இருக்கும் வாசல் வழியா உள்ளே போறோம். .  இடதுபக்கம் சுவரையொட்டியே கம்பர் தம்பதிகள் இருக்காங்க.நேரெதிரா  பலிபீடமும் கொடிமரமும். மூணுநிலை கோபுரத்தோடு கோவிலுக்குள் போகும் வாசல்!

கம்பராமாயணத்தின் முதல் பாட்டான கடவுள்வாழ்த்து எழுதிப்போட்டுருக்கு. ரொம்ப நல்லது. ஆனால்  இடத்தைச் சுத்தமா வச்சு மரியாதை செய்யக்கூடாதா?  ப்ச்  :-(

அடுத்து  ஆஞ்சியின் சந்நிதி. நேரெதிரா திருமங்கைமன்னன் திருமண்டபம்.
கோபுரவாசலுக்குள் ரெண்டு பக்கமும் பெரிய திருமொழி நவீனக் கல்வெட்டில்.....  வெள்ளைப் பளிங்கு சமீபத்துலே எழுதுனதுதான் வருசம் 1957 பிஃப்ரவரி. கருப்புக் கல்லில் எழுதுனது  1992  நவம்பர்.

திருமங்கை ஆழ்வார்  பத்து பத்துன்னு எண்ணாமல் 45 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்!!!!!  அதுவும் நம்ம தாயாரையும் சேர்த்து!  திவ்யதேசக்கோவில்களில்  தாயாரையும் சேர்த்துப் பாடியது இங்கே மட்டும்தானாம்!!!!

மூலவரை சேவிக்க உள்ளே போனால் முன்மண்டபத்தில் தொம்பையெல்லாம் தொங்கவிட்டு அலங்கரிச்சு இருக்கு. விசேஷம் ஏதோ நடந்து முடிஞ்சுருக்கு போல!


ரொம்பத் தொலைவில் ஆஜானுபாகுவா நிக்கறார் தேவாதிராஜன்!  'விளநகர் பெருமாளைப் பார்த்து ஹைய்யோ ஹைய்யோன்னு சொன்னியே....  இப்பப் பார் நானொரு  படி (அடி)  மேலே! ' அட  ஆமாம்....  இவர் பதிமூணு அடி உசரம்! ச்சும்மா நிகுநிகுன்னு  ஜொலிக்கிறார். அத்தனையும் சாளக்ராமம்!   ஆமாம்... இங்கே பாருன்னு சொல்றதுபோல் ஒரு தட்டில் ஆறேழு சாளக்ராமக் கற்கள்!
உற்சவர் பெயர் ஆமருவியப்பன்! கோவிலுக்கே உற்சவர் பெயர்தானாக்கும், கேட்டோ!



மூலவர் சந்நிதியில் ஒரு பசு நிக்கறது. ஆ......   ஆமாம். ஆ வேதான்.   பார்வதி அங்கே பசுவா நிக்கிறாள்!   என்ன.... கதை விடறாளேன்னு பார்க்கறீங்களா?

மச்சான்கள் ரெண்டு பேரும் சொக்கட்டான் ஆடிக்கிட்டு இருக்காங்க.  சொக்கட்டான்னாலே தகராறுதான் இல்லையோ?   ஆட்டத்தில் யார் காய் உருட்டணும் என்பதில் ஒரு சின்னக்குழப்பம் வந்தது.  பேசிக்கிட்டே கவனமில்லாமல் ஆடி இருப்பாங்கபோல.....  ஆட்டத்தைப் பார்த்துத் தீர்ப்பு சொல்ல அங்கே ஜட்ஜா இருப்பது நம்ம பாரு தான்.  பெண்களுக்கு என்னதான் இருந்தாலும் பொறந்த வீட்டுப் பாசம் சட்னு போகாதுதானே? அண்ணனுக்குச் சாதகமா தீர்ப்பு சொல்லிட்டாள்  நம்ம பாரு.  அவ்ளோதான்  சிவனுக்குக் கோபம் வந்து, பாருவை, நீ பசுவாப் போன்னு சபிச்சுட்டார்.

பசுவா மாறி பூலோகம் வந்த பார்வதியைத் தனியா விட மனசில்லாமல் சரஸ்வதியும், லக்ஷ்மியும் தாங்களாவே பசு ரூபமெடுத்து பூமிக்கு வந்துடறாங்க.  மூணு பசு மாடு!  மேய்க்க ஆள் வேணாமா?  ஆக்களை மேய்க்கப் பெருமாளே ஆமருவியப்பனா  அவரும் வந்து சேர்ந்தார்!   சும்மாச் சொல்லக்கூடாது....   உற்சவர் அழகோ அழகு!

இந்தப் பதிவை எழுதிக்கிட்டு இருக்கும்போது,  ராச்சாப்பாட்டுக்கு நேரமாச்சேன்னு  எழுந்து போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்தேன்.  திரும்பி வந்தவுடன், விட்டுப்போன வேலையை முடிக்காமல், பத்து நிமிட் ஃபேஸ் புக் பார்த்துக்கலாமேன்னு  அதுக்குள்ளே நுழைஞ்சால்  தென்னந்தோப்புக்குள் ஆமருவியப்பன் நிக்கறார். நம்ம   சேஷசாயி  ரெங்கமணி அவர்களின் போஸ்ட். படத்தைச் சுட்டுக்கவான்னு கேட்ட கையோடு படத்தைச் சுட்டுக்கிட்டேன்:-)
கோவில் கருவறை விமானம் கருட விமானமாம்.   தேவேந்திரன் ஒருமுறை கருடனிடம், ஒரு வைரமுடியும், ஒரு விமானமும் கொடுத்து,  உன் மனதுக்கு உகந்த பெருமாளுக்குக் கொடுத்துருன்னு சொன்னதும், வைரமுடியைக் கொண்டுபோய் மேலக்கோட்டை திருநாராயணபுரத்துப் பெருமாளுக்குக் கொடுத்த கையோடு, இங்கே வந்து விமானத்தை தேவாதிராஜனுக்குக் கொடுத்துருக்கார்.  மனம் மகிழ்ந்த  பெருமாள், கருடரைத்  தன் கூடவே  சந்நிதியில் வச்சுக்கிட்டார்!


ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் இப்படிக் கருடரைக் கருவறையில் பார்த்துருக்கேன்!  இப்ப இங்கேயும்!

உபரிஸ்ரவசு என்ற  மன்னன்,  தன் தேரில் ஏறி  ஆகாயத்தில் வலம் வருவானாம். தன் தேரின் நிழல் , எதன் மீது  விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவனாம். இப்படி வரும்காலத்தில்  கண்ணன்  மூணு பசுக்களை மேய்ச்சுக்கிட்டு  இருந்துருக்கான். தேரின் நிழல் பசுக்கள் மீது பட்டதும் வேதனை தாங்காமல்  அவை அலறின. கண்ணன் சும்மா இருப்பானோ?  தரையில் விழுந்த தேரின் நிழலைத் தன் காலால் ஓங்கி அழுத்தினான்.  தேர் அப்படியே பூமியில்  அழுந்தி நின்னே போச்சு.  அப்படித் தேர்  அழுந்தின இடம்தான் இந்த தேரழுந்தூர்!  ஊர்ப்பெயருக்குக் காரணம்  இப்படி அமைஞ்சுருக்கு இங்கே!

பெருமாளை சேவிச்சுக்கிட்டுப் பிரகாரத்தை வலம் வரப்போனோம். நான் தனியாக நின்றிருந்தேன்!
தாயார்  செங்கமலவல்லி தனிக்கோவிலில்!  முன்மண்டபத்துலே ஒரே அலங்காரம். சுவரில் சுத்திவர அஷ்டலக்ஷ்மிகள்!  இது அஷ்டலக்ஷ்மி மண்டபமாம்!



 பெருமாள் குடையின் கம்பை எடுத்துட்டு, குடைத்துணியால் விதானத்தில் ஒரு  அலங்காரம்!


தாயாரின் நேரடிப் பார்வையில் துளசி!  வைக்கற இடத்தில் வைக்கணும் என்று சொல்றாப்ல :-)

வழக்கமா ஆண்டாள் சந்நிதி இருக்குமிடத்தில் சந்நிதி அழகான விமானத்தோடு இருக்குதான். ஆனால் இழுத்து மூடிக்கிடக்கு.

ஒருவேளை மராமத்து வேலைக்காக மூடி வச்சுருக்காங்களோ?  குறைஞ்சபட்சம் கம்பிக்கதவிலூடாகக் காட்டப்டாதோ? உடைஞ்சு போன சிற்பங்களும்,  கழட்டி எடுத்தவைகளுமா அங்கங்கே  இருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது.  துவாரபாலகியா ஒருத்தி இங்கே....  இன்னொருத்தி?  அதோ அங்கே....
இதுக்கு எதிரில் ஒரு கொட்டாய் போட்டு அது ஆண்டாள் திருமணமண்டபமாம். அதுலே ஒரு நாலு  காங்க்ரீட் தொட்டிகள், யாகம் நடத்த,  குண்டங்களாக  இருக்கு.
இந்தாண்டை திண்ணையோடும் மண்டபத்தில் வாகனங்கள் இருக்கு போல. வரிசையாக்  கதவு போட்டு வச்சுருக்காங்க.   ரெண்டு திண்ணைகளுக்கிடையில்  சொர்க்க வாசல். சட்னு பார்த்தால் புழக்கடைக்குப்போகும் வாசல் மாதிரியே இருக்கு.  பாவம்.... பெருமாள் :-(
தலைக்குமேல் இருக்கும் சிற்பம்தான் வைகுண்டவாசலுக்கு விளக்கம் சொல்லுது.

 திரும்பப்போய்  தேவாதிராஜனுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுக் கிளம்பினோம்.


குறைஞ்சபட்சம், குளம் சுத்தமா இருந்தது ஒரு ஆசுவாஸம்தான்!
காலை 7.30  - 12 ,  மாலை 5 முதல் 8.30  கோவில் திறந்திருக்கும் நேரம்.

இந்தக் கோவிலுக்கு நேரெதிராக் கொஞ்ச தூரத்தில் ஒரு சிவன் கோவிலும் இருக்காம்.  வேதபுரீஸ்வரர் கோவில்!     மச்சான்கள்   சொக்கட்டான் விளையாடிய மண்டபம் அங்கே இருக்காம்!

தொடரும்............. :-)




18 comments:

said...

//நான் தனியாக நின்றிருந்தேன்//

சிங்கம் எப்பவுமே சிங்குலா தானே டீச்சர் நிக்கும்.

said...

waiting for வேதபுரீஸ்வரர்.
நன்றி.

said...

ஆமருவியப்பன்...ரொம்ப அழகு....


said...

ஆமரு வியப்பன் அழகான ஆனால் கேட்காத பெயர் /
Blogger விஸ்வநாத் said...

waiting for வேதபுரீஸ்வரர்.
நன்றி./ வேதபுரீஸ்வர் வருவது சிரமம் அவர் சைவர் அல்லவோ

.

said...

தென்னந்தோப்புக்குள் ஆமருவியப்பன் நிக்கறார். //

அழகான படம் பகிர்வுக்கு நன்றி துளசி.
தேவாதிராஜனை பல வருடங்களுக்கு பின் உங்கள் தயவில்
வணங்கி மகிழ்ந்தேன்.

said...

அங்கொரு சிவன் கோயில் இருக்காம் என்ற தங்களின் சொற்றொடருக்கு எனது 13 மார்ச் 2016 கோயில் உலா பதிவிலிருந்து மறுமொழி : தேரழுந்தூர் (மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் வந்து கோமல் சாலையில் திரும்பிச் சென்றால் மூவலூரை அடுத்து உள்ளது)
வேதபுரீஸ்வரர்-சௌந்தரநாயகி (சம்பந்தர்). அகத்தியர் இங்கு இறைவனை வழிபடும்போது அதையறியாத மன்னன் ஒருவன் வான வெளியில் செலுத்திச் சென்ற தேரானது, இங்கு அழுந்திய காரணத்தால் தேரழுந்தூர் என்பர். இக்கோயிலின் முக்கிய சன்னதியாக உள்ளே நுழைந்தபின் இடப்புறம் காணப்படும் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதிகளைக் கூறலாம். உள்ளே நேராகச் சென்றால் மூலவர் சன்னதியை அடையலாம். மூலவர் சன்னதிக்கு சற்று முன்பாக வலப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த பெருமையினை உடைய இந்த ஊரில் அவர் வாழ்ந்த இடம் கம்பர் மேடு என்றழைக்கப்படுகிறது. http://drbjambulingam.blogspot.com/2016/05/13-2016.html பெருமாள் தரிசனம் எனக்கு கிடைக்கவில்லை. உங்கள் பதிவு மூலமகக் கிடைத்தது. நன்றி.

said...

//வேதபுரீஸ்வர் வருவது சிரமம் அவர் சைவர் அல்லவோ //
GMB sir, டீச்சர் நமக்காக இன்னொருக்கா போகமாட்டாங்களா என்ன,

said...

தேர் அழுந்தூர் என்னும் தேரழுந்தூர். கம்பனூர்.

அந்தக் குடையை விட்டத்துல தொங்க விட்டிருப்பது அழகு.

என்னது.. பதிமூனு அடியா? பொண்ணு கெடைக்கிறது கஷ்டம் தான். பனிமூனு அடி ஒயரம்னா.. வயிறே ரெண்டு மூனு அடி இருக்கு. அவ்வளவு அரிசி பருப்பு காய்கறி தயிர் மூனு வேளையும் கொட்டுறது சிரமம் தான். பாவம் மகாலட்சுமி.

said...

குடையலங்காரம் அழகு.

தொடர்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

சிங்கம் சரி. சிங்கியுமா?

வேதபுரீஸ்வர்........ அடுத்த முறைதான்......... :-(

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஆமாம்ப்பா ! அழகோ அழகு!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஐயோ..... வேணுமுன்னே இல்லையாக்கும். எப்படியோ... அப்படி அமைஞ்சுபோச்சு :-(

நம்ம ஜம்புலிங்கம் ஐயா அந்தக் குறையைப் போக்கிட்டார். அவருக்கு என் நன்றிகள்.

said...

வாங்க கோமதி அரசு.

அந்தப் பக்கங்களில் எல்லாக் கோவில்களுக்கும் நீங்க போய் இருக்கீங்க. அதுவே ஒரு பெரிய கொடுப்பினை!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா .

உங்கள் மூலம்தான் தரிசனம்.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ஜிரா.

பெருமாளுக்குப் பசி இருக்கா என்ன?

அப்படியே இருந்தாலும் மஹாலக்ஷ்மியா உக்காந்து ஆக்கிப் போடப்போறாங்க?

'யாரங்கே... அறுசுவை உணவு கொண்டு வா'ன்னு சொன்னால் ஆயிரம் தடா அக்காரவடிசலும் இன்னபிறவும் வந்திடாதோ!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

தேரெழுந்தூர் நாயகனின் தரிசனம் ஆச்சு..கதையும் கேட்டாச்சு...இனி அடுத்த கோவிலுக்கு தொடர்கிறேன்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்வருகைக்கு நன்றியும் 'மகிழ்ச்சி'யும் !