Monday, August 29, 2016

திருக்கண்ணங்குடி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 79)

ரெண்டுநாளைக்கு முன்னே க்ருஷ்ணன், வெண்ணை, சீடை, முறுக்கு, அப்பம் இப்படி கொண்டாட்டமா இருந்ததே!   நல்லபடியா க்ருஷ்ணாஷ்டமி கொண்டாடி முடிச்சீங்கதானே!
நிறைய கோவில்களில்  கிருஷ்ணனை விட்டுட்டு, ஆஞ்சிக்குத்தான் வெண்ணைக் காப்பு  போடறாங்க இல்லே!  அந்த வெண்ணைய் எப்படி உருகாமல் அப்படியே ஒட்டிப்பிடிச்சுருதுன்னு எப்பவும்  கொஞ்சூண்டு வியப்பு உண்டு.  அப்புறம் சேதி தெரியவந்தது!  ஆஞ்சிக்கு வெண்ணெய் பிடிக்குமுன்னு யார் சொல்லி இருப்பாங்க?

லங்காதகனத்துச் சமயம்,  வாலிலே தீ வச்சுட்டாங்கல்லியா...  அந்த தீப்புண் ஆறுவதற்கு வெண்ணெய் தடவுனாங்களாம்.   அதான் ஆஞ்சிக்கு  வெண்ணைக்காப்பு ஸ்பெஷல்!
கோவில்களில் கூட ஒரு தூண்லே ஆஞ்சி இருந்துட்டாப் போதும்.... கொஞ்சம் வெண்ணையத் தீற்றி வச்சு அந்த இடத்தையே பிசுக்ன்னு ஆக்கி வச்சுட்டுப்போகுது சனம், இல்லையோ?

ஆனா  சும்மாச் சொல்லப்டாது....   அந்தக் காலம்போல வெறும் வெள்ளை ட்ரெஸா போட்டுவிடாம, இப்பெல்லாம் சம்கி, ஜரிகை,  கலர்கலர் மிட்டாய்கள் எல்லாம் கூட வச்சு  ப்ரமாதமா அலங்காரம் செஞ்சுடறாங்க!  சில இடங்களில்  பழங்கள், நட்ஸ் இப்படியெல்லாம் கூட!

அது இருக்கட்டும்.... இப்ப நாம் வெண்ணைய், கண்ணன் பத்தியில்லே பேச ஆரம்பிச்சோம்.  கண்ணனுக்கு வெண்ணெய் ரொம்பவே பிடிக்கும் என்பது  ஆயர்பாடியிலே 'அன்று' நடந்த சமாச்சாரம். அவனுக்குப் பிடிச்ச வெண்ணெயை நாமும் அவனுக்குப் பிரஸாதமாகப்   படைக்கிறோம்.

வசிஷ்டமகரிஷிக்குக் கண்ணன்  என்றாலே  கொள்ளை ஆசை! அவனுக்குப் பிடிக்குமேன்னு  வெண்ணையைக் கையில் எடுத்தவர், அந்த வெண்ணையிலேயே ஒரு கிருஷ்ணரைச் செஞ்சு கும்பிட்டுக்கிட்டு இருக்கார்.  பவர்ஃபுல் ரிஷி என்பதால் உருகாமல் அப்படியே இருந்துருக்கு போல !

கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது....  கண்ணனே  அங்கே ஒரு  மாட்டுக்காரப் பையனா வந்தவன்,  இவர் கண்ணைத் திறக்கும்வரை அங்கே இருக்கலாமுன்னு நினைச்சான்.  ச்சும்மா நின்னுக்கிட்டு இருந்தால் போர் அடிக்காதா?  அங்கிருக்கும் சிலை வேற வெண்ணெயா இருக்கு. கொஞ்சூண்டு கிள்ளி வாயில் போட்டுக்கிட்டான். ருசி அட்டகாசம். இவர்கிட்டேதானே அந்த தேவலோகப் பசு நந்தினி இருந்துருக்கு? அதான் அதனோட பாலில் உண்டாக்குன வெண்ணெய் அபார ருசியில்!

கொஞ்சம் கொஞ்சமா எடுத்துத் தின்னுக்கிட்டே கடைசிப் பகுதிக்கு வந்தாச். ஒரு வாய் வெண்ணெய்தான் பாக்கி இருக்கு அந்த பெரிய வெண்ணை விக்ரகத்தின் மிச்சமாய்.  வசிஷ்டர் தியானம் முடிச்சுக் கண்ணைத் திறக்கிறார். பயல் அங்கே வெண்ணையை மொக்கிக்கிட்டு இருக்கான்.
அடேய்...  என்ன காரியம் செய்தாய்?    ( என் சாமியைத் தின்னுட்டயேடா....  ) இரு உன்னைன்னு  எழுந்திரிக்கும்போது, பயல் கையில் மீதமிருந்த  வெண்ணெயையும் வாயில் திணிச்சுக்கிட்டு ஓடறான். அவனைப்பிடிச்சு நாலு அடியாவது வைக்கலைன்னா மனசு ஆறாதுன்னு இவரும் துரத்திக்கிட்டே பின்னாலே ஓடறார்.....

இன்னொரு இடத்துலே ஒரு மகிழமரத்தடியில்  முனிவர் கூட்டம் ஒன்னு உக்கார்ந்து  தவம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  யாரைக்குறித்து?   எல்லாம்  பரம்பொருள் ஸ்ரீ நாராயணனை  நினைத்துத்தான்!  ஓடுன வேகத்தில் பையன் கூட்டத்துக்குள் நுழைஞ்சுட்டான்.  இந்த முனிவர்களின் தவப்பயனின் பலனாக  அவன் யாருன்னு அவுங்களுக்குப் புரிஞ்சிருச்சு.  பிடி பிடி விடாதேன்னு பிடிச்சு (இன்னொருமுறை) கயிற்றினால் கட்டிப்போட்டு வச்சுட்டாங்க! தாம உதரன்  கட்டுப்பட்டு நிக்கறான் அவர்களுடைய அன்பென்னும் கயிற்றில் :-)

துரத்திக்கிட்டே பின்னால் ஓடி வந்த வசிஷ்டர், இவந்தான் விடாதீங்கன்னு வந்து கெட்டியாக் கட்டிப் பிடிச்சார்.  மூளையில்  ஒரு  மின்னல்!
 வசிஷ்டருக்கு அப்போதான்  உண்மை மனசில் உதிச்சது.  அட என் கண்ணா.......... கண்ணா..... கண்ணன் கண்ணன்...

சாமிகளின் வழக்கப்படி ' என்ன வரம் வேணும்?'   கேட்டதும்  ' நீ இங்கேயே தங்கி எங்களுக்கும் உனைநாடி வரும் பக்தர்களுக்கும் அருள் புரிய வேணும்' எல்லாம் ஆச்சு !
கண்ணனே வந்து தங்கி,  (எல்லார் மனங்களிலும்)குடியேறிய இடம்தான் இந்தத் திருக்கண்ணங்குடி!

நாகை  சௌந்தர்யராஜனை தரிசிச்ச கையோடு இங்கே வந்துருக்கோம்.  வெறும் பத்தரை கிமீதூரம்தான்!  20 நிமிட் ஆச்சு.  சாலை ஒன்னும் சரி இல்லை.....

இங்கே போறதுக்கு நம்ம கூகுள் வரைபடத்தில் வழி கேட்டால்.... இப்படி ஒரு இடமே இல்லைன்னு சொல்லிருச்சு.  நெசமாவான்னு  பார்த்துக்கிட்டே வந்தால்       ஸ்ரீ ஷ்யாமளமேனிப்  பெருமாள் கோவில் திருக்கண்ணங்குடின்னு  சொல்லுச்சு.  பாருங்களேன்   வெள்ளைக்காரருக்கு தன் மேனி நிறத்தைக் காமிச்சுருக்கான் இவன்!

கோவில் திருக்குளம் படு சுத்தம்!   மகிழ்ச்சி!!!
அருள்மிகு தாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி ன்னு போர்டு.  சின்னதா அழகான அஞ்சடுக்கு ராஜகோபுரம்!
திருப்பணி வேலைகள் ஜரூரா நடக்குது!  நடக்கட்டும் நடக்கட்டும். கடைசியா  பழுதுபார்த்து சம்ரோக்ஷணம் செஞ்சது 1968 லே!   அம்மாடி.....  ஆச்சே   48 வருசம்!  ஏதோ  இப்பவாவது பெருமாள் கண் திறந்தாரே.....  வேலை நடக்கும் ஜோர் பார்த்தால் இன்னும் ரெண்டு வருசம் ஆகலாம்.  கும்பாபிஷேகத்துக்கு பொன்விழா ஆச்சு போங்க :-)



பலிபீடம், கொடிமரம் தாண்டி பெரியதிருவடிக்கான சந்நிதி.  இவருக்கு ரெண்டு பக்கமும்  சுவர்கள் அமைச்சுப் பக்கவாட்டில் இடமோ வலமோ போய்  மண்டபத்தில் ஏறிப்போகும் அமைப்பு. இவர் கண்ணுக்கு நேரா மூலவர் இருக்கார் அந்தாண்டை கோடியில்!

லோகநாதப்பெருமாள் என்ற திவ்யநாமம். உற்சவர் பெயர் தாமோதர நாராயணன். தாயார்  லோகநாயகி. உற்சவத்தாயார்  அரவிந்தநாயகி. உற்சவர் நிக்கற ஸ்டைல் நம்ம கண்ணந்தான். இடுப்பிலே கைகள்!
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி
சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன்
அங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
நம்ம திருமங்கை ஆழ்வார்  (அவருடைய ) வழக்கம்போல் பத்துப் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.

இவர்மேல்கூட ஒரு வழக்கு இருந்தது ஒரு காலத்துலே!  நீலன் என்ற பெயரில் திருடனாக  இருந்தது நினைவிருக்கோ?  எல்லாம் பெருமாள் கைங்கர்யத்துக்குன்னு சொல்லிட்டுப் போயிட முடியாது......   குமுதவல்லியைக் கல்யாணம் செஞ்சுக்க போட்ட நிபந்தனைகள். தினம் ஆயிரம்பேருக்கு விருந்து வைக்கணும் என்பது.  அதுக்குக் காசுக்கு எங்கே போக? என்னதான் குறுநிலமன்னன் என்றாலும்....  காசு மரத்துலேயா காய்க்குது?  அங்கங்கே திருடியும், கொள்ளையடிச்சும்தான் சாப்பாடு போட்டார். அப்போதான் பெருமாளையே வழிப்பறி செய்யப்போக, அவர் தடுத்தாட்கொண்டு இவரைப் பெரிய லெவலுக்குக்கு உயர்த்தி  வைஷ்ணவராக்கி, பிறகு   ஆழ்வார் ஸ்தானத்துலே  அக்ஸெப்ட் செஞ்சதா ஒரு வரலாறு இருக்கே!
ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பணிகள் செய்யும் ஆர்வத்தோடு கிளம்பிப்போறார் திருமங்கையார்.  மதில்சுவர் எழுப்பணுமாம். பெரிய கோவில். பெருமாளும் பெரிய பெருமாள். இங்கே எல்லாத்துக்கும் பெரியன்னு சேர்த்துக்கத்தான் வேணும், அப்படி ஒரு கோவில். பூலோக வைகுண்டம்!  மறுபடி நிதி நிலமை  சரி இல்லை. ஆனால் ஒப்புக்கொண்டதை செஞ்சு முடிக்கணுமே.

நாகப்பட்டினம் புத்தவிஹாரையில் ஒரு தங்க புத்தர் இருந்துருக்கார். அவரைக் கிளப்பிட்டால்  காசு ....   தங்கத்தை  விற்கமுடியாதா என்ன?    ராவோட ராவாக் கிளப்பிக்கிட்டு வந்துட்டார். போகும்போதே   பலபலன்னு பொழுது விடிஞ்சுருச்சு.   பகலில் எடுத்துக்கிட்டுப் போக முடியாதே...  திருட்டுப்பொருள்...  இங்கே வர்ற வழியில் ஒரு புளியமரத்தாண்டை உழுதுபோட்ட நிலம் ஒன்னு.  சட்னு மண்ணைக் கிளறிச் சுலபமாத் தோண்டி அதுக்குள்ளே புத்தரை வச்சு மூடியாச்சு.   பொழுதும் இருட்டிக்கிட்டு வருது.  ராவெல்லாம் கண்முழிச்சு வேலை பார்த்ததில் களைப்பு அதிகம். தூக்கம் கண்ணைக் கட்டுது.  புளியமரத்துக்கு  ஒரு ஆர்டர் போட்டார். ராத்ரி, நீ தூங்காமல் இருந்து  இதைக் காப்பாத்தணும், உன் பொறுப்புன்னு சொல்லிட்டுக் கீழே படுத்தவர் உறங்கியே போனார்.

இந்த இடத்துலே இன்னொரு வெர்ஷன் வருது.    புத்தரைத் திருடப்போனதுவரை அதே கதைதான். ஆனால் புத்தர் முன்னால் நிக்கும்போது...    மறுபடியும் திருட்டுத் தொழிலான்னு ஒரு தோணல்.  நாம் எடுத்தால்தானே அது திருட்டு. தாமாய் நம்ம கைக்கு வந்தால்....   அது திருட்டில் சேராதேன்னு தனக்குள்ளே ஒரு வியாக்யானம் வேற!

புத்தர் சிலைக்கு முன்னால் நின்னுக்கிட்டு, பாடறார்.

ஈயத்தாலாகாதோ, இரும்பினா லாகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ
பித்தளை, நற்செம்புக ளாலாகாதோ
மாயப் பொன்னும் வேண்டுமோ
மதித்துன்னைப் பண்ணுகைக்கே

  பொறுமையின் பூஷணமாம்   புத்தருக்கே தாங்க முடியலை போல.  சிலையை மூடி இருந்த தங்கக்கவசம் அப்படியே கழண்டு விழுந்துருச்சு.  (ஐயோ....   அப்படி கோரமான குரலாகவா இருந்துருக்கும்?) அதை மட்டும் சுருட்டிக்கிட்டுக் கிளம்பிட்டார்.
இந்தப் பாட்டு சமாச்சாரம் மெய்யா இல்லையா என்பதற்கு  ஆதாரம் ஒன்னும் கிட்டலை.  இது அந்த நாலாயிரத்தில் வராது என்பதால் என்னால்  தேடவும் முடியலை என்பதே மெய் :-)

சரி... இப்பக் கதையைத் தொடரலாம். இதுக்கப்புறம் ரெண்டு வெர்ஷனும் ஒன்னுதான்.  தங்கத்தைப் புதைச்சு வச்சுட்டுத் தூங்கிட்டார்.
பொழுது நல்லாவே விடிஞ்சுருது. கிளம்பிடலாமுன்னு எழுந்தால்.... நிலத்துக்குச் சொந்தக்காரர் வந்துட்டார். 'யாரைய்யா நீர்?  இது என் நிலம். எழுந்து போவீர்'னு (அப்ப எல்லாம் இப்படித்தான் பேசி இருப்பாங்க இல்லே?) சொல்றார்.  இன்னும் புதைச்சு வச்சதைத் திரும்ப எடுத்துக்கலையே...  எப்படிவிட்டுட்டுப் போறது?

'என்னய்யா இப்படிச் சொல்றீர். இது என்னுடைய நிலம். நீர் யார்?' ஒரேடியா ப்ளேட்டைத் திருப்பிப்போட்டார் திருமங்கை. அதிர்ந்து போன நிலச்சொந்தக்காரர்  எவ்வளவோ எடுத்துச்சொல்லியும்  இவர் , இது என்னோட நிலம்தான். இங்கிருந்து நகரமாட்டேன்னு விடாப்பிடியா உக்கார்ந்துட்டார்.(தங்கத்துக்குப் பக்கத்துலேதானே!)

இது என்னடா வம்பாப் போச்சுன்னு நிலச் சொந்தக்காரர்  ஊர் நாட்டாமைகிட்டே போய் பிராது கொடுத்தார். அந்தக்  காலம் இல்லையா.....  நாட்டாமை சட்னு கிளம்பி இந்த நிலத்துக்கு வந்து சேர்ந்தார்.  புது ஆளை  விசாரிக்கிறார். எங்கிட்டே நிலத்துக்கான பத்திரம்கூட இருக்குன்னு அடிச்சுவிட்டதும்....  இருக்குமோன்னு  ஒரு தயக்கம் வருது நாட்டாமைக்கு.  'சரி, அதைக் காண்பியும்' என்றதும், 'இடுப்பிலேயே கட்டிக்கிட்டு அலையமுடியுமா?  ஊர்லே என் வீட்டுலே இருக்கு'ன்னு சாதிக்கிறார்.
'சரி. போய் கொண்டுவந்து காண்பியும்; என்றதும் 'எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு.  அவ்வளவு தூரம் நடக்கணுமே!  இன்றைக்கு இங்கேயே தங்கி ஓய்வெடுத்துக்கிட்டு நாளைக்குப்போவேன்'  என்றார் திருமங்கை.
சரின்னுட்டு எல்லோரும் அவரை அங்கேயே விட்டுட்டுப் போயிடறாங்க. தனியா உக்கார்ந்துக்கிட்டு இருக்கார். பசியும் தாகமுமா இருக்கு. மெள்ளக் கிளம்பி ஊருக்குள் வந்து பார்த்தால் ஊர்ப் பொதுக் கிணற்றில்  பெண்கள் தண்ணீர்  எடுத்துக்கிட்டு இருக்காங்க.

'தாகமா இருக்கு. உன் குடத்தைக் கொஞ்சம்தாம்மா...தண்ணீர்  குடிச்சுட்டுத் தரேன்'னு கேட்டதும், 'ஐயோ....   குடத்தை வாங்கிக்கிட்டுத் திருப்பித்தராம அது தன் குடமுன்னு சொல்லிருவார். நிலத்தையே தன்னுடையதுன்னு அடாவடி செஞ்சவருக்கு நம்மூர் தண்ணி தர்றதுகூடப் பாவம்'னுட்டு யாரும் தண்ணி கூடத் தரலை.   கோபம் வந்துருச்சு. இந்தக் கிணத்துத் தண்ணீ  இனிமே ஊறாமப் போகணும், ஊர்லெ இருக்கும் நீர்நிலையெல்லாம் உப்புத்தண்ணியாப் போகணும் என்று சாபம் விட்டார்.

தாகம்தான், களைப்புதான்....  ஆனால் இதுக்கெல்லாம் அசந்து போகலாமா....  நேரம் பார்த்துத் தங்கத்தைத் தோண்டி  எடுத்துக்கிட்டுப்போகும் வரை பொறுமை காக்கவேணுமுன்னு  தீர்மானம் செஞ்சுக்கிட்டு அப்படியே நடந்துபோகும்போது ஒரு மகிழமரம் கண்ணில் பட்டது. அந்த நிழலில் உக்கார்ந்து  ஓய்வெடுத்துக்கிட்டே கண் மூடிச்சின்னத் தூக்கம் ஒன்னு போட்டார்.

கண் திறந்தப்ப யாரோ ஒருத்தர் வந்து சாப்பாடும் தண்ணியும் கொடுத்தார்.   அரக்கப்பரக்கத் தின்னு, தண்ணியும் குடிச்சுட்டு நன்றி சொல்லலாமுன்னு பார்த்தால் அந்த ஆளைக் காணோம்!  சரி போகட்டும். பெருமாளே கொடுத்தார்னு நினைச்சுக்கிட்டு, இவ்ளோ நேரம் எனக்கு நிழல் கொடுத்த மகிழமரமே....   நீ பூக்காது காய்க்காது எப்போதும் இளமையாகவே இருன்னு வரம் கொடுத்தார். வயிறு நிறைஞ்சதும் நல்ல குணம் வருது பாருங்க.  சும்மாவாச் சொன்னாங்க பசி வந்தா பத்தும் பறந்து போகுமுன்னு!

அது இருக்கட்டும், பூக்காம, காய்க்காம இருப்பது  வரமா? இதே வரம் பெண்களுக்குக் கிடைச்சால் அது சாபமில்லையோ? இப்படி இருக்கும் நிலையில் உள்ள பெண்களை ஊர் எப்படியெல்லாம் பேசுது.....   அடப்பாவமே.....

அந்த மரம் அப்படியே இளமையாகவே பலகாலங்கள் இருந்து  அப்புறம்  ஒரு புயலில் விழுந்துருச்சாம். அதே இடத்தில் இன்னொரு மகிழமரத்தை நட்டு வச்சுருக்காங்க. அதுவும்  பூக்காத,  காய்க்காத மரமாத்தானிருக்கு கோவிலுக்குள்ளே!  தலவிருட்சம் கூட இதுதானாக்கும்!
ராத்திரியாச்சு.  நல்லா  இருட்டுனதும் மண்ணைத் தோண்டித் தங்கத்தை எடுத்து மடியில் கட்டிக்கிட்டு ஊரைவிட்டுக் கிளம்பிப்போறார். யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வர்றதைப்போல் தோணுது.  திரும்பிப் பார்த்தால் ஒரு ஆள். யார் என்னன்னு விசாரிச்சால்....  'நான் ஊர்க்காவலன்.  உங்களுக்குத் துணையா ஊர் எல்லை வரை வரேன்'னு சொல்றான். அவனுடைய உருவத்தைப் பார்த்தால் பயமா இருக்கு.  நம்மிடம் இருக்கும் தங்கத்தை அபகரிக்கத்தான் கூடவே வர்றான்னு  நினைச்சு  நெஞ்சு தடக் தடக்....  மடியிலே கனம். அதுதான் வழியிலே பயம்  :-)
அவனை எங்கேயும் கழட்டிவிட முடியலை.  கடைசியில் இன்னொரு ஊராண்டை வந்துட்டாங்க. தூரத்துலே வெளிச்சம் பார்த்துட்டு,  'நான் போய்க்கிறேன். நீ திரும்பிப் போப்பா' னு சொல்லிட்டுப் பார்த்தால்.... சங்கு சக்ரத்தோடு காட்சி கொடுத்தானாம் அந்த ஊர்க் காவலன்!  (இப்படி அநியாயத்துக்கும், திருடனும் துணை போற பெருமாளை என்னன்னு சொல்லலாம்.....  !)

கீழே  படம்:  வைகுந்தவாசல்!
மேலே சொன்ன சம்பவங்களை வச்சுத்  திருக்கண்ணங்குடிக்குன்னே ஒரு பழமொழிகூட இருக்குதுங்க.

"உறங்காப்புளி, ஊறாக்கிணறு, காயாமகிழ், தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி''

இந்தத் தோலா வழக்குன்றது தீரா வழக்கு என்பதிலிருந்து மரூவி இருக்கலாம்.   நிலப் பத்திரம் நாளைக்குக் கொண்டாந்து காட்டறேன்னு சொன்ன திருமங்கை...ராவோடு ராவா கம்பி நீட்டுனவர், மறுபடி அந்தப் பக்கம் தலை காமிக்கவே இல்லை. அதனால்  நிலச் சொந்தக்காரன் அவர் மேல் கொடுத்த புகாரும் வழக்கும் தீர்க்கப்படாமல் அப்படியே நின்னு போயிருக்கே!



இதுதான் சாக்குன்னு இந்தப் பெருமாள் ஊர் வழக்குகளைத் 'தான் தீர்த்து வைக்கறதா'ச் சொல்லிச் செஞ்சுக்கிட்டு இருக்காராம்! எதாவது  வழக்கு இருந்து அது  நிலுவையில் இருந்தால் இங்கே வந்து வேண்டிக்கிட்டா சீக்கிரம் முடிச்சுக் கொடுத்துடறாராம்!

தாயார் சந்நிதி
இந்தக்கோவில் ஒரு விசேஷம் என்னன்னா....   திருநீரணி விழான்னு ஒன்னு சித்திரை மாச ப்ரம்மோத்ஸவத்தில் ஒரு நாள் கொண்டாடறாங்க.  அன்றைக்குப் பெருமாளும், பட்டர்ஸ்வாமிகளும், இன்னும் உற்சவத்தில் பங்கெடுத்துக்கறவங்களும்னு இப்படி எல்லாரும் நாமத்துக்குப் பதிலா வெண்ணீறு  அணிஞ்சுக்குவாங்க. ஆஹான்னு  இருந்தது. சைவ வைணவ ஒற்றுமைக்கு ஏற்பட்ட விழா(வாம்). ஆனால்  எல்லாம் மேஜிக்லே   ச்சூ மந்த்ரக்காளி  போட்டதுபோல மூணே முக்கால் நாழிகைதான்!   (ஒன்னே முக்காலா இல்லை மூணே முக்காலான்னு இப்ப ஒரு சந்தேகம் வந்துருக்கு!) அப்புறம் பழைய நாமம் வந்துரும்! ஐ மீன் போட்டுருவாங்க :-)
காலை 8 முதல் 12, மாலை 5 முதல் 9 வரை கோவில்நேரம்.  அஞ்சுகால பூஜை!
முந்தி சொல்லிக்கிட்டு இருந்த பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்னு. அதிலும் ரொம்ப முக்கியமானதுன்னும் சொல்றாங்க.
திருப்பணிகள் நடப்பதால் ரொம்பச் சுத்திப் பார்க்க  வழி இல்லை.  அம்மா ஆடுகள் போல   இருக்கு. கோவிலில் இடம் புடிச்சு உக்கார்ந்துருக்குதுகள்.  எல்லாம் பூர்வஜென்ம பக்தர்களாகத்தான் இருக்கவேணும்!

நாம் கோவிலில் இருக்கும்போது , சாமி கும்பிட இன்னொரு குழுவும் (ரெண்டு குடும்பங்கள்.  தோழிகளாம்)  வந்துருந்தாங்க.  அவுங்ககிட்டே கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.  சின்னஞ்சிறுமிகள் அழகா இருக்காங்க.    பொன் தரணி,  பாலராஜ கௌரி ன்னு  பெயர்கள். கொஞ்சம் படங்களைக் க்ளிக்கினேன்.  நம்ம தொழிலைச் சொல்லி,  வலையில் போட அனுமதியும் வாங்கியாச்.
குடும்பம்,  எழுத்தாளர்கள்  சம்பந்தம் உள்ளதுதானாம்.  அப்பா எழுதுவார்னு சொன்னாங்க. பத்திரிகையில்!
பக்கத்து ஊர்தானாம். நமக்கு அழைப்பு இருக்கு!

மணி இப்பவே பதினொன்னே முக்கால். இனி எந்தக் கோவிலுக்கும் போக முடியாது.  உச்சிகால பூஜை முடிஞ்சு  கோவிலை மூடிருவாங்க.  பேசாம  கும்மோணம் ராயாஸ் போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு  ஓய்வுதான்.
ஒன்னரை மணி நேரப் பயணம். திருவாரூர், சேங்காலிபுரம் வழிதான் வந்தோம். 60 கிமீ தூரம்.

நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுங்க.  நாலுமணிக்கு அடுத்த கோவில். சரியா?


தொடரும்........  :-)


14 comments:

said...

தாம உதிரன்
Should be uDharan - stomach; not uDhI.

said...

அருமை. நன்றி. வணக்கம். தொடர்கிறேன்.

said...

திருக்கண்ணங்குடி பத்தி இப்பத்தான் கேள்விப்படுறேன்.

திருமங்கையோட திருட்டுத் தொழில் தெரிஞ்சதுதானே. பாட்டுப் பாடுனதும் தங்கக் கவசம் விழுந்தது பின்னால் வந்த கதையா இருக்கும். புத்தல் சிலையைத் திருடியிருப்பார்ங்குறதுதான் நம்பும்படி இருக்கு.

அனுமாருக்கு வெண்ணெய் பூசுறது பத்தி வால்மீகியும் ஒன்னும் சொல்லல. கம்பரும் ஒன்னும் சொல்லல. இன்னும் சொல்லப் போனா அனுமனை நெருப்பு சுடவே இல்ல. சுட்டாத்தானே பூச வெண்ணெய் வேணும். சீதை வேண்டிக்கேட்டதால அக்கினி அனுமனைச் சுடவில்லை. யாரோ வடை பிடிச்ச ஒருத்தர் வடைமாலை சாத்தியிருப்பாரு. வெண்ணெய் பிடிச்ச இன்னொருத்தர் வெண்ணெய் சார்த்தியிருப்பாரு. அதப் பாத்து எல்லாரும் செஞ்சிருப்பாங்க.

முருகன் பஞ்சாமிர்தம் சாப்பிடதாக் கதையே கெடையாது. ஆனா பஞ்சாமிர்தம்னா முருகன்னும் லட்டுன்னா வெங்கடாஜலபதின்னும் மக்கள் ஆக்கிறலையா... அந்த மாதிரிதான்.

said...

திருக்கண்ணங்குடி பெருமாளையும் கோவிலையும் உங்கள் தயவில் தரிசித்தோம். தொடருங்கள். அடுத்தபதிவு கோவிலில் ஆரம்பிக்குமா அல்லது ராயாஸ் மதிய உணவில் ஆரம்பிக்குமா என்று தெரியவில்லை.

ஆஞ்சனேயருக்கு வடை மாலை என்ற வழக்கத்தை பக்தர்கள் எல்லோரும் ஆதரிப்பார்கள். கோவில்களிலும், பெருமாளுக்கும் ஸ்பெஷல் பிரசாதம் இருப்பதே நமக்கு ஒரு ஈர்ப்பான விஷயம்தான். (திருப்பதியில் லட்டு வந்து சில நூறு வருஷங்கள்கூட இருக்காது. கீழ்த்திருப்பதியில், காலை 7 மணிக்கு குங்கும அர்ச்சனை முடிந்து நெய்யில் பொரித்த பெரிய வடையும், அந்தக்கோவிலுக்கே உரித்தான பவுடர் லட்டுவும் அட்டஹாசமாக இருந்தது. நாங்கள் சாதாரண தரிசனத்துக்காகப் போனது, ரொம்ப காலை'நேரம் என்பதால் முதல் தரிசனமான குங்கும அர்ச்சனை டிக்கெட் வாங்கினோம். நீங்கள் போகின்ற பகுதியில்தான், அப்பக்குடத்தான் கோவிலில், மாலை அப்பம் பிரசாதமாகக் கொடுத்தார்கள்). நம்ம ஊரில் ஆஞ்சனேயருக்கு வெண்ணெய்க் காப்பு போல், வடக்கே, செந்தூரக் காப்பைத் தீட்டிவைத்துவிடுகிறார்கள் (வெண்ணெய் கட்டுப்படியாகவில்லை போலிருக்கு). வெண்ணெய்க்காப்பின் ரகசியத்தைச் சொல்லவில்லையே.

said...

திருக்கண்ணங்குடி.... எத்தனை தகவல்கள்.

வழக்கம் போல, படங்கள் அழகு. படம் எடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்!

தொடர்கிறேன்.

said...

வாங்க Strada Roseville.

கவனிப்புக்கு நன்றி. திருத்தியாச்சு. :-)

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

வடையில் கூட ஆஞ்சிக்கான வடை தனி ரகம். மற்ற வடைகளை நாலு நாள் வச்சுத் தின்ன முடியுமோ? இதை வச்சுத்தின்னலாம்! ரசனையான மனிதனின் கண்டுபிடிப்பு :-)

ஆனா... சும்மாச் சொல்லக்கூடாது.... கோவில் கதைகளில் மனிதர்களின் கற்பனை எப்படியெல்லாம் போயிருக்குன்னு பார்த்தால்............ ஹா..ன்னு வியப்புதான் !!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அடுத்த பதிவு கோவிலில் ஆரம்பிச்சது:-)

அதென்ன பவுடர் லட்டு?

அப்பக்குடத்தானைத் தரிசனம் செஞ்சோம். ஆனால் அப்பம் தராமல் ஏமாத்திப்புட்டான்!

பல கோவில்களில் பிரஸாதங்கள் வாங்கறதே இல்லை. ஸ்ரீரங்கம்கோவிலில்தான் தைரியமா வாங்கினோம் போனமுறை! தில்லக்கேணியில் வாங்குவதுண்டு.

நீங்க சொன்னமாதிரி பிரஸாதம் ஒரு ஈர்ப்புதான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரெண்டுமூணு நாள் கும்மோணத்தில் தங்கறமாதிரிப் போனீங்கன்னா........ எக்கச்சக்கமான கோவில்களை தரிசிக்கமுடியும். உங்களைப்போல் உள்ளவர்களுக்கு நேரம் ஒரு பெரிய பிரச்சனைதான்!

நாங்களும் இந்த திவ்யதேச யாத்திரை என்பதால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்!

said...

"உறங்காப்புளி, ஊறாக்கிணறு, காயாமகிழ், தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி''...



அருமை..

said...

வெண்ணை, வெண்ணைய் - என்ன ரீச்சர் புதுபுது ஸ்பெல்லிங் எல்லாம் கொண்டு வரீங்க? வெண்ணெய், வெண்ணெய்க்காப்பு.

பத்து தடவை இம்போசிஷன் எழுதுங்க.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி!

said...

வாங்க கொத்ஸ்.

அடடா... இப்படி வெண்ணெய் வெண்ணெயா வழுக்கிக்கிட்டுப்போயிருச்சே.......

இம்போஸிஷன் நான் வெண்ணையில் எழுதி வச்சேன்... அது உருகிப்போச்சு போல !