Wednesday, August 31, 2016

திரு ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 80)

போன பயணத்தில்  புள்ளம்பூதங்குடி  கோவிலைத் தேடிப்போகையில்  வழியில் நமக்காகக் கண்லே ஆப்ட கோவிலும்  நூற்றியெட்டில் ஒன்னான  ஆண்டளக்கும் ஐயன் பெருமாள்னு  தெரியாமலேயே போய் கும்பிட்டு இருக்கோம். கும்மோணத்தைச் சுற்றி இருக்கும்  நூற்றியெட்டு லிஸ்ட்டில் இதை விட்டுட்டு,  தஞ்சைப் பகுதின்னு போட்டு வச்சுருக்காங்க.  இதைப் பற்றி எழுத, இன்னொருக்கா வரச் சொல்லிட்டார் ஆண்டு அளப்பவர் என்றுதான் நினைச்சுக்கிட்டேன். வாசலில் ஒரு  போர்டு போட்டு வச்சுருக்கப்டாதோ?  கோபுரத்தைக் க்ளிக் பண்ணதோடு சரின்னு  விட்டதை நினைச்சால் .... மனசுக்கு பேஜாராப் போச்சு:-(
தரிசனம் செஞ்ச புண்ணியத்தோடு சரி. கோவிலைப் பற்றியும் கோவில்கதைகளைப் பற்றியும் விஸ்தரிச்சு எழுதாததாலும்,  அதை உங்களுக்கு வாசிக்க சான்ஸ் கொடுக்காததாலும்  கூடுதல் புண்ணியம் கிடைக்கலை. ' இன்னொருக்காப் போய்  அனுபவிச்சுப் பார்த்து  எழுத வா'ன்னுட்டான் அவன். அப்படியே ஆகட்டும், ஆமென்.

இன்றைக்கு நமக்கு வாய்ச்சது:-)  மதியம் சாப்பாடு முடிக்கும்போதே  ரெண்டேமுக்காலுக்குச் சமீபம்.  நாலரை மணிக்குக் கிளம்பலாம் என்று  இவர் நினைக்க,  நான் அதெல்லாம் முடியாதுன்னு   மூணே முக்காலுக்குக் கிளப்பிவிட்டேன்.  இங்கிருந்து கிட்டத்தட்ட 12 கிமீதூரம்.  அரைமணி நேரம் ஆகும் என்று கணிச்சது கூகுள்.

போற வழியில் பள்ளிகொண்டவன்  முகப்பில் இருக்கும் ஒரு அழகான கோபுரம் பார்த்தவுடன் ஒரு ஸ்டாப். இன்னம்பூர் னு  வழியில் ஒரு போர்டு பார்த்ததும் நமக்கு  இன்னொரு  குழுவில் இருக்கும் நண்பர் இன்னம்பூரார் நினைவுக்கு வந்தார். கோவில் வாசல் மூடி இருக்கேன்னு ஒரு அஞ்சாறு க்ளிக்ஸ்  மட்டும் நண்பருக்காக!  இது இன்னம்பூர் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவில்!

இங்கிருந்து நாம் போக  வேண்டிய  ஆதனூர்  கோவிலுக்கு  நாலரை கிமீ தூரம்தான். ஆனாலும்  என்னவோ இங்கெ சுத்தி அங்கெ சுத்தின்னு போய்ச் சேர்ந்தப்ப மணி அஞ்சடிக்க அஞ்சு நிமிட்.  காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் கோவில் இருக்கு. முந்தியெல்லாம் கோவில் பின்னாலேயே ஆறு  இருக்குமாம்.  இப்பத்தான்  ஆறு குறுகிப்போய் எங்கியோ கிடக்கே.....

நல்லவேளையாக் கோவில் திறந்துருக்கு!  குட்டியா ஒரு மூணு நிலை ராஜகோபுரம். கோபுரவாசலில் நுழைஞ்சால் பலிபீடம், கொடிமரம், பெரியதிருவடிக்கான சந்நிதி!  வெளியே வாசலில் நின்னுக்கிட்டு இருந்த பட்டர், நம்மைப் பார்த்ததும் கோவிலுக்குள் போனார். நாங்களும் பின் தொடர்ந்தோம்.
பத்தே நிமிசத்தில்  மூலவர் ஆண்டளக்கும் ஐயனையும், தாயார் பார்க்கவியையும், உற்சவர் ரங்கநாதரையும் ஸேவித்தோம். தீபாராதனை காமிச்சுச் சடாரி, தீர்த்தம் கிடைச்சது. கிடந்த கோலத்தில் பெருமாள். தலைக்குத் தலையணையா இருக்கு ஒரு    நெல் அளந்து போடும் 'மரக்கால்'.  வலதுகையால்  அதை ஒரு பக்கமாப் பிடிச்சுக்கிட்டு இருக்கார்.  இல்லைன்னா  மரக்கால் உருண்டு போயிடாதோ?  இன்னொரு  கையில் ஏடும் எழுத்தாணியும். அளக்க அளக்க எழுதி வச்சுக்குவாரோ?

பழைய கொள்ளளவுகளில்.....  எட்டு படிகள் அளந்து போட்டால் அது ஒரு மரக்கால்.  படியை  பட்டணம் படின்னு சொல்வாங்க.  சில இடங்களில் படின்னா  சின்னதாக் கூட இருக்கும். அரைப்படி அளவுதான்.  அதனால் சின்னப்படி, பட்டணம்படின்னு  வேறுபடுத்திச் சொல்றது வழக்கம்.  டெஸிமல் அளவுகள் வர்றதுக்கு முன் படியால்தான்   அளப்பு.  படி அளக்கறவன்னு சொல்றதை நினைச்சுக்கலாம் :-) 
இந்த மரக்காலுக்கு   இங்கே  ஒரு  கதையும் இருக்கு. என்னன்னு பார்க்கலாமா?

திருமங்கையாழ்வாருடன்  சம்பந்தப்பட்ட  சமாச்சாரம்தான் இதுவும்.  அங்கே ஸ்ரீரங்கத்தில் கோவில் மதில்கட்டும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  பணப்பற்றாக்குறை. வேலை செய்யும் ஆட்களுக்குக் கூலி கொடுக்கக் காசில்லை.  திருமங்கையின் நிலை பார்த்த பெருமாள்,  இந்த இடத்துக்குப் போய்  காத்திரும். உதவி வந்துக்கிட்டே இருக்குன்னு சொல்லி  இங்கெ அனுப்பறார்.
ஸ்ரீரங்கத்துக்கும், ஆதனூருக்கும் அம்பது மைல் தூரம். உதவணுமுன்னா அங்கேயெ உதவப்டாதா?  அம்பது மைல் நடக்க வைக்கணுமா என்ன?   என்னமோ இந்தப் பெருமாள் நடத்தும் லீலைகளைப் புரிஞ்சுக்கவெ முடியறதில்லையாக்கும்!

எல்லோரும் இங்கே வந்து காத்திருக்காங்க. அப்பதான்  ஆறு கோவிலாண்டையே    இருந்துருக்கு!  பெருமாள் அனுப்பினாருன்னு சொல்லி ஒரு ஆள் வந்து சேர்ந்தார். அவர் கையில் நெல் அளக்கும் ஒரு மரக்கால். காலியாத்தான் கிடக்கு.

'என்ன இப்படி வெறுங்கையா வந்துருக்கீர்'னு கேட்க,  'கூலிக்குக் காசு இல்லைன்னு கேட்டீரே. அதுக்குத்தான்  வந்தேன்.  ஆட்களுக்கு  ஆளுக்கொரு மரக்கால்  மணல்  அளந்து போடப்  போறேன்.  அதுக்குக் கையோட கணக்கு வச்சுக்கணும்'.  (ஆத்து மணல் கொள்ளை கூட அப்பவே ஆரம்பிச்சு வச்சுருக்கார் போல ! :-) ..)

"மணலைக் கூலியாக் கொடுத்தால்  எவன் வாங்குவான்?"

'அதெல்லாம் கவலைப்படாதீர்.   யாரெல்லாம் மனசாட்சிக்கு விரோதமில்லாம நல்லபடியா வேலை செஞ்சாங்களோ அவுங்களுக்கெல்லாம் இந்த மணல் பொன் மணலாகிரும்.  வேலையை ஒழுங்காச் செய்யாதவனுக்கு, மணல், மணலாகவே இருக்குமு'ன்னு சொல்லி மரக்கால் மண்ணை  அளந்து போட்டாராம்.  அவரவருடைய யோக்கியதைக்குத் தக்கமாதிரி மண் பொன்னாகியது!

ஜஸ்ட்...  இப்ப இது நடந்தால் எப்படி இருக்குமுன்னு!  மணலோ மணல்தான்! அதிலும் அரசாங்க அலுவல் செய்யறவங்களுக்கு.............   ஹாஹா... சொல்லவேண்டியதே இல்லை:-)

மணலாகவே  கூலி  கிடைச்சவங்க, எதோ ஏமாத்துக்காரன்னு துரத்தப்போக...  ஓட்டமா ஓடுனவர் இங்கெ வந்து கிடந்ததாகக் கதை போகுது!


ரொம்பப் பெரியகோவில் இல்லை. ஒரே ஒரு பிரகாரம்தான். சுத்தி வந்தோம். பார்க்கவித் தாயார் தனிச்சந்நிதியில்!  அதென்ன கேரள ஸ்டைலில் பெயர் வச்சுண்டுருக்காள்?  ஹேய்....  அதொன்னுமில்லையாக்கும்... ப்ருகு முனிவரின் மகளாய் அவதரித்ததால்   அப்பா பெயரையும் சேர்த்து நாம் நினைக்கணுமுன்னு பார்க்கவின்னு நாமகரணம் ஆச்சு.  ஆனாலும் கமலவாஸினி என்றொரு பெயரும் உண்டு!

ப்ருகு  முனிவருக்கு மகளாய் வந்து பிறக்க வேண்டிய அவசியம் என்ன?  காரணம் சொல்லப்புகுந்தால்  பெருமாளை மாரில் எட்டி உதைச்ச கதை இப்பதானே ரெண்டுமூணு பகுதிக்கு முன் சொன்னேன். அதேதான். ஒரு கதைன்னு வச்சால் அதையே பல கோவில்களுக்கும் பயன்படுத்தி இருக்காங்க என்பதால் திரும்பத் திரும்ப அரைச்ச மாவாப்போறது. அதுக்குத்தான் சொன்ன கதையை விட்டுட்டு, அதன் சம்பந்தமுள்ள வேறு சொல்லாத  கதையைச் சொல்வதா முடிவு.  ஓக்கேவா? 


கோவிலை இப்போ பராமரிப்பது அஹோபில மடம்தான்.  44 வது பட்டம்  ஜீயர் முயற்சியால்தான் இந்த ராஜகோபுரம்  கூட கட்டி இருக்காங்க.

கோவிலின் நிதி நிலை அவ்வளவா சரி இல்லை போல....  திருமஞ்சனத்துக்கு  இன்னின்ன பொருட்களைத் தாங்கன்னு ஒரு போஸ்டர் பார்த்துட்டு, மனசுக்கு பேஜாராப் போயிருச்சு :-(   ஆண்டளந்துக்கிட்டு இருப்பவனுக்கும் கலி காலத்துலெ இந்த  கதிதான் போல!  ஒருவேளை இந்த    நல்ல கைங்கர்யத்தில்  அவ்வளவா சிரமம் இல்லாமல்   நாமெல்லாம்  பங்கெடுத்துக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கறானோ என்னவோ?



நம்ம திருமங்கையாழ்வார் கூட அவருடைய வழக்கமான பத்தை விட்டுட்டுப் போறபோக்கில் அங்கொன்னும் இங்கொன்னுமா  ஒரு வார்த்தை இவரைப் பற்றிப் பாடிட்டுப் போயிருக்கார், பாருங்க.

முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,
அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை, - நீர்மலைமேல்  ......

இன்னொரு இடத்தில்.....

இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென்னார
மலன் ஆதனூர் எந்தை யடியார்.
கோவிலுக்கும் அவ்வளவா பக்தர்கள் வர்றதில்லை போல....  108 பித்துப் பிடிச்சவர்கள்தான் மறக்காமல் வந்துடறாங்க. லிஸ்ட்லே இருக்குல்லையா...
சொர்கவாசல்.............    மேலே படம்.

தேவலோகப்பசு  காமதேனு  இங்கே பெருமாள் தரிசனத்துக்காக தவம் செஞ்சதாம்.  ஆ    தவம் செய்த இடம் ஆதனூர் என்றாச்சு.
காலை 7 முதல் 12.30, மாலை 4 முதல் 8 வரை கோவில் திறந்துருக்கும்.
கருவறை விமானத்தில் இருக்கும் பெருமாள் சிலை கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருதுன்னும், முழுசாவெளி வந்ததும் உலகம் அழிஞ்சுருமுன்னும்  யாரோ  நல்லா திரிச்சு விட்டுருக்காங்க......  :-)  போகட்டும் அதைப் பார்க்கிற சாக்குலேயாவது கூட்டம் கோவிலுக்கு வந்தால் சரி, இல்லையோ!!!

பட்டர் ஸ்வாமிகள் மீண்டும் கோபுரவாசலுக்குப் பக்கம் வந்து நின்னுக்கிட்டார்.  அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கிளம்பினோம்.

 PINகுறிப்பு:  நம்ம திருமங்கை  ஆழ்வார் ஒரே ஒரு பாடலோடு நிறுத்திட்டாரான்னு  எனக்கு பயங்கர சம்ஸயம்.  இப்போ நாலைஞ்சு நாளுக்கு முன்னே கோகுலாஷ்டமி வந்துச்சு பாருங்க.... அன்னிக்கு நாலாயிரப் பிரபந்தம்  முழுசும் வாசிக்க ஆரம்பிச்சு நாலே நாளில்  முடிச்சதா நம்ம ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்   ஃபேஸ்புக்கில்  எழுதி இருந்தாங்க.  அப்ப நினைவுகள் ஃப்ரெஷா இருக்குமேன்னு அங்கேயே  நம்ம சந்தேகத்தைக் கேட்டுருந்தேன்.  அவுங்க சொன்ன பதிலும், ஏற்கெனவே தேடியதில்   நமக்குக்  கிடைச்சதும் ஒன்னேதான்!  ஸோ...  தெளிவாகிருச்சு, இப்படி ஆண்டளக்கும் ஐயனை நம்ம திருமங்கை ஆழ்வார் போற போக்குலே ரெண்டு சொற்களோடு விட்டுட்டார்னு  :-(  

  மரத்தடி காலத் தோழி  ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கு  நம் நன்றிகள்!



தொடரும்.........  :-)



11 comments:

said...

கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுள்ளோம். தங்கள் பதிவின் மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்கும் இது இரண்டாவது முறை :-)
வருகைக்கு நன்றி.

said...

நன்றி டீச்சர்.

said...

பெருமாள் தரிசனம் கிடைத்தது. மூலவரை நீங்கள் போட்டோ எடுத்தீர்களா? நன்றாக வந்துள்ளது.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மூலவர் படம், ஆண்டவர் அருளியது! நான் எடுக்கலை :-)

said...

ரெகுலராக வருகிறேன் என்ன பின்னூட்டமெழுதுவது என்றே தெரியாததால் அது இல்லாமல் போய் விடுகிறதுஆனால் தெரிந்து கொள்வது பார்க்காத இடங்களும் அறியாத விஷயங்களும் ஏராள்ம் என்றுதான்

said...

பல கோவில்கள் இப்படித்தான் பார்க்க ஆளில்லாமல் இருக்கின்றது. இப்படி பல இருக்க, புதிது புதிதாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பதை பராமரிப்பது நல்லது என்று எப்போது புரியுமோ......

தொடர்கிறேன்.

said...

டீச்சர் இன்னொரு கோயில்ல இதே மாதிரி மரக்காலை கக்கத்துல வெச்சுக்கிட்டு படுத்திருக்கான். எங்கன்னு நினைவிருக்கா? ;)

அடப்பாவமே.. அரைகுறையா வேலை செஞ்சிருந்தாலும் பாதிக்கூலி கொடுத்திருக்கனுமே. இப்படி ஏமாத்தலாமா?

ஆதனூருக்கு வேற பெயர்க்காரணம் இருக்கும்னு தோணுது. ஆ + தவம் + ஊர் = ஆதவனூர். ஆனா ஆதனூர் எப்படி ஆகும்?

ஆனா.. ஆதனூருக்கும் வைணவத்துக்கும் வேறொரு தொடர்பிருக்கு. வைணவம் முதலில் தமிழில் விண்ணவம் என்று வழங்கப்பட்டது. ஆதன்னா விண்ணையும் குறிக்கும். விண்ணவம் சிறந்து நின்ற ஊர் என்பதால் ஆதன் + ஊர் = ஆதனூர்னு பேர் வந்திருக்கலாம்.

said...


மூலவர் ஆண்டளக்கும் ஐயனையும், தாயார் பார்க்கவியையும் (கமலவாஸினி) , உற்சவர் ரங்கநாதரையும் ... உங்கள் வழியாக நாங்களும் தரிசித்தோம்...

நன்றி.



said...

ஒவ்வோர் ஸ்தலத்துக்கும்
அங்குபூசைசெய்வோரின்
தொடர்புஎண்களையும்கொடுத்தால்
மிக்க நலம்