Wednesday, September 14, 2016

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோவில் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 86)

சிவபக்தர்களுக்கு முக்கியமான ஜோதிர்லிங்கக் கோவில்கள் பனிரெண்டில் இந்தக் கோவிலும் ஒன்னு.  வடக்கே காசியும் தெற்கே ராமேஸ்வரமும் புனித யாத்திரை செய்றவங்களை  ஏறக்கொறைய இந்தியா முழுசும்  சுத்த வகை செஞ்சுருதுன்னும் சொல்லலாம்.   சம்ப்ரதாயப்படி காசிக்குப் போகும் நம்மவர்கள் முதலில் ராமேஸ்வரம் வந்து  இங்கே புனித தீர்த்தங்களில் நீராடி,  அக்னிதீர்த்தத்து  மணலையும்,  தீர்த்தத்தையும் கொஞ்சம் எடுத்துக்கிட்டு,  ராமநாத ஸ்வாமியை வணங்கியபின், காசிக்குப்போய் கங்கையில்  இவைகளைச் சேர்த்துட்டு, கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்கி, கங்கைத் தீர்த்தம் எடுத்து  வந்து, மீண்டும்  ராமேஸ்வரத்து ராமநாதரை வணங்கி , கொண்டுவந்த கங்கையால் அபிஷேகம் செஞ்சு கும்பிட்டால்தான்  காசி யாத்திரை பூர்த்தி ஆகுமாம்.
இதேபோல் சம்ப்ரதாயம் வடக்கர்களுக்கு இருக்கான்னு தெரியலை. ஆனால் பல நூற்றாண்டுகளா வடக்கர்கள் ராமேஸ்வரம் யாத்திரை  வந்துக்கிட்டுதான் இருக்காங்க.  ராமன்  வந்ததால் அவுங்களும் வர  ஆரம்பிச்சாங்கன்னு  நினைக்கிறேன்.

சைவர்களுக்கு  இது பாடல் பெற்ற தலமும் கூட.  சமயக்குரவர் நால்வர்  பாடி இருக்காங்க. வைணவர்கள், எப்படி இந்த108 திவ்யதேச யாத்திரை போறாங்களோ... அப்படி சைவர்கள் 274 பாடல் பெற்ற தலங்களுக்குப் போய் ஈசனை வழிபடுவது  அவர்களுக்கு ரொம்ப முக்கியம்.
இந்த ராமேஸ்வரம் கோவில் வைணவர்களுக்கும் முக்கியமான கோவில். ஆனால் 108 திவ்யதேசக் கோவில் பட்டியலில்  கிடையாது. கோவிலில் ராமன் வழிபட்ட ஈசன்  லிங்க வடிவில் இருக்கார். ராமாயணத்தோடு சம்பந்தப்பட்ட கோவில்  இது.

ராமாவதார  காலத்தில்    காட்டில்  வாழ்க்கை நடத்தும்போது,  'காணாமல் போன'  சீதையைத்  தேடிக்கிட்டு அப்படியே  தென் திசை நோக்கி  வர்றாங்க ராமனும் தம்பி லக்ஷ்மணனும். சுக்ரீவனோடு நட்பு ஏற்பட்டு, அவனுடைய  அமைச்சர்களில் ஒருவனான அனுமன், சீதை  இலங்கைத்தீவில்  ராவணனிடம் சிறைப்பட்டு இருக்கும்   தகவலைக் கொண்டு வந்து சேர்த்ததும்,   சுக்ரீவனின் படைகளுடன்  இந்த இடத்துக்கு வந்து  கடலைக் கடந்து போய்  ராவணனுடன் யுத்தம் நடத்தி, அவனைக் கொன்னுட்டு சீதையை  மீட்டு வந்த  ராமாயணக் கதையைத் தெரியாதவங்க  பாரதத்தில் இருக்காங்களா என்ன?

அஞ்சு நிலை கோபுரவாசலுக்குள்  போறோம்.  கோவில் பாதுகாப்புன்னு  எலக்ட்ரானிக் கேட், செக்யூரிட்டிக்கான காவல்துறையினர் எல்லாம் நம்மைப் பரிசோதிச்சுட்டு உள்ளே விடறாங்க.  கண்ணுக்கு முன்னால் ரெண்டு பக்கமும் தூண்களோடு  திண்ணைகள் ஓடும்    நீண்ட   பிரகாரம்.
ராமேஸ்வரமுன்னு சொன்னதும்  இந்தப் பிரகாரம்தான் எனக்கு எப்பவும் ஞாபகம் வரும்.  இப்ப நாம் வந்த கோபுரவாசல்,  கோவிலின் பின்பக்க வாசல்தான்.  மேற்கு கோபுரம்.  ராஜகோபுரம் கிழக்கு பார்த்தபடி நிக்குது இதுக்கு நேரா அடுத்த பக்கம்.
தீர்த்தம் ஆடுதல் என்பதே ராமேஸ்வரத்தில் முக்கியம் என்பதால்  வெளியே கிழக்கு கோபுரத்துக்கு முன்னால் இருக்கும்  கடலிலும் (இதுக்குப் பெயர் அக்னி தீர்த்தம்)  முங்கி  கோவிலுக்குள் இருக்கும் 21 தீர்த்தங்களிலும், நீராடி அதன் பின் ஈசனை  வணங்குவது ஐதீகம்.  வெளிப்ரகாரத்தில்  கோவிலுக்குள்  சுத்தி சுத்தியே  இந்த 21 தீர்த்தங்களும்  இருப்பதால்  நீராடி நடக்கும் பக்தர்கள் காலில் ஒட்டிப்பிடிச்சு, கோவிலுக்குள் வரும் மணல், உடைகளில் இருந்து சொட்டும் தண்ணீர்னு  பாதை முழுசும் நசநசன்னு ஈரமாவும் நறநறன்னும் கிடக்கு.

இந்த எண் தீர்த்ததுக்கு  இப்படிப் போ ன்னு சொல்லும்  அம்புகள்  அங்கங்கே....    பிரகாரங்களில் சில இடங்களில்  சின்னக் குளம் போலவும்,  சில இடங்களில்  சின்னக் கிணறு போலவும் தீர்த்தங்கள் அமைஞ்சுருக்கு.  ஒவ்வொரு தீர்த்தங்களின் கரையிலும் சின்ன வாளியும் கயிறுமாப் பிடிச்சுக்கிட்டு  ஊழியர்கள் நிக்கறாங்க.  இவுங்க  தீர்த்தக் குளியலுக்கு  காண்ட்ராக்ட் எடுத்த  ஒப்பந்தக்காரரின் ஊழியர்கள்.
கும்பலா மக்கள் வரவர,  தண்ணீர் மொண்டு பக்தர்கள் தலையில் ஊத்தறாங்க. குழுவினரின் எண்ணிக்கைப்படி தீர்த்தம் தலையில் விழுது.

ஒரு வாளி (நம்ம வீட்டு சுண்டல்வாளியை விடக் கொஞ்சம் பெருசு!) தண்ணீர் எடுத்து அப்படியே ஒரு பத்துத் தலைகளில் ஆளுக்கு  பத்து மில்லின்னு  ஊத்தறதைப் பார்த்தேன். இதுக்கிடையில் கையில் ப்ளாஸ்டிக் பாட்டில்களை வச்சுக்கிட்டு   தலைக்கு மேலே ஊத்தப்படும் தண்ணீரை, சின்ன வாய் இருக்கும் குப்பியில் பிடிக்க பிரம்மப் ப்ரயத்தனம் செய்யும் மக்கள் வேற!  தலையும் நனையணும், பாட்டிலும் ரொம்பணும் என்றால் நடக்கற காரியமா?

தீர்த்தமாடலுக்கு ஒரு கட்டணம் உண்டு.  டிக்கெட் விலை 25  ரூ தான். ஆனால்....  எல்லா டிக்கெட்டும் ப்ளாக்கிலேதான் எப்பவும் விற்பனை. இதுக்குன்னே கோவிலில் ஏராளமான ஏஜண்டுகள் சுத்திக்கிட்டு இருக்காங்க.  நம்மிடம் கேட்டவர்  நூறுதான்னார்.  நமக்கு தீர்த்தமாடல்  இல்லைன்னு சொன்னதும், இதுகள் கோவிலுக்கு ஏன் வர்றதுகள்னு ஒரு பார்வையோடு   போயிட்டார். கோவிலை  சுத்திப் பார்க்க  ஒரு கைடு இருந்துருந்தால்  எனக்கு நல்லது.  இல்லையே......

நல்ல பெரிய கோவில்தான்.  ஏராளமான சிவ லிங்கங்கள் அங்கங்கே.... கண்ணில் பட்ட சந்நிதிகளில் கும்பிடு போட்டுட்டுக் கடைசியில் மூலவராண்டை போயிட்டோம்.  கருவறைக்கு வெளியில் ஈர ஆடையுடன் வரவேண்டாம் என்று போர்டு இருக்கு.   உடை மாற்றிக்க தனி இடம் இருக்குன்னாங்க.
கருவறை  முன்மண்டபத்துலே  நடுவிலே இடம் விட்டு ரெண்டு வரிசைகளில் பக்தர்கள் போக  சின்ன மேடைபோல நடைபாதை.  நாம்  இலவச தரிசன வரிசையான வலதுபக்க வரிசையில் சேர்ந்துக்கிட்டோம்.   இடப்பக்கம் கட்டண தரிசனம்.  டிக்கெட் வாங்குனவங்க அதுலே போய்க்கிட்டு இருந்தாங்க.  கருவறையில் ராமநாதஸ்வாமி. பெரிய லிங்க வடிவில் அலங்காரமா இருக்கார்.

ரெண்டு வரிசையும் நகருது. நம்மது கொஞ்சம் வேகமாவே! அந்த வரிசையில் இருக்கறவங்க சிலர் கையில்  தேங்காய் பழம் பூன்னு  பூஜைக்கான சாமான்கள் இருக்கும் தட்டுகளை நீட்ட,  குருக்கள்  பூக்களை சாமிக்குப் போட்டுட்டு,  மற்ற சாமான்களை நகர்ந்த இன்னொருவர்  தேங்காயை  அந்தப் பக்கமாப்போய் உடைச்சுக் கொண்டு வந்தார்.

மதுரையில் மீனாக்ஷியை இப்படி தரிசிக்கும்போது  (அது 20 ரூ  கட்டணம் கட்டினது)  எல்லோரும் எட்டி எட்டிப் பார்க்க நான் எதுக்கு இப்படி? கிட்டப்போகும்போது பார்க்கலாமேன்னு இருந்தப்ப, கிட்டப்போகுமுன்பே  வலப்பக்கம் இருந்த  வழியில் சட்னு இறங்கிப்போகுது  வரிசை என்றபடியால் சரியா தரிசிக்கும் முன்பே  இறங்குபாதையில் போய் மனம் நொந்தது நினைவு இருப்பதால் ஆரம்பம் முதலே கருவறையில் கண்ணு நட்டுருந்தேன்.   நடுவில் குறுக்கா ஒரு   கம்பித்தடுப்பு வேற இருக்கு!   கம்பிக்கு அந்தாண்டை நின்னு, நம்ம வரிசைக்குத் துளி  விபூதி பிரசாதம் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒரு குருக்கள்.

நான் போய் கம்பித்தடுப்புக்கு முன்னால் நிக்கறேன். எனக்குப்பின்னால் நம்மவர்.  அப்போ  கட்டண வரிசையில்  என்னைப்போலவே கம்பித்தடுப்புக்கு முன்னால் இருந்த  ஒருவர் பெரிய பத்து  லிட்டர்  கேன்  கங்கை நீரை அபிஷேகம்  செய்யணுமுன்னு நீட்டினார். காசிக்குப் போய் திரும்பி வந்த குடும்பம். பெரிய  தாம்பாளத்தில் மாலைகளும், தேங்காய்களும்,  பழங்களுமா சீர்வரிசை வேற அவர் மனைவி கையில்!

அபிஷேகமுன்னா ரெண்டு மூணு பேர் உதவிக்கு வேணுமா இல்லையா? எனக்கு முன் நின்ற குருக்கள் உதவிக்கு ஓடினார்.  தேங்காய் உடைக்க  உதவி செஞ்சுக்கிட்டு இருந்த குருக்கள் பெரிய வெள்ளி வாளியைத் தூக்கிக்கிட்டு வந்தார்.  கேன் கங்கையை  வாளியில் கவிழ்த்தாங்க.  நம்ம ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் ஆரம்பிச்சது.  நாங்களும் ஆடாமல் அசையாமல் நின்னு அபிஷேக தரிசனம் பார்க்கிறோம்.  சின்ன வெள்ளிச்சொம்பில் தண்ணீரை மொண்டு மொண்டு ஊத்தி, ஒரு பட்டுத்துணியால் ஒத்தி எடுத்து,  மாலைகளைச் சார்த்தி தீபாராதனை  நடந்துச்சு. சாமி மணல் லிங்கம் என்பதால்  மேலே ஒரு கவசம் போட்டுருக்கமாதிரிதான் தெரிஞ்சது.      எல்லாம் முடிஞ்சு  நமக்கு  தீபக் கரண்டியைத்  தொட்டுக் கும்பிட்டுக்க நீட்டுனாங்க. கங்கையும்  துளி கையில் தீர்த்தமாக் கிடைச்சது.  அப்புறம் விபூதி பிரஸாதம்  நம்  கையில் !  காமணி நேரம் போல் நின்னு நிதானமா சாமி தரிசனம் கிடைச்சது நமக்கு, அடுத்த வரிசையின் புண்ணியத்தால்!

ரொம்பவே திருப்தியுடன்  பிரகாரத்தை வலம் வந்து  பர்வதவர்தினி அம்மன் சந்நிதிப் பிரகாரத்துக்குள் நுழையறோம்.  எக்கச்சக்கமான  கல்தூண்களில் சிற்பங்கள்.  பார்த்துக்கிட்டே நடக்கும்போது  ஒரு தூணில் ராமலக்ஷ்மணர்கள்  கைகளில் வில் ஏந்தியபடி.  இங்கே எப்படி?   ராமர் வந்துட்டாரேன்னு சொல்லி வாய் மூடலை.... தொட்டடுத்து உள்ள சந்நிதிப் படிக்கட்டில்  நெத்தி நிறைய திருமண்ணுடன் ஒரு பட்டர்!  எப்படின்னு ஆச்சரியத்தோடு சந்நிதி உள்ளே எட்டிப் பார்த்தால்.........  நம்ம ரெங்கன்!   கிடக்கிறான்.  சின்ன  அளவு சிலை.  ஆனாலும்  பெருமாளே பெருமாள், இல்லையோ!!!

சந்நிதிப் பிரகாரத்தில் அப்போ யாருமே இல்லை நம்மைத் தவிர!   ஏகாந்த ஸேவை சாதிக்கிறான்!  பட்டர்  நிதானமா தீப ஆரத்தி காமிச்சார். சடாரி, தீர்த்தம் எல்லாம்  கிடைச்சது நமக்கு!  கொஞ்ச நேரம் பட்டரிடம்  ரெங்கனைப் பற்றிப் பேசிட்டு நகர மனசில்லாமல் நகர்ந்தேன்!  விபீஷணன் பிரதிஷ்டை செய்தா ரெங்கனாம்.    அங்கே   அயோத்தியில்  ரிட்டர்ன் கிஃப்டாகக் கிடைச்ச  ரங்கவிமானத்தை, இலங்கைக்குக் கொண்டு போகும் வழியில்   அரங்கத்தில் கோட்டை விட்டதை நினைச்சு, இங்கே அதேபோல்  கிடப்பவனை பிரதிஷ்டை செய்து கும்பிட்டாராம்.

எங்கே பார்த்தாலும்  சின்னதும் பெருசுமாச்  சந்நிதிகளா  இருக்கு. மூலவரை தரிசிக்கப்போகும் போது  வெளியே புள்ளையாருக்கும் முருகனுக்கும் ரெண்டு பக்கமும் சந்நிதிகள் தனித்தனியா இருக்கு.  ஒரு இடத்தில் அறுபத்து மூவர் கற்சிலைகளும், உற்சவர்களுமா இருக்காங்க.
பெரிய பெரிய தூண்கள்தான் கோவில் முழுக்க. மொத்தம் ஆயிரத்தி இருநூத்திப் பனிரெண்டு  தூண்களாம்!   அம்மாடியோவ்....
குறுக்கும் நெடுக்குமா கம்பித்தடுப்புகள் வச்சுருக்காங்க கோவில் முழுசும் :-(  இதனால் எந்த வழியில்போறோமுன்னு புரியாமலேயே  கிழக்கு கோபுரவாசலுக்கு வந்துருந்தோம். இங்கே மண்டபத்தில் கொடிமரமும், பெரிய நந்தியும் இருக்கு.  சுதை நந்தி!  இந்த மண்டபம் கூட முந்தி இல்லை. 1974 இல்தான் கட்டி இருக்காங்க. சேதுபதி மண்டபம் என்று பெயர். ராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதி கட்டி இருக்கார். இவர் சிலையும் இங்கே இருக்கு.


வாசலுக்கு வந்துட்டோமே,  நேராக் கடல் இருக்கணுமேன்னு பார்த்தாக் கடைகளாத்தான்  இருக்கு!  கடலெங்கே?  ஈர ஆடையுடன் மக்கள் எதிரில் வர்றதை வச்சுக்  கடல் இருக்குன்றது தெளிவாச்சு :-)  ரெண்டு பக்கமும் அடைசலா இருக்கும் கடைகளை கடந்து  கொஞ்சதூரம் போனபிறகு  இடப்பக்கம்  ஒரு சின்னதா சைடு வாங்கிப் போகும்  பாதையில் போனதும்தான் கடல் கண்ணுக்கு ஆப்ட்டது.

முந்தி இப்படியெல்லாம் இல்லவே இல்லை. இங்கிருந்து பார்த்தாக் கடலும், அங்கிருந்து பார்த்தா கோபுரவாசலும் தெரியும்.  இடதுபக்கம் சங்கர மடம்  ஒன்னு  இருந்த நினைவு.  அதெல்லாம் இப்பவும் இருக்குன்னாலும்.........  ஒன்னுக்கொன்னு நேர்பார்வையிலில்லை.  இந்தக் கடலுக்கு இந்த இடத்தில் அக்னி தீர்த்தமுன்னு பெயர்.  அலைகள் இல்லாம  குளம்போலத்தான் இருக்கும். இப்பவும்தான். சின்ன வளைவுக்குள் (Bay) இருக்கும் அமைப்பு.
 இதுக்கு இப்ப ஒரு நுழைவுவாசல்(!) அலங்காரமாக் கட்டி இருக்காங்க.
  மேலே படம்  உதவி:  கிராமத்தான் அவர்களுக்கு நன்றி.

சனம் வழக்கம்போல் கத்திக்கிட்டும், ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டும் அழுக்குகளை எல்லா இடங்களிலும் பரவ விட்டுக்கிட்டும்,  தங்கள் சுதந்திரத்தைப் பறைசாத்திக்கிட்டு இருந்தாங்க.

முந்தியெல்லாம் அக்னி தீர்த்தம்,  தனுஷ்கோடிப்பக்கம் கடலில் தான். இப்போ 1964 இல் தனுஷ்கோடியே இல்லாமப்போயிட்டதால் தீர்த்தம் இங்கே ஷிஃப்டட்.

திரும்பக் கோவிலுக்கு நறநற மணல் பாதையில் வெறுங்காலோடு நடக்க வேண்டியதாப் போயிருச்சு.  போகட்டும் அக்குபஞ்சர், அக்கு ப்ரெஷர் வகையில் சேர்த்துக்கலாம்.  இங்கேயும் வாசலில் செக்யூரிட்டி ஆட்கள் இருக்காங்க. ஆனால்  இடது ஓரம் வழியா  மக்கள் இவுங்களை சட்டை செய்யாமல்போறதும் வாரதுமா இருப்பதையும் பார்க்கலாம்.
நாம் இப்போ மேற்கு வாசலுக்குப் போகணும், இல்லே? சந்நிதிகளையும் பிரகாரங்களையும், குறுக்கே நெடுக்கே போகும் தீர்த்த யாத்திரைக் காரர்களையும் கடந்து போறோம்.  திடீர்னு  காவல்துறை  பெரிய பதவிக்காரர்கள் நாலைஞ்சு பேர், சாதாரண நிலையில் உள்ள காவல்துறை மக்கள் சிலர் புடைசூழ  ஒரு அம்மிணி  நடந்து போறாங்க. விஐபி. வடக்கர். தீர்த்தமாட வந்துருக்காங்க.  பதவியில் இருக்கும்போது வந்தால் தனிப்பட்ட  மரியாதைதான்!   இவுங்களுக்கு  எல்லாத் தீர்த்தமும் முழு வாளித் தண்ணீரா தலையில் பவ்யமாக ஊத்துவாங்க,  இல்லே?

இந்த ஊர்வலம் கடக்கும் வரை நாமும் அங்கே நிக்க வேண்டியதாப் போச்சு. அதிகாரிகளின் முகத்தையும் காட்டும் மரியாதையையும் பணிவையும் காணக் கண் கோடி வேண்டும்!

இந்தக் கோவிலை முழுசுமாக்கட்டி முடிக்க 170 வருசங்கள் ஆகி இருக்கு.  ராமநாதபுரம் அரசர்கள் பலரும் அவரவர் ஆட்சியில் விரிவுபடுத்திக் கட்டி இருக்காங்க. அங்கங்கே  அந்தந்த அரசர்களின் சிலைகளும் இருக்கு.  வெறுங்கையா இருந்ததில் மனசு நொந்து போயிருந்தேன்.  கேமெராவுக்கு ஒரு  கட்டணம்  வாங்கிக்கிட்டு அனுமதி கொடுக்கலாம்தான்.  ஆனால்....  தீர்த்தமாடல் முக்கியம் என்பதால்.....   கேமெராவுக்குத் தடா போட்டதும் நியாயம்தான்.

பிரகாரத்தின் கடைசியில் ஒருத்தர்  சின்னதா தரையில் கடை போட்டுருந்தார்.  ச்சும்மா வேடிக்கை பார்க்க நின்றால் பல பயணங்களில் மதுரையில் தேடிய மரச்சொப்பு கண்ணில் ஆப்ட்டது.  சின்ன ஓலைப்பொட்டியில் நிரம்பி வழியுது.  நமக்குக் கொலுவில் வச்சால் நல்லா இருக்கும். பழைய நினைப்புதான்.  இது உனக்கு பர்த்டே கிஃப்ட்னு சொல்லி  வாங்கித் தந்தார் நம்மவர்.  மகிழ்ச்சி!
மேற்கு கோபுரவாசலுக்கு வந்தால்  நம்ம சீனிவாசன் நம்மைக் கண்டுபிடிச்சுட்டு,  வண்டியை இங்கே கொண்டு  வரேன்னு சொல்லிப் போனார்.  அங்கே இருந்த செக்யூரிட்டி மக்களிடம், 'கைப்பை கூடாதுன்னு  போர்டு இருக்க,  நிறைய பெண்கள் கைப்பை வச்சுருந்தாங்களே எப்படி'ன்னு கேட்டதுக்கு, ' கூடாதுதான். ஆனால் சின்னப்பிள்ளைகளோடு வர்றவங்களுக்கு எதாவது வைக்க வேண்டித்தானே இருக்கு'ன்னார்.  ரொம்பநல்லது.  சட்டம் போட்டாலும் மனிதாபிமானத்தோடு இருப்பது சிறந்த விஷயமுன்னு  சின்னதா பாராட்டினேன்.  வாசலில் இருக்கும் கல்வெட்டைப் பார்த்தால்  சுவாரசியமாத் தோணுச்சு. அதுக்குள்ளே  சீனிவாசன் வந்துட்டார். நிறைய நேரம் நிறுத்த முடியாது என்பதால் ஓடிப்போய் வண்டியில் ஏறினோம்.
PINகுறிப்பு:   படம் இல்லாமல்   பதிவு  நல்லாவா இருக்கும்?  கூகுளாண்டவர் அருளிச்செய்த படங்களை இங்கே சேர்த்துருக்கேன்.  ஒரிஜினல் சொந்தக்காரர்களுக்கு  துளசிதளத்தின் மனம் நிறைந்த நன்றிகள்!  ராமேஸ்வரம் டூரிஸம் .காம் என்பதால் அவர்களுக்கான விளம்பரமாகவும் இருக்கட்டும்! 

தொடரும்..........  :-)


14 comments:

said...

//இதுகள் கோவிலுக்கு ஏன் வர்றதுகள்னு ஒரு பார்வையோடு போயிட்டார். //

உண்மையை மனசுல நெனச்சிட்டாரு. ஒங்களுக்கு அது கேட்டுருச்சி. பிரமாதம் டீச்சர்.

said...

இன்னும் இந்த பக்கம் போனதில்லை,பார்ப்போம் முடிகிறதா என்று.

said...

Good

said...

கோவில் தரிசனம் நல்லா இருந்துச்சு. கங்கைநீர் அபிஷேகம் தரிசிக்க உங்களுக்குக் கொடுத்துவச்சிருக்கு. சுட்ட பழ(ட)ம் நல்லாத்தான் இருந்துச்சு. தொடர்கிறேன்.

said...

ராமாயணக் கதையைத் தெரியாதவங்க பாரதத்தில் இருக்காங்களா என்ன? ஆனால் பாரதி எழுதி இருந்த ராமாயண parody டைப் பலரும் படித்ட்கிருக்கவில்லை. பார்க்க என் தளம் ராமேஸ்வரத்தில் தனுஷ் கோடி போனீர்களா

said...

பலமுறை ராமேஸ்வரம் சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள நந்தியைப் பார்க்கும்போது திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் இருக்கும் நந்தி நினைவிற்கு வரும். அதுவும் கிட்டத்தட்ட இதைப்போலவே இருக்கும்.

said...

வாங்க விஸ்வநாத்.

ஹாஹா.... கோவில் முழுசும் தரகர்கள்தான். தப்பிச்சுப்போவது நம் திறமை :-)

said...

வாங்க குமார்.

நம்ம பக்கங்களில் முழுசும் பார்த்தாச்சுன்னு யாராலும் சொல்லவே முடியாது........... வாய்ப்பு கிடைச்சால் விட்டுடாதீங்க !

said...

வாங்க இமயவரம்பன்.

நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இப்படித்தான் எதிர்பாராதவிதமா ஒரு போனஸ் கொடுத்து, என்னைக் குஷிப்படுத்துவதே அவன் வாடிக்கை. தலையில் தட்டிட்டு கையிலே ஒரு முட்டாய் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்க தளத்தில் பார்த்த நினைவு இல்லையே.... தேடிப்பார்க்கிறேன்.

தனுஷ்கோடி போனோம்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நெல்லையப்பர் கோவில் நந்தியும் இப்படி அலங்காரமாக இருந்ததே!

திருவிடைமருதூர் இன்னும் போக வாய்ப்பு கிடைக்கலை :-(

said...

நானே கேக்கனும்னு இருந்தேன். மொபைல் கூட கொண்டு போகலையே, பிறகு படங்கள் எப்படிக் கெடச்சதுன்னு. பதிவு முடிவுல நீங்களே அதுக்கு விடை சொல்லீட்டீங்க.

இராமேசுவரத்துக்குக் கணவன் மனைவி சேந்துதான் போகனும்னு ஒரு கணக்கு இருக்காம். அதுனால யாரும் தனியாப் பொறப்பட்டா, இந்த விவரம் தெரிஞ்சவங்க தடுத்து நிறுத்திருவாங்களாம். அது என்ன நம்பிக்கைன்னு காரணம் தெரியல.

பதிவில இருந்தா மட்டுந்தான் விஐபின்னு யார் சொன்னா? காந்தியார் படம் போட்ட நோட்டுகளை அள்ளி விட்டாலும் விஐபிதான். பணம் பாயா இடமில்லை.

said...

அருமையான தகவல்கள். சிறு வயதில் இந்த தீர்த்தங்களில் வாளி வாளியாக குளித்த நினைவுகள் உண்டு. சமீபத்தில் அப்பாவும் அம்மாவும் மற்ற உறவினர்களோடு சென்று வந்தார்கள்.....

நானும் போக வேண்டும்! எப்போது அமையப்போகிறது என்று தெரியவில்லை!