Friday, December 02, 2016

பாம்பும் புலியும் ஃப்ரெண்ட்ஸாம்ப்பா! ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 103)

அஞ்சே நிமிசத்துலே   புலியாண்டை போயிட்டோம். நல்ல ரோடு போட்டு வச்சுருக்காங்க.  இந்தக் கோவில்களுக்கெல்லாம்   மந்திரிகளும், அரசியல் வியாதிகளும் வர ஆரம்பிச்சுருக்காங்களாம்.  புது வாழ்வு கிடைச்சால் இன்னும் கொஞ்சம் சுருட்டலாமே !
மூணு நிலை  ராஜகோபுரம். பெரிய மதில் சுவர்கள்.  அதையொட்டுன கோவில் கடைகள்.  காய்ச்சுத் தொங்கும் புளியமரங்கள்.  மரத்தாண்டை  பாம்புப்புத்துகளோடு ஒரு நாகர் சந்நிதி.  கேரளா ஸ்டைலில் சிகப்பு ஓடு போட்ட புள்ளையார் கோவில் சின்னதா ஒரு பக்கம். இந்தாண்டை ஒரு பெரிய ஊருணி. கூட்டம்  கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துச்சு.


திருப்பட்டூர் ஊருக்குள்ளே நுழைஞ்சு  அய்யனார் கோவிலில் ஆரம்பிச்சோமுன்னா  இது தான் கடைசிக்கோவில்.   காசி விஸ்வநாதர்  திருக்கோவில். ஊர் எல்லையில் இருக்கு. இந்தக் கோவிலுக்கு வயசு மூவாயிரத்துக்கும் அதிகமாம்.
கோபுரவாசலுக்குள் நுழைஞ்சால் கண்ணுக்கு முன்னால் கண்ணாடி தடுப்புக்குள்ளே வ்யாக்ரபாதர் ஜீவசமாதி. இவர்தான் புலிக்கால் முனிவர். பொழுது புலர்றதுக்கு முன்னேயே இருட்டில் போய் தேனீக்கள் கூட எழுந்து வர்றதுக்கு முந்தி இவர் போய் மரத்தில் இருக்கும் புத்தம்புது பூக்களை பறிச்சு வந்துறணும் என்றதுக்காக தனக்குப் புலிக்கால் வேணுமுன்னு தவமிருந்து  அதே மாதிரி புது உருவம் அடைஞ்சவர்.  ஆஹா...  இவருக்கும் புது வாழ்வு கிடைச்சுருக்கு பாருங்க!!!
இவரும், பதஞ்சலி முனிவரும் அந்தக் காலத்துலே நண்பர்கள். பதஞ்சலி முனிவர், ஆதிசேஷனின் அவதாரமாம்.  ரெண்டு பேருமாச் சேர்ந்து  தவம் செஞ்சு , தில்லை நடராஜரின் நடனத்தை நேரில் பார்த்துருக்காங்களாம்.  சிதம்பரம் கோவிலில் கூட இவுங்களுக்கு ஒரு சந்நிதி இருக்குன்னு நினைவு.


புலிக்கால் முனிவர், இந்தக் காசி விஸ்வநாதருக்கு தினமும் அபிஷேகம் பண்ணி பூஜிச்சுக்கிட்டு வந்துருக்கார். ஒரு சமயம் அபிஷேகத்துக்குத் தண்ணீர் கிடைக்காம ஊரே வறண்டுபோய் இருக்கு.  இது இப்படி இருக்க, நம்ம  திருவானைக்கால் கோவிலில் இருக்கும் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய இந்திரனுடைய ஐராவதம், கைலாசத்தில் இருந்து  தினமும் தண்ணீர் கொண்டுக்கிட்டு ஆகாய மார்க்கமாப் போகுமாம்.
இதைக் கவனிச்சுருந்த  புலிக்கால் முனிவர்,  அந்த  வெள்ளையானை ஐராவதத்துக் கிட்டே, 'கொஞ்சம் தண்ணி எனக்குக் கொடு'ன்னு கேட்டுருக்கார். 'அதெல்லாம் முடியாது. இது  ஜம்புகேஸ்வரருக்காக,   என் எஜமான் இந்திரன் கொண்டுவரச் சொன்னது'ன்னுட்டு அதுபாட்டுக்குப் போயிருச்சு.

குடிக்கவா கேட்டேன்? அபிஷேகத்துக்குக்கூட  தண்ணீர் தரலை பாரேன்னு கோவத்தோடு  புலிக்காலால் பரபரன்னு நிலத்தைத் தோண்டுனதும், சட்னு ஊத்து கிளம்பி தண்ணீர் வெளியே வந்து குளம் கட்டி நிக்குது. அதை எடுத்து காசி விஸ்வநாதருக்கு  மனம் குளிர அபிஷேகம் பண்ணி இருக்கார்.  இந்தக் குளத்துக்குப் புலிப்பாய்ச்சி தீர்த்தம் என்ற பெயர் வந்துருக்கு. எப்பவும்  தண்ணி வத்தறதே இல்லையாம்.
இங்கே முனிவருடன் பேசிக்கிட்டு நின்னதால்,  தீர்த்தம் கொண்டுபோன ஐராவதத்துக்குக் கொஞ்சம் லேட் ஆகிருச்சு. ஏன் காலதாமதமுன்னு  எசமான் கேக்க,  புலிக்காலர்  தண்ணி கேட்ட  விஷயத்தைச் சொல்லி இருக்கார். அபிஷேகத்துக்குக் காத்திருந்த ஜம்புகேஸ்வரர், 'அட ராமா....   எப்பேர்ப்பட்ட மகா முனிவர் அவர்! அவருக்குக் கொஞ்சம் தண்ணி  கொடுத்துட்டு வராம வந்துட்டயே....  போ போ.... முதலில் அவருக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்துட்டு வா'ன்னு திருப்பி அனுப்பி இருக்கார்.
ஐராவதம் வந்து பார்த்தால் இங்கே  ஜாம்ஜாமுன்னு அபிஷேகம் நடந்துருக்கு. என்னடா இது ஆச்சரியமா இருக்கே!  ஆனாலும் உத்திரவுப்படி தண்ணீர் கொடுத்துட்டுப் போகலாமேன்னு முனிவராண்டை போய், 'இந்தாங்க நீங்க கேட்ட தீர்த்தம்'னு பவ்யமாச் சொல்ல,  'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்குத் தனிக்குளமே கிடைச்சாச்சு. நீ போகலாமு'ன்னு  சொல்லிட்டார்.
என்னடா இப்படி ஆகிப்போச்சே... இந்தத் தண்ணிக்குடத்தை வச்சுக்கிட்டு இப்படி இங்கேயும் அங்கேயும் அலையணுமான்னு யோசிச்ச ஐராவதம்,   குடத்துத் தண்ணியைத் தானே காசிவிஸ்வநாதருக்கு அபிஷேகம் செஞ்சுட்டு, கும்பிடு போட்டுட்டுத் திரும்பிப் போயிருக்கு!


பொதுவா கோவிலில் இருக்கும் குளம் போல இல்லாமல்  ஊருணி ஸ்டைலில் இருக்கு இந்த புலிப்பாய்ச்சி தீர்த்தம். ச்சும்மா ஒரு பக்கம் மட்டும் கம்பிக்கதவு போட்டு வச்சுருக்காங்க கோவில் வாசலுக்குப் பக்கம்.
மத்தபடி திறந்த வெளிதான். ஆடுமாடுகள் குளிச்சுக்கிட்டும், குடிச்சுக்கிட்டும் இருக்கும் பிஸி ஏரியா!  மாட்டைக்  குளிப்பாட்டிக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா. கங்கையிலும் புனிதமான தீர்த்தம்!  போகட்டும் அந்த ஜீவன்களும் முற்பிறவியில்  காசி விஸ்வநாதரின் பக்தர்களாக இருந்துருக்கலாம்!
கோவிலுக்குள்ளே  காசி விஸ்வநாதர் லிங்க ரூபத்தில் தனிச்சந்நிதியில்.  வெளியே  உள்முற்றத்தில்  நந்தி தேவர்,  மூலவரைப் பார்த்தபடி மண்டி போட்டுருக்கார். அம்பாள் விசாலாட்சியும் தனிச் சந்நிதியில்.   நாமும் போய் கும்பிட்டுக்கிட்டோம்.  குளத்தைப் பார்த்தபடிதான்  கருவறைக் கதவு.  பௌர்ணமி நாட்களில் சந்திரன், குளத்துத் தண்ணீர் வழியா ஈசனை  தரிசிக்கறார்னு ஐதீகம்.
 இந்தக் கோவில்  தினமும்  காலை  ஆறு முதல் பகல் ஒரு மணிவரை திறந்துருக்கும். மாலையில் நாலு முதல் ஏழு முப்பத்தியஞ்சு வரை!!!

இந்த நாலு முக்கிய கோவில்களுமே அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் வகையறா திருக்கோவில்கள்னு  எழுதிப்போட்டு வச்சுருக்காங்க, இந்து சமய   அறநிலையத்துறையினர்!
கொஞ்ச நேரம் புலிக்கால் முனிவர் சமாதியாண்டை உக்கார்ந்துட்டுக் கிளம்பினோம். சமாதிக்கு மேல் ருத்ராக்ஷப் பந்தல் ஒன்னு போட்டுருக்காங்க.  ஃப்ரெண்ட்ஸ் ரெண்டுபேரும் ஒரே ஏரியாவில்தான் சமாதி ஆகி இருக்காங்க!   ஒரே காலக்கட்டத்தில் போனாங்களான்னு தெரியலை......
இது ஊர்க் கடைசியில் இருக்கும் கோவில். இங்கிருந்து  வெளியேறி நெடுஞ்சாலையைப் பிடிக்க வேற வழி ஒன்னும் இல்லை. போனவழியாவே திரும்பி வரவேண்டியதுதான்.  அதேபோல திரும்பி  நெடுஞ்சாலை வழியா ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தப்ப  பகல் மணி ஒன்னு.
பகல் சாப்பாட்டை நம்ம பாலாஜி பவனில் முடிச்சுக்கிட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வு.  எப்படியும் கோவில்கள் எல்லாம்  நாலு மணிக்கு மேல்தான் திறக்கறாங்க நம்ம ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தவிர... ....

நாலுமணிக்குக் கிளம்பலாம். சரியா?

தொடரும்..............  :-)


16 comments:

said...

//வயசு மூவாயிரத்துக்கும் அதிகமாம்//

அட..!

பார்க்க ஆவல்தான்! ம்ம்ம்..

காலாலேயே குளம் வெட்டுவதா.. ம்ம்..

said...

Enjoying the trip with you.

said...

நந்தி தலையைச் சாய்த்துப் பார்க்குமே அதப்பத்தி டீச்சர் ஒண்ணுமே சொல்லலியே;
(அது இந்தக்கோவில் தானே?)

said...

Patanjali's samadhi is in Rameswaram also. The samadhi is covered with Rudraksha malai

said...

இக்கோயிலுககுச் சென்றுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக மறுபடியும் இன்று. நன்றி.

said...

பதஞ்சலி வியாக்ரபாதர் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அவங்களுக்கு ஒரு கோயில்ல சமாதி இருக்குங்குறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது.

said...

சிறப்பான தகவல்கள்.... அடுத்த பயணத்தின் போது திருப்பட்டூர் சென்றுவிட வேண்டியதுதான்.

said...

வாங்க ஸ்ரீராம்.

வெறுங்காலா அது ? புலிக்கால். நீண்ட நகங்கள். நிமிஷமா வெட்டிட்டார் !

said...

வாங்க நன்மனம்.

நம்கூடவே வருவதற்கு நன்றி :-)

said...

வாங்க விஸ்வநாத்.

அச்சச்சோ.... நந்தி தலை சாய்ச்சா பார்க்கிறது? அடராமா.... கவனிக்கலையே.... அப்ப இன்னொருக்காப் போகணும்தான்.

விதியை மாத்திக்கப் போகும்போது இங்கேயும் போனால் ஆச்சு.

said...

வாங்க Strada Roseville

தகவலுக்கு நன்றி.

இன்னும்கூட சில இடங்களில் பதஞ்சலி சமாதி இருப்பதாகக் கேள்விப்பட்டுருக்கேன்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்க ஏரியா ! போகாமல் இருந்தால்தான் வியப்பு :-)

said...

வாங்க ஜிரா.

ஜீவசமாதி என்பதால் கோவிலில் அனுமதி இருக்கோ!!!

வாய்ப்புக் கிடைத்தால் போயிட்டு வாங்க. பழமையான கோவில்கள்தான் உண்மையிலுமே அழகு!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அரை நாள் பிக்னிக் குடும்பத்தோடு !!!

said...

கோவிலும்சரித்திரமும் தெரிந்துகொண்டோம்.

said...

இந்த முறை அந்த குளத்திலும் தண்ணீர் இல்லை. வற்றிக் கிடந்தது. இவ்வளவு பொறுமையாக நான் போகும் கோவில்கலை பார்க்க முடிவதில்லை. அள்ளித் தெளித்த கோலமாகத்தான் விஷயங்களை கறந்து வந்து இங்கே போடுகிறேன். உங்கள் பதிவு விளக்கமாக உள்ளது.