Friday, August 11, 2017

த ஸீனியர் அண்ட் ஜூனியர் !!!! (இந்திய மண்ணில் பயணம் 42)

தடுக்கி விழுந்தால் எதாவது ஆஷ்ரமக்கோவிலில் தான் விழுவோம் போல..... தேவராஜனை சேவிச்சுக் கிளம்புன மூணாவது நிமிட்லே இன்னொரு கோவில்.  வரவேற்பு வாசலில்  ட்ரெய்லர் போல  வாலி சுக்ரீவன் சண்டை !  (அப்படித்தான்னு தோணுது. இல்லே வேற யாராவதா?)

வெளிமுற்றம் கடந்தால்  மேலேறும் படிகள், நிறையத்தான் இருக்கு. மெள்ள ஏறிப்போனால்.... ஹனுமன்கத்தி !
 சிந்தூரம் பூசிய பிரமாண்டமான ஆஞ்சி! கருவறையை நிறைச்சுக்கிட்டு இருக்கார். இவர்  பாதாளலோகத்தில் இருந்து அப்படியே மேலெழும்பி  வந்தவராம்.  மொத்தம் பதினெட்டடி  உயரம்.  இப்பப் பார்த்தால்  இதுவா பதினெட்டடின்னு  கேட்டால்....  இடுப்புக்கு மேல்தான் நீங்க இப்பப் பார்க்கறீங்க. கீழ்பாதி உடம்பு கீழ்தளத்தில் இருக்குன்னாங்க!
தோளைக் கவனிச்சீங்களான்னார் ஷ்யாம் மோஹன்.  சின்னதா  ரெண்டு உருவங்கள்.  ராமனும் லக்ஷ்மணனும்.

இலங்கைப்போர் முடிஞ்சு ராவணன் கொல்லப்பட்டான்.  உடனே சீதையை மீட்டுக்கிட்டு எல்லோரும் திரும்பி,  பதினாலு வருசம் முடிவடையும் நாள்  தீ வளர்த்து  அதில் பாய  இருந்த பரதனைக் காப்பாத்தி, அயோத்யாவுக்கு வந்து,  பட்டாபிஷேகம் எல்லாம் ஆச்சு.

ராவணனுக்கு வேண்டப்பட்டவர்களான  அஹி ராவணனும் மஹி ராவணனும்  ராமலக்ஷ்மணர்கள்  மேல் ஒரே கோவமா இருக்காங்க. (நெருங்கிய நண்பர்களோ, இல்லை சொந்தமோன்னு தெரியலை.   ஒரு வேளை ராவணன் என்பது ஸர்நேமாக்கூட இருக்கலாம்....)

சமயம் பார்த்து  ராமலக்ஷ்மணர்களைத் தூக்கிக்கிட்டுப்போய் பாதாளலோகத்தில் ஒளிச்சு வைச்சதும்,  நம்ம ஆஞ்சி பாதாளலோகத்துக்குள் பாய்ஞ்சு இறங்கி அசுரர்களைக் கொன்னுட்டு,  ராமனையும் லக்ஷ்மணனையும்  தோளுக்கொன்னா ரெண்டு பேரையும்  உக்காரவச்சுத் தூக்கிக்கிட்டு  பூமிக்கு வந்த இடமாம் இது!
அப்படி வர்ற வழியில் இன்னொரு  வாநரத்துடன்  சண்டை போட வேண்டியதாப் போச்சு. எதிராளி நம்ம ஆஞ்சிக்குச் சமமான பலம் உடையவராக இருந்ததுருக்கார்.  அதிசயித்துப்போன ஆஞ்சி, நீர் யாருன்னு விசாரிச்சதும், நான் அனுமனின்  பிள்ளைன்னு  பதில் வந்துருக்கு!
இதைக் கேட்ட ஆஞ்சிக்கு உடம்பே வெலவெலத்துப் போச்சு. பிள்ளையின் பெயர் மகரத்வஜன் என்னும் மகரஜோதி.   இவரை நாம் ஏற்கெனவே  த்வார்கா பயணத்தில் சந்திச்சு இருக்கோம்.   நேரம் இருந்தால்  இங்கே எட்டிப்     பாருங்களேன்.


மானசீகபுத்திரன்னு தெளிவானதும் 'அப்பா, மகனே'ன்னு  ஆரத்தழுவிக்கிட்டு இருப்பாங்க.  ஓ.... அப்ப நாம் நுழைவு வாசலில் பார்த்த இருவர் இந்த அப்பாவும் மகனுமாக இருக்கலாம், இல்லே?
இந்த மகன் விஷயமா இன்னொரு புராணக்கதையும் இருக்கு.  அதுலே  சுசீலை என்னும் தேவலோக மங்கை , மீன் உருவில்  சமுத்திரத்தில்  நீந்திக்கிட்டு இருக்கும்போது ....   சீதையைத் தேடி  மஹேந்த்ரமலையில் இருந்து  நூறு யோஜனை  தூரத்துலே தெரியும் இலங்கையை நோக்கி  அனுமன் வானத்துலே பறந்துக்கிட்டு இருக்கார். அவருடைய நிழல் தண்ணீரில்   அப்படியே  விழுது.  அதைப் பார்த்த சுசீலை, சட்னு தலையைத் தூக்கிப் பார்க்க , மேலே பறந்து போகும்  ஆஞ்சியின் வியர்வைத்துளி   சுசீலையின் மேலே விழுந்துருது. அதனால் சுசீலை கருவுற்று  மகனைப் பெற்றெடுத்தாள்.

எப்படி, என்ன ஏதுன்னெல்லாம் கேக்கப்டாது.   சரின்னு கேட்டுக்கணும். கேட்டுக்கிட்டேன் :-)

இந்த சாமி கதைகளிலும் சரி, ரிஷி கர்ப்பம் ராத்தங்காது போன்ற கதைகளிலும் சரி....  ரொம்பவே பகுத்தறிவு முத்திப்போய் ஆராய்ச்சி பண்ணக்கூடாது.  சில பல விஷயங்களை சபை நாகரிகம் கருதி நாம் எப்படிச் சொல்றதில்லையோ அதே போல் ரிஷிகள் இடக்கரடக்கலா, மறைமுகமாச் சொல்லி இருக்கலாம்.
ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு கருவறையை வலம் வந்தோம்.  கருவறையின் வெளிச்சுவர்களில் ராமாயணக் காட்சிகளைச் சித்திரங்களாக வரைஞ்சு வச்சுருக்காங்க. ஒவ்வொரு சித்திரத்தையும் பார்க்கும்போது அது சம்பந்தமானவைகள் நினைவுக்கு வருது. ராமாயணம் பாராயணம் செஞ்ச பலன் :-)










ஆஞ்சி சந்நிதி தவிர, ராம் தர்பார்னு  ராமலக்ஷ்மணர் சீதை,  குழலூதும் கண்ணன் னு சந்நிதிகள்.  கண்ணன்  சும்மா ஒரு திண்ணையில் ஏறி நிக்கறார்.
 வலம் வந்து  நாம் வாசல்படிக்கட்டுக்கு வரும் இடத்துலே புள்ளையாருக்கும் ஒரு சந்நிதி இருக்கு. இவருக்கு எதிர்ப்புறம்  ஆஞ்சி மகருக்கு ஒரு சந்நிதி.
இங்கே ஒரு பண்டிட் உக்கார்ந்து, பக்தர்களுக்கு முதுகில் ஒன்னு போட்டு ஆசி வழங்கறார். ஏற்கெனவே ஹரித்வார் அனுபவம் காரணமா, அப்படியே கைகூப்பிட்டு  ஜகா வாங்கிட்டார் நம்மவர் :-)

படிகள் இறங்கிக் கீழே வந்தப்ப, கோவிலுக்கான  பிரஸாதமா லட்டு பிடிச்சுக்கிட்டு இருந்தார்  ஒருத்தர்  , ரெண்டு கையாலும் ஒரே சீராக........



 அவரையும் ஒரு க்ளிக் செஞ்சுக்கிட்டு, இன்னும் பட்டியலில் பார்க்க வேண்டியது என்னன்னு  ஷ்யாம் மோஹனிடம் கேட்டேன்.


தொடரும்........  :-)


12 comments:

said...

நான் சரியாகவே ராமாயணம் படிக்கவில்லை போல! அஹி ராவணன், மஹி ராவணன் கதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

காற்றிலேயே அல்லது காற்றினால் கரு! :))

அழகிய கோவில்.

said...

ராமாயண ஓவியங்கள் வெகு அழகு.....

தொடர்கிறேன்.

said...

// எப்படி, என்ன ஏதுன்னெல்லாம் கேக்கப்டாது // நொம்பச் சரி. அறிவை அதிகமா உபயோகிப்பதை விட்டுப்புட்டு மனசோட ஒத்துப்போச்சுன்னா போதும்னு இருந்தா, எல்லாருக்கும் நன்மையே.

நன்றி தொடர்கிறேன்.

said...

படம்லாம் வெகு துல்லியம். நேர்ல பார்த்த மாதிரி இருக்கு

said...

எனக்கென்னவோ சண்டை போடுறது வாலி சுக்ரீவனா இருக்கும்னு தோணுது. ஏன்னா ஒருத்தர் தோள்ல மலர் மாலை இருக்கு பாருங்க. வாலியா சுக்ரீவனான்னு தெரியாம இருக்கும் போது மாலை போட்டு சண்டைக்கு அனுப்புனதா கதை இருக்கே.

said...

இராமாயணக் காட்சிகள் மிகுந்த அழகு.

இங்கும் நுவரெலியா சீதாதேவி கோவிலில்
இராமாயண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.

said...

வாங்க ஸ்ரீராம்.

கம்பன் சொல்லலைன்னு நினைக்கிறேன். ஆனால் ஏகப்பட்ட ராமாயண வர்ஷன்கள் இருக்கே.... அதில் எதாவதொன்னில் இந்தக் கதை வந்திருக்கும். வடக்கேதான் இப்படி தோளில் இருக்கும் ராமலக்ஷ்மணர்களைப் பார்த்துருக்கேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

படங்கள் ஒவ்வொன்னுக்கும் உபயதாரர்கள் உண்டு. நம்மூர் ட்யூப் லைட் போல இங்கேயும் பெயர் எழுதி இருக்காங்க. ஆனால் நல்லவேளையா படத்துக்கு மேலே எழுதலை :-)

said...

வாங்க விஸ்வநாத்.

ரொம்பச் சரி. எதுக்கெடுத்தாலும் அறிவைப் பயன்படுத்தினால் குதர்க்கமாத்தான் யோசனைகள் வரும் !

இதெல்லாம் விஞ்ஞானமா என்ன பகுத்தே அறிஞ்சுக்கணுங்கறதுக்கு :-)

said...

வாங்க ராஜி.

பேசாம 'படம் பார்த்துக் கதை சொல்'னு ஒரு பதிவு ஆரம்பிச்சுடலாமா? :-)

said...

வாங்க ஜிரா

கழுத்து மாலை பார்த்துட்டு முதலில் நானும் வாலி சுக்ரீவன்னு நினைச்சேன். கோவிலுக்குள் போய் கதை கேட்டதும்தான் அப்பனும் மகனுமா இருக்குமோன்னு ஒரு சம்ஸயம்.

said...

வாங்க மாதேவி.

நம்ம மலேசியத் தோழி ஒருவர், நுவரெலியா போய் வந்தப்ப, எனக்காக சீதைக் கோவில் படங்கள் எடுத்து வந்து கொடுத்தாங்க. கோவிலில் இருக்கும்போது உங்களை நினைச்சேன்னு சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவுங்க வேற மதம்.