Wednesday, October 04, 2017

கதை கதையாம் காரணமாம்!(இந்திய மண்ணில் பயணம் 58)

திருமோகூரில் இருந்து கிளம்புன  பத்துப்பனிரெண்டு நிமிசத்துலே  மதுரை மாநகரின் நுழைவு வாயிலுக்குள் புகுந்தோம்.  கூடிவந்தால் ஒரு பதிமூணு கிமீ தூரம்தானே!  ஆனால் நகரின் பரபரப்பான போக்குவரத்தில் சிக்கிக்கிட்டதால்  ராயல்கோர்ட் போய்ச் சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. 
போனமுறைக்கு இப்போ  பத்துமடங்கு கூட்டம் அதிகமாயிருச்சு போல!

போற வழியில் தமிழன்னை சிலையைப் பார்த்தேன் முதல்முறையாக !

இப்பெல்லாம்   புதுசுபுதுசா நிறைய ஹொட்டேல்ஸ் வந்துருச்சுன்னாலும்.... நமக்கென்னவோ ராயல் கோர்ட்டே வசதியாத்தான் இருக்கு.  முக்கியமா கோவிலுக்குப் பக்கமாச்சே!  பொதுவாப் பார்த்தீங்கன்னா ஏறக்கொறைய  பெரிய ஹொட்டேல்களில்  அறை வசதிகள் எல்லாம்  அல்மோஸ்ட் ஒன்னுபோலத்தான்.  அதுக்குன்னு ஒரு டிஸைன் இருக்கு போல!
கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின்  கோவிலுக்குக் கிளம்பினோம்.  இன்றைக்கு ஒரு நைட்தான் இங்கே தங்கறோம். காலையில்  கோவிலுக்குப்போக நேரம் இருக்காது போல. இவ்ளோதூரம் வந்துட்டு மீனாக்ஷியைப்   பார்க்காமப் போனால் எப்படி?

கோவிலைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ரூல்ஸ் போல.... போனமுறை கெமெரா செல்ஃபோன் எல்லாம் அனுமதி இல்லைன்னதால் ,  எதுக்கு வீண்வம்புன்னு  எல்லாத்தையும் சார்ஜரில் போட்டுட்டு,  சீனிவாசனைக் கூப்பிட்டு நம்மைக் கோவிலில் இறக்கி விட்டுட்டு கார் கதவுக்கு  எதாவது செய்யமுடியுமான்னு பார்த்துட்டு வாங்கன்னதும் அதேபடி ஆச்சு.

கோவிலுக்குப் போகவே ரெண்டு தெரு முன்னாலேயே  இறங்கி நடக்கணும்.

இந்த முறை  கோவிலில் செல்ஃபோனுக்கு மட்டும் அனுமதின்னும் அதுக்கு அம்பது ரூ கட்டணமுன்னும்  அங்கே போனபிறகுதான் தெரிஞ்சது.   அடடான்னு  இருந்தாலும்....  போயிட்டுப்போறது போன்னு வெறுங்கையாக் கோவிலுக்குள் போனோம்.

வழக்கம்போல் இருபது ரூபாயில் மீனாட்சி தரிசனம். போனமுறை கிட்டப்போய்ப் பார்க்கலாமுன்னு  இருந்து கோட்டை விட்டதுபோல் இல்லாம, படி ஏறுனதில் இருந்தே  எட்டியெட்டிப் பார்த்து கும்பிடு போட்டேன்.  எப்படியும் 'அவள்' கண்ணில் படாமல் இருக்க ச்சான்ஸே இல்லை :-)

அப்புறம் ஐயாவை தரிசித்தோம்.  முன்னுரிமை அவருக்கு இல்லையேப்பா !
சந்நிதிக்குப்போகுமுன் வெளியே மண்டபத்தூண்களில் பெருமாள் தம்பதிகள்!  மச்சினரைப் பார்க்க வந்து, இங்கேயே தங்கிட்டாங்க.
படம் நம்மதுதான். முந்தி ஒரு சமயம் எடுத்தது:-)

விபூதிப்பிள்ளையார் இருக்குமிடத்தில் உள்ள நீண்ட மண்டபம் (பொற்றாமரைக் குளத்து சைடுலே)இப்போ பழுதுபார்க்கிறாங்க. பழைய கல்தூண்கள் சில இப்ப காங்க்ரீட் தூணா நிக்குது.... :-(  அப்படி என்ன கருங்கல் பஞ்சம் ஏற்பட்டுப்போச்சா ? எதுக்கு  இப்படி கண்ணுப்புண்ணு (ஐ ஸோர்) ப்ச்..... 

பழைய சமாச்சாரங்களின் அழகை இப்படிக் கெடுத்து வைக்கிறாங்களே என்ற மனக்குறையோடு ராயல் கோர்ட்டுக்கு (West Veli Street) நடந்து வர்றோம்.  தெருக்களில் பாதி இப்ப டுவீலர் பார்க்கிங் ! மீதிப் பாதியில்  அடைசலாப்    போய் வரும் போக்குவரத்து.  நகராட்சிக்கு இப்படியெல்லாம் யோசனை கொடுக்கும் அறிவுஜீவிகள் யாராம்?  டவுன் ப்ளானிங் எஞ்சிநீயர்.... இதையெல்லாம்  கவனிக்கலையாமா?  என்னவோ போங்க....

'எங்க வத்தலகுண்டு வாழ்க்கையில் எத்தனை முறை  மதுரையில் சுத்தி இருக்கேன்.  காலேஜ் ஹவுஸ் அப்பெல்லாம் எப்படி  இருந்துச்சு'ன்னு நானும்,  'எங்க அப்பாவோடு  எத்தனைமுறை மதுரைக்கு வந்து சுத்தி, சினிமாவெல்லாம் பார்த்துட்டு, ராத்ரி ரயிலில் போடி போயிருக்கேன்'னு நம்மவரும் அவுங்கவுங்க கொசுவத்திகளை ஏத்திக்கிட்டு மெள்ள நடந்து வர்றோம்.  காலேஜ் ஹௌஸாண்டை இன்னொரு பெரிய வளாகத்துக்குள்ளே நியூ காலேஜ் ஹௌஸ்னு  கண்ணில் பட்டது.  என்னதான் இருக்குன்னு எட்டிப் பார்த்தால்  அங்கேயே ஒரு ரெஸ்ட்டாரண்டு!

அங்கேபோய் நம்ம ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம்.  தின்னும் ரெண்டு இட்லியை எங்கே சாப்பிட்டால் என்ன?  பேசாம அடுத்த முறை இங்கேயே ரூம் போடலாமான்னு எண்ணம் வந்தது உண்மை.

 ராயல் கோர்ட் அறைக்குப் போனதும் சீனிவாசனை செல்லில் கூப்பிட்டு சாப்பாடு ஆச்சான்னு விசாரிச்சுட்டு, மறுநாள் காலை எட்டரைக்குக் கிளம்பிடலாமுன்னும் சொல்லியாச்சு.

அதேபோல காலை இங்கே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டோம். சிவகாசி வழியா திருத்தங்கல் பயணம்.  மொத்தமே 74 கிமீ தூரம்தான்.  எத்தனையோ முறை மதுரைக்கு வந்துருக்கோம், ஆனால் இங்கே போகணுமுன்னு தோணவே இல்லை.  இப்ப திவ்ய தேசக்கோவில் இதுன்னதும் ஓடறோம்.






சிவகாசின்னதும் பட்டாசு ஞாபகம் சட்னு வருது. ஊருக்குள் நுழையும்போதே பட்டாசு விற்பனைக் கடைகள் அங்கங்கே!  வேடிக்கை பார்த்துக்கிட்டே ஊரைத் தாண்டுன அடுத்த பத்தாவது நிமிசம் ஒரு மலையைச்சுத்திக்கிட்டு வலப்பக்கம் திரும்பினால் கோவில்.

உண்மையில்  வலப்பக்கம் திரும்பறதுக்கு முன்னேயே  இதே மலையில்  கொஞ்சம் படிகள் ஏறிப்போகும் உயரத்தில்  ஒரு கோவில்வாசல் தெரிஞ்சதுதான். ஆனால்... நின்ற நாராயணர் கோவில்னு வலப்பக்கம் திரும்ப ஒரு அறிவிப்பும் இருந்துச்சே!
ரொம்பவே  அகலமான, நீளமான பனிரெண்டு படிகள்! சினிமாஸ்கோப் ஸ்க்ரீன் போல!
மேலே ஏறிப்போறோம்.  முகப்பின் நடுவில் பள்ளிகொண்ட பெருமாளும்,  அவருக்குக் கீழே  நின்றகோலத்தில் பெருமாளுமா  ரெண்டு விதமா இருக்கு. நிக்கிறவரின் ரெண்டு பக்கத்திலும் ரெண்டு ப்ளஸ் ரெண்டா நாலு தேவியர்!

முன்மண்டபமா இருக்குமிடத்தில்  ஒருபக்கம்  அர்ச்சனைப்பொருட்கள் விற்கும் கோவில்கடைகளும், இன்னொருபக்கம் அன்னதானம் வழங்கும் இடமுமா  இருக்கு!
நாம எந்தப்பக்கமும் திரும்பாமல் நேரா உள்ளே போனால் மண்டபத்தின் எதிர்ப்புறம்  மாடம்போல் இருக்கும்   விதானமும், அதுலே சித்திரங்களுமா.... அதே நாலு தேவியருடன் பெருமாள் !
திருதண்கால், திருத்தண்காலூர், திருத்தங்கல் னு பலவிதமா வெவ்வேற இடத்தில் எழுதி இருக்கு!  பூதத்தாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும்  பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சு இருக்காங்க. அந்தப் பாசுரங்களில் தண்கால், தண்காலூரானை என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்காங்க.

பொதுவா, திருத்தங்கல்னு சொன்னால்தான் இந்தப்பக்கத்துலே  தெரியுது!  அதுக்குப் பெயர்க் காரணமா  திரு என்னும் மஹாலக்ஷ்மி இங்கே வந்து தங்கினதால்தான்னும் ஒரு 'கதை' இருக்கு!

 இந்தக் கோவிலுக்கே மூணு நாலு கதைகள் இருப்பதும் தெரிஞ்சதும் அதையெல்லாம் சொல்லு சொல்லுன்னார் நம்மவர்:-) பதிவு பெருசாப் போகுமேன்னால்....   பரவாயில்லையாம்!

இந்த நாலு தேவியருள், முதல் மூவருக்குள்  யார் பெரியவர் (வயசில் இல்லையாக்கும்!  புகழில், பெருமையில், முக்கியத்துவத்தில்.... இப்படி!)என்ற போட்டி வந்துருது!  நாரதர் கிளப்பி விட்டாரோ என்னவோ?  அவரவர் கட்சியினர்  தங்கள் பெருமைகளைப் பட்டியல் போட்டு காமிக்கிறாங்க!

ஸ்ரீதேவிதான் செல்வத்துக்குரியவர். வேதங்கள் எல்லாம்  இவரைத்தான் புகழ்ந்து  சொல்லுது!  பெருமாளே  ஸ்ரீயைத்தான்  மார்பில் ஏந்தி இருக்கார்! ஸ்ரீநிவாஸன், ஸ்ரீபதி  என்றெல்லாம் பெருமாளுக்குப் பெயர் வரக் காரணமே ஸ்ரீயால்தான் ! ஆனானப்பட்ட இந்திரனே பலத்தோடு இருப்பது ஸ்ரீயின் ஆசியால்!

அதெப்படி? பூதேவிதான் தலை சிறந்தவர். பொறுமையின் பூஷணம்.  இவரை அரக்கன் கொண்டுபோய் பாதாளத்தில் ஒளிச்சு வச்சதும், பதறிப்போன மகாவிஷ்ணுவே வராக அவதாரம் எடுத்துப்போய் மீட்டுக் கொண்டு வந்த கதைதான் எல்லோருக்கும் தெரியுமே!  வாமன அவதாரம் எடுத்தப்ப, முதலில் மூணடி நிலம்  தானம் வேணுமுன்னு கேட்டது கூட பூமியைத்தானே?

ஹாஹா....ஹாஹா.... பெருமாள் அல்லும்பகலும் பள்ளி கொண்டு இருப்பது  பூமியிலா?  பாற்கடலில், சமுத்திரத்தில் இல்லையோ?  பூமியைச் சுத்தி இருப்பது  தண்ணீர்தானே? 'நீளு லேக போதே'.....  உலகமும் இல்லை உயிர்களும் இல்லை....   நீருக்கே  நாரம் என்று ஒரு பெயரும் உண்டு. அதனால்தானே ,பெருமாள் நாராயணன் என்ற பெயரை வச்சுருக்கார்! ஆகவே எங்கள் தலைவி நீளாதேவிதான்  உயர்ந்தவர்னு இன்னொரு கோஷ்டி!

நாலாவது பாவம்....  அப்போ  இன்னும் கல்யாணம் கட்டலை போல ...

மூவர் சண்டையும் ஓய்ந்தபாடில்லை. ஸ்ரீக்குக் கோவம் வந்துருச்சு. 'எப்படியாவது போங்க'ன்னுட்டு, வைகுண்டத்தை விட்டுக் கிளம்பி நேரா பூலோகம் வந்தாங்க. தங்கால் மலை கண்ணில் பட்டது. அங்கே போய் தவம் செய்ய ஆரம்பிச்சாங்க.

மனைவியை சமாதானப்படுத்த அப்புறம் நாராயணனே வந்துட்டார். திரு(ஸ்ரீ) வந்து தங்கினதால் இந்த இடத்துக்குத் திருத்தங்கல்னு பெயர் வந்தாச்சு!

இந்த மலையே இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்குதான்!  சுவேதத் தீவில் ஒரு பெரிய ஆலமரம் நின்னுருக்கு! பிரளயம் வரும் காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர், சின்னக் குழந்தையா  ஆலிலை மேலே கிடந்தவரா மிதந்து வருவார். பாக்கி உலகம் எல்லாம் அழிஞ்சு போயிரும். ஆலிலைக் கிருஷ்ணர் பென்டென்ட் பார்த்துருப்பீங்கதானே?  அதை ஞாபகம் வச்சுக்குங்க!

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும், ஆலமரத்துக்கும் ஒரு வாக்குவாதம் வந்துருச்சு, யார் பாக்கியவான்னு! (இதென்ன பாம்புக்கும் மரத்துக்கும் போட்டின்னு கேக்கப்டாது, கேட்டோ!)

பேச்சுச் சண்டை முடிவுக்கு வரலை. நேராப் போனது அந்த ப்ரம்மா கிட்டேயே!    படைச்சவன் அவந்தானே?

 "தேவரீர், நீங்களே சொல்லுங்க....எங்களில் யார் பாக்கியசாலி? "

சட்னு சொன்னார் ஆதிசேஷந்தான்னு!  தினம் தினம் கிடப்பு இந்தப் படுக்கை!!  அந்த ஆலமர இலையில் ஒரே ஒருக்காத்தானே கிடந்தார்!  சரியான விளக்கம்தான்!  ஆனாலும் ஆலமரத்துக்கு மனம் உடைஞ்சு போச்சு!
பெருமாளைக்குறிச்சு  தவம் செய்ய ஆரம்பிச்சது.  தவம் முற்றும் காலத்தில்  பெருமாளே  காட்சி கொடுத்து,  'நீ மலை உருவில் ஒரு குறிப்பிட்ட காலத்தில்  'இந்த ' இடத்தில் காத்திருப்பாய்.  அப்போ நான் வந்து  உன்னிடத்தில் நிரந்தரமாத் தங்குவேன்'னு  வரம் கொடுத்து அப்படியே ஆச்சு!  தங்கும் ஆல மலை என்பதுதான் தங்கால் மலைன்னு ஆச்சாம்!

சாமி கதைகளையெல்லாம் ஆத்திகர்கள்  ஒரு பரவசத்தோடும், நாத்திகர்கள் 'அடடா என்ன மாதிரி   ஒரு புனைவு!'ன்னும் ரசிச்சுக்கிட்டு போகணும், ஆமா! 

"சரி வாங்க, மத்த கதைகளை போற போக்கில் சொல்றேன். எவ்ளோ நேரம் மண்டபத்துலேயே நிக்கறது?"

தொடரும்..... :-)


5 comments:

said...

// சினிமாஸ்கோப் ஸ்க்ரீன் போல!//

:))))

மண்டபத்துக் கதைகளும் சுவாரஸ்யம்!!

said...

திருத்தண்கால் பெருமாளை சேவித்ததை நினைவுகூற வைத்துவிட்டீர்கள். தொடர்கிறேன்.

said...

// West Veli Street //
எனக்குள்ளும் ஒரு கொசுவர்த்தி. புகைவண்டி நிலையம் எதித்தாப்பல டிவிஎஸ் ல மூன்று வருஷம் வேலை (1996-99).

//, நீளமான பனிரெண்டு படிகள்! சினிமாஸ்கோப் ஸ்க்ரீன் போல!// எப்பப்பாரு என்ன சினிமா பத்திப்பேச்சு - ன்னு பெரியவா நீங்க சொல்லுவீங்க.

said...

தரிசனம் அருமை.

said...

கதைகள் ஸ்வாரஸ்யம். தொடர்கிறேன்.