Friday, December 29, 2017

ஏகாதசிக்குத் தீபாவளி..... (இந்திய மண்ணில் பயணம் 95)

ரீஜன்ஸி  ஜிஆர்டி  அறைக்குப்போய் ஜன்னல் வழியாப் பார்த்தேன். 'நம்மாட்கள்' யாரும் இல்லை. சரவணபவன் கிச்சன் ஆட்கள்தான் காய்கறிகள் நறுக்கிக்கிட்டு இருக்காங்க.
சின்ன ஓய்வுக்குப்பின் அதே சரவணபவனுக்குச் சாப்பிடப்போனோம்.  எல்லாருக்குமே ஒரு மனநிறைவு காரணம்... பசி அவ்வளவா இல்லை(யாம்!) எனக்கொரு தோசை,  மத்த ரெண்டுபேருக்கும் ஒரு சௌத் இண்டியன் ஒரு நார்த் இண்டியன் மினி மீல்ஸ்.


தீபாவளிப் பலகாரங்களை இங்கே வாங்கிக்கலாமான்னு  தோணுச்சு. சென்னையில் வாங்கலாம். இவுங்களோட முக்கிய சமாச்சாரங்கள் எல்லாம் ஒரே சென்ட்ரல் கிச்சனில் இருந்து வர்றதுதானே.... எதுக்கு இங்கிருந்து சுமக்கணும்?  ஆனாலும் ஆசைப்பட்டதுக்காக நூறு கிராம் பாதாம் பர்ஃபி வாங்கி, நாங்க மூவரும் பகிர்ந்து கொண்டோம்:-)


 அறைக்குப்போய்  நம்ம பெட்டிகளை எடுத்துக்கிட்டு செக்கவுட் செஞ்சு  சென்னைக்குக் கிளம்புனபோது மணி ரெண்டு பத்து.  ஸ்ரீபெரும்புதூர் வழிதான்.  ஊருக்குள் நுழையும் அலங்கார வாசலைக் க்ளிக்கினதோடு சரி.
 டேஞ்சரா முட்டையைத் தூக்கி மடியில் வச்சுக்கிட்டுப்போறாங்க பாருங்க....
போரூர் வழியா தி நகர் வந்துட்டு  நேரா பாண்டி பஸார்தான்.  டெய்லரிடம் தைக்கக் கொடுத்ததை வாங்கினால்.... நாளை தீபாவளிக்குப் புது ட்ரெஸ். பயங்கரக் கூட்டமும் நெரிசலுமா இருக்கு பனகல்பார்க் ஏரியா!  மெஹெந்தி போட்டுக்கறாங்க  சிலர்! 

நம்ம கீதா கஃபேயில் காஃபி குடிச்சுட்டு அறைக்கு வந்து சேர்ந்தப்ப மணி அஞ்சரை. வேறெங்கும் போகும் ப்ளான் இல்லை இப்போதைக்கு என்றதால்.... சீனிவாசனை வீட்டுக்கு அனுப்பியாச்சு. நாளைக்கு தீபாவளி லீவு வேணுமான்னதுக்கு ...   'மச்சினர் வீட்டுக்கும் அண்ணன் வீட்டுக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு பிக்கப் பண்ணிக்கறேன்'னார் !!  நாம் எங்கே போவோமுன்னு தெரிஞ்சுருக்கு பாருங்க...  (கழுதை கெட்டால் குட்டிச் சுவர் !! ஹாஹா  )

'குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுங்க'ன்னு  கொஞ்சம் தீபாவளி அன்பளிப்பும் ஆச்சு. நாளைக்குப் பத்து மணிக்கு மேல் வந்தால் போதும்.  இந்தப் பதினொருநாளா நம்மகூடவே சுத்திக்கிட்டு இருக்கார்....

பக்கத்துலே இருக்கும் சுஸ்வாதில் கொஞ்சம் இனிப்பு, உப்புப் பலகாரங்கள் வாங்கி வச்சோம். நாளைக்குக் குடும்பத்துக்குக் கொண்டு போகலாம் :-)
லோட்டஸில் இப்பெல்லாம்  சின்னதா தீனிப் பைகள் அப்பப்பக் கிடைக்குது.  தங்கல் போரடிக்காமல் இருக்கணுமேன்னு போல!   அறையிலேயே வச்சுட்டுப் போயிடறாங்க:-) மாலாடும் கைமுறுக்கும் காத்திருந்தது ! தீனியை விட அந்தக் குட்டிப்பைகள் எனக்குப் பிடிச்சுப்போச்சு. 
சின்னச்சின்ன மணிமாலைகளைத் தனித்தனியா போட்டு வச்சுக்கலாமே!

ஏழரை மணிக்குக் கிளம்பி ராச்சாப்பாட்டுக்கு அதே பாண்டிபஸார், அதே கீதா கஃபே! காஞ்சிபுரம் இட்லி இருக்குன்னதும், நாம்தான் 'காஞ்சி ரிட்டர்ன்' ஆச்சேன்னு  கொண்டுவரச் சொன்னேன்.  தீஞ்சுபோன முந்திரியோடு வந்தது.
ஒரிஜினல் இது இல்லைன்னு  'குக்'கிடம் போய்ச் சொல்லுங்கன்னதும்  வழக்கமா நமக்குப் பரிமாறுபவர்  தலையை ஆட்டினார்.  இந்தப் பயணத்தில் இதுவரை சென்னையில்  பாண்டிபஸார்ன்னா  கீதாதான்  நமக்கு:-) சமையல்காரர் புதியவராம்!

பட்டாஸ் சத்தம் கேட்டுத்தான்  காலை கண் முழிச்சதே! லோட்டஸிலும் விருந்தினர்  குறைவு.  நிதானமான ப்ரேக்ஃபாஸ்ட்.  எனெக்கென்னமோ  இங்கத்து இட்லி வடை வயித்துக்கு ஆபத்து இல்லாததா இருக்கு.  தினமும் ஒரு ஸ்வீட் வேற !
ஹவுஸ் கீப்பர் அம்முவுடன், கீழே ஃப்ரன்ட் டெஸ்க் ஸ்டாஃப்னு கொஞ்சம் க்ளிக்ஸ்.எல்லோரும் புது உடுப்பில் ஜொலிக்கிறாங்க:-)  பத்தே காலுக்கு நம்ம சீனிவாசன் வந்துட்டார். தீபாவளி காலை செஷன் ஓவர்.


நம்மை மச்சினர் வீட்டில் விட்டுட்டுப் போயிருவார். தேவைப்படும்போது  செல்லில் கூப்பிட்டால் பிக்கப். இந்த ஏற்பாடும் நல்லாத்தான் இருக்கு.  இன்றைக்குச் சென்னை வீதிகளில்  அவ்வளவா ட்ராஃபிக் இல்லை என்பதால் பிரச்சனையே இல்லை(யாம்) !

பத்தே முக்காலுக்கு  வேளச்சேரி. நாத்தனாரும் தம்பி வீட்டுக்கே வந்துருந்தாங்க என்பதால் வசதியாப் போச்சு நமக்கு. தீபாவளி ஸ்பெஷலா வடை!  அது போதும் எனக்கு :-) பகல் சாப்பாடு நமக்கு அங்கேதான்.
மச்சினர் மகள், அக்கா கல்யாணத்துக்கு வளைகள் செஞ்சு வச்சுருந்தது அருமை!  கூறைக்காக்ராவுக்கு படு மேட்ச் :-)

ரெண்டு மணிக்கு வரச்சொன்னதும் அதே மாதிரி வந்து நம்மை பிக்கப் பண்ணி லோடஸில் விட்டுட்டுப்போனார் சீனிவாசன்.  நாம் பயணம் கிளம்புன தினம் நடந்த விபத்துலே அடிபட்டுக்கிடந்த கார் கதவை மாத்தணும், முதலாளியம்மாவுக்கு விளக்கம் கொடுக்கணும், இன்ஷூரன்ஸ் விஷயமாக் கொஞ்சம் மெனெக்கெடணும் இப்படி சிலபல வேலைகள் அவருக்கும் இருக்கே!

'பரவாயில்லை.... அந்த வேலைகளை முடிச்சுக்குங்க'ன்னாலும் கேக்கலை.  கொண்டுவிட்டுக் கொண்டு வர்றதுலே பிரச்சனை  இல்லைன்னுட்டார். சாயங்காலமாக் கிளம்பி நம்ம  அடையார் அநந்தபதுமனை ஸேவிச்சுட்டு அப்படியே அண்ணன் வீட்டுக்குப்போய்  தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்தோம்.

நாங்கதான் நியூஸியில் தீபாவளி தினத்தை எப்படியோ ஒருமாதிரி கொண்டாடறோமுன்னா.... இந்தியாவிலும் நம்ம குடும்பங்களில்  நம் சின்ன வயசு காலக் கொண்ட்டாட்டம் போல இல்லை. டிவிக்காரந்தான்  எல்லாப் பண்டிகைகளையும் விடாமக் கொண்டாடறான்:-) நாலு மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்துக்குளிப்பது போன்ற சடங்குகள் ஏதும் இப்போ இல்லை...

புதுத்துணிகள் போட்டுக்கறது மட்டும் இன்னும் அப்படியே இருக்கு. பட்டாஸ் கொளுத்தறதும் ஏறக்கொறைய  அப்படியேதான். லோடஸுக்குத் திரும்பிவர இரவு மணி பத்து ஆகி இருந்துச்சு.

எப்படியோ  தீபாவளி முடிஞ்சதுன்ற நிம்மதி வரத்தான் செய்தது என்பதே உண்மை.

PINகுறிப்பு:   நண்பர்கள் அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஏகாதசிக்கு தீபாவளி ! 


12 comments:

said...

ரயில் நிலையங்களை ரயில் நிலையங்களின் புகைப்படம் பார்க்கும்போது மனம் ஏனோ என்னவோ செய்யும் - காரணமில்லாமல்.

முட்டையை இப்படி அபத்திரமா எடுத்துக்கொண்டு போக தனி தைரியம் வேண்டும்!

said...

அருமை நன்றி

வாழ்த்துக்கள் வாழ்த்துகள் - எது சரி ?

said...

நண்பர் விஸ்வநாத்... இரண்டுமே சரிதான் என்றாலும் "வாழ்த்துகள்" ரொம்பச்சரி. வாழ்த்துக் கள் என்பது பனை மரத்துக் கள் என்பதுபோல அர்த்தம் வரும் என்பதால்! எங்கோ ஓர் இடத்தில் இந்த விளக்கம் படித்தபின் நான் 'க்' போடுவதில்லை.

said...

நன்றி ஸ்ரீராம். இதுவரை நான் க் கோடுதான் எழுதிவந்தேன். மாற்றிக்கொள்கிறேன்.

said...

வளையல் படம் போட்டு ரொம்ப நாளாச்சு

said...

ஏகாதசிக்கு தீபாவளி! ரசித்தேன்.

தீபாவளி இப்போதெல்லாம் முன்பு போல இல்லை! இடியட் பாக்ஸ்-ஏ கதி பல குடும்பங்கள்...

தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

எனக்கு ஒருகாலத்திலே ரெயில் பார்ப்பதுதான் டைம்பாஸ். ச்சும்மாவானும் ஸ்டேஷனில் போய் உக்கார்ந்துருப்பேன். அப்பெல்லாம் நீராவி எஞ்சிந்தானே! கரி அள்ளிப்போடுவதையும், கனகனன்னு எரியும் தீயும் ரொம்பப் பிடிக்கும். ஓவர் ப்ரிட்ஜ் மேலே நின்னு, கீழே எஞ்சின் கடக்கும்போது புகைபோக்கியைக் குனிஞ்சு பார்த்து முகமெல்லாம் கரி பிடிச்சு வீட்டுக்கு வந்தநாட்களும் உண்டு :-)

முட்டை.... திக் திக்குன்னு இருந்துச்சு எனக்கு !!

said...

வாங்க விஸ்வநாத்.

ரெண்டுமே சரிதான். அதைப்பற்றி முந்தி ஒருமுறை விவாதம் வந்தது. அதனால்தான் வேணுமுன்னா வச்சுக்கோ, வேணாமுன்னால் எடுத்தெறிஞ்சுக்கோன்னு க் ஐ அடைப்புக்குள் போட ஆரம்பிச்சு இப்ப அதே என் ஸ்டைலாப் போச்சு. யாராவது என் பெயரில் அடைப்பு இல்லாமல் போட்டால் அது நானாக இருக்காது. போலி என்பது நிச்சயம்:-)

said...

@ஸ்ரீராம்,

அப்போ மக்கள் என்று சொல்லலாமா? கள் வந்துருதே :-)

முட்டையை, முட்டைகள்னு அழுத்தாமச் சொல்லணும். முட்டைக்கள்னு அழுத்தினால் உடைஞ்சு போயிரும்:-) ச்சும்மா... ஒரு கடி ஜோக்:-)

said...

வாங்க ராஜி.

ஆஹா...வளையலுக்கு இப்படி ஒரு விசிறியா!!!!

போட்டுடறேன்..... வளையலை.... :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்படி இந்த டிவி மக்கள் நேரத்தை அடியோடு எடுத்துக்குதேன்னு எனக்கும் சின்னக் கவலை இருக்கு......

said...

பின்னூட்டமிட விட்டுப்போய்விட்டது.

கிச்சன் ஆட்களைப் படம் பிடித்தீர்கள் சரி. நல்லவேளை அவர்கள் தலையில் 'கவர்' இல்லாமல் இருந்தால் 'திக்'என்றிருந்திருக்கும்.

உணவுப்பொருட்கள் படங்களும் நல்லா இருந்தது (கீதா கஃபே காஞ்சீபுரம் இட்லி, பார்க்க ரவா இட்லி மாதிரின்னா இருக்கு?)